இன்றைய இளம்தலைமுறை, குறிப்பாக மாணவர்களுக்கு எதெல்லாம் சுலபமாகக் கிடைக்கிறது? எதெல்லாம் கிடைப்பதில்லை, அல்லது அரிதாகக் கிடைக்கிறது.?
குப்பைமேடுகள் வழியெங்கும் தென்படுகின்றன. அழகிய வனாந்திரங்களை தேடிச் செல்ல வேண்டி இருக்கிறது. டீசல் புகை கேட்காமலேயே கிடைக்கிறது. சுத்தமான காற்றைத் தேட வேண்டி இருக்கிறது. எஸ் ஆர் வி பள்ளி தனது சாளரங்களை விரியத் திறந்து வெளிக்காற்றை வகுப்பறைக்கு அனுப்புகிறது. மாணவர்கள் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கிறார்கள். இங்கே காற்று என்பது நற்சிந்தனைகள். புதிய கருத்துகள். அறிஞர்களின் அனுபவப்பகிர்வுகள். உடலைப் புத்துணர்வு செய்ய நுரையீரலில் நிரம்பும் ஆக்சிஜனைப் போல மனதை ஆரோக்கியப்படுத்தவும், சிந்தனையை விரிவு செய்யவும் எஸ் ஆர் வி செயல்படுத்துகிற ஒரு அருமையான வடிவமும், கச்சிதமும் , செழுமையும் கொண்ட நிகழ்ச்சி “வெளிக்காற்று உள்ளே வரட்டும்“ மாணவர்கள் பாடத்தின் சுமைகளினால் கலைகளில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கவிஞர் வெய்யில் கலைகளை அவர்களுக்கு தன் உரையில் பரிச்சயப்படுத்திய விதம் அழகானது.
மற்ற உயிர்களுக்கும் மனிதனுக்குமான வித்தியாசம் அனுபவ அறிவை சேகரிப்பதும், அவற்றைத் தொகுப்பதும், பகிர்வதும்தான். மொழி அதற்கு உறுதுணையாகிறது. கலை உணர்வு என்பது புலன்களைத் தீட்டுவது. நுட்பங்களை மேம்படுத்துவது என்பதை எல்லாம் விளக்கி 56 வயதில் அம்பேத்கர் ஏன் வயலின் கற்றுக் கொண்டார் என்ற கேள்வியை எழுப்பி, கலையும் இலக்கியமும் எப்படியெல்லாம் நம்மை வடிவமைக்கின்றன. ஒரு தடுப்பூசி போல அறமற்ற விஷயங்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன என்பதை எடுத்துரைத்து பாரதியின் சொல்லாட்சி, மொழியை அவன் பிரயோகப்படுத்திய விதம் (அக்கினிக்குஞ்சு, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்) குறித்து விளக்கி தன் உரையை நிறைவு செய்கையில் மாணவ, மாணவியர் நிரம்பிய சபை ஒரு புதிய அனுபவ சாரத்தை உள்வாங்கிக் கொண்டதை உணர முடிந்தது. அவர்களிடமிருந்து வந்த கேள்விகள் அதனை நிரூபித்தன. வரலாறு என்பது கடந்த காலத் தகவல்களின் தொகுப்பு மாத்திரமா? அதனைத் தாண்டி வரலாற்றின் தேவை என்ன? மனிதனின் அறிவுச் சேகரத்தில் அவன் தன்னைத் தானே திருத்தித் திருத்தி மேம்படுத்திக் கொள்ளவும், தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் உதவும் கருவி இல்லையா அது? என்ற கேள்வியை மாணவர்களிடம் எழுப்பினார் மருதன். ஆய்வுகள், தரவுகள் அவற்றை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்கங்கள் (interpretations) இவற்றின் மூலமாக நாம் வரலாற்றை உருவாக்கிக் கொள்கிறோம் என்று விளக்கி வரலாறு ஏன் அவசியம் என்பதை மாணவர்களிடம் அவர் சொல்லுகையில் கடந்த காலம் குறித்த புதியதொரு வெளிச்சம் அவர்கள் மனதில் திரண்டது. வரலாறு என்பது மன்னர்கள், அரசுகள் பற்றியது மட்டுமல்ல. சமயம், பயங்கரவாதம், கொள்ளை நோய்கள், பஞ்சம், நாகரிகம், பண்பாடு முதலிய பல அம்சங்களின் வளர்ச்சியையும், மாற்றத்தையும் அறிவதும் வரலாறுதான் என்கிற விரிவான பொருளையும் மாணவர்களிடம் உரையாடினார்.
