சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையே ஒற்றைக் கயிற்றில் பாலமாக இருக்கும் தத்துவங்களைப் பற்றி அலசும் அரிய நூலாக இது உள்ளது.
தமிழர் தத்துவம்:
தமிழ் சமுதாயத்தில் நிலவிய தத்துவப் போராட்டங்களை சங்ககாலம் முதலே காண முடிகிறது. சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்பதை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரையென ஆயிரம் ஆண்டு காலத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். சங்க கால தமிழகம் மூன்று வகையான உற்பத்தி முறைகளைக் கொண்டிருந்தது. குறிஞ்சி முல்லை மருதம் என நிலம்சார் அடிப்படையில் இந்த உற்பத்தி முறைகள் அமைந்தன.
குறிஞ்சிநில மக்கள் வேட்டையாடுதலையும் தேன் எடுத்தலையும், முல்லைநில மக்கள் ஆடு மாடுகளை மேய்த்தலையும், மருதநில மக்கள் உழவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். குறிஞ்சி நிலத்தில் இனக்குழுவின் சபையே அனைத்து முடிவையும் எடுத்தது. முல்லை நிலத்தில் இனக்குழு தலைவர்கள் தலைமையில் சமூகம் இயங்கியது. அதனால், இவ்விரு நிலங்களிலும் மோதல்கள் இல்லை. ஆனால், மருதநில வாழ்வில் சமுதாயம் என்பது வர்க்கங்களாக பிளவு பட்டிருந்தது. அதனால் மோதல்களும் இருந்தன.
தமிழ் இலக்கியத்தில் தத்துவங்கள்:
தொல்காப்பியம் தமிழில் நமக்கு கிடைக்கும் முதல் இலக்கண நூல். இது சங்க இலக்கிய காலப்பகுதியை சேர்ந்த நூல் எனலாம். தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திலும், பொருளதிகாரத்திலும் திணைக் கோட்பாடு, நில அடிப்படையிலான திணைப் பாகுபாடு போன்றவை முன் வைக்கப்படுகிறது.
இயற்கைப் பொருளை இன்றெனக் கிளத்தல் – 502 செயற்கைப் பொருளை ஆக்கமோடு கிளத்தல் – 503 ஆக்கம் தானே காரண முதற்றே – 504 பொருளை செயலின் அடிப்படையாக கூறி பொருள் முதல்வாத தத்துவத்தின் மெய்யியல் நிலை இங்கு வலியுறுத்தப்படுகிறது. தொல்காப்பியத்தாலும், சங்க இலக்கியங்கள் பலவற்றாலும் முன் வைக்கப்படும் தெய்வங்கள் இனக்குழுச் சார்பு தெய்வங்களே. அவை இறை அல்ல, பரம்பொருள் அல்ல. நிலத்துக்கும் பொழுதுக்கும் மேலான கடவுள் கொள்கை தொல்காப்பிய காலத்தில் இல்லை.
தொல்காப்பியத்தில் காணப்படும் தத்துவங்கள் சமண அடிப்படையில் விளக்கப்படும் ஆசிவகம், பௌத்தம் முதலிய பொருள்முதல்வாத கருத்துக்களே ஆகும். சங்க காலம் என்பது தத்துவங்கள் மிகுதியாக நிலவிய காலம் எனலாம். அதிலும் குறிப்பாக முதன்மைப்படுத்தி கூறப்படும் தத்துவஞானம் பொருள் முதல் வாதமே ஆகும்.
தனது அறிவைக் கொண்டு ஒரு விஷயத்தை அணுகுவதை தான் தமிழர்கள் அறிதல் முறையாக போற்றினர். தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் வழியாக இதுவே தமிழரின் அறிதல் வழியாக வளர்க்கப்பட்டது. கல்வி கற்பதை முதன்மையாகவும், அதன் மூலம் உண்மையை தேடுவதும் முன்வைக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா”
என்ற பாடலில் வரும் ஒருவரியை கவனித்தால் தமிழரின் தத்துவம் விளங்கும்.
சங்கம் மருவிய தத்துவப் பார்வை:
சங்க இலக்கியங்களுக்கு பின்னர் வந்த காப்பிய இலக்கியங்களில் தத்துவம் குறித்தானதொரு மேலோங்கிய பிரச்சினை விவாதப் பொருளாக இருந்து வந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி போன்ற காப்பியங்களில் தத்துவ விவாதமானது பெண் பாத்திரத்திரங்களை முதன்மைப்படுத்தி அவர்களின் மூலம் நடத்தப்படுகின்றன. நீலகேசி சமண சமயத்தின் தத்துவவியலை நிலை நாட்ட தத்துவம் பேசுகின்றாள்.
