முனைவர் க.மோகன்
மாட்டுச் சாணமும் கோமியமும் புனிதமாகிக் கொண்டிருக்கும் காலத்தில், தண்ணீரில் கலந்த மலப்புழுக்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இப்போது அது அமிர்த நீராக மாறியிருக்கிறது.
அணில்களின் மீது அனல் கட்டைகளால் எழுதப்பட்ட வன்ம வரிக்கோடுகள், இதிகாச மயிலிறகுத் தடவல்களாக மாறிப் போயிருப்பதை அடிக்கோடு போட்டுக் காட்டுகிறார் அண்டனூர் சுரா. இந்தக் கோடு ஆதிக்கச் சமூகம் தீட்டிய வன்மக் கோடு, அவமானக்கோடு, வெட்கக்கோடு; வெட்கக்கேடு. அதன் பின்தான் வேங்குடிவயலில் எருவிட்டிருக்கிறார்கள் என்று ஊர் பேசுவதை அம்பலப்படுத்துகிறார். குலக்குறியீடுகளால் தொன்மை அறியப்படுவது போல, குறியீடுகளால் சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. மெல்லுடலிகளின்மீது நச்சரவங்கள் செலுத்தும் அதிகாரங்களை, பல்லுடைத்துக்காட்டும் பல விடயங்களை ஆசிரியர் கட்டுடைத்திருக்கிறார்.
மஞ்சள் மங்களமா? மலமா? சுகமாய்க் கழித்த பின் தென்னந்தலைக்குச் சுமையாய் ஏறிய மஞ்சள் நாறி. இளநீரையும் மலப்புழுக்களையும் தனியே பிரித்தறிவதற்கு, ஆய்வகக் குடுவைக்குள் வைத்து ஆராய்ச்சி நடத்துகிறார்கள். டிஎன்ஏ முடிவு மனிதப் பண்பற்ற ஆதிகால மனிதனோடு ஒத்துப் போகலாம்.
புலிகள் இருக்கப் பூனைகள் எதற்கு? கருவாட்டுக்குக் காவல் இருக்கும் பூனையிடமே ஏன் ஒப்படைக்க வேண்டும். பூனைகளின் விசாரிப்புகள் எப்படி இருக்கும் என்பதை, “தோட்டத்திற்குள் நுழைந்து தோட்ட உரிமையாளரிடம் கேட்காமல் பழங்களைத் திருடித் தின்றுவிட்டு, நாங்கள் திருடவில்லை என்று மறுத்தார்கள். அவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க வெளவால்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டிருக்கிறேன். உண்மையை ஒப்புக் கொண்டால் நல்லது. இல்லையேல் நீயும் இப்படித்தான் தலைகீழாகத் தொங்கவேண்டியிருக்கும் என்று அணிலியைப் பார்த்தார் பூனையார்” என்று கூறுவதிலிருந்து அதிகார மிரட்டல்கள் பணிய வைக்கும் தந்திரத்தைத்தானே செய்யும். அணிலி பிடிபட்டவுடன் கையிலும் காலிலும் மாவுக்கட்டுப் போடவில்லை. நிம்மதி. “நான் இத்தனைக் காலம் அணிற்பிள்ளைகளுக்காக உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே. சொந்தக்காலில் நிற்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தேனே. யார் கையையும் எதிர்பார்த்து வாழக்கூடாது என்றேனே. கையேந்துவது, உணவுக்காக அடுத்தவர்களை எதிர்நோக்குவது எல்லாம் தவறு என்றேனே. எல்லாம் மேட்டுக்கு இறைத்த நீர்தானா?” என்று அணிலி மனதிற்குள் மன்றாடுகிறாள். வழி தவறிய ஆட்டுக் குட்டிகளாய் இன்னும் இந்தச் சமூகம் உணர்வற்று, சுய சிந்தனையின்றி, ஆட்டுத்தலைக்கும் ஆல்கஹாலுக்கும் அடிமையாய் இருக்கிறதே என்று உச்சந்தலையில் ஆணி அடித்தாற் போன்று சொல்லிச் செல்கிறார். “இழிவான அடையாளங்களைத் தக்க வைப்பது குற்றச்சாட்டையும் அவமானத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவதாகும். அவ்வளவு உயரமான தென்னை துண்டாகியிருந்தது. அதைப் பார்த்த அணிலி மரத்தின் வேர்களைத் தடவிக் கொடுத்தாள்” என்பதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. ‘பேண்டவனை விட்டுவிட்டுப் பீயைப் போய் அடித்தானாம்’ ஒருத்தன் என்று ஒரு சொலவடை உண்டு. இங்கு அது உண்மையாகவே இருக்கிறது.
