உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் யாவரையும் ஒன்றாகக் கருதி, அவர்களது நீதிக்காகப் போராடிய ஒரே மனிதர் இருந்தாரென்றால், அவர் அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா எனும் வீரமும் ஈரமும் ஒருங்கே பெற்ற மனிதர்தான்.
உண்மையான உலக நாயகனாக விளங்கிய சே குவேராவின் வரலாற்றை, ‘நாயகன்’ எனும் தொடரின் முதல் மனிதராகவும் தேர்ந்தெடுத்து விகடனில் தொடராகத் தொடங்கியிருக்கிறார். தொடரில் வந்ததைவிடவும் கூடுதலாகத் தொகுத்து அம்மாமனிதரைக் குறித்து எதுவும் அறிந்திராதவர்களுக்கும் முழுமையாக விளங்கும்படி, ‘நாயகன் சே குவேரா ‘ எனும் நூலை வழங்கியிருக்கிறார். ஒருவர் எப்படி வாழ வேண்டுமென்பதை இக்கால தலைமுறைகளுக்கு அறிவிப்பதற்கு கடந்த காலத்தில் வரலாறாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் அதுவே வாழ்க்கைப் பாடமாக அமைந்துவிடுகிறது. பொது வாழ்க்கையை தன் வாழ்க்கையாகக் கொண்டு அர்ஜென்டினாவில் வாழ்ந்து வந்த செல்வாக்கான ஸ்பானிய – ஐரிஷ் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சே குவேரா மருத்துவம் பயின்றவர். ஸ்பெயின் நாட்டின் ஆளுகையில் அர்ஜென்டினா இருந்தபொழுது, அங்கு ஆளுநராக விளங்கிய தன் தாத்தாவின் வழித்தோன்றலாக இயல்பிலேயே ஆளுமைமிக்கவர். கட்டிடப் பணியாற்றிய தனது தந்தையின் இருப்பிடத்திற்குச் செல்லும் பொழுது அங்கு களத்தில் வேலை செய்யும் ஏழைத்தொழிலாளர்களது குழந்தைகளின் வாழ்க்கையை தம் இளம் வயதிலேயே அறிந்தவர். இலக்கியங்களையும் தத்துவங்களையும் வாசிக்கின்ற வாய்ப்பையும் அதன் அனுபவங்களையும் கொண்டிருந்தவர்.
நோபல் பரிசு பெற்றவர்களின் நூல்களையும் பாப்லோ நெருடாவின் கவிதைகளையும் அதிகம் நேசித்தவர். இவற்றோடு கூடுதலாக அவரது நட்புகளும் பயண அனுபவங்களும் இணைந்து சே குவேரா எனும் மாமனிதனை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஒரு மருத்துவராக உலகெங்கிலுமுள்ள தொழுநோயாளிகளின் மீது அக்கறை கொண்டு அவர்களை குணப்படுத்துகின்ற நோக்கத்திலும் உலக நாடுகளைக் காணும் நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் ஆசையிலும், நண்பர்களோடு இணைந்து எட்டு மாத காலத் திட்டமாக ஐந்து நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். அப்போது பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு மலைகளையும் நதிகளையும் பசுமையான வளங்களையும் பாலைவனங்களையும் கண்டதோடு நில்லாமல் எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் அதிகாரத்துவத்தை அறிந்தவராக அவர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுத் தரும் போராளியாக மனதில் விதை ஊன்றித் திருப்பியிருக்கிறார்.
பயணத்தின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவரது அனுபவங்கள் வேறானவை. தான் மருத்துவம் பார்க்கச் சென்ற இடங்களிலெல்லாம், ஏழை மக்களை பட்டினியால் வாட விடுகின்ற அதிகார வர்க்கம் யாரென்பதை அறிந்து கொள்ளும் கேள்வியோடு இருந்திருக்கிறார். சிலி, பெரு, கொலம்பியா போன்ற நாடுகள் தனது இயற்கை வளத்திலும் கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் வேறுபாடுகளைக் கொண்டிருப்பதையும் உள்வாங்கியிருக்கிறார். சிலியில் கம்யூனிஸ்ட் கோட்டையாகக் கருதப்படுகின்ற சூக்கிமாட்டாவின் தாமிரச் சுரங்கத்தில் தங்கியபோது, ஓர் இரவு நேரக் கடுங்குளிரை எதிர்கொண்டிருக்கிறார். அங்கு சந்தித்த கம்யூனிஸ்ட் தம்பதியைப் பற்றி அவர் தனது டைரிக் குறிப்பில் எழுதியதாக, “தன் வாழ்நாளில் அனுபவித்த மிகக் குளிரான நாளாக மட்டுமல்லாமல் மகிழ்ச்சியான நாளாகவும் இருந்தது அந்த இரவுதான். தொடரும் பட்டினிக்கு எதிராக கம்யூனிசம் இயல்பான கோட்பாடாக இவர்களுக்குள் முகிழ்ந்துள்ளது. கம்யூனிசம் என்றால் இவர்களைப் பொறுத்தவரை வேறொன்றுமில்லை. ஏழைகளுக்கு உணவு! அவ்வளவுதான்!” என்று இடம்பெற்றிருக்கிறது.
