நேர்காணல்: பேராசிரியர் வீ.அரசு
சந்திப்பு: இரா.தெ.முத்து
சென்னையில் 15 ஆண்டுகளாக இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதாசேஷையனை தமிழ்நாடு அரசோடு கலந்து பேசாமல், ஒன்றிய அரசு நியமனம் செய்த நடைமுறை பரவலான கண்டனங்களை தமிழறிஞர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது. இதுபற்றி பேராசிரியர் வீ.அரசுவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். பேராசிரியர் வீ.அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் நிறுவனத்தின் ஆலோசகராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப் பெற்றவர்.
தோழர் ஜீவாவின் படைப்பாக்கத் திரட்டு, வ.உ.சி. படைப்புகளின் திரட்டு, இதழ்படியான புதுமைப்பித்தன் கதைத் திரட்டு போன்ற தொகுப்பாக்கங்களை கொண்டு வந்தவர். தற்பொழுது கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாக்கங்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக முழுத்தொகுப்பாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகள் என்ன?
தமிழின் இலக்கியங்கள், இலக்கணங்கள் குறிப்பாக சங்ககால இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்றவை மீது மேலாய்வு செய்தல், புதிய ஆய்வுகள் செய்தல், ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்ட இலக்கியங்களை மூலமுதல் நூலோடு ஒப்பு நோக்கி பாடபேதம் நீக்கி நூலாக்குதல், ஆவணமாக்குதல், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளுக்கு கொண்டு செல்ல மொழியாக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. தமிழில் இடைக்காலத்தில் வந்த பக்திப் பாடல்களையோ பின்னர் வந்த இலக்கியங்களையோ ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அல்ல.
இந்த நிறுவனத்திற்கான நிதியை மத்திய அரசுதான் வழங்குகிறதா?
ஆமாம்; நடுவணரசு தன் நிதியிலிருந்து குறிப்பாக கல்வி அமைச்சக நிதியிலிருந்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் நிதி வழங்குகிறது.
எத்தனைக் கோடி ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது?
இந்த நிறுவனத்தின் தணிக்கைக் கணக்கு விவரத்தின்படி ஆண்டுதோறும் 75 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் விதிகளின்படி மாநில முதல்வர் தலைவராக இருக்கிறார்.துணைத்தலைவர்களாக கடந்த காலத்தில் தமிழறிஞர்களான ஒளவை நடராசன், இ.சுந்தரமூர்த்தி போன்றோர் இருந்திருக்கின்றனர்.இப்பொழுது சுதாசேஷையன் எவ்வாறு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்?
வணக்கத்திற்குரிய சுதாசேஷையனின் நியமனம் இந்த நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பானது.இந்த துணைத்தலைவர் நியமனம் கண்டனத்திற்குரியது. சுதாசேஷையன் ஒரு மருத்துவர். இவர் பட்டிமன்றங்களில் பக்தி சார்ந்து பேசக்கூடிய பக்திச் சொற்பொழிவாளர் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதாரண பக்திச்சொற்பொழிவாளரும் சங்க இலக்கியம் பற்றி தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்பவரும் ஒருவர் அல்லர். பக்தி சொற்பொழிவு செய்வதனால் இது ஏதோ இலக்கியம் தமிழ் சார்ந்த ஒன்றாக இருக்குமோ என்ற முறையில் நினைத்துக் கொண்டு, இவ்வாறு இந்த நிறுவனத்தின் நோக்கங்களுக்குப் பொருத்தமில்லாத வகையில் சுதாசேஷையன் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது முரணானது; கண்டிக்கத் தக்கது.
சுதாசேஷையனின் நியமனம் அல்லது இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் நியமனம் எவ்வாறு செய்யப்படுகிறது?
நடுவணரசு, மாநில அரசு என்கிற கூட்டு நிர்வாகப்பரப்பில் இந்த நிர்வாகப் பரப்பை ஏற்றுக்கொள்ளாமல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நிதிநல்கை வழங்கப்படுவதன் பெயரால் இந்த நிறுவனத்தின் பெயரால் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளிலும் தனது தலையீடுகள் இருக்க வேண்டுமென நடுவணரசு எண்ணுவது சரி அல்ல.
