பேரா. முனைவர். அரங்கமல்லிகா
கவிஞர் அன்பாதவன் நவீனக்கவிதை, சிறுகதை, குறுநாவல், அல்புனைவு, ஹைக்கூ, ஹைபுன் என இலக்கியத்தின் பன்முக ஆளுமையாக இருந்து வருகிறார். நெருப்பில் காய்ச்சியப் பறை தொடங்கி, ஜுகல்பந்தி வரை ஏறத்தாழ 40 நூல்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்.
எந்த ஒரு படைப்பாளனின் கவிதையிலும், அழகியலில், தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள கூற்று என்பது முதன்மை இடம் பெறுகிறது. கூற்று என்பது பல்வேறு தளத்தில் பல்வேறுபட்ட நபர்களுடன் நிகழ்த்துவதாகும்… தலைவன் x தலைவி, தலைவன் x பாங்கன், தலைவன் x தோழி, தலைவி x தோழி, செவிலி x தோழி என கூற்று யார் யாரிடம் அமையவேண்டும் என்பது குறித்து தொல்காப்பியர் குறிப்பிடுவதிலிருந்து, கவிதையின் அழகியலில் கூற்று என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதை உணரலாம்.
கவிஞர் அன்பாதவனின் கவிதைகளில் மேற்குறிப்பிட்ட கூற்று நிகழ்த்துவோரின் பண்புகளைப் பல்வேறு கவிதைத் தொகுதிகளில் காணலாம். குறிப்பாக தனிமைக் கவிந்த அறை. கவிதை முழுவதுமாக ஒரு படைப்பாளனுக்கும் தனிமைக்குமான நெருக்கத்தை மிக நேர்த்தியாக கவித்துவமாக்கியிருப்பார்.
தனிமை கவிந்த அறை /இரவை ஒரு தேர் போல /இழுத்து வந்தது /மழைமாலை /எனக்கான நிலையத்தில் உதிர்த்துப்போனது /மின்ரயில் பெருங்கூட்டத்தோடு/முதிர்ந்தவர்கள் நடைபழக, இளசுகளோ /கூவி விளையாடுகின்றன தனை மறந்து/எதிலும் கலக்கவியாலாமல் படியேறித் திறக்க/வரவேற்கிறதென்னைத் /தனிமை கவிந்த அறை/ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்/மின்விசிறி ஓசையுடன் இருந்தன/தொலைக்காட்சி பிம்பங்களின் அபத்தங்களுங்கூட/ஒளி பொருத்தவும் தோன்றாமல் /இருளில் புதைய கூவியது கைபேசி /புரியாதமொழி /தனிமையின் பெருஞ்சுவரை உடைத்த/தவறெண்ணுக்கு நன்றியோடு /போர்வைக்குள் தவமிருப்பேன் /எனக்கான அழைப்பிற்காய் /துயர் பொறுக்காமல் கதறியழும் பெருமழை.
ஒரு மழைக்கால மாலை வேளையைப்போல அந்தக் கவிதைகளில் ‘தனிமை என்பது துயர் பொறுக்காமல் கதறி யழுகிறது’ என்று சொல்வது, அவருடைய படைப்பு வாசகனின் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் விதமானது, மழைக் காலத்தில் குளிருக்கு நடுங்கும் நாய்க்குட்டிகளை கவ்விப்பிடிக்கும் தாய் மனதென பெரும்பாலான கவிதைகள் கவ்விப் பிடிப்பதாய் அமைகின்றன. மோனாலிசாவின் பாடல் என்ற இக்கவிதைத் தொகுப்பில் பல்வேறுபட்டப் பொருளில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
மோனாலிசா என்பது உலகப்புகழ்ப்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். அப்படியான ஒரு புரிதலை அன்பாதவன் அவர்கள் தன்னுடைய கவிதைகளுக்கு எழுத்துரு கொடுத்திருப்பதன் மூலம் அவருடைய கவிதை வாசகப் பரப்பின் ஆழ அகல உயரமானது உலகப்புகழ் கலைநயத்தோடு அளவிடப்படுகின்றது. என்றாலும், கவிதை என்பது ஒரு சிற்பத்தைச் செதுக்குவது போன்றது என்ற ஓர் அளவுகோல் கொண்டு பார்ப்பதைவிட, இரவு நேரத்தில் பயணிக்கின்ற காலங்களில் விண்ணில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் நம்மோடு சேர்ந்து பயணிப்பதைப்போல கவிதையின் பாடுபொருளானது வாசகனின் மனதை நகர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.
