ஒரு இருநூற்று ஐம்பது பக்கக் கட்டுரை நூலை, ஒரே மூச்சில் உற்சாகம் குறையாமல் படித்து முடித்துவிட முடியுமா? சமீபத்தில் படித்த மிக முக்கியமான நூலாகவும் அது இருந்தது என்பது கூடுதல் சிறப்பு. நூலின் தலைப்பே நம்மை வாசிப்புப் பயணத்திற்குள் இழுத்துச் சென்றது. தலைப்பு: காகிதப் படகில் சாகசப் பயணம். சின்ன வயதில் சிந்துபாத் கதையை எவ்வாறு பரபரப்பாக படிக்க முடிந்ததோ, அதில் கொஞ்சமும் குறையாத வேகத்துடன் பக்கங்களை வேகமாக வாசித்துக் கடந்து செல்ல முடிந்தது. அவ்வளவு விறுவிறுப்பு. கட்டுரைகளை இவ்வளவு விறுவிறுப்பாக எழுத முடியுமா என்றால், முடியும் என்றே நிரூபித்திருக்கின்றன நூலில் உள்ள 47 கட்டுரைகளும்.
பத்திரிகையாளர் சுதாங்கன் தன் முன்னுரையில் இந்த நூல் பற்றிக் கூறும்போது, ‘இது புத்தகம் என்பதைவிட, வளரும் பத்திரிகையாளர்களுக்கான ஒரு கையேடு’ என்கிறார். மேலும் அவர் கூறுகையில், ‘கருணாகரனின் இந்தப் புத்தகம் ஓர் அனுபவக் கையேடு, ஆனால் இது இலக்கியம், அற்புதமான மொழி வளம்!’ என்று அவர் சிலாகிப்பதில் தவறில்லை. இவர்தான் இப்படிச் சொல்கிறார் என்றால், பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளர் பா. ராகவன், ‘இந்தப் புத்தகத்தை வாசிக்க உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகிறதென்றால், நீங்கள் தமிழில் வீக் என்று பொருள்’ என்கிறார். எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், ‘மார்பிள் தரையில் கோலிக்குண்டுபோல வழுக்கி உருள்கிறது இவரின் எழுத்து நடை’ என்கிறார். இப்படி ஒவ்வொருவரும் உசுப்பேத்த, உட்கார்ந்து ஒரேமூச்சில் படித்து முடிக்க முடிந்தது, அவ்வளவு விறுவிறுப்பு.
தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வாகி, தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் பெ. கருணாகரன். ஆனந்தவிகடன், நக்கீரன், சிறுகதைக் கதிர், குமுதம், ரிப்போர்டர், புதிய தலைமுறை என்று அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் தனது தடத்தைப் பதித்துள்ளார். ஒவ்வொரு இதழில் பணிபுரிந்தபோதும் ஒவ்வொருவிதமான அனுபவங்களைப் பெற்று, அவற்றை இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்கு தனது நூலின் மூலம் கடத்தியுள்ளார். இவர் ஒரு சிறந்த சிறுகதையாளரும்கூட. ஒருமுறை அமுதசுரபி நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது. இது, அவரது சிறுகதை புனைவுத் திறமைக்கு மிகச் சரியான சான்று. இதில் சோகம் என்னவென்றால், இவர் ஓர் இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்ததால், தன் பெயரிலேயே கதையை அனுப்ப முடியாமல், தன் மனைவி லட்சுமியின் பெயரில் அனுப்பியிருக்கிறார். அது முதல் பரிசுக்குத் தேர்வாகிவிட்டது. தன் பெயரிலேயே அந்தக் கதை பிரசுரமாகவில்லை என்பதில் இன்றும் அவருக்கு வருத்தம். நேரடியாக கணவன் மனைவி இருவருமாக, அமுதசுரபி அலுவலகம் சென்று உண்மையை விளக்கிச் சொல்லியும் இவர் பெயரில் கதையை வெளியிட அமுதசுரபி நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர், இருவரும் பரிசை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்பியதாக சோகத்துடன் பதிவு செய்கிறார்.
