1.போண்டு (சிறுகதைகள்)
பெருமாள் முருகன் அவர்களின் வேல் சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாக நாம் இந்தப் புத்தகத்தை கருத முடியும். மனிதனின் வளர்ப்பு விலங்குகளை மையமிட்டு வெளிவந்திருக்கும் அடுத்த 11 கதைகள்… பொதுவில் மனிதர்களின் வளர்ப்பு விலங்குகளை பற்றியவை என்று நாம் சொன்னாலும் இவை மனிதர்களின் கதைகளைத்தான் பேசுகின்றன.
நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த எத்தனையோ வளர்ப்பு விலங்குகள் உண்டு. நாய்கள் வாழாத வீதிகளோ பூனைகள் அலராத இரவுளோ இருக்க முடியுமா என்ன? ஆனால் பெருமாள் முருகனின் சித்தரிப்புகள் சிக்கலான தத்துவக் கருத்துகளையும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை சிந்தனைகளையும் ஆராய்வதற்கு இந்த விஷயத்தை பயன்படுத்துகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறுகதை அதன் தொடர்புடைய கதாபாத்திரங்களை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக ஒரு வளர்ப்பு பிராணியை பயன்படுத்துவது செரிவூட்டும் வகையில் இந்தக் கதைகளில் பதிவு செய்யப்படுகிறது.
என்ன சாதி என்று பெயரைக் குறிப்பிடாமலேயே அந்தக் குறிப்பிட்ட சாதியினுடைய அவலங்களை வெளிப்படுத்துவதில் தனக்கென்று ஒரு கலையை கைவரப்பெற்றவர் பெருமாள் முருகன். இந்த 11 கதைகளுமே நம்முடைய தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற நாய்கள், பூனைகள், வெள்ளாடுகள் உட் பட நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த அவற்றைப் பற்றிய கருதுகோள்களும் பழமொழிகளும் கலந்த நம் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றன..
தங்களுடைய வளர்ப்பு விலங்குகளை வைத்துக்கொண்டு மனிதர்கள் தங்களுக்குள் உறவு பகடி ஆடுவது இந்தக் கதைகளில் பதிவாகியுள்ளது. தன்னுடைய அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பெயரையே மதி என்று தன் நாய்க்கு வைக்கின்ற ஒரு விஷயத்தை அந்த அதிகாரி அறிந்துகொள்ளும் இடம் அழகாக பதிவாகின கதை. ஒரு பேராசிரியர் நாய் என்று ஒரு மாணவரை ஏசி விட்டதால் வரக்கூடிய சிக்கல்களுக்கு இடையே அதில் இருந்து மனிதநேயத்தோடு அவர் மீண்டு… தன்னுடைய துறைக்குச் சென்று தன் முன்னால் படுத்து உறங்குகின்ற நாயை பார்த்து புன்னகைக்கும் ஒரு கதை… என்று பல கதைகள் பேசினாலும் நமக்கு சூடா என்கிற தலைப்பில் தோழர் பி.எம். எனும் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரை குறித்த புரட்சி சித்தாந்தக் கதை ஏனோ திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் ஒரு கதையாக இந்தப் புத்தகத்தில் உள்ளது.
2.நடுநிசி எல்லைகள் (நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு)
தற்போதைய இந்தியாவின் மக்கள் வரலாறு என்பது விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வாதார சிக்கல்களை ஒருபுறமும் மிருகத்தனமாக மதவெறி அரசியல் ஜனநாயகத்தின் மீது நடத்துகின்ற படுகொலைகளை மறுபுறமும் பேசுவது என்றாலும் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத நாம் அறியாத ஓர் இந்தியாவையும் பிரச்சனைகள் மிகுந்த அதன் எல்லைகளின் வழியே வாழுகின்ற 9000 மைல்கள் பயணம் மேற்கொண்டு அந்த அப்பாவி மக்கள் அனுபவிக்கும் அன்றாட சிக்கல்களையும் முன்னுணர்வோடு பதிவு செய்யும் அற்புதப் புத்தகம் இது.
