ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வடிவத்துடன் எழுதப்படுகிறது. கட்டுரை, பகுப்பாய்வு, கேள்வி – பதில், உரையாடல் என கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏதுவாக வடிவங்கள் அமைகின்றன. அந்த வகையில், ‘மார்க்ஸ்: புரட்சியின் அரசியல்’ எனும் நூல் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் பேரா. விஜய் பிரசாத் நடத்திய உரையாடல் காலப்பெட்டகமாக வந்துள்ளது. இந்த நூலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் அவர்கள் எழுதியுள்ள செறிவான முன்னுரை நமது பார்வையை விசாலமாக்குகிறது.
ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் அறிக்கை, லூயி போனபர்ட்டின் 18ஆம் புருமையர், பிரான்சில் உள்நாட்டுப் போர் ஆகிய நான்கு நூல்களும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் புரட்சிகர அரசியலையும் தத்துவ கருத்தாக்கங்களையும் உள்வாங்கிக்கொள்ளத் தேவையான அடிப்படை நூல்களாகும். இந்நூல்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்வதற்கு இந்த உரையாடல் நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.
அய்ஜாஸ் அஹமது அவர்களின் மார்க்சிய புலமை, ஞானம், மகத்தான சமூக அக்கறை ஆகியவற்றை விஜய் பிரசாத் மனப்பூர்வமாகப் பாராட்டியுள்ளதோடு, இந்நூல் உருவான விதம் குறித்தும் அதன் கருத்தியல் முக்கியத்துவம் பற்றியும் அழகாக விளக்கியுள்ளார். உலக சிவப்பு புத்தக தினத்தன்று கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்தும், பாரிஸ் கம்யூனின் 150ஆவது ஆண்டு நிகழ்வின்போது மற்ற மூன்று நூல்கள் குறித்தும் அய்ஜாஸுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களே நூலாக வடிவம் பெற்றுள்ளது.
ஜெர்மன் சித்தாந்தம்
ஜெர்மன் சித்தாந்தம் எழுதப்பட்ட காலத்தில்தான் மார்க்ஸ் தனது நிலையிலிருந்து மிக வேகமான மாறுதலுக்கு உள்ளாகிறார். உற்பத்தியே மாற்றத்திற்கான மையம் என்பதை வந்தடைகிறார். வரலாறு என்பது உண்மை யில் உற்பத்தியின் வரலாறே ஆகும். மனிதர்கள் தங்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்வதோடு தங்களுக்கான உலகத்தையும் கட்டியமைத்தனர். அய்ஜாஸ் அகமதுவினுடைய ஆழமான மார்க்சிய ஞானத்தின் வெளிப்பாடாக, ஜெர்மன் சித்தாந்தம் எனும் நூலை ஆழமாக அறிந்துகொள்வதற்கு மிகச் சிறப்பான உரையாடலை எடுத்து வைக்கிறார். மேலும், மார்க்ஸைப் பொறுத்தவரை சிந்தனை என்பது எப்போதும் நடைமுறை சார்ந்தது. நடைமுறை என்பது ஒரே நேரத்தில் தனி மனிதனாகவும் சமூகமாகவும் இருக்கும் என்றும், வரலாற்றை இயக்குபவை உற்பத்தியும் உற்பத்தி உறவுகளுமே ; அவை தனிப்பட்டவை அல்ல என்பதையும் விளக்குகிறார். மார்க்சிய கருத்துகளின் சித்தாந்த வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதற்கு இந்நூல் ஆதாரமாக அமைகிறது.
கம்யூனிஸ்ட் அறிக்கை
29 வயதில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை என்பது முதலாளி வர்க்கத்தின் உள்ளடக்கத்தைத் தோலுரித்துக் காட்டியது. முதலாளித்துவம் வளரத்
தொடங்கிய காலத்திலேயே அது குறித்த ஆழமான பகுப்பாய்வை மேற்கொண்டு உழைப்பாளி வர்க்கத்திற்கான தத்துவ ஆயுதத்தை வழங்கினர். கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்களது வாழ்நாள் முழுவதும் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் தர்க்கத்தைக் கச்சிதமான முறையில் விளக்கிட முயற்சி செய்தனர். மார்க்சிய செவ்வியல் நூல்கள் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலானவையே. கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்ல முயற்சிக்கும் உள்ளடக்கத்தை வரலாற்றுப் பார்வையோடு அழகிய உரைநடை வடிவத்தில் சிறப்பான வாக்கியங்களைக்கொண்டு மார்க்ஸ் கட்டி எழுப்புகிறார். இது ஓர் ஆகச் சிறந்த புத்தகம். உலகில் வாழும் மொழிகள் அனைத்திலும் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமையர்
இந்நூலின் குறித்த உரையாடல் தலைப்பு ‘பளிச்சிடும் பழைய மச்சம்’ ஆகும். தமிழ்ப் படங்களில் ஆள் மாறாட்டக் காட்சிகளில் முகத்தில் மருவை வைத்து ஏமாற்றக்கூடிய வகையில் அமைத்திருப்பார்கள். அப்படி லூயி போனபார்ட் நடத்திய ஆட்சி கவிழ்ப்பு குறித்து எழுதிய அரசியல் எழுத்துகள் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதில் உள்ள பல வரிகள் பொன்மொழிகளாக மாறி விட்டன. அதில் சிலவற்றை அய்ஜாஸ் அகமது எடுத்துக்காட்டுகிறார். “பழைய தலைமுறைகளின் பாரம்பரியங்கள் தற்கால தலைமுறையினரின் மூளைகளில் ஒரு கனவைப்போல் கணக்கின்றன.” சமூகத்தைக் கருத்தியல்ரீதியாக மார்க்சிய அடிப்படையில் அணுகுவதற்குச் செவ்வியல் நூல்கள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
பிரான்சில் உள்நாட்டுப் போர்
இந்நூல் லெனின் எழுத்துகளைச் செழுமைப்படுத்தியது பற்றி விஜய் பிரசாத் ஆழமான விவாதங்களை முன்னெடுப்பதும், அதற்கு அய்ஜாஸ் அகமது அதனை விரிவுபடுத்தி மேற்கொள்ளும் கம்யூன் பற்றிய உரையாடல்களும் அவற்றிற்கு அழிவு என்பது கிடையாது என்பதை நிரூபிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பாகவே மார்க்ஸின் எழுத்துகள் அமைந்திருக்கின்றன. ‘மார்க்ஸ்: புரட்சியின் அரசியல்’ எனும் நூலின் தலைப்பே மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. நம்முடைய உத்வேகமிக்க செயல்பாடுகளுக்குக் கருத்தியல் ஆயுதமாக விளங்குகிறது. கருத்தியல் அற்ற செயல்பாடு, போர்க்களத்தில் ஆயுதங்களின்றிச் செயல்படுவதற்கு ஒப்பானதாகும். மார்க்சியக் கருத்தியலைச் செறிவுபடுத்துவதற்குத் தமிழில் நடத்தப்பட்ட உரையாடலைப்போல் நமக்குத் தந்திருக்கும் மார்க்சிய ஆய்வாளரும் களப்போராளியுமான தோழர் ச. லெனின் பாராட்டுக்குரியவர். மார்க்சியர்கள் ஒவ்வொரு நாளும் தங்களைச் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் முன்னுரிமை கொடுத்து வாசிக்கப்பட வேண்டிய
நூலாகும். l