“கீரியைத் தொடர்ந்து சிவப்புப் பூச்சிகள் வந்தார்கள். மாம்பழச் சிட்டு, பச்சைச்சிட்டு, கெளதாரி, குயில், காடை, உழவாரன், தகைவிலான், பருந்து, வல்லூறு, தவளை, பூரான், தேள், நரி, ஆமை, நண்டு, நத்தைகள் என்று அத்தனை பேரும் வந்தார்கள்.” சமகால அரசியலில் இருக்கும் அத்தனை கட்சிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார். இவர்கள் வாக்குக்காகத்தான் வந்திருந்தார்கள். வேங்குடிவயலில், ஒவ்வொரு கட்சிக்கும், ஆளுக்கொருவராய் வாக்களித்த பின்னும் ஐந்தாறு கட்சிகள் மீதமிருப்பார்கள். ஏனென்றால் இங்கு வாழும் மக்களைவிட ஆறுதல் சொல்ல வந்த கட்சிகளின் எண்ணிக்கை அதிகம்.
“மீன்களை எப்போதும் நாம் அடக்கியே வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை நம் காலடியில் அவர்களை வைத்திருக்க வேண்டும். மீன் பலம் பெறுவது நமக்கு மட்டுமல்ல, நம் மன்னருக்கும் ஆபத்தானது” என்று கூறுவதிலிருந்து, ‘ஆயிரம் உண்டிங்கு கட்சி; இதில் அடிமைளைப் பேசலாமா மெச்சி’ என்ற பேச்சு முடிந்தபாடில்லை.
தங்களுக்குள் கொள்கைப்பேதம் இருப்பதாகப் பேசித் திரியும் கட்சிகள். விளிம்புநிலை மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு ஒருபோதும் வர விடமாட்டோம் என்பதில் மட்டும் அனைவரும் ஒன்றுமையாக இருக்கிறார்கள். ஆண்டாண்டு காலம் அடிமைகளாக இருந்தவர்கள், பொருளாதாரத் தற்சார்பு பெற்று முன்னேறி வருவதை இவர்கள் விரும்பவில்லை. ஆதிக்க, அதிகார வர்க்கத்தின் உள்நோக்கம் மட்டுமல்ல, வெளிநோக்கமும் அதுவாகவே இருக்கிறது.
