இந்நூலில் சினிமா ஊடகம் தொடர்பான ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதிலுள்ள ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பின் கீழும் கூறப்பட்டுள்ள கருத்துகளைப்பற்றி சுருக்கமாகக் கீழே காணலாம். வரலாற்று உண்மையைச்சொல்ல மறுக்கும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ எனும் கட்டுரையானது, 1990ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நடந்த காஷ்மீர் வன்முறையில் இந்து பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டதையும் அதனைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்டிகள் வெளியேறிய வரலாற்றுச்சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு விவேக் அக்னிஹோத்திரி என்பவர் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை ஆதரித்து பிரதமரின் கருத்துரை, பாஜக ஆளும் மாநில அரசுகள் வழங்கிய சலுகைகள் யாவும் சேர்ந்து இத்திரைப்படத்தினை இன்னும் கூடுதலாக விளம்பரப்படுத்துவதற்கு உதவியது மட்டுமின்றி, சங்பரிவார அமைப்புகள் இதனைக்கொண்டாடவும், வன்முறையில் இறங்கவும் வழியேற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படமானது 1990 களில் பண்டிட்டுகள் 24 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால், வலதுசாரிகளோ புள்ளிவிவரத்தினை மிகைப்படுத்தி, அதாவது 4000 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு அடுத்தநாள் ஐந்து லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதாகவும் திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களை பிரிவினைவாதி/தீவிரவாதி எனச் சித்தரிக்கவும் செய்கிறது. பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பற்றிப்பேசும் இத்திரைப்படம் இஸ்லாமியர்கள் கொலைசெய்யப்பட்டதுபற்றி ஏதும் பேசவில்லை.
வரலாற்றின் போக்கில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்து ஒரு பக்கச்சார்பாக படைப்பை உருவாக்கும்போது பார்வையாளருக்கு அந்நிகழ்வைச் சரியாக புரிந்துகொள்ள முடியாது. சுருக்கமாகக்கூறின், வரலாற்றுத்திரிபுகளுடன், இஸ்லாமியர்களுக்கெதிரான பகைமையை வளர்த்தெடுக்கவும் இத்திரைப்படம் உதவியுள்ளதாகக்கூறுகிறது. ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல் எனும் கட்டுரையானது, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டில் என்.டி.டி.வியின் 29 சதவீதப் பங்குகளையும் அதன்பிறகான காலத்தில் மேலும் கூடுதலான பங்குகளையும் வாங்கி, மொத்தமாக 64.71 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது.
1990ஆம் ஆண்டு பொருளாதாரக்கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் தனியார் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு ஸ்டார் நெட்வொர்க்குடன் இணைந்து என்.டி.டி.வி. செயலாற்றியது. பின்னர் இந்நிறுவனம் என்.டி.டி.வி. 24 x7 ஆங்கிலச்செய்தி சேனல் மற்றும் என்.டி.டி.வி. ஹிந்தி செய்தி சேனலைத் துவக்கியது. குடும்ப நிறுவனமாக இருந்த என்.டி.டி.வி. 2004ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகியது. 2005க்குப்பிறகு சந்தையில் ஏற்பட்ட கடும்போட்டியின் விளைவாக
என்.டி.டி.வியின் விளம்பர வருவாய் வெகுவாகச்சரிந்தது. அந்தச்சூழ்நிலையில் அதானிக்குழுமம் என்.டி.டி.வியின்
29 சதவீதப்பங்குகளை எடுத்துக்கொள்ளும் உரிமையைப்பெற்றது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. 2014ஆம் ஆண்டு, ஒன்றியத்தில் மோடி அரசு பதவியேற்றதற்குப்பிறகு, ஊடகங்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அந்த அரசு கையிலெடுத்தது, அதாவது, ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தது.
ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாராமாயுள்ள விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது; அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுடன் உறவாடி அவர்களது ஊடகங்களையும் சாதகமாக்கிக்கொள்வது; மரபான ஊடகங்களுக்கு நெருக்கடியை உருவாக்கி அவர்களையும் தங்களது ஊதுகுழல்களாக மாற்றுவதில் இந்த அரசு வெற்றி கண்டுள்ளது. அரசுக்கு எதிரான கருத்துகளைப்பதிவிடும் ஊடகங்களை ஒடுக்கவும், முடக்கவும் செய்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களை இவ்வாறாக, ஆளும் அரசு தனது கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக்கொள்வது என்பது இந்திய மக்களுக்கும், நமது ஜனநாயகத்திற்கும் மிகவும் ஆபத்தானது என்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையை உரக்கப்பேசிய புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் எனும் கட்டுரையானது, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாலிபான்களுக்கும், ஆப்கான் அரசுப்படைகளுக்கும் இடையே கந்தகார் மாவட்டத்தின் போல்டாக் பகுதியில் நடந்த சண்டையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய ஒளிப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக் 16.07.2021 அன்று தாலிபான்களால் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படுகொலையினை உலகின் பல நாடுகள் கண்டித்தன. ஆனால், இந்துத்துவ சக்திகள் இப்படுகொலையினை சமூக வலைதளங்களில் கொண்டாடியது. டேனிஷ் சித்திக் டெல்லியைப் பூர்வீகமாகக்கொண்டு ‘ராய்ட்டர்’ நிறுவனத்திடம் பணிபுரிந்து வந்தார். இவரது புகைப்படங்கள் ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘த கார்டியன்’, ‘டைம்’, ‘த டெலிகிராப்’ போன்ற உலக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. உலகின் மோதல்களில் மனிதர்களின் துயரங்களைப் படம் பிடிப்பதிலேயே அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
2018ஆம் ஆண்டின் ‘புலிட்சர்’ சர்வதேச விருது பெற்றவர். “ஒரு புகைப்படம் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த துயரத்தை எந்தச் சொல்லும் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு எளிதாகக் கடத்தவேண்டும்” என்பார். ரோஹிங்கியோ அகதிகள், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர், இந்தியக்குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், இதனையொட்டிய டெல்லி கலவரம், கோவிட்-19 ஆகியவற்றைப்பற்றி படம் பிடித்துள்ளார். சித்திக்கின் பல புகைப்படங்கள் அரசு அதிகாரத்திற்கும், இந்துத்துவச்சக்திகளுக்கும் ஏற்படுத்திய நெருக்கடிகளை நம்மால் உணர முடிகிறது. எளியமக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துவதையே தனது நோக்கமாகக்கொண்டு அதற்காகவே தனது உயிரை இழந்திருக்கிறார் என்கிறது. “தந்துரா’: உண்மையைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணப்படம் எனும் கட்டுரையானது, பாலஸ்தீனப் பகுதியான மேற்குக்கரையைச்சுற்றி எழுப்பப்பட்டுள்ள நிறவெறிச்சுவரின் சில இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அதன்வழியாகத்தான் பாலஸ்தீனியர்கள் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஓர் இஸ்ரேலியரால் இயக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படம்தான் ‘தந்துரா’. 1948ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்துரா கிராமத்தில் வாழ்ந்துவந்த அப்பாவி பாலஸ்தீனிய மக்களை யூத அமைப்பின் இராணுவப்பிரிவு கொன்றதையும், மேலும் பலரை அக்கிராமத்தைவிட்டு வெளியேற்றியதையும் மையமாக வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப்போரின் இறுதியில் துருக்கியின் ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியடைந்ததை அடுத்து மேற்குலக நாடுகள் மேற்கு ஆசியப்பகுதியை பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டன. இந்தப்பங்கீட்டில் 1917ஆம் ஆண்டு பாலஸ்தீனம் ஆங்கிலேயர் வசம் வந்தது. யூதர்களுக்கென்று தனியாக ஒரு நாட்டை தங்களது புனிதத்தலமான ஜெருசலம் அமைந்திருக்கும் பாலஸ்தீனத்தில் உருவாக்கவேண்டும் என்பது ஜியோனிசவாதிகளின் விருப்பமாக இருந்தது. 1901ஆம் ஆண்டு யூத நெட்வொர்க் நிதி உருவாக்கப்பட்டு அதன்மூலமாக பாலஸ்தீனப்பகுதிகளில் நிலம் விலைக்கு வாங்கப்பட்டு, அங்கே யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்தப்பகுதியில் 1900 ஆண்டுவாக்கில் 3000 ஆக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1948ஆம் ஆண்டு ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டது.
