பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அவர்கள் நிதிமூலதன ஆதிக்கத்தின் விளைவாக தற்காலத்தில் மக்கள் எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டிய கருத்தாக்கங்கள் குறித்து 2018 – 2024 காலகட்டத்தில் எழுதிய பதினாறு கட்டுரைகளை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மார்க்சிஸ்ட்’ இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.
பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக்கடமை எனும் தலைப்பிலான நேர்காணலில், இந்தியா ஒரு மக்கள் நல அரசாக செயல்படவேண்டும் என்பது துவக்கத்திலிருந்தே இந்திய அரசியலமைப்பின் இலக்காக இருந்தது. அந்த இலக்கானது நவீன தாராளமயப் பொருளாதார வருகைக்குப்பிறகு கைவிடப்பட்டுள்ளது. நவீன தாராளமயம் அமலாகிய கடந்த முப்பது ஆண்டுகளில் சமத்துவமின்மையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளன. இக்கொள்கையின் நெருக்கடிகளும், தேக்க நிலையும் உழைக்கும் மக்கள் பிரிவினரை மிகவும் கடுமையாகத் தாக்கிவருகிறது. முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதினால், முதலாளிகள் அதனை தொழிற்துறையில் முதலீடுசெய்து பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வேலைவாய்ப்பினை நல்குவர் எனும் நம்பிக்கை பொய்த்துப்போய் நிலைமை மோசமாகியுள்ளது. விவசாயத்தில் பெரு நிறுவனங்களை முதலீடு செய்ய அரசு ஊக்கப்படுத்துகிறது. கார்ப்பரேட்- இந்துத்துவா கூட்டணியானது நவீன தாராளமயத்திற்கு இருவழிகளில் துணைபோகிறது. ஒன்று, உழைக்கும்மக்களைப் பிளவுபடுத்துகிறது. இரண்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மத ரீதியிலான பிரச்சினைகளுக்கு திசைதிருப்புகிறது என்கிறார்.
பேரிடரான காலகட்டம் எனும் கட்டுரையில், இரண்டு உலகப்போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப்போலவே, இப்போதும் முதலாளித்துவத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஓர் அமைப்பின் இயங்குமுறை மீது குற்றம் சொல்லாமல், மற்றவர்களான சிறுபான்மையினரை அரசியல் நோக்கத்துடன் குற்றம் சாட்டுவதன் அடிப்படையில் வெகுமக்களை அணிதிரட்டுவது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. உலகளாவிய நிதி மூலதனமானது எப்படி தாராளமய வாதிகளுக்கு முக்கியமானதோ, அவ்வாறே பாசிஸ்டுகளுக்கு பிற மத வெறுப்பு என்பது முக்கியமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம், நவ தாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது நீடித்திருக்கும் நிலையில் சிக்கிக்கொண்டுள்ளோம். இது தற்கால நிலையினை பேரிடராக ஆக்குகிறது.
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும் எனும் கட்டுரையில் முதலாளித்துவ சமூக அமைப்பில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், மனிதர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக அல்ல. மாறாக, வேலையின்மையை அதிகரிக்கவும், குறைவான ஆட்களை வைத்து உற்பத்தியை அதிகளவு பெருக்குவதும்தான் அதன் குறிக்கோளாக இருக்கும். அதற்கு நேர் எதிராக சோசலிச சமூக அமைப்பில், செயற்கை நுண்ணறிவு துணைகொண்டு மனிதர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படும். அதேநேரத்தில் ஊதியம் எந்த வகையிலும் குறைக்கப்படாது. வேலைப்பகிர்வு, உற்பத்திப்பகிர்வு உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்கிறார்.
