கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் துறையின் தலைமைப் போதகராயிருக்கும் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் சென்னை கலை கைவினைக் கல்லூரியில் ஓவியத்தில் பட்டப்படிப்பும் பரோடா கலைக் கல்லூரியில் ஓவியத்தில் பட்டப்படிப்பும் பரோடா கலைக் கல்லூரியில் ஓவியக் கலை வரலாறும் அமெரிக்காவில் பதிப்போவியப் படிப்பும் படித்தவர். இவர் மோனிகா என்ற பெயரில் நவீன இந்திய ஓவியம் குறித்து ‘தீராநதி’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள், ‘நவீன இந்திய ஓவியம்-வரலாறும் விமர்சனமும்’ என்ற நூலாக எதிர் வெளியீட்டால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலை முன் வைத்து கோவை சித்தார்த் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிப்ரவரி இரண்டாம் நாள் ஓர் அரிய நிகழ்வு இடம் பெற்றது.
‘‘காலநதி’’ என்ற தலைப்பில் மூன்று தலைமுறைப் பெண் ஓவியர்களின் ஓவியங்களும் கோட்டோவியங்களும் கொண்ட ஓவியக்கண்காட்சி ஒன்று நடைபெற்றது. எண்பது வயதான திருமதி கமலா அவர்கள் இக்காட்சியில் வைத்துள்ள ஓவியங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவராகிறார். இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மோனிகா அவர்களின் தாயார் ஆவார். இயற்கை எழிலை யதார்த்த வழியில் (Relishm) இவர் அக்ரைலிக் வண்ணந் தீட்டிப் படைத்துள்ள ஓவியங்கள் பளிச்சென்ற குளுமைமிக்க வண்ணங்களாலானாவை. யதார்த்த வழிமுறை ஓவியங்கள் நவீன ஓவியங்கள். நவீனம் என்பதற்கும் நவீனத்துவம் என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இதை மோனிகா தம் நூலில் மிக அற்புதமாகவும் சுருக்கமாகவும் சொல்லுகிறார். நவீனம் ஆங்கிலத்தில் ‘‘மாடர்னிடி’’ என்பது. நவீனத்துவம் என்பது ‘‘மாடர்னிஸம்’’ என்பதாகும். இரண்டுமே புதிய போக்குகள்தாம் என்றாலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை மட்டுமல்ல, நவீனத்துவம் என்பது நவீனகால அணுகுமுறைக்கு எதிர்வினையாக உருவானது என்பது முக்கியம் என மோனிகா தம் நூலில் குறிப்பிடுகிறார். அவர் மேலும் விளக்குகிறார். நவீனம் என்பது தனி மனிதனின் புலனுலகை மையப்படுத்திய படைப்பு. முப்பரிமாண வெளி, கட்புலக் குவியம். இதை யதார்த்தச் சித்தரிப்பு என்றும் கூறலாம். ஓவியம் புறவுலகைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தும் பாணி என்கிறார் மோனிகா. நவீனத்துவம் என்பது தனிமனிதத் தன்னுணர்வைப் பொறுத்து, எப்படி படைப்பாளியின் மனம் புறவுலகை உள்வாங்குகிறது என்பதைப் பொறுத்து வெளிப்பாடு அமைவதைக் குறிப்பது. இதில் உணர்வு நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. புறவுலக யதார்த்தம் முக்கியமல்ல. கற்பனை வெளியென்பது அகத்தின் வெளிப்பாடு. அது புறவெளிச் சித்தரிப்பல்ல என்று விளக்கமாய்க் கூறுகிறார் மோனிகா. இந்தக் கலைக் கோட்பாட்டு அடிப்படையில் ரஷ்யத் திரைப்பட மேதை ஆந்த்ரீ தார்கோவ்ஸ்கியின் திரைப்படங்கள் அமைந்தன. திருமதி கமலா அவர்களின் ‘‘பூ ஜாடியில் பூக்கள்’’ எனும் STILL LIFE ஓவியம் சிறப்பாக இருக்கிறது. மோனிகாவின் ஓவியங்கள் அடுத்த தலைமுறை ஓவியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. சர்ரியலிஸ (மீமெய்யீயம்) பாணியில் இவரது ஓரிரு படைப்புகள் இருக்கின்றன. வண்ண உணர்வும், வண்ணத் தேர்வும், பூச்சு வகையும் அபாரமாயுள்ளவை. இளம் மாணவி ஜோஸ்த்னாவின் ஓவியங்களில் நிறைய எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் தெரிபவை. இவரது கோட்டோவியங்கள் சிறப்பானவை.
