திருமதி. ஞா. கலையரசி, சிறார் கதைகள் பலவற்றை அற்புதமாக எழுதி நல்லதொரு சிறார் எழுத்தாளராகத் தனி முத்திரை பதித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு நல்ல சிறார் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.
திருமதி. கலையரசி அவர்கள் பாரதீய ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பல சிறுவர் கதை மின்னூல்களை வெளியிட்டுள்ளார். பூஞ்சிட்டு என்கிற குழந்தைகள் மின்னிதழின் ஆசிரியர் குழுவிலும், சுட்டி உலகம் எனும் வலைத்தளத்தின் ஆசிரியர் குழுவிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
பூஞ்சிட்டு மின்னிதழில் சிறார்களுக்கான சிறுகதைகள், பாடல்கள், மொழி பெயர்ப்புக் கதைகள் மற்றும் விலங்குகள், பறவைகள் பற்றிய தகவல்களை அழகான நடையில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். இவருடைய படைப்புகள் அனைத்துமே குழந்தைகளுக்கு நிறையத் தகவல்கள் அளிக்கும் விதமாக அமைந்துள்ளன. அறிவு பூர்வமான அணுகுமுறை இவருடைய கதைகளில் தென்படுகிறது. இவருடைய கதைகளை வாசிப்பதன் மூலம், குழந்தைகளின் பொது அறிவு நிச்சயமாக வளர்கிறது. அறிவியல் பூர்வமான உண்மைகளையும், உலக நடப்பு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், அறிவுரைகளும் கதையின் ஊடே பொருத்தமாகவும், அழகாகவும் நெய்யப்பட்டுக் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால், வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அறிவை வளர்க்கும் சாதனங்களாகவும் இவை அமைந்துள்ளன.
முதல் கதையான மந்திரக்குடையை எடுத்துக் கொள்வோம். மிகவும் சிறிய குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள ஃபேண்டஸி வகைக் கதை. மந்திரக்குடை என்கிற தலைப்பில் இருந்து இந்தக் கதையில் ஒளிந்திருக்கும் மாயாஜாலத்தை நம்மால் உணரமுடிகிறது. இனி கதைக்குள் செல்லலாம். தேவி என்கிற பத்து வயதுச் சிறுமிக்கு ஏற்படும் வினோத அனுபவத்தை அழகான கதையின் வடிவில் விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
மதிய நேரத்தில் பத்து வயதுச் சிறுமியான தேவி, தன் தோழி சாதனாவுடன் விளையாடி விட்டு வீட்டிற்குத் திரும்பிவரும் சமயத்தில் மழையில் மாட்டிக் கொள்கிறாள். மழை பலத்துவிடுவதால் ஒதுங்கி நிற்கையில், குடை எடுத்து வரவில்லையே என்று வருத்தம் அடைகிறாள். அப்போது அவள் கண்ணெதிரே பல வண்ணக் குடை ஒன்று வானில் இருந்து பறந்து வருகிறது. வானவில் போன்ற அழகுடன் காணப்படும் குடை அவளுடைய மனதைக் கவர்வதால் அதனைத் தயக்கத்துடன் பிடிக்கிறாள். தேவி, குடையைப் பிடித்தவுடன் தான் அந்த வினோதம் நிகழ்கிறது. குடை மேலே மேலே பறக்க ஆரம்பிக்கிறது.
முதலில் தேவி பயந்தாலும், பறப்பதை நினைத்துப் பெருமை கொள்கிறாள். வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் மேகங்களின் ஊடே அவளுடைய பயணம் மகிழ்ச்சி தருகிறது. வானத்தில் இருந்து கீழே தெரியும் காட்சிகள் அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன.
குடை அவளுடன் பேச ஆரம்பிக்கும்போது அவளுக்கு பயங்கர ஆச்சரியம். பேசும் குடை கையில் கிடைத்ததும் அல்லாமல் அவளைப் பறக்கவும் அல்லவா வைக்கிறது? தனது அனுபவத்தை இரசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் குடை அவளுக்குக் கூறும் அறிவுரைகளை அலட்சியம் செய்கிறாள் தேவி. குடையில் இருந்து கை நழுவிக் கீழே விழுந்தால் சொல்ல வேண்டிய மந்திரத்தைக் கவனமாகக் கேட்டுக் கற்றுக் கொள்ள மறுக்கிறாள். ஆனாலும், அந்தக் குடை அவளுக்கு மந்திரத்தைக் கூறுகிறது. அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொள்கிறாள்.
