புதிதாக எதைப் பார்த்தாலும் மனதுக்குள் பரவசம் பற்றிக்கொள்ளும். அதற்கு வயது ஒரு பொருட்டல்ல. அதிலும் புது “டைரி” என்றால் மனதின் குதூகலத்துக்கு எல்லையில்லை. டைரியை பார்க்கும்போது மட்டும் மனம் ஏன் இவ்வளவு ஆனந்தகூத்தாடுகிறது. எந்தப் புது பொருளாக இருந்தாலும் அதனை ஏதோ ஒரு சூழலில் பிறரோடு பகிர்ந்துகொள்ள நேரிடும். ஆனால் “டைரி” அப்படியல்ல, தனக்கே தனக்கானதாக யாருமற்ற தருணங்களிலும், தன் மனநிலையை, உணர்வை, இயலாமையை, இன்பத்தை, வலியை, அவமானங்களை, கோபங்களை, ரகசியங்களை என அனைத்தையும் ஏற்று நம் இயல்புடனே நம்மை ஏற்றுக்கொள்ளும் ஓர் உறவு.
உயிருள்ள நபர்களிடமிருந்து கிடைக்கப்பெறாத பற்றுதலை, நம்பிக்கையை உயிற்ற “டைரி”யால் நம்மில் ஏற்படுத்திவிட முடிகிறது என்பது மனிதமனங்களின் நிறை செய்ய முடியாத குறையாகவே எல்லா காலங்களிலும் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றே.
ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை தன் அப்பா தந்த புது “டைரி”யின் வரவால் பூரித்துப் போகிறாள். புது டைரியை வைத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஒருபுறம். இதையும் பத்திரமா வச்சுருக்கேனு காரணம் சொல்லி தன்னிடமிருந்து அம்மா பறித்துவிடக்கூடாதே என்ற பதட்டம் ஒருபுறம்.
இதுல அன்றாடம் நடந்த நிகழ்வுகளை, உண்மையை மட்டும்தான் எழுதணும், யாருகிட்டயும் சொல்லாத விசயத்தையும் இதுல எழுதலாந் தெரியுமானு அம்மா சொல்ல… அது எப்படி உனக்கு தெரியுங்கற மகளின் கேள்விக்கு ஒரு படத்துல பாத்தேனு சொல்ல… அந்த படத்தின் நாயகி அவள் டைரியில் எழுதிய “அடுத்தவர் டைரியை படிப்பது அநாகரிகம்” என்ற வாசகத்தை தன் டைரியின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்தாக எழுதி தன் ரகசியங்களைப் பகிர ஒரு நட்புக் கிடைத்த மகிழ்ச்சியில் தூங்கச் செல்கிறாள்.
தினமும் டைரியில் எழுதாவிட்டாலும் அவ்வப்போது அன்றைய தேதியிட்ட பக்கத்தில் நடந்ததை அப்படியே எழுதுகிறாள். ரெட் கிராஸில் தாமதமான சம்பவத்தில் ஆரம்பித்து அரசுப் பேருந்தில் வந்துவிட்டு, தனியார் பேருந்தில் வந்ததாக பொய் சொல்லி அம்மா தந்த காசில் அதிரசம், மாங்காய், இலந்தை, கொய்யாப்பழம் வாங்கிச் சாப்பிட்டது, கணக்கு டீச்சரிடம் அடிவாங்கியதுவரை அனைத்தையும் எழுதுகிறாள். இதற்கிடையில் படிப்புடன் பள்ளி நாட்கள் பம்பரமாய் சுழல்கின்றன. பரீட்சை விடுமுறைவிட… பள்ளி செல்லாத நாட்களில் அம்மா வீட்டுவேலைகள் செய்யச் சொல்லவாள் அது பரவாயில்லை. ஆனால் பரபரப்பாய் கிளம்பி, கணக்கு டீச்சரின் அடிக்குப் பயந்து அழுத்துபோய் வீடு வந்து பாடம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பது அக்குழந்தைக்கு ஆருதளாக இருந்தது. பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகளின் மனநிலையும் இதுவாகவே இருக்கிறது. கற்றல் எப்பொழுதும் இனிமையான ஒன்றே… புதிதாக எதையோ கற்கப் போகிறோம் என்ற ஆவலோடு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நம் கல்விமுறை மகிழ்ச்சியற்ற மனப்பாட முறையாக இருப்பது சலிப்பை தருகிறது. கற்றுத்தரும் முறையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாறுதலான பயிற்று முறையை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்கள் இருக்கும்வரை பள்ளி செல்லும் நாட்கள் கசந்துதான் போகும் எல்லா குழந்தைகளுக்கும் என்பது மறுக்கவியலாத உண்மை..