இந்நிகழ்வு மூன்று கட்டத்தில் அமைந்தது. முதல் கட்டம் ஓவியக் காட்சி, இரண்டாவது மோனிகாவின் ஓவிய நூல் குறித்தான உரை, மூன்றாவது கட்டம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஓவிய ஆளுமைகளில் தெரிவு செய்யப்பட்ட ஆறு இந்திய ஓவியப் பெரும் ஆளுமைகளைக் குறித்த உரை, எல்லா உரைகளும் மோனிகாவின் நூலை முன் வைத்தே ஆற்றப்பட்டன.
தமிழில் ஓவியக் கலை குறித்து அசலாகவும் காத்திரமாகவும் எழுதப்பட்ட நூல்கள் மிக மிகக் குறைவு. பெரும்பான்மை மொழிபெயர்ப்புகளே. ஓவியக் கலைக்கென இதழ்களும் இல்லை. ஒரு காலத்தில் (60-களில்) வித்தகன் என்பவர் மிக எளிய வடிவில் ஓவியக் கலைக்கென பத்திரிகை ஒன்றை நடத்திப் பார்த்து விட்டுவிட்டார். ஓவிய நுண்கலைக் குழு (STATE LALITH KALA AKADEMY) ‘‘நுண்கலை’’ என்ற ஓவிய சிற்பக் கலை இதழை வெளியிட்டு வந்தது. கலை விமர்சகர் இந்திரன் இவ்விதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஒரு தரமான கலையிதழாகக் கொண்டு வந்தார். இந்தியாவில் காலாண்டு – அரையாண்டுக்கொருமுறை பம்பாயிலிருந்து (மும்பை) வெளிவந்து கொண்டிருந்த ‘‘மார்க்’’ (Marg) மிகச் சிறந்த கலை (ஓவிய சிற்பங்களுக்கானது) இதழ். கிட்டத்தட்ட ஓர் உயரிய கலை நூலாகவே வடிவமைப்பில், அச்சில், படங்களில் இடம் பெற்ற கட்டுரைகளில் மார்க் திகழ்ந்தது. மார்க் இதழையடுத்து அன்று பம்பாயில் இயங்கி வந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’- இதழ் (‘Times of India’) ஆண்டு மலர் என்று ஓவிய-சிற்பச் சிறப்பு மலராக ஆண்டுதோறும் தயாரித்து வெளியிட்டது. டெல்லியிலுள்ள மத்திய அரசின் லலித் கலா அகாடெமி ஓவிய சிற்ப இதழ் ஒன்றையும், சிறந்த ஓவிய சிற்ப நூல்களையும் வெளியிட்டு வந்தது. கலை விமர்சகர் இந்திரன் அவர்கள் தமிழில் எழுதிப் பதிப்பித்த நூல்கள், ‘‘தமிழ் அழகியல்’’ மற்றும்் ‘‘நவீன ஓவியம்’’ என்பவை குறிப்பிடப்பட வேண்டியவை. ஓவியரும் ஓவிய ஆசிரியருமான புகழேந்தி அவர்கள் ஓவியக் கலை, ஓவியர்கள், வண்ணங்கள் குறித்தெல்லாம் எழுதி ஏராளமான நூல்களை பதிப்பித்துள்ளார்.