வரலாற்றை ஒட்டிய இன்னொரு விஷயமாக தமிழ்நாட்டின் கல்வி வரலாறு குறித்த முழுமையான பார்வையை இன்னொரு அமர்வில் குணசேகரன் அருமையாக மாணவர்களுக்கு வழங்கினார். கல்வி எப்படி பரவலானது, அனைத்து மக்களுக்குமாக கல்வி மாறியதை தமிழகத்தின் சமூக, அரசியல் மாற்றங்களினூடாக அவர் விளக்கியது வரலாற்றின் முக்கியத்துவத்தை இன்னும் சிறப்பாக உணர்த்துவது போல் அமைந்திருந்தது. நாம் இந்த இடத்தில் இப்படி அமர்ந்திருப்பதின் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு, போராட்டம், தொலைநோக்கு சிந்தனை தேவைப்பட்டிருக்கிறது என்பதை மாணவர்கள் உணர வைத்தார் குணசேகரன்.
வரலாற்றை அறிகையில் வரலாற்று நாயகர்களை எப்படித் தவிர்க்க முடியும்? இந்திய தேசம் எப்படி காந்தியைத் தவிர்க்க முடியும்,? இந்திய தேசத்துக்கு ஒரு மனசாட்சி இருக்கிறதென்றால் அதனை உருவாக்கியவர் காந்தி அல்லவா? சித்ரா பாலசுப்ரமணியம் காந்தியை வேறு ஒரு கோணத்தில் விவரித்தார். ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்கிற அம்சத்தைத் தாண்டி ஒரு சமூக சீர்திருத்தவாதியாக வாழ்வதற்கு கடைசிவரை எத்தனித்தவர் காந்தி. தேசவிடுதலை மட்டும் அவரது ஒற்றை இலக்கு அல்ல. மானுட விடுதலையும் மனதில் கொண்டு செயல்பட்டவர் அவர். ஆசிரம வாழ்க்கை என்பது அவர் வகுத்துக் கொண்ட வாழ்க்கை முறை. மனசாட்சியைப் பார்த்துக் கேள்வி கேட்பது என்பது அவர் கைக்கொண்ட ஒரு தார்மீக நெறி புறத்தில் போராடிக்கொண்டிருந்த அதே நேரம் காந்தி தன் அகத்தையும் பரிசோதிக்கும் மனிதராக வாழ்ந்தார். கிராமங்கள் தன்னிறைவு அடைய வேண்டியதைப் பேசியவர் காந்தி. நகரங்களின் பெருக்கம் குப்பைகளைப் பெருக்குகிறது கிராமங்களின் தன்னிறைவுதான் இந்தியாவுக்கான சரியான அமைப்பாக இருக்கும் என்பது அவர் கனவாக இருந்தது. இன்று நாம் காண்கிற அதீதமான நகர்மயமாக்கம் ஏற்படுத்துகிற விளைவுகளை கவனிக்கையில் காந்தியின் கொள்கைகளை ஏக்கத்துடன் நினைவு கூர வேண்டி இருக்கிறது.