பிரதிநிதித்துவம் யாசகம் அல்ல. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் எனக்குச் சேரவேண்டிய உரிமை என்று கூறும் ஆசிரியரின் சமூகப் பங்களிப்பை உணர முடிகிறது. “விரியனைச் சுற்றிலும் அவனது செய்வினை வட்டங்காட்டி நின்றது. அவனுக்கு வேங்குடிவயலும் அணிலியும் தென்னையும் இளநீரில் அவன் கழித்த புழுக்களும் கண்முன்னே விரிந்தன. உடம்பு சடசடத்து வந்தது. வேங்குடிவயல் தென்னை மரத்திலேறி அணில்கள் பருகும் இளநீரில் முக்கி மொத்த மலத்தையும் வெளியேற்றியது நினைவுக்கு வந்தது.” நச்சரவங்களின் செயல்கள் தீமையாகத்தானே இருக்கும். தன்வினை தன்னைச் சுடும் என்பதாக விரியன் பாம்பு மெல்ல மெல்ல இறந்து கொண்டிருந்தது. மலங்கழித்தவர்களின் செயல்கள் அவர்களின் மனச்சாட்சியே அவர்களை அழித்துக் கொல்லும் என்ற நீதிபோதனையை ஏற்க மனம் சற்றே தடுமாறுகிறது. ஏழ்மையின்மீது படுகின்ற அத்தனை பார்வையும் இளக்காரமாகத்தான் இருக்கும். “நீ கலந்ததாக ஒப்புக் கொண்டால், உனக்குப் பொன், பொருள் தருகிறேன். உட்கார்ந்து உண்ண மணிகள் தருகிறேன். நீ வசதியாக வாழ்வதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அவ்வளவும் தருகிறேன். நீ செய்ய வேண்டியது ஒன்றுதான். எங்கள் அதிகாரிகளின் முன்பு உன்னைக் கொண்டுபோய் நிறுத்துவேன். நீ கைகளைக் கட்டிக் கொண்டு சொல்ல வேண்டும். நான்தான் கலந்தேன். நத்தம் வாழ் அணிற்பிள்ளைகள் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் அப்படியாக முன்னேறி வருவது என்னைப் பொறாமைப்படுத்தியது. அந்தப் பொறாமையினால் அப்படிச் செய்துவிட்டேன். அவ்வளவுதான். அவ்வளவேதான். நீ சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.” ஆண்டாண்டு காலம் இப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது. தன் கையை வைத்தே தன் கண்களைக் குருடாக்கும் செயல்தானே நடந்து வருகிறது. ஆசை காட்டுவது; அடிபணியவில்லை என்றால் அதிகாரத்தைக் காட்டுவது. இது தானே சுதந்திர இந்தியாவின் சூட்சமம். புத்தியால் எழுச்சி கொண்டவர்களை, அதிகார வர்க்கம் லத்தியால் அடக்கப் பார்க்கிறது.
வேங்குடிவயலில், மஞ்சள் என்றாலே மண்டைக்குள் சுரக்கும் கலவை நீரெல்லாம் மலக்கழிவாய்க் கரைந்தோடுகிறது. கழித்தவன் மீதல்ல குற்றச்சாட்டு; குடித்தவன்மீதே படிகிறது. அணிலியின்மீதே சந்தேகக் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தார்கள். ஆயிரம் கண்ணுடையாளான வழக்குரை மன்றம், கண்கட்டை அவிழ்த்து அணிலியின்மீதே கட்டிவிட்டது. அணிலி குருடியாகப் போவது உண்மை. உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. கோப்புகள் மூடப்பட்டுவிடும். அண்டனூர் சுரா எழுத்துகளால் அத்தனை சோகத்தையும் அடைகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழில் ஆழங்காற்பட்டிருக்கிறார். நுண்மாண் நுழைபுலம் மிக்கவராகவும் காணப்படுகிறார்.
இலக்கியம்தானே படைக்க வந்தார்!. பின், அதில் என்ன இலக்கணம் என்ற என் தலைக்கனத்தைச் சற்றே இறக்கி வைத்து விட்டார். எழுத்தில் கொம்பு எழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், விலங்கு, கீற்று, மடக்கேறு, கீற்றுக்கால், கொம்பு, கொம்புச்சுழி, ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, கொம்பு பின்கால், கொம்புச் சுழிப்பின்கால், கொம்புக்கால் என்று பல கொம்புகள் இருப்பதை விளக்குகிறார்.
