தமிழறிஞர் பொ.வேல்சாமியின் 2012 முதல் 2024 வரையிலான பன்னிரு ஆண்டுகால முகநூல் பதிவுகள் மூன்று பெரும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளன. நூறுக்கும் மேற்பட்ட அரிய தமிழ் இலக்கியம், மொழி, அரசியல், சமூகம், வரலாறு, பண்பாடு, தத்துவம், பதிப்பகம், தமிழில் நிகழ்ந்த முக்கிய உரையாடல்கள் எனப் பலதரப்பட்ட குறிப்புகளின் தொகுப்புகளாக இந்நூல்கள் உள்ளன. வெறும் குறிப்புகளாக இல்லாமல் அதற்கான சான்றுகளுடனும் இணைய நூல் இணைப்புகளுடனும் (QR Code) கூடிய தரவுத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்புப் பணியைச் செய்தவர் தமிழ் மாணவன் என்று அறியப்படும் கா.விக்னேஷ். இவர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ்ப் படித்து, புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டு வருபவர். தொல்தமிழிலும் நவீன தமிழிலும் கற்றலும் பயிற்சியும் உள்ளவர் என்பதால் அவரது ஆற்றல் நன்றாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுள்ளது.
தமிழ் ஆய்வறிஞர் பொ.வேல்சாமியை எண்பதுகளில் இருந்தே எனக்கு அறிமுகம் உண்டு. தஞ்சையில் இருந்த காலங்களில்
பேரா. அ.மார்க்ஸ் இல்லத்தில் பல நாட்கள் சந்தித்திருக்கிறேன்; தீவிர வாசிப்பாளரான அவர் நீண்டநேரம் உரையாடல்களில் கலந்துகொண்டு தன் கருத்துகளைச் சான்றுகளுடன் கூறுவார். கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் பயின்றவர் என்பதால் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால்பட்டவர். அதேநேரத்தில் சமகாலத் தமிழ் ஆய்வுகள், புதிய வரவுகள், நவீன இலக்கியங்கள் என அனைத்தையும் வாசிப்பவர். அவரது வாசிப்பறிவு பிரம்மிப்பூட்டுவது. தன் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே அவர் அன்றாட பாடுகளுடன், தினசரி நிகழும் அரசியல் சமூக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர். அவரது கவனம் என்பது ஒன்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்வதல்ல; அதன் அடிப்படை, தர்க்கப் பொருத்தம், உண்மைத் தன்மையைப் பல கோணங்களில் சீர்தூக்கிப்பார்த்து, அதற்கான தரவுகளைச் சரிபார்த்த பின்னரே ஒரு கருத்துநிலையை அடையக்கூடியது. முகநூலில் அவர் எழுதிய பல குறிப்புகள் அதிகபட்சம் ஒரு பக்கம்தான். ஒரு பத்தி துவங்கி ஒரு பக்கம் வரை எழுதப்பட்ட குறிப்புகள்; அதற்குச் சான்றாக அமைந்த பல நூல்கள்; அதன் சுட்டிகள் என வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்ல, அவை வழிநடத்தி அதைத் தொடர்ந்து அறிவதற்கான ஆர்வத்தைத் தூண்டக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.
நானூறுக்கும் மேலான வேல்சாமியின் குறிப்புகளை வகைப்படுத்தி மூன்று நூற்தொகுதிகளாக கா.விக்னேஷ் பதிப்பித்துள்ளார். ‘பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு,’ ‘இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்,’ ‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’ ஆகிய தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளின் உட்தலைப்புகள் பேசுபொருள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு, வரலாறு, அரசியல், இரங்கல் மடல்கள், பிற என எட்டு பகுப்புகளைக் கொண்டமைகின்றன. இந்நூல்கள் கலைக்களஞ்சியம் போலப் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளன. பல உரையாடல்களில் நிகழ்ந்த பிழைகள், தவறுகள், கவனமின்மை, உள்ளடி அரசியல், திட்டமிட்டு மறைத்தல், மிகைப்படுத்தி உரைத்தல் எனத் தொடங்கித் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் இறுதி வாய்ப்பாட்டில் உரைக்கும் சிதைவுகள்போல் பல தமிழில் நிகழ்ந்த சிதைவுகளைக் கூறுகிறார். நூல்களை எங்கிருந்தும் வாசிக்கலாம்.
ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் ஒவ்வொரு தொகுப்பிற்கும் சிறந்த பொருளடைவை உருவாக்கி விக்னேஷ் இணைத்துள்ளார்.
தமிழ் ஆய்வுத்துறையைச் சேர்ந்த ‘மனசாட்சியற்ற மனிதர்கள்’ கட்டமைத்த ‘தமிழின் பொற்காலம்’ என்கிற அரசியல் பொய்களை, ஆரியம் சார்ந்த வழுக்களை, ஆரிய பரவலாக்கத்தைக் குறித்துப் பொ.வேல்சாமி முகநூலில் எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. தமிழின் தொன்மை, அடையாளம், பன்முகத்தன்மை, பொருளாயாத அடிப்படை எனத் தமிழின் மேன்மையைப் பேசினாலும் தமிழை இனவாத அரசியலாக மாற்றும் பார்வைகளை விமர்சித்துச் சான்றுகளுடன் தகர்த்தெறிகின்றார். விசயநகரப் பேரரசுக்குப் பின் வந்தவர்கள் அருந்ததியர் போன்ற ஆதாரமற்ற வெற்று அரசியல் இனவாத முழக்கங்களை ஆதாரத்துடன் அடித்து நொறுக்குகிறார். தமிழ்ப் பதிப்பியக்க வரலாற்றில் நிகழ்ந்த பல சிக்கல்களையும் எழுதிச்செல்கிறார். குறிப்பாக உ.வே.சா. பதிப்பித்த நூல்களின் பதிப்பு வரலாற்றில் சில குறுந்தொகைப் பாடல்கள், உரையாசிரியர்வழிக் கண்டுபிடிக்கப்பட்டு எவ்வாறு முழுமை அடைந்தன என்பதை விளக்கும்போது கூர்மையான இவரது வாசிப்புத்திறனும் ஒப்பாய்வும் நுட்பமான முறையில் வெளிப்படுகின்றன.
“மனசாட்சி அற்ற மனிதர்களின் பேச்சுகள் என்பன உண்மைகளுக்கு மாறானவை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தான் முகநூலில் பல்வேறு தலைப்புகளிலான செய்திகளை நீண்டகாலமாக எழுதிவருவதை நீங்கள் அறிவீர்கள்” என்று கூறும் அவர், அதற்கான சான்றுகளைக் கணிப்பொறி இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைத்துள்ளார்.
பதிப்பாசிரியர் விக்னேஷ், அத்தகைய இணையச் சுட்டிகளை எளிமையாக கியூ.ஆர். கோடாக மாற்றி (சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட படங்கள் அளிக்கப்பட்டுள்ளன) இணைத்துள்ளார். வாசகர்கள் அவற்றை ஸ்கேன் செய்து சான்றுகளைக் கைப்பேசியிலோ மடிக்கணினியிலோ தரவிறக்கிப் படித்துக்கொள்ளலாம். இதன்மூலம் ஆர்வமுள்ள தமிழ் மாணவர், ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர்கள் ஓர் இணைய நூலகத்தையே தரவிறக்கித் தங்கள் வசதிக்கேற்ப வாசிக்கலாம். இந்நூல்கள் தமிழில் முதன்முறையாகத் தொழில்நுட்பப் புதுமையாக இதனைச் செய்துள்ளன. இவற்றைக் கண்டடைவதற்கான சிரமங்கள் ஏதுமின்றி எளிதில் அடையும்விதமாக உள்ளன. அவ்வகையில் தமிழ் மாணவன் விக்னேஷ் பாராட்டுக்குரியவர்.