எலெக்ட்ரிக் லிட்ரேச்சர் விருதையும் புக்லீஸ்ட் சிறந்த வரலாற்றுப் புத்தகம் விருதையும் பெற்ற இந்த நூலை நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்
ஞான.வித்யா… எண்ணற்ற வரலாற்றுத் தரவுகளுக்குள் சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்து வெளியில் வந்து நிகழ்கால சூழலை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் ஒரு நூல் இது. எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் எல்லையை எப்படி அணுகுகிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமான உறவு, பல வழிகளில் ஊகிக்க முடியாத அளவிற்கான மனிதநேயம் இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்துகின்ற இந்தியாவின் அரசியல் கண்ணோட்டம். ஒளிரும் இந்தியா என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பத்தை தோலுரித்துக் காட்டுகின்ற சுசித்ரா விஜயன் அடிப்படை குடி உரிமைகளும் பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் ஜனநாயக மரபுகளும் எப்படி தூக்கி வீசப்பட்டு இருக்கின்றன என்பதை ஆழமாக காட்சிப்படுத்துகிறார்..
இந்தியா – பாக்கிஸ்தான் போர்ப் பதற்றம் ஏற்படும் போதெல்லாம் நான் எந்த நாட்டை சேர்ந்தவர் என்கிற கேள்விக் குறியோடு வாழ்கின்ற இந்தக் கலப்பு எல்லைப் பகுதி மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதறுவதை வாசித்தால் எல்லைக் கோடுகள் என்பவை அவர்களுக்கு என்ன அர்த்தத்தை தருகின்றன என்பது புரியும்.
மதப் பிரிவினையின் படைத் தளபதி வெறுப்பை தூண்டு போவார் என்று உலகம் முழுக்க அறியப்பட்டு இருக்கும் நரேந்திர மோடி 2019 இன்னும் பிரதமராகி காஷ்மீரில் சட்டப்பிரிவு 300 எழுவதை திரும்பப் பெற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஊபா போன்ற சட்டங்களை கொண்டு வந்ததை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை கையில் ஏந்தி பதாகைகளுடன் உயர்த்திப் பிடித்த குற்றத்திற்காக ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் 10,000 பேர் தேசத் துரோக வழக்கு போடப்பட்டு சிறையில் வாடுவதை வாசிக்கும்பொழுது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. பேராசிரியர் அறிஞர் ரோமிலா தப்பார் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல கஷ்மீர் எல்லை மட்டுமல்ல, இந்திய மியான்மார் எல்லை உட்பட பலவற்றைப் பற்றி பேசுகின்ற இந்தப் புத்தகம் புதிய வரலாற்றைப் படைக்கிறது.
3.காடன் கண்டது (குறவர் இனக் குழுக்கள் குறித்த சிறுகதைகள்)
1933இல் வ.ராமசாமி எனும் வ.ரா. தமிழின் முதல் நரிக்குறவர்கள் குறித்த சிறுகதையை எழுதினார். அப்போது இருந்து தொடங்கி இன்று வரையிலான இருபத்து ஆறு தமிழ்ப் படைப்பாளிகள் எழுதிய நரிகுறவர்கள் குறித்த கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஓர் இனக்குழுவின் வாழ்வியலை மையப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பயணத்தைக் கதைகள் பிரதிபலிக்கின்றன. நாட்டார் கதைகள், தேவதைக் கதைகள், ஆவணக் கதைகள், எதார்த்த கதைகள், மாய எதார்த்த கதைகள் எனப் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். பின் நவீனத்துவ மற்றும் பின் காலனிய கதைகள் போன்றவற்றின் மத்தியில் இந்தக் கதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன..