வரலாற்றையும், அதன் நாயகர்களையும் பேசுகையில் வரலாற்றோடு சேர்ந்து பண்பாட்டைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. பண்பாடு என்பதை நாம் எப்படி விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதில் வெளிச்சம் பாய்ச்சினார்
ச.தமிழ்ச்செல்வன். பண்பாடு என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு அப்படியே ஏற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் என்ன? பண்பாடு எப்படி மதத்தோடு பிணைந்திருக்கிறது? சடங்கு, சம்பிரதாயம், மூட நம்பிக்கைகள் இவை எல்லாம் எப்படி பண்பாட்டின் அம்சமாக ஊடுருவி கேள்விகள் இன்றி பின்பற்றப் படுகின்றன? அறநெறிகளையும், அநியாயங்களையும் பிரித்தறியாயமல் பண்பாடு என்கிற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் அடைப்பதன் அபாயம் என்ன? அவற்றை நாம் விவாதிக்க வேண்டியதன் அவசியம், கேள்விக்கு உட்படுத்த வேண்டிய தேவை என்று பலவற்றையும் சுட்டிக்காட்டினார். மிக முக்கியமாக பண்பாடு பெண்ணை ஏன் மையப்படுத்துகிறது. பெண்ணை, அவளது இடத்தை பண்பாடு எப்படி வரையறுத்து அடிமைப்படுத்துகிறது என்பது அவர் தொட்டுக் காட்டிய மிக முக்கியமான புள்ளி. இன்றைய மாணவர்கள் மத்தியில் இந்த உரை நிகழ்த்தப்பட்டது மிகவும் தேவையான ஒன்று. இன்றைய இளையதலைமுறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் முக்கியமானது இயற்கைக்கும், அவர்களுக்குமான விலகல். சென்ற நூற்றாண்டின் சிறுவர்களும், சிறுமிகளும் தோட்டத்தில் விளையாடினார்கள்.குளத்தில் குளித்தார்கள். ஆற்றில் நீந்தினார்கள், சுனையிலும், கிணற்றிலும் நீரைப் பருகினார்கள். வெயிலில் அலைந்தார்கள். மரத்தில் ஏறி விளையாடினார்கள். தாவரங்கள் அவர்கள் வாழ்வோடு இருந்தன. விலங்குகள் தோழமையாய்த் திரிந்தன. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் சுவர்களுக்குள்ளும், வாகனங்களிலும் பொழுதைக் கழிக்கின்றனர். விடுமுறையின் போது செல்லும் டூராக இயற்கையை மாற்றி வைத்திருக்கிறோம். அங்கும் கூட்டம் நெரிகிறது. இயற்கையின் பகுதியான மனிதனை இயற்கையிடமிருந்து தள்ளி வைத்திருப்பது இன்றைய காலகட்டத்தின் சாபம். இயற்கை குறித்த அறியாமை வாழ்வைக் குறித்த அறியாமையே ஆகும். இந்த இடைவெளியைப் போக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சுகிற வேலையை ஓசை காளிதாஸ் செய்தார்.
மனித குலத்துக்கும் முன்னரே பூச்சிகளும், விலங்குகளும் இருந்தன. மனிதன் பின் தோன்றினான். மனிதன் இல்லாவிட்டாலும் மற்றவை வாழும். ஆனால் பூச்சிகளும் தாவரங்களும் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது. ஆனால் மனிதன் தன் அறியாமையால் இயற்கையை சூறையாடி அழித்து வருகிறான் என்பதில் தொடங்கி மேற்குத்தொடர்ச்சி மலையின் தொன்மம். அதன் சிறப்பு…ஆறுகள் அந்த மலைகளில் உருவாகும் விதம். காடுகள் உருவாவதில் யானைகளின் பங்கு, இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்க வேண்டிய பிணைப்பு என்று அவர் விளக்கிய விதத்தில் மாணவர்கள் வியந்ததை உணர முடிந்தது.
மாணவர்கள் அறிய வேண்டிய விஷயங்களோடு இணைத்து இன்றைய மாணவர்களின் தேவைகள் குறித்தும் பேச வேண்டியது அவசியம். இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அலாதியானவை. தனித்தன்மை வாய்ந்தவை. இன்றைய மாணவன் இதற்கு முந்தையை எந்தத் தலைமுறையை விடவும் அதிகமான மன அழுத்தத்தை எதிர்கொள்கிறான். மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் அந்தப் பிரச்சினைகளைக் குறித்து மாணவர்களோடு உரையாடுகையில் மாணவர்கள் மனம் திறந்து பேசி தங்கள் சிக்கல்களைப் பகிர்வதும், அவற்றை எவ்விதம் பிராக்டிகலாக கையாள்வது என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களையும் பெறுவதும் நடந்தது. ஏ.எஸ். பத்மாவதி வளரிளம்பருவத்து சிக்கல்களையும், ஆண் பெண் பாலின சமத்துவம், அது பற்றிய அணுகுமுறை குறித்தும் பேசியது இன்றைய மாணவர்களின் தேவையாக இருந்தது.