அடுத்து அவர் எழுதியுள்ள நீண்ட முன்னுரையில், தான் தொகுப்பித்ததன் பின்னணி, பயன்பாடு, அதில் அவர் அடைந்த சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றி குறிப்பதுடன், இந்நூல்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் முகநூல் பதிவுகளைத் தரவிறக்கம் செய்து தொகுத்து வகைப்படுத்தி, வாசிப்பிற்கு எளிமையாக மூன்று நூல்களாகத் தொகுத்திருப்பது பெரும் பணி. அதைச் சிறப்பாகச் செய்துள்ளார். அச்சில் சில குறைகள் உள்ளன. பல பழந்தமிழ் நூல்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை அச்சினால் பின்புறம் மை ஊறி எழுத்துத் தெளிவற்று உள்ளன. இத்தகைய தொகுப்புகளை மை ஊறாத நல்ல தாள்களில் அச்சிட்டிருக்கலாம். என்றாலும் ‘என்.சி.பி.எச்.’ பதிப்பகம் இத்தொகுப்புகளின் முக்கியத்துவம் கருதி காலிகோ பைண்டிங்கில் தரமான நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் நூலாக வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கது.
‘பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு’ என்ற தொகுப்பில் இலக்கியம், மொழி ஆகிய இரண்டு பகுப்புகள் உள்ளன. பொ.வேல்சாமியின் ஓர் அறிமுகவுரை உள்ளது. அதில், ‘தொழில்நுட்பத்தில் எழுத்து’ எனும் தலைப்பில் தான் முகநூலில் எழுதவந்த கதையைக் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக முகநூலை எப்படிக் காத்திரமாகப் பயன்படுத்துவது என்ற அவரது ஆர்வம், தேடலின் விளைவாக அவரிடமிருந்து வெளிப்படும் இலக்கியம், மொழி குறித்த முக்கியமான தகவல்கள் அதனுள் குவிந்துகிடக்கின்றன.
முகநூல் என்பது தன்முனைப்பிற்கான ஊடகமாக, வெற்று அரட்டைகளுக்கான அறையாக இருப்பதை; அறிவார்ந்த களமாக மாற்றப்பட்டிருப்பதை இத்தொகுப்புகள் பறைசாற்றுகின்றன.
“கம்பன் போற்றியது பொதுநெறியா? மனுநெறியா?” என்ற தலைப்பில் உள்ள ஒரு பதிவில், கம்பராமயணத்தில் உள்ள நான்கு பாடல்களில் வரும் மனுநீதிக் கொள்கை மிகச் சரியானது என்று கம்பர் கூறுவதை எடுத்துக்காட்டுகிறார். ஜீவா உள்ளிட்ட பல பொதுவுடமையாளர் கம்பனிடம் பொதுவுடைமை வெளிப்படுவதாகக் கூறிவந்தவர்கள் இதைக் காண மறந்தது ஏன்?
என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழ்ப்பண்பாட்டில் விளைந்த கம்பராமயணத்தையும் வடநாட்டுப் பண்பாட்டில் விளைந்த வால்மீகி இராமயணத்தையும் ஒப்பிட்டு, இரண்டிலும் உள்ளார்ந்து இயங்கும் மெய்யியல், அரசியல், வரலாற்றுப்பார்வைகள் குறித்த ஆய்வை நோக்கி நகர்த்தியுள்ளார் பொ.வேல்சாமி. வான்மீகியிடமிருந்து கம்பர் செய்த தமிழ் இராமாயணத்தில் விடுபட்டவை எவை? அவற்றைக் கம்பர் விட்டதற்கான காரணம் என்ன? என்று இந்த ஆய்வை விரித்தால் இரு பண்பாடுகளின் வேறுபாடுகள் மட்டுமின்றி, பார்ப்பனிய பண்பாட்டைத் தமிழ் உள்வாங்கிய விதம், இரண்டு பிரதிகளும் எழுதப்பட்ட காலவேறுபாடு வரலாறு ஆகியவற்றை அறியலாம்.