காடன் கண்டது கதை பிரமிள் எழுதியது 1982ஆம் ஆண்டு ‘கணையாழி’ இதழில் வெளிவந்த கதை.. அதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட படைப்புகளை இதில் தொகுத்திருக்கிறார்கள். பழங்குடி குறவர்களை குஞ்சியர் என்று நம் இலக்கியங்கள் போற்றுகின்றனர் பாசிமணிக்காரர்கள் என்று கௌதம சித்தார்த்தன் போன்றவர்கள் அழைக்கிறார்கள். நரிக்குறவர் என்போர் வட இந்தியாவில் ஆரவல்லி மலைத்தொடர் மேவார் குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்று பத்மா பாரதி என்பவர் குறிப்பிடுகிறார். நரி படித்து அதன் இறைச்சியை உண்டு எஞ்சிய பல் தோல் நகம் ஆகியவற்றை இருப்பதால் தான் அவர்கள் நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இந்தத் தொகுப்பில் ‘இந்தியா டுடே’ இதழுக்காக நான் எழுதிய ‘பிலி சிங்கு ‘ கதையும் இடம்பெற்று இருக்கிறது. தமிழகத்தின் வாழ்வியலோடு புறநானூற்று காலத்தில் இருந்தே கலந்துகிடக்கும் இந்த இனமக்களின் நாடோடி வாழ்க்கை, அவர்களது துன்ப துயரங்கள் போன்றவற்றைப் பேசும் இந்தக் கதைகளினூடாக நாம் அறிந்துகொள்வது அந்த இனத்தைப் பற்றி மட்டும் அல்ல. அவர்களை எப்படியெல்லாம் நம் தமிழகம் நடத்துகிறது என்பதையும் சேர்த்து தான். வாக்ரி போலி எனும் அவர்களுடைய மொழியில் சமீபத்தில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பதை சேர்த்து பார்க்கும்பொழுது… இன்னும் நிறைய கதைகள் அவர்களை குறித்து எழுதப்படவேண்டும் என்று தோன்றுகிறது. நவீன வாழ்க்கைக்குதக்கவாறு இந்த உலகைத் ன்றிட ஏராளம் உள்ளது அவர்களுக்கு.
4.தமிழ் மீதான ஆதிக்கம்
தமிழ், தமிழர் மீதான வடமொழி ஆதிக்கத்தை இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது. தமிழ் மொழி உருப்பெற்று, வளர்ச்சி பெற்று வந்த வரலாறு வேறு. சமஸ்கிருதம் உருவாகி செயல்பட்ட ஆதிக்க வரலாறு வேறு என சுருக்கமாக இந்தப் புத்தகத்தைப் பற்றி நாம் பதிவு செய்யலாம். 2700 ஆண்டுகளாக எழுத்துரு பெற்ற ஒரு மொழியாக தமிழ் விளங்குகிறது. தமிழ் என்பது ஒரு இனக்குழு, ஓர் இடம், ஓர் எழுத்துரு என்ற அடையாளங்கள் கொண்டது. சமூக வரலாற்றில் அரச உருவாக்கம் என்கிற மரபில் பார்க்கும்பொழுதுகூட தமிழுக்கு என்று ஆட்சி அதிகாரம் கிடைத்ததில்லை என்று இந்தப் புத்தகம் வாதிடுகிறது.
நூலாசிரியர் இலா வின்சென்ட் ஆய்வியலில் நிறைஞர் பட்டம் பெற்றவர். முதல் காந்திய தமிழ்ப் புதினம் தமிழ் நிலமும் இனமும் போன்ற நூல்களின் ஆசிரியர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு இருட்டை தின்றவர்கள் நான் வாசித்திருக்கிறேன். சாகித்ய அகாடமிக்கான இலக்கியச் சிற்பி வரிசையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற ஒரு மொழி பெயர்ப்பு நூலும் தமிழ்நாடன் பற்றிய இவருடைய புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தோழர் தோ.மு.சி.ரகுநாதனின் படைப்புலகம் போன்ற கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க ஒரு கோப உணர்வோடு எழுதப்பட்டுள்ளது. உண்மையிலேயே மூன்று சங்கங்கள் இருந்தனவா என்கிற கேள்வியோடு இந்தப் புத்தகம் தொடங்குகிறது. முதல் எழு வள்ளல்கள், இடை ஏழு வள்ளல்கள், கடை ஏழு வள்ளல்கள் என்று பட்டியல் போடுகிறது.