அப்படி என்றால் பகலில் நட்சத்திரங்கள் தெரிவதில்லையே என்ற நக்கலான தொனியில் நினைப்பவர்களுக்கு பதில் இல்லை. அது அவருக்கு அவசியமும் இல்லை. நேற்றிரவு எதிர்பாரா இதமாய்/பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா. லயம்… ஸ்ருதி… கமகமென/இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின் சங்கமம்/திடீர் மழையைப்போல சட்டென நின்றது என்றோ கற்ற பாடலின் துண்டு/மிதக்கத் தொடங்கியது பால்வெளியில். வேலயப் பார்லே வெங்காயமென/மீண்டும் /புன்னகைத்துறைந்தாள் /மோனாலிசா.
கவிதை ஒரு படைப்பாளனின் அக உலகத்தில் படிந்திருக்கக்கூடிய சமூகக்குறியீடுகள், படிமங்கள், கற்பனைகள் ஆகியனவற்றை தூரல்களின் ஈரக்கசிவில் துளிர்விடும் புத்தம்புது வேர்களின் படரல், இவருடைய கவிதைக்குள் ஆங்காங்கு படர்ந்து செல்வதைக் காணமுடிகின்றன. ஒரு கவிஞன் தனது படைப்புகளில் அழகியலை உள்வாங்கி வெளிக்கொணர்வதில் ஓர் அறையில் வைக்கப்பட்ட மல்லிகை மணமானது அவ்வறை முழுவதும் கமழ்ந்திருப்பதைப்போல, அக் கவிதையின் பாடுபொருளானது அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த மோனலிசாவின் பாடல் தொகுதியில் மௌனவெளி என்ற ஒரு கவிதையில் கவிஞர் அன்பாதவன் அவர்கள் உரையாடாதப் பொழுதிலும்கூட மொழியின் ஓசையானது கேட்டுக்கொண்டு இருக்கிறது.
ரசிக்கிறோம்/இளமையாய்/மழலையாய்/மடியில் /வைத்துக்கொள்ளத்தோனும்/பரிமாறலில் இளகுமுன் வயதை/தாய்மையின் அறிவுரையும் உண்டு என்ற கவிதையில் புற உலகில் ஒலிகளைக் கடந்து இருவருக்குமான உடையாடல் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்று சொல்வதில், நான் x நீ என்ற மொழிதல் கோட்பாட்டுக்கான அர்த்தப் புனைவு கவித்துவம் பெறுகிறது.
வெறுமையாயிருக்கிறது வீடு /விடுமுறையில் வந்திருந்த/மனைவியும் மக்களும் வீடு திரும்பிட/சமைக்கப் பிடிக்காமல் /மவுனமாய்த் தூங்குகிறது அடுப்பு /கவிழ்த்து வைத்த /பாத்திரங்கள் ஜடமாய்/கடற்கரையில் /பாலீதின் பைகளில் /குழந்தைகள் சேகரித்த/கிளிஞ்சல்களின் இசைதான்/ இம்சிக்கிறது தனிமையில்/ மறதியாய் வாங்கிவந்த/ மல்லிச்சரம்/ வீடு பூராவும் மணந்திருக்கிறது/மவுனமாய் என்னோடு- தனிமை என்ற ஒரு கவிதையில், வெறுமையாய் இருக்கிறது வீடு என்று சொல்லி விடுமுறையில் வந்திருந்த மனைவியும் மக்களும் ஊர்திரும்பிவிட்ட நிலையில், மறதியாய் வாங்கிவந்த மல்லிச்சரம் வீடு முழுதும் மணந்திருக்கிறது. என்று கூறுவதில் வாழ்ந்திருந்த காலங்களுக்கான புனிதமும் இல்லாமைக் குறித்தான நெருடலும் கவிதையின் அழகியலில் ரயில் தண்டவாளத்தைப்போல இரண்டு துருவக் கோடுகளாக பயணிப்பதை உணரமுடிகிறது. என்றாலும்கூட, வேறுசில கவிதைகளில் கவிஞரின் நுட்பமான பார்வையின் ஊடுருவலில் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பேராற்றலையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
யாருக்காகவும் எதற்காகவும் தன்னை வளைந்து நெளிந்து கொடுக்கும் ஒரு சகமனிதராக இல்லாமல் அவரவருடைய எல்லையில் அவரவருக்கான தனித்துவத்தை மதிப்பிடும் வகையில், “அவரவர் பயணம்/ எல்லோருக்குமாய் காய்கிறது சூரியன்/ பெய்கிறது மழை”என்று சொல்லக் கூடிய இடத்தில், தனிமனித உணர்வுகளுக்கான மதிப்பை ஒரு மழலையின் புன்னகையைப்போல அள்ளித் தெளித்துச் செல்கிறார். சிலநேரங்களில், தன்னைத் தவிர்ப்பவர்களைக்கூட மௌனமாக விலகிச் செல்வதும், அத்தகைய தருணங்களில் தவிக்கும் மன நிலையையும் கவிதையில் ஒரு புகைப்படம்போல காட்சிப்படுத்துகிறார்.
