“நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” (‘We or Our Nationhood defined”) என்னும் நூலினை ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சித்தாந்தத்தின் மூளையாகச் செயல்பட்ட
எம்.எஸ். கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டிருக்கிறார். பாசிசச் சித்தாந்தம் மற்றும் காவிப்படைகளின் கையேடாக விளங்கும் இந்நூலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்தியச் செயலாரான மறைந்த தோழர் சித்தாராம் யெச்சூரி ஆய்வு செய்துள்ளார். அவர், அந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி கூறியுள்ளதைப்பற்றி சுருக்கமாகக் கீழே காணலாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, நாடுபிரிவினைக்கு முன்பு அதிகரித்து வந்த வகுப்புவாத பதற்ற நிலைமைகளையும், மதப்பிரிவினருக்கிடையே இருந்த பூசல்களையும் அதிகமான அளவில் அறுவடை செய்து கொண்டிருந்தது. அச்சமயத்தில், இத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்திட அனுமதிக்கப்படாத நிலை. ஆயினும் இந்தப் புத்தகத்தின் வெறித்தனமான பிரச்சார முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது என்கிறார்.
யெச்சூரி. ஜே.ஏ.கரன் என்பவர் எழுதிய ‘இந்திய அரசியலில் தீவிர இந்துயிசம்-
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்த ஆய்வு என்னும் நூலில், “சங் பரிவாரத்தின் மெய்யான தத்துவம் ஹெட்கோவர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கிறது எனவும் இக்கொள்கைகள் கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட தேசம்’ என்னும் நூலில் ஒருங்கிணைக்கப்பட்டு, விவரிக்கப்பட்டிருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளதை யெச்சூரி கவனப்படுத்துகிறார்.
கோல்வால்கர் 1940-73 ஆர்.எஸ்.எஸின் தலைவராகச் செயல்பட்டார். அக்காலமானது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவருக்கும் அதன் குடும்பத்தாருக்கும் வரலாற்று ரீதியான ஆதாரமாக இன்றும் இருந்துவருகிறது. குறிப்பாக, கலவரங்கள் நடக்கும் சமயங்களில் கலவரத்தில் ஈடுபட்டிருப்போருக்கு, மத வெறியை ஊட்டி அவர்களை வெறித்தனமாக ஈடுபடுத்தும் வண்ணம் அந்த நூல் அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளதைச் யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார்.
கோல்வால்கருடைய தொடர் செல்வாக்கு காவிப்படையினருக்கு ஒரு தத்துவார்த்த வடிவத்தை, அவர்களின் கருத்தோட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மட்டுமல்ல, தங்களுடைய பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரம் என்னும் குறிக்கோளை எய்திட ஸ்தாபனக் கட்டமைப்பை எங்ஙனம் நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதனையும் தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறது என்கிறார். காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1948 பிப்ரவர் 4 லிலிருந்து 1949 ஜூலை 12 வரை தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது, தங்களது இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்வதற்காக வஞ்சகமான சமரசங்களையும் ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டது. அதாவது, ஸ்தாபனத்திற்குள் தேர்தல்கள் நடத்துவதற்கான ஷரத்துகள் மற்றும் வகுப்புவாத உணர்வுகளைக் கிளப்பாமல், அவற்றை வெளிப்படையாக கண்டனம் செய்வோம் எனவும் மற்ற இனத்தவரிடம் சகிப்புத்தன்மையுடனான அணுகுமுறையை பின்பற்றுவோம் எனவும் ஆட்சியாளர்களிடம் உறுதியளித்திருந்தது. இவ்விரண்டு சமரசங்களுமே சங் பரிவாரங்களின் நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும் என கர்ரன் (1979) கூறியுள்ளதை யெச்சூரி குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸின் அமைப்புச்சட்டத்தில், “சங் பரிவாரத்தின் குறிக்கோள்களும் கோட்பாடுகளும் இந்து சமாஜத்தின் கீழ் இயங்கிவந்த பல்வேறு குழுக்களையும் ஒருங்கே பிணைத்து, அவற்றை நம்முடைய தர்மம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், அவை அனைத்தையும் புத்துயிரூட்டி இயங்கச்செய்திட வேண்டும் என்கிறது. ஆனால், அமைப்புச்சட்டத்தில், தீவிரமான மற்றும் சகிப்புத்தன்மையற்ற இந்து நாடாக இருக்கும் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என கர்ரன்(1979) கூறியுள்ளதை யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார்.