சமீபமாக இராமர் புலால் உண்டாரா? இல்லையா? என்ற சர்ச்சை உருவானது. வால்மீகி இராமயணத்தில் இராமர் புலால் உண்டார் என்று உள்ளது. கம்பராமாயணத்தில் இராமர் சுத்த சைவமாகக் காட்டப்படுகிறார். இப்படி ஓர் ஒப்பீட்டை நிகழ்த்தினால், வட இந்தியப் பார்ப்பனர்களுக்கும் தென்னிந்தியப் பார்ப்பனர்களுக்குமான வேறுபாட்டை அறியலாம். சைவம் என்ற உணவுப் பழக்கம் ஆரிய நெறி அல்ல என்பதையும் சமண, பௌத்தம் ஆதிக்கம் வகித்தபின் அதனோடு போட்டியிட்ட பார்ப்பனியத்திற்கு எதிராக வெள்ளாள உயர்சாதிகள் சைவத்தை உள்வாங்கிய கதைக்கான சான்றுகளைப் பெறலாம். காரணம் சமண, பௌத்தம் அறியாத வால்மீகி இராமாயணமும் சமண பௌத்ததத்திற்குப் பிந்தைய கம்பராமாயணமும் ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். எற்கனவே பல ஒப்பியல் ஆய்வுகள் நடந்திருப்பினும் மனுவாதத்தை ஏற்பது, கந்தபுராணச் சாயலுடன் இருப்பது, தமிழ்த் தன்மையில் இராமன், சீதை படைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பலவும் ஒப்புநோக்கப் பட வேண்டியவை. இப்படிப் பொ.வேல்சாமியின் ஒவ்வொரு பதிவும் ஆய்விற்கான திறப்புகளைக் கொண்டுள்ளன.
இவர் சமகாலத்தில் வந்த ‘தி இந்து’, ‘தினமணி’, ‘காலச்சுவடு’ போன்ற இதழ்களில் வந்த பல கட்டுரைகளை மறுத்தும் அவற்றில் கூறாமல் விடுபட்டவை குறித்தும் எழுதியுள்ளார். அதோடு தமிழ் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள், பதிப்பகங்களின் பணி, அதில் நிகழும் குளறுபடிகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுபவர்கள் அவசியம் இத்தொகுப்பை வாசித்தபின் எழுதுவது சாலச் சிறந்தது. காரணம், தமிழ் இலக்கியக் காலங்கள் குறித்த உரையாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. அவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டு தமிழ் இலக்கிய வரலாறுகள் இனி எழுதப்பட வேண்டும். “ஈவ்டீசிங்கைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்” என்ற தலைப்பே வாசிப்பவர் கவனத்தைக் கவருவதாகத் தோன்றினாலும் அடிப்படையில் வேல்சாமியின் நடையே அதுதான் என்று கூறலாம். ஒருவித எள்ளலும், பகடியும் நிறைந்த நடை. சிலவேளை மட்டற்ற அறச்சீற்றம் கொண்ட நடை. தமிழில் வரலாற்றுப் பிழைகளைச் செய்பவர்கள், பொற்காலம் என்ற பெயரில் பொய்யை அள்ளிவிடுபவர்கள் மீதெல்லாம் கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இத்தலைப்பில் உள்ள சுவராஸ்யமான செய்தி என்னவென்றால், உப்பு என்பதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிடும் செய்திகள். முக்கியமாக உப்பு என்பது ஆண், பெண் இணைப்பைச் சுட்டுகிறது என்று அகநானூறு, திருக்குறளைச் சான்றுகாட்டி எடுத்துரைப்பது முக்கியமானது. ‘உப்பு என்பது சுவையின் அடிப்படை என்பதால் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவை குறித்த தமிழ்ச் சொற்களும் உப்பு என்ற அடிப்படை சொல்லின் இணைப்பில் உருவாகியிருப்பதை’ தொ.பரமசிவன் சுட்டிக்காட்டுவதுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
