ஆங்கிலத்துறைப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பேராசிரியர் சங்கம் மூட்டாவில் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர், தன் பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக தமிழ் சமூகத்திற்கு தரமான இலக்கியப் புதினங்கள் குறித்து தன்னுடைய கட்டுரைகள் மூலமும் நூல்கள் வழியும் அறிமுகம் செய்து இலக்கிய உலகிற்கு பேருதவி செய்து வருபவர், தமிழ்ச் சிறுகதை சிற்பிகள் என்ற நூலையும் சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் என்ற நூலையும் எழுதியவர் பேராசிரியர் பெ.விஜயகுமார். உலகின் தலைசிறந்த நாவல்கள் சிலவற்றை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இலக்கிய வகைகளில் சிறுகதை நாவல் கட்டுரை கவிதை என பலதரப்பட்ட தளங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது எண்ணங்களையும் தான் சந்தித்த நிகழ்வுகளையும் முழுமையாக விரித்துச் சொல்லவும் பயன்படும் முதன்மையான தளம் நாவல் என்றால் மிகையல்ல. உலகின் தலைசிறந்த 16 நாவல்களை, தான் வாசித்த வகையிலும் அவை கூறும் கருத்துகளின் வழியே சமூகத்திற்குப் பயன்படும் சிந்தனைகளை விதைப்பதிலும் முன்னிற்கும் கட்டுரைகளாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இதில் இடம்பெறும் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நின்று எழுதப்பட்டது. காலகட்டங்கள் வெவ்வேறாக, கதை நகர்வுகள் வெவ்வேறாக இருப்பினும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும் அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய அமையப்பெற்ற நாவல்களே இதில் இடம் பெற்றுள்ளன.
வெறுமனே நாவல் என்பதை கற்பனையின் அடிப்படைமில் எழுதப்பட்டதாக அல்லாமல் கதையின் வழியே மக்களை சிந்திக்கத் தூண்டி சமூகத்தை சிறப்பான பாதையில் வழிநடத்திட ஏதேனும் நகர்வுகளை மக்கள் செய்யும்படியான நிலைக்கு நடத்திச்செல்வதே எழுத்தின் பயன் என்பதை அறியத் தருகிறது நூல்.
தமிழக எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்கள் பிற நாட்டு எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களை இந்த நூல் நமக்கு மொத்தமாக எடுத்து விரித்துச் செல்கிறது. ஒவ்வொரு நாவலின் மூலக்கருவையும் அவை எடுத்தியம்பும் கருத்துகளையும் விரிவாக எடுத்துக் கூறும் இந்த நூல் வாசிக்கும் நமக்கு அந்த நூல்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. இவற்றை நாம் ஏற்கெனவே வாசித்து இருந்தால் மீண்டும் ஒருமுறை அந்த உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்படியான தூண்டுதலைக் கொடுக்கிறது. வாசிக்காத நாவல்களை தவறவிட்டுவிட்ட குற்ற உணர்ச்சியையும் நமக்குள் ஏற்படுத்துகிறது. அவற்றின் முழு பரிமாணங்களையும் விவரித்துச் செல்லாமல் மூலக்கருத்தைப் பின்பற்றி அது தொடர்பான கிளைப் பகுதிகளை அறிமுகம் செய்து அவை கூறும் அடிப்படைக் கருத்துகளையும் மனித அறத்தையும் மனித மனங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் வஞ்சக எண்ணங்களையும் விரித்துச் செல்கிறது நூல்.
நாவலை அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாவல் ஆசிரியரின் வாழ்க்கை நெறிகளையும் அவர்கள் கற்றுக்கொண்ட வாழ்விட எண்ணங்களையும் ஒரு சேரக் கூறி அதிலிருந்து நாவல் கிளைத்த கதையையும் எடுத்துக் கூறுகிறார். உடன் அந்த நாவல் தொடர்புடைய பிற நூல்களையும் பட்டியலிட்டுக் காட்டி வாசிப்போருக்கு நாவலாசிரியர் மீதான நம்பகத்தன்மையையும் தொடர் தேடுதலையும் ஒருசேர ஏற்படுத்துவதில் நூலாசிரியர் வெற்றி பெறுகிறார்.
