விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரிலுள்ள ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்து, நேர்மை- எளிமை- தூய்மை என வாழ்ந்து, விடுதலைக்குப் பிந்தைய இரண்டாண்டுகாலம் சென்னை மாகாணத்தின் பிரிமியராக இருந்தவர் ஓமந்தூரார். இவர் தனது பதவிக்காலத்தில் ஹைதராபாத் நிஜாமின் வசமிருந்த சமஸ்தானத்தை இந்திய யூனியன் பிரதேசத்தின்கீழ் இணைத்ததில் பெரும் பங்காற்றியவர். இது குறித்த விவரங்களைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.
பிரிட்டிஷ் இந்தியாவில் மன்னராட்சி அல்லது சமஸ்தானம் என்பது ஒரு நிர்வாகப்பிரிவாகும். ஓர் இந்திய அரசர், பெயரளவில் ஆட்சி செய்தாலும், உண்மையில் நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகள் யாவும் பிரிட்டிஷாரின் கையில்தான் இருந்தது. ஹைதராபாத் சமஸ்தானத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்றைய தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அடங்கியுள்ளன. நிஜாம் என்பதற்கு உருது மொழியில் ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்றழைக்கப்படுகிறது.
இச்சமஸ்தானத்தின் தலைநகராக 1724 முதல் 1763 வரை அவுரங்காபாத்தும்; 1763 முதல் 1948 வரை ஹைதராபாத்தும் தலைநகராக விளங்கியது.
1947 இல் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியபோது பல்வேறு சமஸ்தானங்களை விருப்பமுடன் செயல்பட அனுமதியளித்தனர். இதுகுறித்து, ஆகஸ்ட் 15, 1947 இல் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றிய மவுண்ட் பேட்டன்,” இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தானங்களும் முழு தன்னாட்சி பெற்ற இந்திய அரசுடன் இணைந்துள்ளன. இதில் ஹைதராபாத் மட்டுமே விதிவிலக்கு. பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.
நிஜாமுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைய சம்மதிக்க வைக்கும் முயற்சியில் பிரதமர் ஜவஹர்லால்நேரு, வல்லபாய் பட்டேல் களம் இறங்கினர். அப்போது மதராஸ் மாகாணத்தின் பிரிமியராக இருந்த ஓமந்தூரார் யாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துவந்தார். இந்திய ஆட்சியின் கீழ் நிஜாம் சேர்ந்திடவேண்டும் என்பதில் வல்லபாய் பட்டேல் உறுதியாக இருந்தார். ஆனால், ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க நிஜாமிற்கு விருப்பமில்லை. மாறாக பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு ஆகிய மூன்று அம்சங்களில் ஒப்பந்தத்திற்கு நிஜாம் சம்மதித்தார். இந்தச்சூழலில், ‘கருத்து வாக்கெடுப்பு’நடத்திட மவுண்ட் பேட்டனுக்கு வல்லபாய் பட்டேல் கடிதமொன்றை எழுதினார். அக்கருத்திற்கிணங்க மவுண்ட் பேட்டனும் நிஜாமுக்கு கடிதம் எழுதினார். நிஜாம் அக்கருத்து வாக்கெடுப்பினை மறுத்துவிட்டார். இதற்கிடையில், நிஜாம் அரசு, செக்கோஸ்லாவாகியா நாட்டிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தது ஓமந்தூராருக்கு இவ்விவரம் எட்டியது. அவரும் உடனடியாக இத்தகவலை வல்லபாய் பட்டேலின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்தியாவுடன் 18.09.1947 அன்று, ஹைதராபாத் இணைய இருப்பதாக மவுண்ட்பேட்டனுக்கு நிஜாம் கடிதம் ஒன்றினை எழுதி உறுதியளித்திருந்தார். இவ்வாறு உறுதியளித்திருந்த அதேவேளையில் தனது நிர்வாகக்கவுன்சில் தலைவரின் மூலம் பாகிஸ்தானின் ஜின்னாவுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
இதன்பிறகு, 24.09.1947 இல் மவுண்ட் பேட்டனுக்கு நிஜாம் எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தின் புதிய வரைவு நகலில், ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு முழு தன்னாட்சி பெற்ற அரசு; வெளிநாட்டுக்கொள்கையில் சுதந்திரமாகச்செயல்பட அனுமதி; எந்த வெளிநாட்டு சக்தியுடனும் நேரடியான அரசியல் உறவுகளில் நுழைவதற்கு அனுமதி வேண்டுமென்கிற மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என்கிறார். இதனால் இணைப்பு நடவடிக்கை தாமதமானது. இதனிடையே அக்டோபர் 10, 1947 இல் ஜின்னாவைச் சந்திக்க நிஜாம் திட்டமிட்டிருந்தார். மீண்டும், 26.09.1947 இல் மவுண்ட்பேட்டனுக்கு நிஜாம் எழுதிய கடிதத்தில், நான்கு அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அதாவது, ஹைதராபாத் தனித்துவமான- இறையாண்மைமிக்க நாடாக அங்கீகாரம்; ஹைதராபாத், இந்தியாவுடன் இணைந்தால் நெருக்கடி உண்டாகும்.; இந்தியத் துருப்புக்களைத் திரும்பப்பெறவேண்டும்; ஹைதராபாத் சமஸ்தானத்தில் இருந்த அனைத்து இராணுவப்பகுதிகளையும் காலிசெய்துவிட்டு திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பதாகும்.