உப்பு, பழந்தமிழில் ஆண், பெண் சேர்க்கையைக் குறிப்பிடுகிறது என்பது புதுமையான செய்தி. அதனைத் தொ.ப. கருத்துடன் இணைத்தால் ஆண், பெண் இணைப்பு என்பது இன்பத்தில் விளையும் ஓர் உப்பு என்ற புரிதல், அதன் சுவையை அறிவியல் அடிப்படையில் அணுகும் ஒரு முயற்சி என்பதை அறியலாம். இப்படி நூலின் ஒவ்வொரு கருத்தையும் விரித்து நமது வாசிப்புடன் இணைத்துப் பொருள் கொள்ளும்போது வியப்பையும் புதிய அறிவையும் பெறுகிறோம். ஜெயமோகனின் தற்சார்பான கருத்துகள் ஆதாரமற்ற “அண்டப் புளுகு ஆகாசப் புளுகு” என்பதைப் பல பதிவுகளில் கூறும் அவர், “ஜெயமோகன் தவிலிலும் அடிப்பார், தப்பிலும் அடிப்பார், கிழிந்தால் தச்சிக்கிட்டும் அடிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்’ என்ற தொகுப்பில் அரசியல், பண்பாடு, தத்துவம், இரங்கல் மடல்கள், பிற ஆகிய பகுப்புகள் உள்ளன. அர்த்தசாஸ்திரத்தின் இரட்டைநிலை குறித்து ஒரு பதிவு பேசுகிறது. அரசு மக்களை மூடநம்பிக்கைளிலேயே வைத்திருக்க வேண்டும். ஆள்பவர்கள் அறிவுடன் செயல்பட வேண்டும் என்கிறார் சாணக்கியர். இந்த சாணக்கிய தந்திர வாதத்தைத் தொண்ணூறுகளில் வந்த ‘உடலரசியல்’ கட்டுரைகளில் நான் எழுதியுள்ளேன். இப்படி நுட்பமாகப் பிரதிகளை வாசித்து முக்கியமான புள்ளிகளை எடுத்துக்காட்டுகிறார். காத்ரின் மேயோ எழுதிய “சாமிகளின் அடிமைகள்”குறித்த நூல் இணைப்பைத் தந்துள்ளார். அதில் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டனர் என்ற குறிப்புகள் இருப்பதைச் சுட்டுகிறார். அதேநேரத்தில் கிறித்துவ மதமாற்றம் குறித்து அந்நூல் பேசுவதன் எச்சரிக்கையையும் தருகிறார். இணையாக, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் நூல் குறித்தும் அப்பதிவில் அதன் சிறப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொகுப்பில் மேற்சொன்ன பல பிரிவுகளும் கவனமாகப் பிரித்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சமகால அரசியலுக்கு ஏற்ப தமிழ் இனவாதம், தேசியம் என்ற பெயரில் வரும் மதவாதம் ஆகியவற்றைக் கண்டித்து, அதைப் பேசுபவர்களின் உள்நோக்கங்கள், காட்டும் கருத்துகள் எத்தகைய ஆதாரமுமற்றவை என்பதை அரசியல் எனும் பிரிவில் சுட்டிக்காட்டுகிறார். ‘தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் யார்?’ என்பதைப் பற்றிய அருமையான விவாதம் உள்ளது. சாதிகளின் தொடர் சண்டைகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மதமோதல்கள் நிகழ்ந்ததாக வரலாறே இல்லை என்ற கருத்தை ஒரு பதிவில் முன்வைக்கிறார். சைவ, வைணவப் போராட்டங்கள்; சமண, பௌத்த சமயங்களை அழித்த சைவம் ஆகியவற்றை ஒருவேளை மதப்போரல்ல; சமயப் போர் என்று மதத்தில் சேர்க்காமல் விடுகிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. காந்தி, பெரியார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குறித்த பதிவுகள் இதில் உள்ளன. காந்தி யார்? என்ற பதிவில் காந்தி குறித்த பதினெட்டு நூல்களின் இணையச் சுட்டியைத் தந்துள்ளார். விக்னேஷால் அத்தனையும் கியூ.