இப்படியாக உழைக்கும் மக்களோடு உண்டு உறங்கி உழைத்து அவர்களோடு வாழ்ந்து அறிந்தவராக, இவர்களது இந்நிலைக்குக் காரணமென்ன என்கிற தேடுதல் அவருக்குள் எழுந்திருக்கிறது. தென் அமெரிக்க கண்டம் முழுவதும் விரவியிருந்த வர்க்க வேறுபாடுகளாக, மக்களிடம் நிலவிய ஏழ்மை, பிணி, அறியாமை ஆகியவற்றிற்கு அந்தந்த நாடுகள் மட்டுமே காரணமல்ல. அமெரிக்காவில் வசிக்கின்ற முதலாளிகளுக்குச் சொந்தமாக தென் அமெரிக்காவில் இருக்கின்ற பெரிய நிறுவனங்கள், ஆட்சியாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சிக் குடித்திருக்கின்றன. இவர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தோடும், சிஐஏ எனும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்தியப் புலனாய்வு நிறுவனத்தோடும் (CIA – Central Intelligency Agency) நேரடித் தொடர்பு இருந்ததை பின்னர் அறிந்திருக்கிறார்.
வரலாறு என்பது இருபுறமும் எழுதப்படுவது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திற்குச் சென்றிருந்தபோது அந்நிலத்தின் பூர்வீகக்குடிகளான நவாஜோ இன மக்கள் வாழ்கின்ற நினைவுச்சின்ன பள்ளத்தாக்குப் (Manument valley) பகுதியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தோம். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைத் தாக்குவதற்கு, நவாஜோ இன மக்களது மொழியிலிருந்து பெற்ற சொற்களை சங்கேத மொழிகளாகப் பயன்படுத்தியதை அங்கு அறிந்துகொள்ள நேர்ந்தது. உடல் வலிமை கொண்ட அவர்களை போர்க்களத்தில் போராடவும் ராணுவத்தில் இணைத்துக் கொண்டதாக தகவல் இருக்கிறது. ஜப்பான் மீது அமெரிக்கா இரு குண்டுகளை எறிந்து ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்து, உலகப்போரில் வென்றதற்கு பக்கபலமாக இருந்த மக்கள், நவோஜா எனும் அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் என்று எழுதப்பட்டிருந்தது. சுரங்கத் தொழிலாளர்களாக மட்டுமல்லாமல், ராணுவத்தின் போர்ப் படையிலும் அவர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையே அறிய முடிந்தது. எளிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வட அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, தென் அமெரிக்க கண்டத்தின் அனைத்து தேசங்களும் செயல்படுவதை சே குவேரா உணர்ந்திருக்கிறார். சுற்றுப்பயணம் முடிந்ததும் மனம் முழுவதும் வேதனையைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பியிருக்கிறார். உலகையே அச்சுறுத்தும் பிரமாண்ட அதிகார மிருகமாக அவரது மனதில் வட அமெரிக்கா தோன்றியிருக்கிறது. இப்படியான தகவல்களை இந்த நூலிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. பொலிவியா, குவாடமாலா, மெக்சிகோ, கியூபா, தான்சேனியா, காங்கோ என இன்னும் பல இடங்களுக்கு கண்டங்கள் தாண்டி பயணித்த அவர், அங்குள்ள மக்களின் உரிமைக்காக போர் புரிந்து போராடியிருக்கிறார். இவற்றில் கியூபா நாட்டின் சுதந்திரத்திற்கு சே குவேரா போராடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கியூபா நாட்டின் தலைவன் ஃபிடல் காஸ்ட்ரோ போர்க் குணத்தோடும் போராட வேண்டிய அவசியத்தோடும் இருந்தாலும் அதற்குரிய தத்துவப் பின்புலம் இல்லாமல் இருந்திருக்கிறார். சே குவேராவிடம் போர் குறித்த அறிவும் கம்யூனிஸ தத்துவமும் உறைந்திருந்தாலும் போராட்டக் களம் இல்லாமல் இருந்திருக்கிறார். இவர்கள் இருவரது கனவுகளும் அமெரிக்காவின் எதேச்சாதிகாரத்தை வேரோடு களைவதுதான். இருவருமாக ஒன்றுசேர்ந்து துப்பாக்கியை கையிலேந்தி கொரில்லா போர் முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அதிகாரத்தைக்கொண்டு உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவை எதிர்த்த சே குவேரா எனும் மாவீரனை அமெரிக்க மத்திய புலனாய்வு (சிஐஏ) குறிவைத்தது. தொடர்ந்து முயற்சி செய்ததில் ஒரு பெண்ணால் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சொற்களாக, “நீங்கள் கொல்வது ஒரு சாதாரண மனிதனைத்தான்! சே குவேராவை அல்ல!” என்பதுதான். அதனை உறுதிப்படுத்தும் வகையில், சுதந்திர நாடான கியூபாவில் இன்றையக் குழந்தைகளுக்கு கற்பிப்பதாக, “எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தார்கள்; நாங்கள் சே குவேராவாக இருப்போம்” என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குழந்தைகளை மொழியச் செய்கிறார்கள். நிற்கும் இடத்திலிருந்து பின்னுக்குச் செல்லாமல், அதே இடத்தில் ஒருவன் நிற்க வேண்டுமென்றாலும் அதற்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதுதான் உலக நியதியாக இருக்கிறது. நாயகன் சே குவேரா வாசிக்க வேண்டிய நூல். l
previous post