தேவை பற்றிப் பேசுகையில் மாணவர்களின் நேர்மறையான கனவுகளைத் தூண்டி வளர்த்தெடுப்பதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. இந்த முகாமைத் துவக்கி வைத்தவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ், முகாமை நிறைவு செய்தவர் திருச்சிராப்பள்ளி காவல் ஆணையர் காமினி
ஐ.பி.எஸ்.இருவரும் தங்கள் பின்னணி பற்றிச் சொல்லி தாங்கள் சந்தித்த சவால்கள், அதனை வெற்றிகரமாகக் கடந்த விதம் பற்றி தோழமையோடு விளக்கிய விதம் மாணவர்களுக்கு உத்வேகம் தந்தது. அவர்களது துறையில் ஆற்றியிருக்கும் பணிகளும், சாதனைகளும் மாணவர்களை உற்சாகப்படுத்தியது. தங்களைப் போன்ற பின்னணியில் இருந்து ஒரு அதிகாரியாக உருவாகி இருப்பவர்களை நேரில் சந்தித்து உரையாடுதல் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தையும், ஊக்கத்தையும் அளிப்பதை உணர முடிகிறது.
இவற்றோடு வாழ்வியல் திறன்களும் மாணவர்களுக்கு வேண்டும் என்பதை சங்கரசரவணன் வலியுறுத்தினார். போட்டி நிறைந்த உலகில் தன்னம்பிக்கையுடன் சவால்களை புரிந்து கொள்வதும், அவற்றை எதிர்நோக்கி வெல்வதும் மிகவும் அவசியம். அதற்கான அடிப்படைத் தேவைகள் என்ன, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அவர் சொன்ன விதம் மாணவர்களைக் கட்டிப்போட்டது. நடுநடுவே அவர் சொன்ன திருக்குறள் பகுதிகள், அவற்றை சமகாலத்தோடு பொருத்தி பொருள் கொண்டு வாழ்வோடு இணைத்த விதம் எல்லாம் வெகு சுவாரசியமானவை.
சுவாரஸ்யம் குறித்துப் பேசுகையில் நம் வாழ்க்கைக்கான சுவாரஸ்யங்களை தற்போது நாம் சினிமாவில்தான் அதிகம் தேடுகிறோம். அதற்கிணையான சுவாரஸ்யத்தை அளிக்கக் கூடியவை நூல்கள். இனிமையான அனுபவத்தைத் தரும் அதே நேரம் நம் கற்பனைத் திறனையும் மேம்படுத்துவது வாசிப்பு இல்லையா?
கல்வி வழியே நாம் அறியும் மொழியை மேலும் வசப்படுத்தி , செழுமைப்படுத்துவதற்குத் தேவை நூல்களை வாசித்தல். வாசிக்கும் பழக்கம் நம் மனதைப் பண்படுத்தி , அறிவைப் புதுமை செய்கிறது என்பதை தன் அனுபவத்தின் வழியே ஒருவர் சொல்கையில் மாணவர்களுக்கு புதியதொரு ருசி அறிமுகமாகிறது. ஆதி.வள்ளியப்பன் தன் அனுபவங்களின் வழியே வாசிப்பின் அருமையை, முக்கியத்துவத்தை விளக்குகையில் அது வாசிப்பின் பரந்த வெளிக்கு மாணவர்களை முதலடி எடுத்து வைக்கத் தூண்டுகிறது. வெளிக்காற்று உள்ளே வரும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் கூட மாணவர்களை தூண்டுவதுதான். எந்த விதமான முன்முடிவுகளும் இன்றி சிந்திக்கக் காத்திருக்கின்றனர் அவர்கள். விளையக் காத்திருக்கும் நிலம் போல அவர்கள் சிந்தனை இருக்கிறது. அதில் எந்த விதைகளைத் தூவுகிறோம் என்பது மிக மிக முக்கியம். இந்த முகாமின் மிக முக்கியமானதொரு அம்சம், அரசுப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பு. மாதிரிப் பள்ளி மாணவர்களும் இந்த முகாமில் முழுமையாகப் பங்கேற்றனர். கலந்துரையாடல் நிகழ்விலும், பின்னூட்டங்களிலும் அவர்களது வெளிப்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. திறமையிலும், தகுதியிலும் மாணவர்கள் இடையே தனியார், அரசு என்கிற பேதத்துக்கு இடமில்லை. எல்லோரும் ஆர்வமிக்க திறமையாளர்கள் என்பது நம்பிக்கை தரும் ஒரு அம்சம்.
வெளிக்காற்று உள்ளே வரட்டும் நிகழ்ச்சி அவர்களது சிந்தனையில் தூவி இருக்கும் விதைகள் மிகவும் அவசியமானவை. நம்பிக்கை தருபவை. அறம் சார்ந்தவை. அவை நிச்சயம் முளைக்கும், செழிக்கும். காத்திருக்கிறோம். l
previous post