கோல்வால்கரின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, 1964களின் மத்திய வாக்கில், பல்வேறு இந்துப்பிரிவினரும் தங்கள் வித்தியாசங்களைக் கைவிடவும், ஒன்றிணைந்து செயல்படவும், அயல் நாடுகளிலுள்ள இந்துக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்து மதத்தலைவர்களை அணிதிரட்டுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுமாகும். அடுத்தது, தன்
‘குடும்பத்தின்’ ஸ்தாபனக்கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஓர் அரசியல் முன்னணியை உருவாக்குவதாகும், அந்த அரசியல் முன்னணி, எப்போதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை மற்றும் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பதுதான். இவ்வாறு, காவிப்படையினரின் இன்றைய தத்துவார்த்த அடித்தளங்களை உருவாக்கியதில் கோல்வால்கரின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது எனச் சுட்டிக்காட்டுகிறார்.
இப்படியாக, பல்வேறு கருத்தாக்கம் சார்ந்து, கோல்வால்கர் இந்நூலில், கூறியுள்ள கருத்துகளை யெச்சூரி கீழே கோடிட்டுக்காட்டியுள்ளார். அதாவது, இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில், எப்போதுமே இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருந்தது என்பதும், தொடர்ந்து அவ்வாறே இருக்கவேண்டும் என்பதுமேயாகும். வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிப்பதன் மூலமாக தன் நோக்கத்தை எய்திட முதலாவதாக, நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்து வரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களையெல்லாம் ‘இந்துயிசம்’ என்கிற ஒரே பையில் கோல்வால்கர் திணிக்க முயல்கிறார். இரண்டாவதாக, அயலான எதிரி ஒருவரை உருவாக்குவது, அதாவது ‘அயலான’ என்பதன் பொருள் இந்துக்களுக்கு ’அயலானவர்’ என்பதாகும்.’
‘இந்துக்களை’ ஒருமுகப்படுத்திட இத்தகைய ’அயலானவர்’களுக்கு எதிராகத்தான் வெறிச்செயல்கள் விசிறிவிடப்படுகின்றன. கோல்வால்கர் ஹிட்லரின் பாசிஸப்பாணி அனுபவத்தையே மிகவும் சார்ந்திருந்தார். அதே பாணியின்படிதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் காட்ட முயன்றனர், அதற்காக, மக்கள் மத்தியில் இஸ்லாமியர்மீது தவறானதொரு உணர்வினை உருவாக்க வேண்டியது அவசியம் எனக்கருதி, அதன் காரணமாகவே இந்துக்கள் எல்லா விதங்களிலும் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் ; அவர்கள் சொத்துகள் எல்லாம் முஸ்லிம்களால் பறிக்கப்பட்டுவிட்டன என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பினை விதைக்கத் தொடங்கினர்.
இந்தச் சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மக்கள் அப்போது பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடி வந்தனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பினை உமிழ்ந்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக எழுதிய மேலை நாட்டு எழுத்தாளர்கள்கூட விடுதலை இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இல்லாதிருந்ததையும், அதற்குப் பதிலாக அவை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சலுகைகளையும் விவரமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். நானாஜி தேஷ்முக்கூட, ஒரு ஸ்தாபனம் என்கிற முறையில் விடுதலைப் போராட்டத்தில்
ஆர்.எஸ்.எஸ். ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஓர் ‘இந்து ராஷ்ட்ரம்’ நிறுவிட வேண்டும் என்கிற அரிப்புத்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரிட்டிஷாரின் உண்மையான கூட்டாளியாக இருப்பதற்கு இட்டுச்சென்றது. குறிப்பாக,
1931 இல் நடைபெற்ற கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் விடுதலை பெற்ற இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகத் திகழும் என்று அறிவித்ததையடுத்து ஆர்.எஸ்.எஸுக்கு காங்கிரஸ் மீது வெறுப்பு வளர்ந்தது. கோல்வால்கர், தன்னுடைய நிலைப்பாட்டினை மெய்ப்பித்திட வேண்டும் என்பதற்காக சில அம்சங்களை நிறுவ வேண்டியிருந்தது. முதலாவதாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் பூர்வ குடியினர் என்று நிறுவ வேண்டியிருந்தது. இரண்டாவதாக, இந்துக்கள் இந்த பூமிக்கு வேறெங்கிருந்தும் வந்தவர்கள் அல்லர் எனக்கூற வேண்டியிருந்தது. எனவேதான் தன் நிலையினை மெய்ப்பிப்பதற்காக தனது நூல் முழுவதும் ‘இந்து’ என்ற சொல்லையும், ‘ஆரிய இனம்’ எனும் சொல்லையும் ஒரே அர்த்தத்தில் நயவஞ்சகமாகப் பயன்படுத்துகிறார். கோல்வால்கர், பதிவு செய்யப்பட்ட அனைத்து வரலாறுகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, தனது விருப்பு, வெறுப்பிற்கிணங்க மாற்றிக்கூறுகிறார். குறிப்பாக, இந்தியாவில் உருவான சீக்கிய மதம், சமண மதம், புத்த மதம் யாவுமே இந்து மதத்திற்குள் அடக்கம் என்கிறார்.