ஏகாதிபத்தியமும் இயற்கை வளங்களும்: ரஷ்யாவை ‘அடக்கமுயலும்’ அமெரிக்காவின் ஆட்டம் எனும் கட்டுரையில், உலக நாடுகள் அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கும், வளர்ச்சியடைந்த ஜி-7 நாடுகள் இயற்கை வளங்கள் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உலகின் மக்கள்தொகையில் ஜி-7 நாடுகள் 10 சதவீதமிருக்கும். ஆனால், உலகின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 32 முதல் 46 சதவீதம் வரை கொண்டுள்ளார்கள். ஜி-7 நாடுகள் பொருளாதார வலிமை கொண்டதாக இருப்பினும், அந்நாடுகளில் கிடைக்கும் இயற்கை வளங்களோ மிகவும் குறைவே. சமகாலத்தின் முக்கியமான இயற்கை வளங்களான எண்ணெய், எரிவாயு, வேளாண்பொருட்கள், கனிம வளங்களிலும் எடுத்துக்கொண்டால் ஜி-7 நாடுகளின் பங்களிப்பு என்பது குறைவுதான். இதனால், வளர்ந்த நாடுகள் வளர்ந்துவரும் நாடுகளையே சார்ந்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்.
ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் எனும் கட்டுரையில், இந்தியாவில் மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமானது வீரஞ்செரிந்ததாகும். இப்போராட்டமானது நவதாராளமயத்தினைப் பின்னடையச் செய்துள்ளது. வேளாண் துறையில் கார்ப்பரேட் நுழைவு அதிகரிக்கும்போது, விவசாயிகளின் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்ததாகிறது. ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும், ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப்போலவே, கச்சா எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்துவது போலவே உலகம் முழுவதும் நிலப்பயன்பாட்டின் முறைகளைக்கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் செய்ய விரும்புகிறது என்கிறார்.
‘விவசாயிகள் எழுச்சியின் வர்க்க அரசியல்’ எனும் கட்டுரையில், இந்திய விவசாயிகளின் போராட்டம், கோட்பாட்டு ஞானத்திற்கு புதிய தூண்டுகோலாக மாறியுள்ளது. சாதிப்பஞ்சாயத்து வர்க்கப்பஞ்சாயத்தானது பற்றியும், மதவெறி மாயமாய் மறைந்தது பற்றியும் விவரிக்கிறார். மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டுவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் முசாபர்நகரில் நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்திற்கு அனைத்து வர்க்கத்தினரும், அனைத்துச் சாதியினரும், அனைத்து மதத்தினரும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரின் ஆதரவையும் விவசாயிகளின் போராட்டம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த ‘பாரத் பந்தி’ற்கும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்திருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதுமட்டுமின்றி, பெண்களும், இஸ்லாமியர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்றுள்ளதைக் குறிபிடுகிறார்.
விவசாயிகளின் போராட்டங்கள் நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம் எனும் கட்டுரையில், ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம் என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் ‘தொழிலாளி- விவசாயி கூட்டணியின்’ அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் உண்மையில் தங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து எதிர்வினை ஆற்றுபவர்களாகவும், பிற்போக்குத்தனமானவர்களாகவும் இருக்கின்ற விவசாயிகளைப் பார்த்து அவர்களுடன் தொழிலாளி வர்க்கம் கூட்டணி வைக்கக்கூடாது என்கிற ஜெர்மானிய இடதுசாரிகளின் பார்வை தவறானது என்று கூறும் எங்கெல்ஸ் ஜெர்மனியில் 16ஆம் நூற்றாண்டில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தைப்பற்றியும் துல்லியமாக விமர்சிக்கிறார். மேலும், ஜெர்மானியப் புரட்சி நடக்கவேண்டுமென்றால் அதற்கு தொழிலாளர்கள்- விவசாயிகள் கூட்டணி அவசியம் எனவும் எங்கெல்ஸ் வலியுறுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