இதனையடுத்து, மவுண்ட்பேட்டன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது. இந்தியாவின் பிறமாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் போல, ஹைதராபாத்துக்கும் வழங்கப்படும். தனிச்சிறப்பு அந்தஸ்து எதுவும் வழங்கக்கூடாது என்பதில் மவுண்ட்பேட்டன் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, நிஜாம் அரசானது ஒருபக்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருக்க, இன்னொருபக்கம் ஆயுதக்குவிப்பு, படை திரட்டி வந்தது. இத்தகவலானது ஓமந்தூரார், வல்லபாய்பட்டேல் வழியாக மவுண்ட்பேட்டனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது அழுத்தத்தின் காரணமாக “ஹைதராபாத் பாகிஸ்தானுடன் இணையாது” என நிஜாம் உறுதியளித்தார்.
அக்டோபர் 17, 1947 அன்று, 26.09.1947 இல் கூறப்பட்ட, நிஜாமின் வரைவு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என இந்தியா அறிவித்தது. இதனையடுத்து, வரைவு ஒப்பந்த ஷரத்துகளை மறுபரிசீலனை செய்ய நிஜாமின் குழு ஒப்புக்கொண்டது. இதற்கு அடுத்த நாள், நிஜாமின் குழுவானது இந்தியக்குழுவினைச் சந்தித்தப்போதிலும், திருத்தப்பட்ட வரைவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருந்தன.
பின்னர், மவுண்ட் பேட்டன் உத்தரவுப்படி, அமைதிக்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை உருவாக்கினர். இந்த வரைவு ஒப்பந்தம் முறைப்படி மவுண்ட்பேட்டன், ஜவர்ஹர்லால் நேரு, வல்லபாய்பட்டேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டதுடன் அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவ்வாறாக ஒப்புதல் பெறப்பட்ட இந்த வரைவு ஒப்பந்த நகலுடன் ஹைதராபாத் திரும்பிச்சென்ற தூதுக்குழு 22.10.1947 அன்று நிஜாமிடம் வழங்கியது.
நிஜாமின் நிர்வாகக்குழுவும் இம்முடிவினை அங்கிகரித்த போதிலும் ரஸாக்கர்களின் முற்றுகைப்போராட்டமானது ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டையானது. இதற்கடுத்து, 31.10.1947 அன்று, வல்லபாய்பட்டேலுக்கு நிஜாம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், இந்திய அரசுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதெனவும், பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. நிலைமை இவ்வாறாக இழுத்தடித்துக் கொண்டிருந்தநிலையில், ஹைதராபாத் எல்லையில் ஊர்காவல்படை வீரர்களை ஓமந்தூரார் நிறுத்தியதுடன், இவர்களுக்காக ஆயுதங்களையும் தயாரித்து வழங்கினார்.