உலகம், உடல் என அனைத்தும் ஐம்பூதங்களால் ஆனது. இதில் ஆகாயம் என்ற பூதத்தை பெருவாரியான பொருள் முதல் வாதிகள் ஏற்பதில்லை. இதில் பொருள் முதல் வாதிகளுக்குள்ளேயே இரு பிரிவு உண்டு. ஆகாயம் உண்டு என்பவர் ஒரு பிரிவு. இல்லை என்பவர் ஒரு பிரிவு. ஆனால், ஆகாயம் என்பது உருவமற்ற ஒன்று என்பதால் ஆகாயம் இல்லை என்று கூறிய பொருள் முதல் வாதிகளின் கருத்து வலுவாக இருந்தது. மணிமேகலை ஆகாயம் இல்லை என்பவர்களை விமர்சித்து, விஞ்ஞானத்தின் உயிர் மையமானது ஆகாயத்தை ஏற்றுக் கொண்டது என்கிறது.
தமிழர் வளர்த்த தத்துவவியலுக்கு மூன்று கோட்பாடுகள் முக்கியமானதாகும்.
- அணு கோட்பாடு
- வினை கோட்பாடு
- ஊழ் கோட்பாடு
இவை மூன்றும் பொருள் முதல் வாதத்தின் இயல்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டவை ஆகும். ‘ஊழ்’ என்னும் சொல்லுக்கு மலர்தல் என்றும் உதிர்தல் என்றும் இருவேறு பொருள் உண்டு. மலர்வதே உதிர்வதும், உதிர்வதே மலர்வதும் தொடர்ந்து நிகழும் செயலை ஊழ்வினை என்றனர். அணுக்கள் பிறந்தவையோ, பிறப்பித்தவையோ அல்ல என்பதையே ஆசீவகம், சாருவாகம், சமணம் முதலிய பொருள்முதல்வாதத் தத்துவங்கள் வலியுறுத்தின. அணுக்கோட்பாட்டின் அடிபடையிலேயே வினை விளக்கப்பட்டது.
தத்துவ விவாதத்தைஅடிப்படையாகக் கொண்ட ஒரே தருக்க நூல் நீலகேசி ஆகும். பல தருக்க நூல்கள் இன்று கிடைக்கவில்லை. அதில் குண்டலகேசியும் ஒன்று. இந்த குண்டலகேசி என்னும் பௌத்த காப்பியத்திற்கு மறுப்பு கூறி சமண நெறியைப் பரப்பும் நோக்கில் நீலகேசி எழுதப்பட்டது.
நீலகேசி எனும் சிறுகாப்பியம் பத்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் சமணத்தின் அடிப்படையைக் கூறுகிறது. அடுத்த நான்கு சருக்கங்கள் பௌத்தத்தை மறுக்கின்றன, அதை தொடர்ந்து ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதம், பூதவாதம் போன்றவை மறுக்கப்படுகின்றன. இவை வாதசொற்போர் முறையில் நடத்தப்படுகின்றன, இவையாவும் அறிவியல் உண்மையின் அடிப்படையில் நிலை நாட்டப்படுகின்றன.
சித்தர்களின் தத்துவவியல்:
சித்தர்களின் மரபானது நாடெங்கும் பரவியிருக்கும் மக்களின் மரபாகும். பதினெண் சித்தர்கள் எனத் தொகுக்கும் மரபு உள்ளதென்றாலும், இந்த தொகுப்பு முறையானது எந்த நோக்கத்தின் அடிப்படையில், எக்காலத்தில் வகுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
சித்தர்களை வகைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. வைத்திய நூல் செய்த ஆசிரியர் அனைவரையும் சித்தர் என்றே சொல்லும் ஒரு நிலையையும் காண முடிகிறது.
தமிழ் சித்தர்கள் மூன்று பெரும் பிரிவுக்குள் அடங்குவர். முதல் வகையினர், வேத மறுப்பு ஆன்மிக ஞானம் பாடியோர்; சாதி இருப்பை மறுத்துக் கலகம் புரிந்தோர். இரண்டாம் வகையினர், வேதச் சார்புடைய ஆன்மிக ஞானம் பாடியோர். இவர்கள் சாதி மறுப்பை முன் வைக்கவில்லை. தனி மனிதப் பாவங்களாகவே வாழ்வைப் பார்த்தனர்.