ஆர் கோடாக மாற்றப்பட்டுள்ளன. நேரு, சீனிவாச ராவ் எனப் பலரைப் பற்றி வந்த தமிழ் நூல் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. 2017-இல் “கிடாவெட்டும் திருமுருகாற்றுப்படையும்” என்ற ஒரு பதிவை எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படையில் வேலனுக்குக் கிடாவெட்டு நடந்ததைச் சுட்டும் இப்பதிவு தற்போதைய திருப்பரங்குன்றம் குறித்த இந்து மதவெறியர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. தத்துவம் என்ற பகுதியில் பல முக்கிய தத்துவம் சார்ந்த உரையாடல்கள் குறித்த பதிவுகளும் பௌத்தம், சைவம் குறித்த பதிவுகளும் உள்ளன. தமிழ்த் தத்துவ மரபு குறித்த தேடலுக்குப் பயன்படும் வகையில் இப்பிரிவின் பதிவுகள் முக்கியமானவை. இத்தலைப்பின் பொருள் குறித்த வேல்சாமியின் மிகநீண்ட நேர்காணல் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட நூலில் வரலாறு குறித்த பதிவுகள் உள்ளன. தமிழ் வரலாற்றை எழுத முயல்பவர்க்கு தரவுப் பெட்டகமாகவும் ஆய்விற்கான பல இடைவெளிகள், புதிய கருத்தோட்டங்களைத் தருவனவாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக மதவெறி ஊட்டப்பட்ட இன்றைய இந்திய ஒன்றியச் சிந்தனையில் தனித்து விளங்கும் தமிழகத்திற்கு அடிப்படையாக வரலாற்றில் பல இஸ்லாமிய, கிறித்துவ அறிஞர்களின் தமிழ்ப் பணிகளைப் பல பதிவுகளில் எடுத்துக் காட்டுகிறார். இத்தொகுப்புகளில் அவரது முழுக் கட்டுரைகளும் பிரிவின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப இணைக்கப்பட்டுள்ளன. அதன் சுட்டிகளும் தரப்பட்டுள்ளன. அனைத்துப் பதிவுகளும் திறனாய்வுச் சிந்தனையுடன் வெளிப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிவும் தனித்த கட்டுரையாக, ஆய்வாக நிகழ்த்தப்பட வேண்டிய தரவுகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மேற்பூச்சுகள் இன்றியும் வாசிப்பவருக்கு அதைக் கடத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன. அதிலிருந்து வாசகர் தனக்கான கட்டுரை ஒன்றை எழுதத் துவங்கலாம்.
ஆய்வாளர்கள் ஆய்விற்கான அடிப்படைத் தகவலைப் பெறலாம். ஒரு மாணவன், தான் கற்பதற்குரிய புதிய செய்திகளைப் பெறலாம். ஓர் ஆசிரியர், தான் கற்பித்தவற்றில் உள்ள சிக்கலை, தான் நம்பிவந்த அல்லது தெரிந்ததாக எண்ணிய ஒன்றை மாற்றி சரியானதை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். இப்பதிவுகள் வரலாற்றில் பல திருத்தங்களை முன் வைப்பவையாக உள்ளன. அவ்வகையில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இத்தொகுப்புகளை வாங்கி வைத்துக்கொள்வது அவர்களது அறிவையும் ஆய்வையும் வளப்படுத்துவதாக அமையும். l
previous post