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் வீ.அரசு சொல்வதைப் போல
கி.பி. 600 முதல் கி.பி.1800 வரை பல்வேறு வெளிக் கூறுகள் தமிழ் மரபை மறுதலித்து மாய்த்து வைதீகம் மரபாக முன்னெடுத்த ஒரு கதையை இந்த நூலாசிரியர் பேசியிருக்கிறார். இதில் உள்ள அற்புதமான நான்கு கட்டுரைகள் ஆதிக்க சக்தியாக செயல்பட்டு வரும் வைதிகம் எனப்படும் பார்ப்பனிய மதத்தின் பண்பாடு தமிழ்ப் பண்பாடாக திரித்துக் கூறப்படுவதை ஆவணப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் கல்வி கற்பதையோ, தமிழில் படைப்பதையோ இன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஹிந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வைப்பதற்காக ஆங்கிலத்தை புறம் தள்ளுகிறார்கள். இவர்களால் தமிழ் இலக்கிய இலக்கியங்களை காயப்படுத்த முடியும். அந்தக் காயங்களை ஆராய்ந்து சான்றுகளோடு இந்த நூலில் அடையாளப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். ஆதிக்க மொழியாக ஒருபோதும் இருந்திராத தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்திய வட மொழிவெறி வரலாற்றுப்பூர்வமாக எழுதப்படும்போது அதை வாசிக்க வாசிக்க ரத்தம் கொதிக்கிறது.
5.பெரியவன் (நாவல்)
விவசாயம் கிராமப்புறத்து வாழ்க்கை மனிதர்களுக்குள் இருக்கும் இடைவெளிமிக்க உறவு நிலத்துக்கும் மனிதனுக்குமான நுணுக்கமான அடிப்படை நுண் நெருக்கம் என்று ஒரு அற்புத நாவலை கொடுத்து இருக்கிறார் சுந்தரபுத்தன். நவீன அறிவியல் ஒரு வேளாண்மை குடும்பத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் கொடூரமானது. விவசாயம் வாழ்க்கை நேர்ந்து கொண்டவர்களுக்குத்தான் தெரியும். அது எத்தனை பெரிய தவம் என்று இயற்கையோடு இயைந்து செயல்படும் விவசாய முறைகளை, தத்துவார்த்த வாழ்க்கையாக வாழும் ஓர் அணுகுமுறையை இந்த நூல் முன்வைக்கிறது. ஆடிப்பெருக்கு பூசைக்கான வேலைகளை அனைவரும் இணைந்து செயல்படுத்துகின்ற அந்த ஒன்பதாவது அத்தியாயம் மனதை சுடுகிறது. பூமாதேவியை கும்பிடுங்க, விளைச்சல் பெருகட்டும். பண்ணையார் ஐயா முதலாளி அல்ல, வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்தாலும் வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாய தொழிலாளி என்பன போன்ற வரிகளை இடர்கின்றோம். வேளாண்மை கிராமங்களில் ஊரும் உறவும் வேறு வேறு அல்ல… பெரியவன் என்கிற ஒரு விவசாயி அவரது வாழ்வின் 20…25 ஆண்டுகளின் அனுபவங்களை இந்த நாவல் அழகாக பேசுகிறது. தொண்ணூறுகளின் தொடக்கம் கம்ப்யூட்டர் யுகம் பிறந்து இருந்தது. ஊரெங்கும் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு மவுசு. அதனால் பத்திரிகை அலுவலகத்தில் அச்சுக் கொடுப்பவர்களுக்கு வேலை போய்விட்டது.