1920களில் யூதர்களைப்பாதுகாக்க ஜியோனிச வாதிகள் ‘ஹகன்னா’ எனும் இராணுவ அமைப்பினை உருவாக்கினர். இதனிடையே, ஆங்கிலேயர் மீதான அதிருப்தி காரணமாக பாலஸ்தீனியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினர். இச்சமயத்தில், ஆங்கிலேயப்படைகளுடன் ஹகன்னா படைகள் சேர்ந்துகொண்டு பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் போரிட்டது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பாலஸ்தீனியப் பிரச்சினையை புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.நா.சபையிடம் ஒப்படைத்தனர். ஐ.நாவும் இதற்குத் தீர்வுகாண 11 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி, பாலஸ்தீனத்தை இரண்டாகப்பிரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதுகுறித்த தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டவுடன், 1948ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் கலவரம் மூண்டது. இதனை ஹகன்னா அமைப்பினர் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தினர். இதன்மூலம், 410 கிராமங்கள் அழிக்கப்பட்டதுடன், எட்டு லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 15000 பேர் கொல்லப்பட்டனர். இப்படி அழிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் தந்துராவாகும். தந்துரா கிராமத்தில் அப்போது 1500 பேர் வசித்து வந்தனர். இப்பகுதி இஸ்ரேலுக்கு ஐ.நாவால் ஒதுக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 250 பாலஸ்தீனியர்களை படுகொலை செய்தது மட்டுமல்லாது, பிறரையும் அங்கிருந்து வெளியேற்றியது. இப்படியாக, இஸ்ரேலின் அத்துமீறலை வெளிப்படுத்தும்விதமாக எடுக்கப்பட்டதுதான் அப்படம் என்கிறது.
பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா எனும் கட்டுரையானது, 2022ஆம் ஆண்டு வெளியாகிய ‘டொமாரோஸ் ஃபிரிடம்’ என்கிற ஆவணப்படம் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகப் போராடி, 23 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் வாடும் மர்வான் பர்குதியின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம். 1993ஆம் ஆண்டு ஓஸ்லோ அமைதிப்பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு மேற்குக்கரை, காசா, கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனிய நாடாக ஏற்கப்பட்டன. அதன் நிர்வாகம் யாசர் அராபத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றியவர்தான் மர்வான் பர்குதியாவார்.
1987ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேலின் இராணுவ வாகனம் மோதி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் பாலஸ்தீனியர்கள் போராடத் துவங்கினர். இப்போராட்டம் ஆறு ஆண்டுகள் நீடித்தது. இதுவே முதல் இண்டிஃபாடா என அழைக்கப்படுகிறது. அதன்பிறகு ஓஸ்லோ ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது மேற்குக்கரைப்பகுதியில் இரண்டு லட்சம் யூதர்கள் குடியேறியிருந்தனர். இதுவே அடுத்த சில ஆண்டுகளில் நான்கு லட்சமாக உயர்ந்துவிட்டது. காசாவை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலிய இராணுவமும் வெளியேற வில்லை. 2000ஆம் ஆண்டு செப்டம்பரில் கிழக்கு ஜெருசலத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘அல்-அக்சா’ மசூதியில் எரிச்சலூட்டும் வகையில் இஸ்ரேல் அரசியல்வாதி ஒருவர் நுழைந்து திரும்பியது பாலஸ்தீனிய மக்களின் இரண்டாவது இண்டிஃபாடா எழுச்சிக்கு வித்திட்டது.மர்வான் பர்குதி பாலஸ்தீனியர்களுக்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார், அவரைக்கொல்ல இஸ்ரேல் இராணுவம் பலமுறை முயற்சி மேற்கொண்டது. தொடர்முயற்சியின் விளைவால் 2002 ஆம் ஆண்டு மர்வானை கைது செய்து சிறையிலடைத்தது. தற்போது, மர்வான் 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவர் சிறையில் இருக்கும்போதே சர்வதேச அரசியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, 2012ஆம் ஆண்டுமுதல் பாலஸ்தீனத்திலுள்ள ஐந்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 600 சிறைவாசிகளை தொலைநிலைக்கல்வி மூலம் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர்த்து படிக்கவைத்துப் பட்டம் பெறச்செய்திருக்கிறார். நெல்சன் மண்டேலா நீண்ட காலம் சிறைவைக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் ’ராபின் தீவு’ சிறைக்கூடத்திலிருந்துதான், மர்வானின் விடுதலைக்கான விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்குப்பிறகே பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என மர்வான் பர்குதி அழைக்கப்படுகிறார் என்கிறது.l
previous post