குடை, அவளை எச்சரித்தது போலவே நடந்து விடுகிறது. தேவிக்குத் திடீரென வரும் தும்மலால் குடையைப் பிடித்திருந்த பிடி நழுவுகிறது. தேவி கீழே விழத் தொடங்குகிறாள். மந்திரத்தைச் சொன்னால் தான் காப்பாற்ற முடியும் என்று குடை சொல்லிவிடுகிறது. தேவி இரண்டு முறை முயற்சி செய்தும் தவறாகச் சொல்லிவிட, குடையால் அவளுக்கு உதவி செய்ய முடியாமல் போகிறது. கீழே விழும் தேவி காட்டின் நடுவில் ஒரு மரத்தின் நடுப்பகுதியில் சென்று விழுகிறாள். அவள் விழுந்த இடம் வழுவழுப்பாக இருப்பதால் அதிகக் காயம்
இல்லாமல் தப்பிக்கிறாள். அது ஒரு மலைப்பாம்பின் வழுவழுப்பான உடல் பகுதி. பெரிய காயம் எதுவும் ஏற்படாமல் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன . ஆனால் பாம்பைக் கண்டதும் பயப்பட்ட தேவியிடம் பாம்போ பிரியத்துடன் பேசுகிறது. உதவிகளும் செய்தது. வம்பு, தும்பு, தம்பு என்கிற பொருத்தமான பெயர்களுடைய வனவிலங்குகளின் நட்பு கிடைக்கிறது தேவிக்கு.
காட்டில் இருந்து தேவி தப்பிக்க முடிந்ததா?, மறந்து போன மந்திரம் அவளுக்கு ஞாபகம் வந்ததா?, தேவி வீட்டுக்குத் திரும்பினாளா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். கதையின் ஊடே, வனத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களை சுவாரசியமான விதத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வனவிலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆந்தையை ,”இரவாடி” என்று அழைப்பது எனக்குப் புதிய தகவலாக இருந்தது. குழந்தைகள் நூலகத்தில் வைத்துப் போற்ற வேண்டிய சிறந்த நூல்களில் ஒன்று இந்த மந்திரக்குடை. இளம் பெற்றோர் இது போன்ற நூல்களை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் கதை சொல்லலாம். அவர்களையே வாசிக்கச் சொல்லியும் ஊக்குவிக்கலாம்.
அடுத்ததாக, “நீலமலைப் பயணம்” கதையைப் பார்க்கலாம். இந்தக் கதை சற்றே பெரிய குழந்தைகளுக்கானது. இளையோர் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். சற்றே வளர்ந்த சிறுவர், சிறுமியர்க்கான சாகசக் கதைகளை ஆங்கிலத்தில் படிக்கும்போது தமிழில் இந்த மாதிரிக் கதைகள் குறைச்சல் என்று மனதில் தோன்றுவதுண்டு. இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது என்று சொல்லலாம்.
ஆகாயக் கோட்டை என்ற இடத்தில் திப்புசுல்தானால் ஒளித்து வைக்கப்பட்ட விலைமதிப்பற்ற புதையலைக் கண்டுபிடித்து அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைத்து ஏற்கனவே பேரும் புகழும் பெற்றிருந்தவர்கள் இந்தச் சிறுவர்கள் என்பதால் முதல்வர், ஒரு முக்கியமான பணியைச் செய்வதற்கு ஏற்றவர்கள் இவர்களே என்று தேர்ந்தெடுக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பற்றி ஆசிரியர் இதற்கு முன்பாக எழுதிய, “பூதம் காக்கும் புதையல்” என்கிற கதையில் கூறப்பட்டுள்ளது. இனி இந்தக் கதைக்குள் செல்லலாம் . ஆதவன், கவின், இனியன், கதிர் ஆகிய நான்கு சிறுவர்களிடமும் ஒரு முக்கியமான வேலையைக் கதையின் ஆரம்பத்தில், முதல்வரே அழைத்து ஒப்படைக்கிறார். இரகசியமாகச் செய்ய வேண்டிய வேலை என்பதால் இதனைச் சிறுவர்களிடம் ஒப்படைப்பதாக முதல்வர் கூறுகிறார். அப்படி என்ன இரகசியமான வேலை என்று தெரிந்து கொள்ளலாமா?