நாகராஜன் எனும் ஓவியர் அரவக்கோன் என்ற பெயரில் குறிப்பிடும் வகையில் இரு நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார். எழுத்தாளர் சி.மோகன் அவர்கள் ஓவியக்கலை தொடர்பாக ஓரிரு நூல்களைப் படைத்துள்ளார். இந்த வரிசையில் தனித்துவமும் சிறப்பும் மிக்க ஒரு நூல் மோனிகாவின் ‘‘நவீன இந்திய ஓவியம்- வரலாறும் விமர்சனமும்’’ எனப்படுவது, மற்ற நூல்களில் ஒரு கேள்வியும் குழம்பிய புரிதலுமாய் வந்து வந்து போகிறது. மோனிகா தம் நூலில் நவீனம், நவீனத்துவம் என்பதை ஓவியக் கலை படைப்பு வெளிப்பாட்டில் மிகவும் எளிமையாகவும் எளிதாகவும் சுருக்கமாயும் விளக்கியிருக்கிறார். இதிலிருந்து சமகால ஓவிய சிற்பக் கலையை விளங்கிக் கொள்ளுவதில் குழப்பம் அகலுகிறது. இருபதுக்கும் அதிகமான இந்திய ஓவியர்கள், சிற்பிகளையும் ஐரோப்பியக் கலைஞர்களையும் நூலில் குறிப்பிடுகிறார்.
ஓவியக் காட்சியைத் திறந்து வைத்துப் பேசிய ஓவியரும் எழுத்தாளருமான விட்டல்ராவ் மோனிகாவின் நூலைக் குறித்தும் நவீனத்துவ ஓவிய – சிற்பக்கலையை புரிதல் – உள்வாங்கிப் பாராட்டுதல் எனும் போக்கில் தம் உரையைத் தொடங்கியவர், எம்.எஃப்.ஹூசேன், ஜெர்மானியப் பெண் கலைஞர் கதே கால்விட்ஸ் (Kathe Kolwitdze) அமிர்தா ஷெர்கில், குலாம் முகம்மது ஷேக், கே.சி.எஸ். பணிக்கர், ராம்கோபால், சந்தானராஜ் ஆகிய தலைசிறந்த ஓவியர்களை – அவர்களின் ஓவியங்களைக் குறித்து சுருக்கமாகப் பேசினார். இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் மோனிகாவின் நூல் தனித்தனியான பகுதிகளாகக் கொண்டிருக்கிறது. கே.சி.எஸ். பணிக்கரின் முக்கியப் பங்களிப்பு என்பது, ‘‘மட்றாஸ் ஓவியப் பாணி’’ என்று ஒன்றை உருவாக்கி முன்னெடுத்துச் சென்றதும், ஓவியருக்கும் சிற்பிக்குமான ‘‘சோழமண்டலக் கலைக் கிராமம்’’ என்று திருவான்மியூர் கடற்கரையில் உருவானதற்கும் உழைத்து உருவாக்கியதுமாகும். ஓவியர் சந்தானராஜின் கலைத்திறனும் பரந்த மனப்பான்மையும் விட்டல்ராவின் உரையில் இடம் பெற்ற முக்கிய அங்கம். நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் குமாரி ஆர். சூடாமணியவர்கள் தாமாகவே ஓவியம் தீட்டக் கற்று சிறந்த பல ஓவியங்களைத் தீட்டியவரென்றும் அவரைக் குறித்து மோனிகா ஒரு பகுதியில் சொல்லுவதோடு ஓர் ஆவணப்படமும் எடுத்திருக்கும் செய்தியும் நூலில் இடம் பெற்றுள்ளது.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இக் கலை நிகழ்வு கோவையிலுள்ள பெர்க்ஸ் (Perks) பள்ளி வளாகத்தில் சித்தார்த் அறக்கட்டளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் முதுகெலும்பாக ஓராண்டு காலம் உழைத்தவர்கள் இருவர். கோவை கோணங்கள் என்ற திரைப்படச் சங்கம் நடத்தியவரும் சிறந்த திரைப்படக் கட்டுரையாளருமான திரு எஸ்.ஆனந்த் அவர்களும் முன்னாள் அருவி கலை இலக்கிய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திரு சூரியநாராயணனும் ஆவார்கள். l
previous post
