தமிழிலக்கியத்தில் பல்வேறு இலக்கிய வகைமைகள் தோற்றம் பெற்று வரக்கூடிய சூழலில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சி பரவலாக இருந்தது. இந்த இலக்கிய வகைமை சிறுவர் இலக்கியம், சிறார் இலக்கியம், குழந்தை இலக்கியம், மழலையர் இலக்கியம் என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. அண்மைக் காலத்தில் சிறார் இலக்கியம் குறித்து பரவலாகப் பேசப்பட்டாலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியங்களிலும் சிறார் இலக்கியம் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் வாய்மொழியாக நாடோடி மக்களால் கதையாகவோ விடுகதையாகவோ பாடலாகவோ காணப்பெற்றது. அகநானூற்றில், “முகில் நிலாத் திகழ்தரும் மூவாத்திங்கள் பொன்னுடையத் தாலி யென்மகன் ஏற்றி வருகுவை யாயின் தருகுவென் பால்” (அகம்-54)
இப்பாடலில், மகனுடன் விளையாட வந்தால் உனக்குப் பொன்னாலான கிண்ணத்தில் பால் தருவேன் என்று தாய் நிலாவை அழைக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது. சங்கம் மருவியகால இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளிலும் மக்கட் பேற்றின் சிறப்பைத் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். பக்தி இலக்கியத்தில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிற்றிலக்கியங்களில் உலா, பிள்ளைத்தமிழ் நூல்கள் குழந்தைகளின் பருவங்கள் பற்றிப் பாடுகின்றன. இந்தப் பதிவுகள் சிறார் இலக்கியச் சாயலில் அமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் ‘பிசி’ என்னும் இலக்கிய வகை இடம்பெறுகிறது. ‘பிசி’ என்பது விடுகதையைக் குறிக்கும். விடுகதை குழந்தைகளுக்கு உரியதாக தொன்றுதொட்டு இன்று வரை வழங்கி வருகிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பாரதியாரின் பாப்பா பாட்டு சிறுவர் இலக்கியத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிமணி எழுதிய ‘தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு’ என்ற பாடலே சிறுவர் இலக்கியப் பாடலுக்குத் தொடக்கமாக அமைகிறது. பாரதிதாசன் சிறுவர்களுக்காக ‘இளையோர்’ என்ற நூலினை கீர்த்தனைப் பாடல் வடிவில் பாடியுள்ளார். மேலும், தமிழில் இன்றளவும் சிறார் இலக்கிய படைப்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குழந்தை இலக்கியத்தின் முன்னோடி கவிஞர் அழ வள்ளியப்பாவை தொடர்ந்து பாவண்ணன், விழியன், ச.மாடசாமி, எஸ். இராமகிருஷ்ணன், ஆயிஷா நடராஜன், விஷ்ணுபுரம் சரவணன், கா.உதயசங்கர், எஸ்.பாலபாரதி, யூமா வாசுகி போன்றோர் சிறார்களுக்கான நூல்களை எழுதியுள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டில் படைக்கப்படக்கூடிய சிறார் இலக்கியம் வீரம், அறம், நேர்மை, அச்சமின்மை, துணிவு, துப்பறியும் திறன், இன்னலை ஏற்கும் மனப்பக்குவம், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்த அன்பு, உழைப்பினால் உயர்தல் முதலான கருத்துகளை மையமிட்டுப் பல நூல்கள் வெளிவருகின்றன. அறக் கருத்துக்களைக் கூறுவதைத் தாண்டி சமகாலத்திற்கு ஏற்றாற்போல சமகால பிரச்சினைகளையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழில் சிறார் இலக்கிய வகையில் கதைகள், அறிவியல் கட்டுரைகள், பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. இவ்வடிவங்களில் கதை சிறப்புவாய்ந்த ஒன்றாகும். சிறார்களுக்கு எளிதில் புரிய வைக்கக் கூடியதாகவும் மனதை மயக்கக்கூடியதாகவும் அறிவை தெளிவடையச் செய்வதாகவும் இக்கதைகள் அமைகின்றன.
பழங்காலத்திலிருந்து சிறார் இலக்கியத்தில் கதை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகள் அவற்றின் கிளைக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், நல்லதங்காள் கதைகள் போன்றவற்றை குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்ந்தனர். அந்த வகையில், சிறார் இலக்கியத்தில் கதை முக்கிய இடத்தை பெற்று வரக்கூடிய நிலையில் தமிழிலக்கியச் சூழலில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று பரவலாக அறியப்படுகிற கி.ராவின் ‘கிராமிய கதைகள்’ எனும் நூல் கவனம் பெறுகிறது. இந்நூலினை செவக்காட்டு கதைசொல்லி என்று அறியப்படுகிற கழனியூரன் தொகுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. நவீன தமிழ்ச் சூழலில் கி.ராவின் சிறுகதை, நாவல் போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல இவருடைய கதைகளும் முக்கிய இடத்தை பெறுகிறது. இந்நூலில் கழனியூரன் 21 கதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இக்கதைகள் குழந்தைகளை மகிழ்விப்பதோடு உயர்ந்த எண்ணங்களையும் அவர்களின் மனதில் விதைக்கின்றன. சிறார்களின் கற்பனை வளத்திற்கு உரமிடுகிற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன.