ராய் மாக்ஸம்- உப்பு வேலி, ஹெப்சிபா ஜேசுதாசன் புத்தம் வீடு மு.ராஜேந்திரன் காலாபாணி, எம்.ஏ.சுசீலா அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், முத்துநாகு சுளுந்தி, தேபேஷ் ராய் அகதிகள், பூமணி வெக்கை, சர்மிளா செய்யத் உம்மத், ராஜம் கிருஷ்ணன் கரிப்பு மணிகள் தொமுசி ரகுநாதன் பஞ்சும் பசியும் நக்கீரன் காடோடி, இமையம் செல்லாத பணம், வைக்கம் முகமது பஷீர் மதில்கள் பாலமுருகன் சோளகர் தொட்டி, டி. செல்வராஜ் மலரும் சருகும், சல்மா அடைக்கும் தாழ் ஆகிய 16 நாவல்கள் இந்த நூலில் கதைக் கருவும் கதைத் தளமும் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் இடம் பெறும் நாவல்கள் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்று வாசகர்கள் மத்தியில் வெகு கவனம் ஈர்த்த நாவல்களாக இடம் பெறுகின்றன. இதில் ஐந்து பெண் எழுத்தாளர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒரே மாதிரியான கதைகளைக் கொண்ட நாவல்களை அறிமுகம் செய்யாத ஆசிரியர் பல்வேறு தளங்களிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களின் மனச்சிக்கல்களையும் வாழ்க்கை சிக்கல்களையும் எடுத்து இயம்பும் நாவல்களை இதில் அறிமுகம் செய்கிறார்.
இயற்கையைச் சிதைக்கும் பன்னாட்டு வணிக அரசியலின் காரணமாக தொலையும் வனத்தைக் காட்சிப்படுத்தும் அதே வேளையில் பணம் எல்லா இடங்களிலும் பயன்படும் என்ற கருத்தை உடைக்கும் நாவலையும் நமக்கு எடுத்துரைக்கிறார். இயற்கையைச் சிதைக்கும் மனித எண்ணங்கள் தனக்குத்தானே புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன என்பதை மனிதர்கள் உணரும்படியான எழுத்தாளர்களின் சிந்தனைகள் பறந்து விரிந்த உலகில் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் கோடிட்டுக் காட்டுகிறது.
கடலை நம்பி வாழும் உழைப்பாளிகள் உப்புளத்தில் தமது உடல், பொருள் அனைத்தையும் ஒப்படைத்து அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்காத உழைப்பாளிகள் மத வெறியாலும் இனத்தின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் உப்பு வரியினால் அவதிப்பட்ட சுதந்திரத்திற்கு முந்திய இந்தியர்களின் நிலை சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி வர்க்க ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு மக்களைத் துண்டாடுகின்றன என்பதைப் பற்றிய தரவுகள் என தொடர்ச்சியான வாசிப்பு அனுபவம் நூலில் வெளிப்படுகிறது.
மக்களின் அடிப்படை உணவான உப்புக்கு ஆங்கிலேயர்கள் விதித்த வரியும் அதை வசூல் செய்வதற்கு அவர்கள் பின்பற்றிய கொடுமையான உப்பு வேலி சட்டமும் எவ்விதம் மக்களை வறுமை புதைகுழியில் தள்ளின என்பதை உப்புவேலி விரித்துரைக்கிறது. உழைப்பிலும் முன்னேற்றத்திலும் சுறுசுறுப்பைக் காட்டாமல் சோம்பித் திரியும் மக்கள் இருக்கும் வீடு எப்படிப்பட்டது என்பதை புத்தம் வீடு எடுத்துக் காட்டுகிறது. விடுதலைப் போராட்டத்திற்காக முதலில் போராடி வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு யாரும் அறியாத தீவில் மரணம் அடைந்த தமிழக மன்னரின் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது காலாபாணி நூல். செய்யும் தொழிலே தெய்வம் அதில் யாரேனும் பிழை கண்டால் தொழில் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வரும் அறச்சீற்றம் எப்படிப்பட்டது என்பதை அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் நாவல் விரித்துரைக்கிறது. நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து ஆண்ட பாளையக்காரர்கள் கீழே மதுரையும் திருநெல்வேலியும் எப்படி இருந்தன என்பதையும் அங்கு வாழ்ந்த மக்களின் நிலையையும் சுளுந்தீ வெளிச்சமிடுகிறது.
நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கு அதற்கான கரு சில நிமிடங்களிலும் ஏற்படலாம் சில வருடங்களும் எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் நாவலுக்கான தளத்தை முழுமையாக்கும் பணியில் பல ஆண்டுகள் ஈடுபட்டு பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தனது கதை பற்றிய முழுமையான தரவுகளை சேகரித்து எழுதப்படும் நூல்கள் எப்பொழுதும் உழைப்பிற்குத் தகுந்த வெற்றியை ஈட்டித் தரும் என்பதை இதில் இடம்பெறும் நாவல்களும் எடுத்துக் கூறுகின்றன.
50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பஞ்சும் பசியும் நாவல் கூறும் நெசவாளர்களின் துயரம் இன்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளால் மாறாமல் தொடர்ந்து வருகிற கதையை நூலில் வாசிக்கையில் நமக்கும் கண்ணீர் முட்டுகிறது
மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களில் ஒன்று 2300 மைல்கள் நீளமுள்ள புதர் வேலி ஆங்கிலேயர்களால் உப்பு வரி செலுத்தும் மக்களுக்கு கண்காணிப்பதற்காக போடப்பட்டது குடும்ப உறவுகளிலும் நெருக்கடிகள் விரிசல்கள் சமூகத் தாக்கங்கள் அரசியல் நிகழ்வுகள் இயற்கையின் மீதான மனித அத்துமீறல்கள் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்குள்ளேயே சிறை வைக்கப்படுதல் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாழ்வு என பலதரப்பட்ட தளங்களைப் பேசும் நூல் நமக்கு பல நூறு நூல்களை வாசித்த அனுபவத்தை வழங்கி விடுகிறது.
இருட்டுக்குள் இருப்பவன் இருட்டையே பாதுகாப்பு என்ற கருதி வெளிச்சத்துக்கு வர அஞ்சுவதைப்போல ஆங்கிலேய அரசாங்கத்தையும் பெரும் முதலாளிகளையும் எதிர்ப்பதற்கான சக்தி மக்களிடம் இருந்தும் ஒன்று சேர மறுப்பதன் விளைவு அவர்களுக்கான புதைகுழியை அவர்களே தேடிக்கொள்ளும் சூழலுக்கு ஆட்பட்ட நிலையையும் நூல் பல விதங்களில் எடுத்துக் கூறுகிறது. காட்டுக்கு உரிமை கொண்டாடாமல் காட்டின் உயிரினங்கள் ஒன்றாக வாழ்கின்ற காட்டின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ள தொல்குடிகளின் வாழ்வு வணிக அரசியலுக்குள் சிக்கி எப்படி புதைந்து போகிறது என்பதையும் விலைமதிப்பற்ற வனத்துச் செல்வங்களை பரிவுடன் பாதுகாக்கும் எளிய மனிதர்களை அரசியலும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் எப்படி துரத்தி அடிக்கின்றன என்பதையும் விவரிக்கும் நாவல்களின் வழியே இன்றைய சமூக அமைப்பையும் மனிதர்களின் பணத்தில் பின்னால் அலையும் ஓட்டத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த நூலின் வழியே விரித்துக் கூறப்பட்டுள்ள அனைத்து நாவல்களும் அடிப்படையாக மனித மனங்களுக்குள் அன்பையும் கருணையையும் உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. பிற மனிதர்கள் மீதான நேசத்தையும் தாய்நாட்டின் மீதான பற்றையும் தனது தொழில் மீதான நம்பிக்கையையும் கைக்கொள்ளும் ஒவ்வொரு மனிதர்களும் மறந்தும் பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்க நினைக்கவும் மாட்டார்கள். அதையே வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேண்டுகோளாக விடுக்கிறது இந்த கட்டுரை நூல். ஒரே நூலுக்குள் பல நூல்களின் சிந்தனைகளை விரித்துரைத்து வாசிக்கும் நமக்கு அடுத்தடுத்த நூல்களைத் தேடி வாசித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருப்பதில் இந்த நூல் வெற்றி பெறுகிறது. l
previous post