பள்ளி சென்ற நாளில் மடத்தின் கன்னியாஸ்திரி ஒருவர் இறந்துவிட… பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. இறந்தவரை பார்க்க தன் வகுப்புத் தோழி ராணியுடன் செல்லத் தயங்கி வேறு வழியின்றி அவளுடன் செல்கிறாள். ராணியைப்பற்றி பெரிதாய் எந்த நல்ல எண்ணமும் ஆசிரியர்களுக்கே இல்லை… ராணிமீது மட்டுமல்ல, காலனியிலிருந்து வரும் குழந்தைகள் யார் மீதும் அவர்களைப்பற்றிய தவறான கருத்துகளை மற்ற குழந்தைகள் மனதிலும் பதியவைத்து விடுகிறார்கள். ராணியுடன் பேசிய சிறிது நேரத்திலேயே அவளைப்பற்றிய தன் எண்ணம் தவறோ என்று செல்வி உணர்ந்து கொள்கிறாள். கோயிலுக்குள் செருப்பணிந்து செல்லக்கூடாது என்று பழக்கப்பட்டவளுக்கு சர்ச்சுக்குள் அனைவரும் செருப்பனிந்து இருப்பதும் கோயிலுக்குள்ளேயே உடலை அடக்கம் செய்வதும் பல கேள்விகளை ஏற்படுத்துகிறது. கேள்விகளோடு வீடு வந்து சேர்ந்தவள் அம்மாவை தேடுகிறாள். என்ன இந்நேரமே வந்துட்டங்கற கேள்வியுடன் அம்மா கையிலிருக்கும் படிக்கப்பட்ட தன் “டைரி”சாவகாசமாக எந்தப் பதட்டமும் இல்லாமல் பாதுகாப்பாய் அலமாரியில் அம்மாவாள் வைக்கப்பட்டது..
பல கேள்விகளோடு வீட்டில் நுழைந்தவளுக்கு, தான் டைரியின் முன்பக்கத்தில் எழுதிவைத்த வாசகம் அர்த்தமற்றும், மதிப்பற்றும் சவமாகிப்போனதாக தோன்றியது. அன்றிலிருந்து அவள் “டைரி”எழுதவில்லை என்று முடிகிறது கதை.
டைரி என்றும் தன் மதிப்பை இழப்பதில்லை, மனிதர்கள்தாம் மற்றவரின் அகத்துக்குள் இருப்பதை அறிய முயன்று அத்துமீறி மதிப்பை இழந்து விடுகிறோம் முக்கியமாக குழந்தைகளிடம்..
தன்மதிப்பை இழக்கவிருப்பாதோர் ஒருமுறையேனும் இக்கதையை வாசித்து விடுங்கள்… மதிப்பை இறந்தோர் தன்னை திருத்திக்கொள்ளவாகினும் ஒருமுறை படித்துவிடுங்கள்… ஏனென்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ள நல்லொழுக்க பள்ளிகள் எதுவும் நம் ஊரில் இல்லை… அதை இதுபோன்ற புத்தகங்கள்தான் போதிக்கும். l
previous post