ஒரு மாநில மொழி அதன் பண்பாடு பற்றி மேலாய்வு செய்வதற்கு மாநில அரசிற்கு உதவியாக நடுவணரசு நிற்க எண்ணாமல் அந்த மாநிலத்தின் மொழி பண்பாட்டு ஆய்வு நோக்கங்களுக்கு நடுவணரசின் இத்தகைய தலையீடு பொறுத்தமானது அல்ல. தமிழ்நாட்டின் மொழி பண்பாடு சார்ந்து மேலாய்வு செய்ய கலைஞர் கருணாநிதி அவர்கள் கேட்டுக்கொண்டதை ஓட்டி உருவாக்கப்பட்டது இந்த நிறுவனம்.
தமிழ்நாட்டின் முதல்வர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் அல்லவா?
ஆம், மாநில முதல்வர் என்கிற பொறுப்பின் வழி இந்த நிறுவனத்தின் தலைவராக இயல்பாகவே முதல்வர் இருக்கிறார். முதல்வரோடு கலந்து பேசியோ அல்லது முதல்வரின் பரிந்துரைகளை கேட்டுப் பெற்று நடைமுறையாக்க நடுவணரசு எண்ணவில்லை என்பதைத்தானே இந்த நியமனம் காட்டுகிறது்
சுதா சேஷையனை ஒரு தமிழறிஞராக எடுத்துக்கொள்ள இயலாதா?
எவ்வாறு எடுத்துக் கொள்வது? ஒரு சாதாரண பக்தி சொற்பொழிவாளர் அவர். சங்க இலக்கிய மரபு அதன் தொன்மை அதன் உள்ளீடுகள் பற்றி எந்தப் புரிதலும் இல்லாதவர். இந்தப் பொருண்மையில் அவர் எந்தப் புலமையும் எழுத்தாக்கங்களும் பெற்றிராதவர் இவர். சனாதன நோக்கங்களை மட்டுமே தனது சொற்பொழிவுகளில் இணைத்து பேசக்கூடியவர். சங்க இலக்கியத்தின் மீது மேலாய்வு செய்ய வழி காட்டும் நிறுவனம் இதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம், சனாதன கருத்தியலை மட்டுமே நோக்கமாகக் கொண்டவரை துணைத்தலைவராகக்கொண்டு செயல்பட நினைப்பது இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிரானது
இந்த நியமனம் குறித்து தமிழறிஞர்கள் என்ன கருதுகிறார்கள்?
இந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்து ஆய்வுப்பணிகளை கல்வியியல் நோக்கங்களை வழிகாட்ட உதவிடும் புலமை மரபு கொண்ட நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். என்னைப்போன்ற தமிழாசிரியர்கள் ஆராய்ச்சி புலமை கொண்டவர்கள் சனாதன நோக்கு மட்டுமே கொண்ட, சங்க இலக்கிய ஆராய்ச்சிப் புலமை என்னவென்றே அறியாத இந்த துணைத்தலைவர் நியமனத்தைக் கண்டனம் செய்கிறோம். நடுவணரசு சுதாசேஷையன் நியமனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு முதல்வர் இந்த நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்புரீதியில் அவரிடம் சங்க இலக்கிய மரபு ஆராய்ச்சிப் புலமை கொண்டவர்கள் பட்டியலைப் பெற்று, அதில் ஒருவரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று நடுவணரசைக் கேட்டுக் கொள்கிறோம் அல்லது தமிழ்நாட்டின் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த உயராய்விற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதால் இதன் தலைவரான தமிழ்நாட்டு முதல்வரிடமே இதுபோன்ற துணைத்தலைவர் நியமனம் போன்ற பொறுப்புசார் அறிஞர்களை நியமித்திடும் பொறுப்பை கையளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். l