ஒருவன் விரிந்த புகழை அடைவதற்குக் கணிமேதாவியாரின் பாடல் கருத்துகளை முன்வைக்கிறார். கபிலர் வருகிறார். தொண்ணூற்றொம்பது (99) மலர்களைப் பட்டியலிட்ட கபிலர், ஏன் சில மலர்களை விட்டுவிட்டார் என்பதை விவரிக்கும்போது, கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தனுக்குச் சொன்னதைக் காட்டிலும், சுரா தமிழின் பெருமையை வாசகர்களுக்குச் சொன்னது, பருப்புத் துவையலுடன் பாற்சோறு உண்டது போல் இருக்கிறது. வேங்கை என்பது புலி அல்ல; பூ என்று சங்க இலக்கியம் சொன்னதைத் தக்க இடத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அகநானூற்றைத் தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. அவனின் எதிரி வேங்கைமார்பன். பொருத்தமான கதைப் பின்னணி. இலக்கியச் சொல்லாடல்கள் வந்து தவங்கிடக்கின்றன. காதலில் பேதம் பார்க்கலாமா? கெஞ்சுவதைப் போலக் கேட்டான் இரட்டைவாலன். உன் அணைப்புக்கு எங்கள் மைனா தேவைப்படுகிறாளா? பருந்து அவனது முதுகில் தீயை வைத்தான்… இரட்டைவாலன் அதிர்ந்தான்…இலக்கியம் முதற்கொண்டு எல்லாக் காலத்திலும் காதலுக்கு எதிர்ப்புக்குரல் வந்து கொண்டுதான் இருக்கிறது. காதலுக்கு எதிரான ஆணவச் செயலை எடுத்துக்காட்டுகிறார்.
அணிலாடும் முன்றிலாரின் கதை பேசப்படுவது, நல்லதொரு புனைவுக்கு எடுத்துக்காட்டாகும். கீரனூர் என்பதற்கான விளக்கம் ஆச்சரியக்குறியாய் நிறுத்துகிறது. கீரம் என்றால் பால் போன்ற நீர் என்று விளக்கி, குளத்தூர், கீரனூர் இரண்டும் நீரைப் பெயராகக் கொண்ட ஊர்களாகும் என்ற புதிய விளக்கத்தைத் தருகிறார். விரியனின் செயலை விளக்க, சிலப்பதிகாரத்தில் வரும் ஊழ்வினை உருத்துவந்தூட்டும் (ஊழ், ஊழ்+அல் =ஊழல்) என்பதைத் தக்க இடத்தில் கையாண்டுள்ளார். விலங்குகளைப் பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் நன்கறிந்துள்ளார். குறிப்பாக, பாம்பின் வகைகளாக, மல்லூலி, சாரை, புடையன், நாகம், வல்லாகரணை, கொம்பேறி மூக்கன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், புல்விரியன், காலியான், கண்டங்கண்டை, கோரைப்பாம்பு, ஓநாய்ப்பாம்பு, ஓலைப்பாம்பு, ஓடுகாலிப்பாம்பு, நாய்த்தலையன், இருதலை மணியன், பனையன் என்று கூறுகிறார். தமிழாசிரியர் ஒருவர், விலங்குகள் மட்டுமல்லாது, தாவரங்களின் பெயர்களையும், மூலிகைப் பெயர்களையும் அறிந்திருப்பது உண்மையில் வியப்பைக் காட்டுகிறது. அருகம்புல் சமணர்களுக்கானது என்று புதிய தேடலைச் சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கான உன்னைப் புறக்கணித்தவர்களை நீதான் எதிர்கொள்ள வேண்டும். உனக்காக யாரும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்கிறார். ஆலய நுழைவிற்கு யாரும் உதவ மாட்டார்கள். நீதான் முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. உடை அவனது கைகளைத் தேடியது – கவித்துவமான வரிகள். விரிவஞ்சி, காமம் செப்பாது கண்டது மொழிந்திருக்கிறேன். வாசகர்களும் தமிழார்வலர்களும் வாசிக்கவும் நேசிக்கவும் உள்ள புதினம் வேங்குடிவயல் என்றால் அது மிகையில்லை. நல்லதொரு புதினத்தைத் தமிழுலகிற்கு வழங்கிய ஆசிரியரை மனதாரப் பாராட்டுகிறேன். l