சர்வதேச நிதி மூலதனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான பாதை எனும் கட்டுரையில், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் காலனி நாடுகள் பலவும் விடுதலைபெற்றன. கிராக்கி நிர்வாகம் வாயிலாக அதிகபட்ச வேலைவாய்ப்புக்களை உறுதி செய்வதற்கான அரசுத்தலையீடு மற்றும் எல்லாருக்கும் வாக்குரிமை, ஜனநாயகப்பூர்வ அரசைத் தேர்ந்தெடுத்தல் ஆகியன உறுதி செய்யப்பட்டன. இந்தச் சலுகைகள் புதிய சேம நல முதலாளித்துவத்திற்கு வழிவகுத்தது. மேலை நாடுகள் காலனியாதிக்கத்தை விலக்கிக்கொள்வதாகக் கூறினாலும், மூன்றாம் உலக நாடுகளின் கனிம வளங்களை விட்டுக்கொடுக்கவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சூழலில் லெனினிய அனுமானங்களைக் கடந்த சில போக்குகளும் ஏற்பட்டன. ஏகாதிபத்திய கட்டம் பற்றி கம்யூனிசம் வரையறுத்திருந்தது என்னவெனில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், போர்களும் இருக்கும் என்பதே. ஆனால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான தீவிர முரண்பாடுகளுக்கு மாறாக ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய ஏகாதிபத்தியம் முன்னுக்கு வந்தது. போருக்குப்பிந்தைய காலத்தில், நிதி நிறுவனங்களில் குவிந்த, அரசுத் தலையீட்டின் அடிப்படையில் கிராக்கி நிர்வாகம் மூலம் உருவான சேமிப்புகள் ஆகியனவும் நிதி மூலதனத்தின் பெருக்கத்திற்கான ஊற்றுகளாக அமைந்தன.
சர்வதேச நிதி மூலதனத்திலிருந்து விடுதலைபெற ஒன்று, அனைத்து தேசிய அரசுகளும் ஒன்றிணைந்து சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு உழைக்கும் மக்களின் நலனைக் காக்கவேண்டும். இரண்டு, தனித்தனி நாடுகளாகவோ, குழுவாகவோ சேர்ந்து சர்வதேச நிதி மூலதனத்திலிருந்து விடுபட்டு, மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து மாற்று நிகழ்ச்சிநிரலை மேற்கொள்ளலாம் என்கிறார். பெரு நிறுவன நிதி மூலதனக் கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும் எனும் கட்டுரையில், நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவற்றுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாகப் பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகக் குறிப்பிடுகிறபோதும் அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். எதேச்சதிகார, பாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்தக் கட்டளையை மறந்துவிடக்கூடாது என்கிறார்.
பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் குறித்து முன்வைக்கப்படும் வாதங்கள் என்னும் கட்டுரையில், ஆர்.சி.இ.பி. எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசாங்கம் வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு வாதம் எழுந்துள்ளது. பிற நாடுகளை ஒப்பிடுகையில் ஒரு சில சரக்குகளை உற்பத்தி செய்து விற்பதில் இந்தியாவிற்கு போதிய போட்டியிடும் திறன் இல்லை. அப்படி போதிய திறன் இல்லாத நிலையில் நாம் ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான். பெரும்பாலும் உலக அரசுகள் தங்களது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளாலும், தங்களது நாணயமாற்று வீதத்தினை குறைவாக மதிப்பீடு செய்வதாலுமே இந்த ‘விலைவாசியில் போட்டியிடும் திறன்’ வளர்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள் தங்களின் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மலையளவு சலுகைகளை வழங்குவதானது வெளிநாட்டு சந்தைகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் உத்தியாக பார்க்கப்படுகிறது. இது தவிர முதலாளித்துவம்,சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்; பொருளாதார மந்த நிலை தேவை நேர் எதிரான ஒன்று; உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மேற்பூச்சு போதாது; வெனிசுவேலாவில் அமெரிக்கத் தலையீடு ஏகாதிபத்தியத் தலையீட்டின் புதிய வடிவம் என்கிற தலைப்பிலும் இந்நூலில் கட்டுரை எழுதியுள்ளார். l
previous post