ஹைதராபாத் தனி ராஜ்ஜியம்; ஹைதராபாத்தில் ராணுவப்பலத்தை வலுவாக உயர்த்திக்கொள்ளுதல்; ஹைதராபாத்திலிருந்து இந்தியத்துருப்புக்களை விலக்கிக்கொள்ளுதல் என்பது நிஜாமின் திட்டமாக இருந்ததால், ஓமந்தூராரின் அறிவுறுத்தலின்படி, கே.எம். முன்ஷி ஹைதராபாத்தில் இந்திய அரசின் முகவர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த நடவடிக்கையாக, ஹைதராபாத்திலுள்ள இந்தியத்துருப்புக்களை திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும்; ஹைதராபாத் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கவேண்டும் என நிஜாம் வலியுறுத்தினார். இதனையொட்டிய பேச்சுவார்த்தையின் முடிவில், ஹைதராபாத்துக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது மட்டுமின்றி இந்தியத்துருப்புக்களையும் சில பகுதிகளிலிருந்து விலக்கிக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் மை உலர்வதற்குள், ஹைதராபாத்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் அனைத்து உலோகங்களுக்கும் கட்டுப்பாடு; இந்திய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் ஹைதராபாத் சமஸ்தானத்தில் செல்லாது என்கிற கட்டளைகளை நிஜாம் பிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.20கோடி கடன் அளித்தததையும், ஜின்னாவுடன் நிஜாம் மீண்டும் தொடர்பு கொண்டதையும் அறிந்த ஓமந்தூரார் அதனை மேலிடக்கவனத்திற்கு கொண்டுசென்றார். இத்தகவல்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் ஏஜெண்டுகள் நியமனம் மற்றும் கராச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி நியமித்ததையும் கூடுதலாக அறிந்துகொண்ட வல்லபாய் பட்டேல் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நிஜாமோ இது தங்களின் உரிமை என்றார். 30.01.1948 அன்று நிஜாமின் குழுவானது டெல்லிக்குச்சென்று இந்திய உயரதிகாரிகளைச் சந்தித்தது. அப்போது, இந்திய நாணயம் செல்லாது என்றது; உலோகங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது; பாகிஸ்தானுக்கு 20 கோடி கடன் போன்ற நிஜாமின் நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்டது. இதற்குப்பதிலளித்த நிஜாம் தரப்பானது ஓமந்தூரார்மீது பழி சுமத்தியது மட்டுமின்றி, நிஜாம் அரசுக்கு எதிரான கட்டுப்பாடுகளை நீக்கக்கோரியது. முடிவில், இந்தியத்தரப்பானது, ஹைதராபாத் நிஜாம் விதித்த இரண்டு அவசரச்சட்டங்களை ரத்துசெய்யவும், பாகிஸ்தானுக்குக்கொடுத்த ரூ 20 கோடியைத்திரும்பப்பெறவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. நிஜாம் தரப்போ, இந்தியாவின் ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டிற்கு தனது மறுப்பைத் தெரிவித்தது.
இப்படியாக, இரண்டு குழுக்களும் சந்தித்து பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வினை எட்டுவதற்கு முயன்றனர். ஆனால், இந்தத் தொடர் விவாதங்கள்- சந்திப்புக்கள்- ஆலோசனைகளினால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதன்பின்னர், நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்த ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத் மீது உடனடி ஆயுதப்படையெடுப்பு என்கிற அரசியல் சூழல் உருவாகியுள்ளது என்று அறிவித்தார்.
“ஹைதராபாத், இந்தியாவுடன் இணையவேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதேநேரம் நிர்பந்தம் மூலம் இது சாத்தியமல்ல. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு எட்டப்படும்” என்றார். இந்தச்சூழலில், ஒருபக்கம் இந்தியக்குழுவானது நிஜாம் பிரதிநிதிகளைச்சந்தித்து பேச்சுவார்த்தை மூலம் இணங்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இன்னொருபக்கம் மவுண்ட் பேட்டன், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், மற்றும் பிரதிநிதிகள் கூடி, ஹைதராபாத் இணைப்பு விவகாரத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இதன்படி, ரஸாக்கர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது; சிறையில் வாடும் காங்கிரஸ் தலைவர்களை விடுவிப்பது; அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசை உருவாக்குதல்; ஆண்டின்
இறுதிக்குள் அரசியலமைப்புச்சபையை உருவாக்குதல் எனும் நான்கு அம்சங்கள் தொடர்பாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்த நிஜாமுக்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்தது. இதற்கிடையே, ஒருபக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இன்னொருபக்கம் ஆயுதக்குவிப்பில் நிஜாம் ஈடுபட்டுவருவதை ஓமந்தூரார் கண்டறிந்தார். எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தையானது இழுத்தடித்துகொண்டே சென்றிருந்த நிலையில், மவுண்ட் பேட்டனும் தனது பதவிக்காலத்தை முடித்துகொண்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். இந்நிலையில், 17.06.1948 அன்று, செய்தியாளர்களைச் சந்தித்த ஜவஹர்லால் நேரு, இதுவரையில் நிஜாமுடன் நேர்மையாக- நியாமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததைக்குறிப்பிட்ட நேரு, இனி, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனப்பிரகடனம் செய்தார்.
ஹைதராபாத்தின் அன்றாட நடப்புக்களை கேட்டறிந்து வந்த ஓமந்தூரார், ஹைதராபாத் சமஸ்தானத்தின் முழுவரைபடத்தையும் கையில் வைத்துக்கொண்டு நிஜாம் படைகள் முகாமிட்டிருக்கும் இடங்களைக்கண்டறிந்து மேலிடத்திற்குத் தெரிவித்தார். ஓமந்தூரார் நாள் குறித்துக் கொடுத்ததன்படி, இந்தியப்படைகள் 13.09.1948 அன்று ஹைதராபாத் எல்லைக்குள் புகுந்து 16.09.1948 அன்று ஹைதராபாத் சமஸ்தானத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. l
previous post