அந்த நிராகரிப் பின் வலியில், கதவு இடுக்கில் மாட்டிக்கொண்ட சுண்டு விரலைப்போல கனத்த இதயத்தைக் கசிந்துருகச் செய்கிறார். முரண்பாடுகளைச் சொல்லும்போது மௌனத்தை ஒலி என்கிறார், திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையைப்போல தனது வெறுமையில் தனித்துவிடப்பட்ட தேவதையின் குரலைத்தேடி பிதற்றுகிறார். முரண்களோடும் மௌனத்தோடும் பயணிப்பது என்பது ஒரு படைப்பாளனின் படைப்புவெளியின் அடையாளமாகும் முரண்கள்தான் கவித்து வமாகின்றன. மௌனம் ஒரு பெரிய வாசகவெளியை திறந்துவிடுகின்றது. இந்த முரணும் மௌனமும் கவிஞர் அன்பாதவனின் கவித்துவ உயிரிழையாகும். மிகப்பெரிய உரையாடலும்கூட மிக எளிமையாக நிகழ்வது இந்த இரண்டு புள்ளிகளிலிருந்துதான்.
அரூபச் சுவர் /எதிர்கொள்வது சிரமம் மிகுந்தது/மிகவும் கசப்பானதொரு உரையாடலுக்குப் பிறகு /தசைகளின் இறுக்கங்களில் கற்பாறையான முகக்குறிப்புகளில் /துளியும் வெளிப்படாமல் தொலைந்திருக்கிறது /உறவு/வழக்கமான வார்த்தைகளை நிராகரித்துத் தூக்கிக் கிடாசும் /மனத்தடைகளில் சாத்தியமில்லை புன்முறுவல்/இதயங்களின் கைகுலுக்கல்களுக்கு/ வாய்ப்பில்லாத உறைந்த அமைதி உருகி / நெருக்கம் முகிழும் கணத்திற்காய்க் /காத்திருக்கிறது காயம் வழியும் மனம் /நெருக்கமான நேரங்களிலும் /ஸ்பரிசங்களைத் தடைச்செய்யும் /சுவர் உருவான / விவாதங்களில் பொழுதுகள் கழிய /தஞ்சை நந்தியென வளர்ந்துகொண்டேயிருக்கிறது /கண்ணுக்குப் புலனாகா கான்கிரீட் மதில் /இருவருக்குமிடையில் /எழும்பி வளர்ந்திருக்கிறது /அரூபச் சுவர்.
நீண்ட கவிதைகளின் வடிவத்திலும்கூட ஏற்கெனவே சொன்னதைப்போல கூற்று என்ற கருத்தியலானது மிக நேர்த்தியான வடிவம் கொள்கிறது. சங்க இலக்கியத்தின் சாரலை நீள்கவிதைகளில் படரச் செய்திருக்கும் கவிஞர் அன்பாதவன் சில கவிதைகளில் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியில் நெருக்கமில்லாமல் சொல்லவந்த தனது தனி மனிதப் புலம்பல்களை புலம்பித் தீர்க்கிறார். கவிதையில் சில இடங்களில் தொடரிழை விடுபடுவதையும் காணமுடிகிறது. அது வாசகரின் வாசிப்பு வெளியில் கவனயீர்ப்பைச் சிதைக்கிறது.
கேட்டுப் பெறுவதல்ல /மரியாதை/யாசித்து அளிப்பதல்ல/அன்பு/பிச்சை போடுவதல்ல/காமம்/தூக்கி வீசுவதல்ல/பரிமாறல்/முதுகில் குத்துவதல்ல நட்பு/வசவுகளால் ஆனதல்ல/வாழ்வு/தன்முனைப்பில் சிதறுவதல்ல/தாம்பத்யம்/வசதிகளால் கோர்த்ததல்ல /உறவு/முகங்களும் பிரதேசங்களும் ஒன்றெனினும்/இலையுதிர்கால மரங்களைத் தவிர்த்து திசைமாறிப் பறக்கின்றன பறவைகள்
கவிஞர் அன்பாதவன் மனவெளியானது சக்தியாகவும் சிவமாகவும் நர்த்தனமாடி ஐம்பூதங்களை ஒன்றிணைத்து படைப்பின் ஆக்கசக்தியில் தனக்கான தனியிடத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் எல்லாருடைய கவனத்தையும் தன்பக்கமாக ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. இளம் தலைமுறையினர் கவிஞர் அன்பாதவனின் படைப்பூக்கத்தில் பயணப்படுவதற்கான திசைவெளிகள் ஏராளமாக இருக்கின்றன. அன்பாதவன் போன்றோரை ஊக்குவிப்பதன்மூலம் நாம் தமிழின் வடிவத்துக்கு மேலும் அழகூட்டுகிறோம் என்ற பெருமையுடன். l
previous post
