‘கனவு’ சுப்ரபாரதிமணியன் இலக்கிய வடிவங்கள் அனைத்திலும் கால்பதித்து ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தவர். நாடறிந்த எழுத்தாளர், இதழாளர். அவரது திரைநாவல் ‘முகப்பறவையே எங்கே சென்றாய்’ திரை நாவல் என்ற புது வடிவத்தில் வந்துள்ளது. அவர் எழுதிய திரைக்கதை நூல்களிலிருந்து சிலவற்றை எடுத்து திரைநாவல்களாக்கியிருக்கிறார். இது ஒன்று.
திரைநாவல் என்பதற்கே உரித்தான சுருக்கமான விவரணைகளும் காட்சிப்படுத்தும் நுண்மொழிதல் முறையும் கொண்ட நாவல் இது. பல பாதைகள் பல திசைகள் இருந்தன. தனக்கான பாதை எதுவெனத் தெரியாமல் கதாநாயகன் நின்றான். அவன் காதலிக்கும் பெண் பைக்கில் ஏறிச் செல்லும் காட்சியைக் காட்டும்போது எழுதி எழுதிப் பயிற்சி கனிந்த எழுத்தின் வசீகரம் தெரிகிறது. லவ் இஸ் ஃபன் என்று சொல்லும்சமகால இளைய தலைமுறை தியேட்டர், பூங்காக்களைக் காதலர் கொண்டாட்ட வெளியாக மாற்றியிருப்பதை அதை முகச்சுளிப்போடு எதிர்கொள்ளும் பழைய தலைமுறை முதிய மனிதர்களையும் காட்டுகிறார்.எளிய மனிதர்களின் வாழ்வு பொருள்தேடும் அலைச்சலிலேயே நாயகன் வெளிநாட்டு பனியன் கம்பெனி வேலைக்காக வெளிநாடு போய்விடுவதையும் மத்தியதர வர்க்கத்தின் வாழ்வு திரிசங்கு சொர்க்கம்போலத் தெரிவதையும் கதைப்போக்கினூடே காட்சிப்படுத்தும் நாவல் இது.
இங்கே கதைநாயகி வேலைதேடி அலைந்து ஒரு வேலையை அமைத்துக் கொள்கிறாள். கதைநாயகி நிலா வேலை பொருட்டு முகச்சீரமைப்பு சிகிக்சை மேற்கொண்டு முகம் சிதைந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் பரிதாபக்கதையைக் காட்டுகிறார். லாபவேட்டைக்காக எத்தகைய தந்திரங்களுக்கும் தயங்காத முதலாளிகளின் சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார். சிறிய இத் திரைநாவலை தனது அனுபவம் மிக்க எழுத்தாற்றல் மூலம் சிறப்பானதாக மாற்றியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
previous post
