எழுத்தாளர் அம்பை அவர்கள் மும்பையில் நண்பர்களுடன் இணைந்து 1988ஆம் ஆண்டு ஸ்பாரோ (sparrow) சவுண்ட் & பிக்சர் அச்சீவ்ஸ் ஃபார் ரிசர்ச் ஆன் உமன் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் இயக்குனராக அம்பை இருந்து வருகிறார். இந்த அமைப்பு சிறுகதை, கவிதை போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண் எழுத்தாளர்கள் சந்திப்பை ஏற்கெனவே பலமுறை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் முதன்முறையாகச் சிறார் எழுத்தாளர்களுக்கான சந்திப்பினை இந்த ஆண்டு 28/4/2025 முதல் 2/5/2025 வரை நடத்தியது. அதில் தமிழ்நாட்டிலிருந்து ஈரோடு சர்மிளா,
ஞா.கலையரசி, நாராயணி சுப்பிரமணியம் மற்றும் சந்தியா ராவும் கேரளாவிலிருந்து கயுருநிஷாவும், கர்நாடகாவிலிருந்து ஷாலினி மூர்த்தியும் மற்றும் குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் சிறார் எழுத்தாளர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். தமிழ், மலையாளம், மராத்தி,கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி போன்ற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் கலந்து கொண்டனர். அதில் சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற விருதாளர்கள் சிலரும் இருந்தனர்.
தேசிய அளவில் ஸ்பாரோ ஒருங்கிணைத்த இந்த எழுத்தாளர் சந்திப்பு என்பது எழுத்தாளர் களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த நிகழ்வு. இது மட்டுமல்ல, இன்னும் பொறுப்புணர் வோடு எழுத வேண்டிய உணர்வையும் எழுத்தாளர்களுக்குக் கடத்திய நிகழ்வு. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்பது பழமொழி. ஆனால் எழுத்தாளர்களை ஐந்து நாள் ஓரிடத்தில் தங்க வைத்து உபசரித்து, கௌரவித்து மகிழ்ந்த தருணங்களை வார்த்தைகளால் அளவிட முடியாது. பயண ஏற்பாடுகளை மிக நேர்த்தியாகச் செய்த அந்தக் குழு, எழுத்தாளர்களை மிக மிக அழகான தங்குமிடத்தில் தங்க வைத்தும், ஒவ்வொரு வேளைக்கும் வகை வகையான உணவுகளை வழங்கி எழுத்தாளர்களைக் கொண்டாடியும் மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த எழுத்தாளர்களை, விமான நிலையத்தில் ஒன்று சேர்த்து மும்பையில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் கிரீன் ஹில்ஸ் வில்லாஸ் என்ற தங்கும் இடத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். வாகனத்தில் இருந்து இறங்கிய எழுத்தாளர்களை, தாயன்போடு அரவணைத்து அன்பு செலுத்திய அம்பையையும் ஸ்பாரோ அமைப்பையும் ஒருவராலும் மறக்கவே முடியாது. பயணத்திற்கான ஏற்பாடு, தங்கும் இடம், உணவு ஏற்பாடு அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொண்டனர். அந்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கொடுத்தது. ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்களுக்கு முறையாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. இந்நிகழ்வின்போது முதல் நாள் கலையரசி எழுதிய சிறார் குறுநாவலான ‘டைனோசர் சொன்ன கதை’யும்
ஈரோடு சர்மிளா எழுதிய பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘துணிச்சல்காரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Nila, the Brave’ என்ற நாவலும், நேகா சிங் எழுதிய ‘நிக்கி த டிடெக்டிவ்’ என்ற ஹிந்தி நாவலும் அப்போது வெளியிடப்பட்டன. பின்பு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் எழுத்தாளர்களிடம் பல்வேறு வகையான கேள்விகளை முன் வைத்தனர். எழுத்தாளர்கள் வாழ்வியல் அனுபவங்களோடு தம் எழுத்தும் பணியும் குறித்துப் பல்வேறு நெகிழ்வான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்குக் கதைகள், பாடல்கள், நாடகங்கள், ஓவியம் வரைதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மேலும் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்குத் தாய் மொழியின் அவசியம் மற்றும் வரலாறு, பண்பாடு சார்ந்த கருத்தாக்கங்கள் குறித்த விவாதங்களும் மொழிபெயர்ப்பு குறித்தும் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. தாய்மொழியில் குழந்தைகள் வாசிக்கும்பொழுதுதான் அவர்களுடைய கற்பனைத்திறன் வளரும். பண்பாடு, வரலாறு போன்ற புரிதல்கள் ஏற்படும். மொழிப்பற்று, மொழியாளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆளுமைப் பண்புகள் நிறைந்தவர்களாகவும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் சுய சிந்தனை கொண்ட வர்களாகவும் உருவாக நிச்சயம் தாய் மொழிதான் உறுதுணையாக இருக்கும் என்பன போன்ற பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன.