800 ஆண்டுகால இந்திய வரலாறு என்பது முஸ்லிம்களின் படையெடுப்புக்கு எதிரான ‘ஒட்டுமொத்த இந்து தேசத்தின்’ நீண்ட நெடிய யுத்த காலம் என்பதுபோலவே சித்தரிக்கிறார். 1857இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், இந்து தேசத்தால், “நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்” என்கிறார். தேசம் என்று வரையறுப்பதற்கு ஐந்து குணாம்சங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது, “பூகோள நிலை, இனம், மதம், கலாச்சாரம், மொழி” இந்தியாவில் உள்ள இந்துக்கள் மட்டுமே இந்த ஐந்து தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறே இந்தியா ஓர் இந்து தேசமாகவே வளர்ந்திருக்கிறது என்று நிறுவுவதே கோல்வால்கரின் நோக்கம். கோல்வால்கரின் கூற்றுப்படி, இந்து சமவெளி நாகரிகம் என்பது இந்த நாட்டின் தொன்முதற்குடியினரான ஆரியர் நாகரிகம் என்பதாகும். அதேபோல் மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தையும் தள்ளுபடி செய்கிறார். மதம் குறித்து கூறும்போது, “மதம் தனிப்பட்டவரின் பிரச்சினை என்று ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் அதற்கு பொதுவாழ்விலும் அரசியல் வாழ்விலும் இடமில்லை என்கிற போக்கு நிலவுகிறது. இந்தப்போக்கு மதம் குறித்த தவறான தப்பெண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
சொல்லிக்கொள்ளக்கூடிய அளவிற்கு மதத்தைப்பெறாத மக்களாலேயே இவ்வாறு கூறப்படுகிறது “மொழி குறித்து கோல்வால்கர் கூறும்போது,” மொழி சார்ந்த ஒற்றுமை தேவை என்பதுபோல தோன்றுகிறது. ஒன்றல்ல, பல தேசங்கள் மொழி வேறுபாடுகளின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்திருக்கின்றன. ஆனால், உண்மையில் அது அப்படியல்ல, ஒரே மொழிதான். அது சமஸ்கிருதம்தான். மற்ற மொழிகள் அனைத்துமே அதிலிருந்து பிறந்த குழந்தைதான். அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய்மொழி” தேசம் என்கிற மேற்கத்திய சித்தாந்தத்திலிருந்து கோல்வால்கர் வேறுபடுகிறார். அவர் கூறும்போது “ராஷ்ட்ரம் கருத்தாக்கம் முழுமை பெற வேண்டுமாயின், அது “தேசம்” (நாடு), ஜாதி (இனம்) மற்றும் “ஜன்பத்” (மக்கள்) ஆகியவற்றால் கோர்க்கப்படவேண்டும் என்கிறார். இங்கே ‘ஜன்பத்’ எனும் கருத்தாக்கம் மதம், பண்பாடு, மொழியோடு தொடர்புடையதாகும். இந்து ராஷ்ட்ரத்தில் சமூக ஒழுங்கு எப்படியிருக்கும் என்பது குறித்து கோல்வால்கர் குறிப்பிடும்போது, மனுவைப்பற்றி கூறுகையில், “உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்” எனப் பாராட்டியிருப்பதுடன், அவர்தான் தன்னுடைய மனு தர்மத்தில் “உலகிலுள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச்சென்று அந்நாட்டிலுள்ள ‘முதலில் பிறந்த’ பிராமணர்களின் புனிதக்காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத்தெளிய வேண்டும்” எனக்கட்டளையிடுகிறார். l
previous post
