மனதை புத்துயிர்க்கச்செய்யும் உந்துவிசையில் மனிதர்களின் கூடுகைக்கு பெரும்பங்குண்டு. அத்தகைய பெருங்களிப்பில் இணைய ஆவலாய் மாமாவுடன் திருவிழாவிற்கு கிளம்பும் சிறுவன். உடன் அழைத்துச்செல்ல மனமில்லாத உறவுகள், அதற்கு காரணம் அக்குழந்தை பார்வை மாற்றுத்திறனாளி என்பதே. படிப்பவர்களுக்கு இதிலென்ன தப்பிருக்கு? பார்வை இல்லாத குழந்தை திருவிழாவில் என்ன செய்யும்? கூட்டநெரிசலில் சிரமப்படும்னுதானே விட்டுச்சென்றிருக்கிறார்கள் என்று தோன்றினால் கூண்டிலேற்றப்படாத குற்றவாளிகளில் நீங்களும் ஒருவரே. அங்கே போகாதே, இதை எடுக்காதே, இதைச் செய்யாதே என்று பார்வை மாற்றுத்திறனாளர்களின் புழங்கும் பரப்பை நிர்ணயிப்பது என்பது அவர்கள் மீதான அக்கறை அல்ல அதிகாரம் என்று பாதிக்கப்பட்ட நபரில் ஒருவராக அதற்கு எதிராக எழுத்தை ஆயுதமாக்கி இப்புத்தகத்தின் மூலமாக சமர் செய்திருக்கிறார் முனைவர் மு. முருகேசன். வீட்டில் ஆரம்பித்து, பணிபுரியும் இடங்களில், பிரயாணங்களில், வங்கிகளில், பழகும் நபர்களிடத்தில், திருமணத்தில், படிப்பில், சொத்துரிமையில்,பிள்ளை வளர்ப்பில் என அவர்கள் படும்பாடு சொல்லில் வடிக்க முடியாதவை.
காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் பொதுவான தேவையானதாக தற்பொழுது கருதப்படுகிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளர்களுக்கு விபத்துக் காப்பீடு மறுக்கப்படுவதும், வங்கி கணக்கு ஆரம்பிப்பதிலும், ஏ.டி.எம். அட்டை தர மறுப்பதும், பணியிடங்களில் பொறுப்புகளையும் அங்கீகரங்களைத் தரமறுப்பதும், அதனை அபகரிப்பதும், அதிகார வக்கிர மனநிலையின் உச்சம்.
மனிதாபிமானம், புண்ணியம் என்ற பெயரில் அவர்கள் விருப்பமின்றி உணவகங்களில் அவர்கள் சாப்பிடும் உணவிற்கு காசு தருவதும், பொது இடங்களில் அவர்களிடம் வச்சுக்கோங்க என கையில் காசை திணித்துவிட்டு செல்லும் மனநிலைக்கு பின்னால் ஒளிந்திருப்பது கருணையல்ல, பார்வையற்ற மனிதர்களை சமமாக ஏற்க மறுக்கும் ஆணவம்.
பெண்களை தனக்குச் சமமாக ஏற்க மறுக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பெண் பார்வை மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பணியிடப் பிரச்சனைகள், திருமணம், பாலியல் பிரச்சனைகளை பார்வையிருந்தும் நம்மால் புரிந்துணர முடியாத பல சம்பவங்களை இப்புத்தகத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்திருப்பது முக்கிய சிறப்பம்சம்.
இப்பெண்களின் வீட்டுப் பராமரிப்பும், பிள்ளை வளர்ப்பும் பிரமிக்க வைக்கிறது..
பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் நோக்கோடு, பெரிய எழுத்தாளர் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு கதை எழுதியிருப்பதை அவை எழுத்துகள் அல்ல காகிதக் குப்பைகள், அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல, எழுத்துப்பிழையானவர்கள் என கர்ஜிக்கும் கட்டுரை மிக அருமை.
தனக்குத் தேவையான உரிமைகள் அனைத்தும் போராட்டத்தின் வாயிலாகவே நிறைவேறின, இனி நிறைவேறவேண்டிய தேவைகள் அனைத்திற்கும் நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். போராட்டமும், ஒற்றுமையுமே மனித வாழ்வின் அடிநாதம் என நமக்கு இப்புத்தகத்தின் வழி பல முன்னுதாரணங்களைத் தந்திருக்கும் முனைவர் மு. முருகேசனுக்கு நிறைய அன்புகள்.
தனக்கு என்ன தேவை என்பதை தெரியாமல் இருப்பது அறியாமையாக இருக்கலாம். ஆனல் அடுத்தவருக்கு நாம் விரும்புவதை திணிப்பது அராஜகம். அத்தகைய அராஜகத்தை மாற்றுத்திறனாளிகள் மீது சுமத்தும் நாம் ஒவ்வொருவரும் கூண்டலேற்றப்பட வேண்டிய குற்றவாளிகளே. l