மேலும் மொழிபெயர்ப்பு பற்றிய கலந்துரை யாடலில் பல்வேறு வகையான பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக மொழிபெயர்ப்பின் அவசியம், தேவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன. மொழிபெயர்ப்பு என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. சுயமாகக்கூட எழுதிவிடலாம். ஆனால் மொழி பெயர்க்க வெறும் மொழியறிவு மட்டும் போதாது. மூலநூலில் எழுத்தாளர் சொல்லவரும் கருத்தை அறிந்து மொழிபெயர்க்க வேண்டும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது எனவும் அப்படிச் செய்தால் அது மூலமொழியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைச் சொல்ல முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்திவிடும். இரு மொழிப் புலமை இருந்தாலும் மொழி பெயர்ப்பாளருக்கு கூடுதல் பொறுப்பு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பாளருக்கு நிறைய சவால்கள் இருந்தாலும் மொழிபெயர்ப்பு மிக அவசியமான ஒன்றாகும். இவ்வாறு பயனுள்ள வகையில் விவாதங்கள் நடைபெற்றன.
அரங்கத்தின் வெளியேயும் உள்ளேயும் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ்பெற்ற இதழ்களின் படங்களையும் ஆங்காங்கு வைத்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் முழுவதும் பெண் எழுத்தாளர்களின் புகைப்படங்களோடு அவர்கள் எழுதிய நூல்களும் அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதாகைகளும் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்களின் நூல்களும் அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அது இந்தியா முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களின் நூல்களைக் காணவும் வாய்ப்பாக அமைந்தது. நூல்களின் வடிவம், அட்டைப்படம், ஓவியம் போன்ற நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.
இனிவரும் காலங்களில் சிறார்களுக்கு என்ன தேவை? எதை எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? மற்றும் ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்தெல்லாம் மிக பரந்துபட்ட விவாதங்கள் நிகழ்ந்தன. எழுத்தாளர்கள் கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் இனிவரும் காலங்களில் செயலாற்ற பெரும் உந்துசக்தியாக அந்த நிகழ்வு அமைந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே பெரும்பாலான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் மிக முக்கியமான கருப்பொருளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மீதும் வெளிச்சம் பட்டு இருப்பது போற்றுதலுக்குரியது.
அத்தோடு எழுத்தாளர்களைப் பேச வைத்தும் பாட வைத்தும் நடிக்க வைத்தும் கதை சொல்ல வைத்தும் ஆட வைத்தும் அழகு பார்த்த அற்புதமான சந்திப்பு அது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுத்தாளர்களுக்கான பெரும் மரியாதையையும் கௌரவத்தையும் வழங்கி உற்சாகப்படுத்தி மகிழ்வித்து
அனுப்பி வைத்தது ஸ்பாரோ. எழுத்தாளர்கள் அனைவரும் மாபெரும் விருதினைப் பெற்ற மனநிறைவோடு பிரியா விடை பெற்றுச் சென்றனர். பெண்களின் படைப்புகளை ஆவணப் படுத்தி அங்கீகரிக்கும் அம்பை அவர்களுக்கும் ஸ்பாரோ குழுவிற்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தேயாக வேண்டும்.
l