கி.ராவினுடைய ‘கிராமியக் கதைகள்’ இயற்கைச் சூழலோடு பின்னிப்பிணைந்த வாழ்வியலைக் காட்டுகிறது. குறிப்பாக, அஃறிணையும் உயர்திணையும் இணைந்து உரையாடக்கூடிய போக்கு சிறப்பு அம்சமாகும்.
பெரும்பாலும் அஃறிணைக் கதாபாத்திரங்களே அதிகமாக காணப்படுகின்றன. நரி, ஆடு, சிங்கம், எறும்பு, கழுதை, தேனி, வண்டு, பாம்பு, காக்கா, மரம், மாடு, அகப்பை, புலி, யானை, தவளை, பூச்சி, நிலா, சூரியன், ஆறு, குழிநரி, கொக்கு, குதிரை போன்றவை கதைகளில் இடம்பெறுகின்றன. அஃறிணை உயர்திணையோடு பேசுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் கதைப்போக்கு சிறார்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும்.
ஒவ்வொரு கதையிலும் இடம்பெற்றிருக்கிற சித்திரங்களும் சிறர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் இடையிலான பிணைப்பை நாம் தூது இலக்கியங்களில் காணலாம். பல தூதுகளில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும் போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவுக்கும்படி அஃறிணைப் பொருள்களை தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமின்றி காற்று, முகில், தமிழ் போன்றவையும் தூது செல்ல ஏவப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் அஃறிணைக்கும் உயர்திணைகளைப் போல் விருப்பங்கள் உண்டு என்பதைச் சங்கப் புலவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த வகையில், கி.ராவினுடைய கதைகள் இயற்கையும் இயற்கையைச் சுற்றியுள்ள உயிரினங்களையும் மையப்படுத்தியதாக அமைகிறது. இக்கதைப் போக்கு சிறார்களுக்கு சுற்றுச்சூழலை நேசிக்கும் தன்மையை ஏற்படுத்தும். இந்நூலில் இடம்பெறக்கூடிய ‘பேராசை பெருநஷ்டம்’ கதையும் ‘வெள்ளை யானை’ கதையும் ஒரே கதை அமைப்பை கொண்டதாக அமைகிறது. இவ்விரு கதைகளும் பேராசையால் ஏற்படும் விளைவினை காட்சிப்படுத்துகிறது. பணத்தின் மீதான மோகத்தால் ‘பேராசை பெரு நஷ்டம்’ கதையில் குதிரையின் வாலைப் பிடித்து ஆகாயத்திற்கு போவதாகவும் ‘வெள்ளை யானை’ கதையில் யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆகாயத்திற்கு போவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையக் காலகட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய சிறார்கள் மனதில் உழைப்பே உயர்வு தரும், பேராசை பெரும் நஷ்டம், தந்திரப் போக்கு, சிந்தனை, அன்பு, நட்பு, கற்பனைவளம், பயமின்மை, நேர்மை, துணிவு போன்ற சமூக கருத்துக்களையும் நற்பண்புகளையும் விதைப்பதாக கி.ராவின் ‘கிராமியக் கதைகள்’ அமைந்துள்ளன.
‘வெள்ள காக்கா’ கதையில், ‘சின்னவளும் போனா போனா போனா…’ என்கிற சொற்றொடர் கதைப்போக்கில் மீண்டும் மீண்டும் வருவது சிறார்களுக்கு கதை கேட்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. ‘சொய்… சொய்…’ கதையில், புலியின் குட்டியிலிருந்து சொட்டுகிற ஒவ்வொரு ரத்தச் சொட்டும் சூடான தோசைக் கல்லில் விழுந்து சொய்..சொய்.. என்ற சத்தம் மூடிய குகைக்கல் வழியே கேட்கிறது. இதைக் கேட்ட புலி ‘அப்பம் சுட்டுத் தின்கிறாயா? இரு இரு வாரேன்னு சொல்லிக்கிட்டே குகையை சுற்றி சுற்றி வருகிறது. இக்காட்சியின் கற்பனை அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. ‘ஒரு சித்தெறும்பின் மறைவு’ கதையில், “தெரியும்மா சங்கதி ஒனக்கு.
தலையில் உலக்கை விழுந்து சித்தெறும்பு சாக, அதன் உயிர் நண்பன் அழ, அதைக் கேட்ட ஆறு கலங்க, யானை ஒரு தந்தத்தை ஒடித்துக் கொள்ள, ஆலமரம் இலை உதிர்க்க, துக்கத்தைக் கேட்ட கொக்கு ஒரு கண்ணைக் குத்திக் கொள்ள என்னையும் அது பாதிச்சதால் என் உழவு கோணலாயிட்டது.” என்று கதையின் ஒவ்வொரு இடத்திலும் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்வுகள் சொல்லப்படுவது சிறார்களுக்கு சுலபமாக மனனம் செய்யும் திறனை மேம்படுத்துகிறது.
சிறார் இலக்கியம் மொழி நடையிலும் பேசு பொருளிலும் நூல் அமைப்பிலும் பெரியவர்களின் இலக்கியத்திலிருந்து வேறுபட்டதாகும். சிறார்கள் வயதினை கருத்தில் கொண்டு மொழியை எளிமையாக அமைக்க வேண்டும். சிறார்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஈர்ப்பான செய்திகளும் கருத்துக்களும் அது தொடர்பான படங்களுடன் ஈர்ப்புடையதாக அமைய வேண்டும். இப்பண்புகளைப் போலவே கி.ராவின் ‘கிராமியக் கதைகள்’ இடம் பெற்றுள்ளன. l
previous post