செரோபீஜியா ஒமிசா என்கிற காட்டுத் தாவரம், அபூர்வமான தாவர வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு பேராசிரியர் அதனை குன்னூர் பகுதியில் பார்த்ததாக வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அந்தத் தாவரம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்தச் சிறுவர்களை அரசாங்கச் செலவில் அனுப்புகிறார்கள்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் இடம் பெறும் இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கி அரசாங்கத்துக்கு உதவ முடிவு செய்கிறார்கள் இந்தச் சிறுவர்கள்.
ஆதவனின் மாமா மகளான ஆதிரையும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள். பெரியவர்கள் பெண் குழந்தையைத் தொலைதூரப் பயணத்தில் அனுப்ப அஞ்சுகிறார்கள். ஆனாலும் ஆதிரை பிடிவாதம் பிடித்து அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள். அவர்களை நீலகிரி எனப்படும் நீலமலைக்கு அழைத்துப் போக, அங்கிருக்கும் பழங்குடி இனமான தொதவா இனத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்படுகிறான். வண்டி ஓட்டுவதோடு, அந்த இடத்தைப் பற்றி நன்கு தெரிந்தவன் என்பதால் முருகனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சிறுவர்கள் தடைகளை மீறி இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் வெற்றி அடைகிறார்களா என்பதை இந்த நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஆதிரையை அழைத்துப் போவதால் அவர்களுக்குத் தடங்கல் ஏற்படுகிறதா, இல்லையென்றால் தாவரங்களின் மீது ஆர்வம் அதிகம் உள்ள ஆதிரையின் ஞானம் அவர்களுக்கு உதவுகிறதா என்பதையும் நாம் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பாட்டுப் பிரியனான இனியன் கதைக்குத் தேவையான நகைச்சுவையை அளிக்கிறான். பெண் குழந்தை என்பதால் பெற்றோருக்கு வெளியூர் அனுப்புவதில் உள்ள தயக்கம், அப்படி அழைத்துப் போகும் போது தவறான கண்ணோட்டத்தில் பார்த்துப் பண்பற்ற சொற்களை உதிர்க்கும் இளைஞர்களின் போக்கு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் இன்றைய நிலை, பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் என்று இன்றைய சமுதாயத்தின் நிலையை இயல்பாகக் கதையினூடே ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஆசிரியரின் சமுதாய அக்கறை சிறப்பாக மிளிர்கிறது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் பற்றியும் சிவப்புப் பட்டியல் பற்றிய தகவல்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. நடனமாடும் செடி பற்றிய தகவல் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். இயற்கை என்னும் அற்புத உலகத்தைப் பற்றிய எவ்வளவோ தகவல்கள் இந்தக் கதையில் கொட்டிக் கிடக்கின்றன. இது போன்ற நூலை ஆழ்ந்து படிக்கும் போது நம்மாலும் தெரிந்து கொள்ள முடிகிறது. பழங்குடி மக்கள் மற்றும் அவர்கள் மொழி, பழக்கவழக்கங்கள் பற்றிய புதிய தகவல்கள் சுவாரசியமாக இருந்தன. உதகமண்டலம், தொட்டபெட்டா போன்ற பெயர்கள் தோன்றிய காரணங்கள் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஆதிரையின் விளக்கத்தின் மூலமாகப் பல்வேறு தாவரங்கள், மரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. எடுத்துக்காட்டாக, தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு நடுவில் உள்ள வேறுபாடுகள் தெரியவந்தன.
மொத்தத்தில் சிறுவர்களின் சாகசப் பயணத்தைப் பற்றிப் படிக்கும்போது ஒரு முழுநீளத் திரைப்படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது. சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கொஞ்சம் கூடக் குறையாமல் அற்புதமாகக் கதையைக் கொண்டு போயிருக்கும் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். நல்ல தரமான சிறார் கதைகளைக் குறைந்த விலையில் வெளியிட்டு, வாசிக்கும் பழக்கத்தை, சிறார் மத்தியில் ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் சிறப்பான தொண்டையும் மனதாரப் பாராட்டுகிறேன். l