இந்த சூழ்நிலையில் விவசாயத்திற்குத் திரும்புகின்ற பகுதி நேர செய்தியாளர் வாழும் வாழ்க்கை நம்ம சில்லிட வைக்கிறது. வேளாண்மை செழித்தாலும் நெல்லை குவித்து வைத்து இருக்கும் பொழுது மழை கொட்டித்தீர்க்கிறது. பிறகு வெயிலில் நனைந்த நெல்லை உலர்த்துகிறார்கள்… அரைவிலைக்குப் போகுமா, கால் விலைக்குப் போகுமா என்று கதறுகிறார்கள். புதுமைப்பித்தன் கதையைப் போலவே ஒரு நாள் கழிந்தது என்ற திருப்தியில் முக்கால்வாசி வாழ்க்கையும் கழிந்து விட்டது என்று இந்த நாவல் முடிவடையும் இடத்தில் நவீன மனிதன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்று இன்னும் எத்தனை தண்டனைகளை நம் ஊர் வேளாண்மை அனுபவிக்கப்போகிறது என்பதை நினைத்து பரிதவிக்காமல் இருக்க முடியவில்லை.
6.அம்கா (சிறார் கதைகள்)
தமிழ் சிறார் கதை உலகத்தின் இன்றைய முக்கிய குரல் வீழியன் எழுத்தோடு நிறுத்தாமல் நேரில் சிறார்களை சந்தித்து கதைகளை, கணிதத்தை உரையாடுகின்ற ஒருவராகவும் நாம் அவரைப் பார்க்கிறோம். குழந்தைகள் கதைகளின் இன்றைய முக்கியமான அம்சங்கள் இவரது கதைகளில் இருப்பதை நான் பார்க்கிறேன். தங்களுடைய வகுப்பின் பாடத் துறைகளின் மீது ஈர்ப்பு வர வைக்கின்ற அம்சங்களாக குழந்தைகளின் வாசிப்பு வழியே நாம் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது என்பதற்கு இவருடைய கதைகள் சாட்சி. சிறார் கதைகளின் முக்கிய அம்சங்களான சிறார்களை ஈர்க்கும் கதாபாத்திரங்கள், ஒரு சிறு மோதல் மற்றும் தீர்வுடன் கூடிய தெளிவான கதைக்களம், வயதுக்கு ஏற்ற மொழி இதைத் தவிர குழந்தைகளை தொடர்ந்து தேடலில் ஈடுபட வைக்கும் நுண்ணறிவு விஷயங்கள் கூடவே கொஞ்சம் கருணை, கற்பனை எல்லாவற்றையும் இணைத்த ஒரு நூல் ஆசிரியராக நாம் விழியன் அவர்களை இந்த கதைகளினூடாக பார்க்க முடிகிறது. அம்மா+அக்கா=அம்கா என குழந்தைகள் விரும்பும் ஒரு பார்முலா கதை முதல் கதை. இந்தக் கதைக்குள்.. பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் பார்வையில் பெரு நகராட்சி ஊழியர்கள் குறித்த ஒரு புதிய தடத்தை அவர் பதித்திருக்கிறார்.
மொத்தம் உள்ள 14 கதைகளில் பெரும்பாலானவை நம்மை நெகிழ வைக்கின்றன. குறிப்பாக என்னை மிகவும் பாதித்தது என்றால் கலைத்திருவிழா என்கிற கதை.. மேடையில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்காத தன்னுடைய தோழிக்காக நண்பர் ராம் மேற்கொள்ளும் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிய சைக்கிள் பயணம் நல்ல சித்தரிப்பு. அதேபோலவே ‘ஊற்று’ என்கிற கதையில் தண்ணீர் கேன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு குழந்தைத் தொழிலாளியை நான்கு பள்ளிச் சிறார்கள் சேர்ந்து மீட்கின்ற சம்பவ அடுக்குகள் கண்டிப்பாக நம் குழந்தைகளுக்கு போய் சேர வேண்டிய அம்சங்கள் ஆகும். குழந்தைகளின் கற்பனை ஊற்றை அற்புதமாக தூண்டி விடுகின்ற இந்தக் கதைத்தொகுப்பில் எஸ்.மதன் என்பவர் அழகான படங்கள் வரைந்து இருப்பதையும் குறிப்பிட வேண்டும். l