ரஜினி நடித்துக்கொண்டிருந்த ‘பாபா’ திரைப்படம் குறித்த செய்திகள் அனைத்து செய்தி இதழ்களிலும் வந்துகொண்டிருந்தன. அப்போது இவர், தன் வாசகர்களுக்கு பஞ்ச் டயலாக் போட்டி நடத்தி, போட்டிக்குவந்த ஏராளமான பஞ்ச் டயலாக்குகளை வடிகட்டி தேர்ந்தெடுத்து, அவற்றை ரஜினிசாரிடம் சென்று காட்டியிருக்கிறார். அப்படி போட்டிக்கு வந்த டயலாக்குகளில் ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்’ என்னும் வசனம் அனைவருக்கும் தெரிந்ததே. போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வசனங்களையும் வாங்கிக்கொண்டு, ரஜினி அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கியிருக்கிறார். அவற்றை வாசகர்களுக்குக் கொடுத்து, வாசகர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்ற அனுபவத்தை ஒரு கட்டுரையில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
பள்ளிக்கூட நாட்களில், இவர் வாசகர் கடிதங்கள் எழுதி அந்தக் கடிதங்கள் பிரசுரமானால், அதில் கிடைக்கும் ஆனந்தத்தையும், அதன் பலன்களையும் இவ்வாறு எழுதுகிறார்: ‘குமுதத்துக்கு (கடிதம் எழுதும்போது) சூடு இருக்கா, சொரண இருக்கா என்று பொங்க வேண்டும். உம்மைப் பாலைவனத்தில் தூக்கிப் போட என்று ஏக வசனம் பேச வேண்டும். விகடனுக்கு எழுதும்போதோ பாராட்ட வேண்டும். நெகிழ்ந்துவிட்டேன், மகிழ்ந்துவிட்டேன், அழுதுவிட்டேன் என்று அடித்துவிட வேண்டும்… விகடன், குமுதம் ஆகிய இரண்டு இதழ்களுக்குக் கடிதம் எழுதுவதற்குத்தான் அதிக ஆர்வம். காரணம் அதன் ரீச் மட்டுமல்ல, கடிதங்களைப் பிரசுரித்தால் ஒரு காம்ப்ளிமெண்ட் இதழும் அனுப்புவார்கள். பைசாவுக்கு வழியில்லாத அந்தப் பள்ளிப் பருவ நாட்களில் ஒரு புத்தகம் கிடைப்பது மிகப் பெரிய விஷயம்’. இன்னும் இக்கட்டுரையில் இதுபோன்ற சுவாரஸ்யமான நிறைய விஷயங்கள் உண்டு.
ஜூனியர் விகடனில் பணிபுரிந்தபோது, ‘ராத்திரி ரவுண்ட் அப்’ செல்கையில் தன் நண்பருடன் இரவில் சென்றபோது நடந்த கைகலப்பு பற்றியும் சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார். சினிமா காட்சிகளையும் மிஞ்சும் திருப்பங்களைப் பார்க்கலாம். அடி வாங்காமல் தப்பித்து வந்த கதைகள் என்று அனைத்துமே விறுப்பாகச் சொல்லப்பட்டுள்ள விதம் அனைத்துமே அருமை. ஒரு பத்திரிகையாளனாய் இருப்பதில் உள்ள சிரமங்கள் அனைத்தும் கட்டுரைகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
தன் மகளின் பார்வைக் குறைபாட்டைப் போக்கும் முயற்சியில், கையில் காசில்லாதபோது, எழுத்தாள நண்பர்கள் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவுகூருகிறார்.
சிலநேரங்களில், சில பத்திரிகைகள், முக்கியமான முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை, தான் விகடனில் பணிபுரிந்தபோது நடந்ததை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார். அப்போது பரவலாக சினிமாக்களிலும் கதைகளிலும் கான்சர் நோயால் ஒருவர் இறப்பதுபோன்ற காட்சிகளை வைப்பது இயல்பாக இருந்தது. விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற கதைகளும் காட்சிகளும் வெளியிடக்கூடாது என்று விகடன் இதழ் ஒரு கொள்கை முடிவெடுத்தது. ‘இனி விகடனில் கான்சர் நோயால் இறப்பது போன்ற கதைகளை வெளியிடுவதில்லை’ என்று ஆசிரியர் விகடனில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இப்படி ஒரு அறிவிப்பு வெளியாவதற்கு இவர் செய்த நேர்காணல் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. இது ஒரு பத்திரிகையாளனுக்கு எவ்வளவு மனநிறைவு தரக்கூடியது!
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளே கட்டுரைக்குள் நம்மைப் பிடித்துத் தள்ளிவிடும் ஆற்றல் வாய்ந்தவை என்றால் அது மிகை இல்லை. அவற்றுள் சில: ‘ரஜினியுடனான ரேஸ் இன்னும் முடியலே’, ‘ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம்’, ‘அமேசான் காட்டின் அழியாத அனுபவங்கள்’, ‘இதழாளர் இறையன்பு’, ‘விடைபெறு காதை’, ‘ரிஜெக்ட் அண்ட் செலெக்ட்’, ‘கனவுத் தொழிற்சாலையில் கரைந்த நிழல்கள்’, ‘நெருப்பாற்றில் நீந்திய மெழுகு மனிதன்’, ‘வாசகர் கடிதமும் வளர்பிறைப் பருவமும்’, ‘வேலையில்லாதவனின் டைரி’. வாசிக்க நுழைந்தால், நாம் ஒரு கட்டுரை நூலைப் படிக்கிறோம் என்னும் நினைவே மறைந்துவிடும், அவ்வளவு விறுவிறுப்பு, நறுக்கென்ற தேவையான தகவல்கள், எதைச் சொல்வதிலும் எல்லை மீறாத நிதானம், ஒரு பத்திரிகையாளனாக எங்கே நுழைந்தாலும் தன்மானத்தையும் நேர்மையையும் விட்டுக்கொடுக்காத தனிப் பாங்கு, தோல்வியையே சந்திக்க நேர்ந்தாலும், நியாயத்தின் பக்கம் நிற்பது என்று ஒவ்வொரு கட்டுரையும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அதனால்தான் சுதாங்கன் அவர்கள் ‘இது இலக்கியம்’ என்று துணிந்து தன் முன்னுரையில் கூறியுள்ளார்.
அப்படி விளிக்கப்படுவதற்குத் தகுதியான நூல்தான்; இதழியலில் தனது 35 ஆண்டுகால அனுபவத்தை பெருமிதத்துடன் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பெ.கருணாகரன். அவருக்கு வாழ்த்துகள்.l
previous post