மூன்றாவது வகையினர், மருத்துவம் பாடியோர். இவர்கள் தத்துவ நிலையில் ஆதி பொருள் முதல்வாதிகள்; சாதி மறுப்பாளர்கள். இந்த மூவரையும் ஒரே தரத்தில் வைத்து அணுகும் போக்கு இன்னமும் தொடர்கிறது. அதனால், சித்தர் பற்றிய ஆய்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒன்பது பகுதிகளைக் கொண்ட திருமந்திரத்தில் சமணரின் நெறிகள் போற்றப்படுகின்றது. கொல்லாமை, புலால் உண்ணாமை, பிறன்மனை நயவாமை, கள்ளுண்ணாமை, புறங்கூறாமை, போன்றவையும், யோகம் பற்றியும் மந்திர சாத்திரம் பற்றியும் பேசுகிறது. திருமூலரின் தத்துவத்தில் மேலோங்கிக் காணப்படுவது தாந்திரீகப் பொருள் முதல்வாதமே ஆகும்.
யோகத் தத்துவம்:
யோகம் என்பது தத்துவமல்ல. பண்டைய உடல் பயிற்சி முறைகளின் தொகுப்பாகும். யோகப் பயிற்சியானது மனிதனின் உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குகிறது. யோகா பயிற்சிகள் தொல்குடி சடங்குகளோடு தொடர்புடையதாகவே அறியப்படுகிறது. சமணம் பௌத்தம் ஆசிவகம் போன்றவை யோகா பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
யோகப் பயிற்சி முறைகள் இயற்கையின் இயக்கத்தை உற்று நோக்கி ‘போலச் செய்’வதன் மூலமாகவே கண்டறியப்பட்டன. மீன், ஆமை போன்றவற்றின் இயக்கத்தை உற்று நோக்கியே ஆசனங்கள் பலவும் உருவாக்கப்பட்டன. கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடங்கி சமண பௌத்த மதங்களும், தேகவாதம் உள்ளிட்ட பொருள் முதல்வாதத் தத்துவங்களும் சைவ, வைணவ பெருமதங்களால் சூறையாடப்பட்டன. கடவுள் இல்லாத யோகம் மறுக்கப்பட்டு, கடவுளை ஆதாரமாகக் கொண்ட யோக முறை உருவானது. முடிபாக, இயற்கைதான் மூலமுதல் என்று கூறியவர்கள் அறிவியல் உலகக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். ஆன்மாதான் மூலமுதல் என்றவர்கள் ஆன்மீக உலக கண்ணோட்டத்தை வளர்த்தனர். முதல் வகையினர் உலகை – வாழ் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றனர். இரண்டாம் வகையினர் மாற்றத்துக்கான மனித முயற்சிகளை நிராகரித்து இறைவன் என்ற கருத்தமைவை முன் வைத்தனர். இந்த பிரச்சனைக்கு இயற்கைதான் மூலமுதல் என சித்தர்கள் தெளிவாக விடையளித்தனர். இயற்கையை அதன் இயக்கங்களை அறிந்து கொண்டு மாற்ற முடியும் என்றனர். பாவத்தின் சம்பளம் நோய் என்ற ஆன்மீக வாதிகளின் கருத்தை சித்தர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். ஒவ்வொரு நோய்க்கும் காரணம், ஐம்பூத சேர்க்கையிலே ஏற்படும் கோளாறு பற்றியது என்பது சித்தர்களின் கூற்று. முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவே இப்பிறவி என்று கூறும் ஆன்மீகவாதிகளின் கண்ணோட்டத்தையும் சித்தர்கள் மறுக்கின்றனர்.
பண்டைய தமிழகத்தில் பொருள் முதல்வாத தத்துவங்கள் பெருமளவில் கொள்கைகளாக பின்பற்றப்பட்டது. இயற்கைப் பொருட்களின் இயல்புகளை அறிந்து அவற்றை மாற்றியமைத்து மனிதன் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற பொருள் முதல்வாத கொள்கைகள் மருத்துவ சித்தர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்நூலின் ஆசிரியர் விரிவாக மற்றும் தெளிவாக பல கருத்துக்களை இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். பொருள் முதல் வாதத்தை நம் முன்னோர்கள் பின்பற்றிய விதம், அதற்கு எதிராக எழுந்த கருத்து முதல் வாதிகளின் தருக்கம் போன்றவை இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக நூலில் பேசப்பட்டுள்ளது. l
