பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2024 அன்று, மதுரை த.மு.எ.க.ச டாக்டர் செல்வராஜ் கிளை சார்பாக நடைபெற்ற கடலும் போராளிகளும் நூல் திறனாய்வு வாசிப்பு வரலாற்றில் ஓர் மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தமுஎகச சார்பாக நடைபெறும் வாசிப்பு பயிலரங்கத்தில் பெண்கள் மட்டுமே நடத்தும் இந்தகிளையில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் இணைந்து நூல் திறனாய்வு செய்கிறார்கள். மாதம் ஒரு நூலை அனைவரும் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்கள். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், புத்தக ஆர்வலர்கள், குடும்ப தலைவிகள் என்று அனைவரும் இணைந்துள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய நிகழ்வு உணவு இடைவேளை கூட இல்லாமல் மாலை 4.00 மணிவரை தொய்வின்றி நடைபெற்றது தமிழகத்தில் வாசிப்புப் பண்பாடு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. “செவிக்குணவு இல்லாத போது வயிற்றுக்கு ஈயப்படும்” என்ற வள்ளுவரின் வரிகள் உயிர்பெற்றன.
பள்ளி ஆசிரியை தோழர் சித்ரா அவர்கள் தொடக்கமாக நூல் திறனாய்வு செய்தார்கள். பெரியார் பற்றிய பாடல், வாசிப்பு தொடர்பான பாடல், தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு மௌன அஞ்சலி என்று தொடக்க நிகழ்வுகள் முடிய அமர்களமாகத் தொடங்கினார் தோழர் சித்ரா. கடலும் போராளிகளும் சிறுகதைத் தொகுப்பை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவலுடன் ஒப்பீடு செய்தார். ‘செக்கலுக்கு போவோம்’ என்ற சிறுகதையில் தன் குடும்ப பாரம் தாங்காமல் கடலுக்கு செல்லும் சூசை என்ற பெண்ணும், வயதான காலத்தில் தொடர்ந்து 84 நாட்கள் நம்பிக்கையோடு கடல் தொழில் செய்யும் சாண்டியாகோவும் ஒரே புள்ளியில் இணைக்கிறார்கள். அவர்பிடித்த மீனை வேட்டையாட வரும் சுறாக்களை இன்றைய வணிக முதலைகளோடு ஒப்பீடு செய்தார். உலகில் வாழும் அனைத்து மீனவர்களின் துயரங்களும், வாழ்வியலும் ஒரே மாதிரியாவே உள்ளது என்பதையும், 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கடலும் கிழவனும்’ நாவல் வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வும், 2024 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட கடலும் போராளிகளும் வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வும் ஒன்றுபோல் உள்ளதை பதிவுசெய்தார். உலகின் அனைத்து இதயங்களையும் இணைக்கும் ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த தருணம் அது. மீனவர்களின் நிச்சயமில்லாத வாழ்வும், நிலையில்லா பொருளாதாரம் கொண்டவர்கள் என்பதை உணரும் போது இதயம் கணக்கிறது. இதில் ‘எம்மொவனே’ என்ற கதையை வாசிக்கும்போது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புத்தனாவது சுலபம்’ என்ற சிறுகதையில் வரும் தந்தையின் மனநிலையோடு பொறுத்திப் பேசினார். ‘எம் மொவனே’ கதையில் பைக் விபத்ததில் மரணமடைந்த தன் மகனை பார்த்து அழும் தாயின் வேதனை இன்றும் தொடர்கிறது.
தோழர் மகாலிங்கம் ரத்னவேல் பகிரும் போது இடஒதுக்கீட்டிற்கான நியாயமான அடிப்படைக் காரணங்களை நாம் புரிந்து கொள்வதற்கு இந்த நூலை வாசித்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என்ற பார்வை ஆழமானது. சமூகநீதி என்பதும் இடஒதுக்கீடு என்பதும் சமூகப் பொருளாதார நிலைகளில் பன்னெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த சமூகத்தின் நன்மைக்காகவே என்பது அறிவு. மிகக்கடுமையான, சவாலான தொழில்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ள மக்கள் கல்வியாலும் அரசுப்பணியிடங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளாலும் தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுதான் இடஒதுக்கீடு என்பதைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.
கடலோடிகளின் வலியை அவர்கள் மொழியிலேயே பதிவு செய்திருப்பது அருமை. கதைகளில் பயன்படுத்தப்பட்ட கதை மாந்தர்களின் பெயர்கள், மொழி அனைத்தும் நெய்தல் சமூகத்தை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆசிரியர் டேவிட், தனது வாழ்வில் கல்வி மறுக்கப்பட்ட சூழலை ‘அறிவுப்பணம்’ சிறுகதையோடு பொறுத்திக் கொண்டது உணர்வுப் பூர்வமானது. கடலுக்கு போவதும் போர்களம் போவதும் ஒன்று என்று கூறுவதுபோல், ‘கச்சான்காத்து’ கதை உள்ளது. மீண்டும் கடல்தொழிலையே செய்யும் மீனவர்களின் துணிவு, நம்பிக்கை நம்மை வியக்கவைக்கிறது. கடலையும் காற்றையும் பாதுகாக்க நடக்கும் போராட்டத்தில் பெண்களின் அர்பணிப்பும், சிறைகொடுமைகளையும் நேரடியாக பதிவு செய்துள்ளது ‘கடலும் போராளிகளும்’ என்ற கதை.
திருமதி கனகாம்புஜம் அக்கதை தொடர்பாக பதிவு செய்யும் போது, சிறைக்கொடுமைகளால் மரணமடைந்த சேவியரம்மாள், நினைவுகளோடு அவரது குடும்பம் தொடர்ந்து கடலை காக்கப் போராடுவது இக்கதையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்கும் ஆயுதம் கல்வி என்ற நம்பிக்கை இன்னமும் அடித்தள மக்களிடம் உள்ளது. விளிம்புநிலையில் வாழும் பெண்கள், சிறார்கள், கடலோரத்தில் கல்வி மறுக்கப்பட்வர்கள் என்றாலும், தொடர்ந்து அதற்கான விழிப்புணர்வு பணியை அனைத்து சிறுகதைகளும் செய்வதாக பேராசிரியர் கவிதா பதிவு செய்தார். ஐந்து கதைகளுக்கு மேல் தொடர்ந்து வாசிக்க முடியாத அளவுக்கு மனம் கனத்தது என்றும் பதிவு செய்தார். எழுத்தாளர் க.சரவணன் சிறுகதைகளில் பெரும்பாலும் வலிகளும், வேதனைகளும் அதிகம் காணப்படுகிறது. மீனவர்களின் கொண்டாட்டமும் கதைகளாக சேர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மெருகூட்டியது. கதைகளில் பெரும்பாலும் கலெக்டர் கனவுகளோடு குழந்தைகள் வாழ்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது அவர்களின் உள்ள ஏக்கத்தைக் காட்டுகிறது. இதுவரை மீனவர் சமூகங்களிலிருந்து ஒரு ஆட்சியர் கூட வரவில்லை என்பது வரலாறு. மீனவர்களே மீனவர்களின் வாழ்வை பதிவு செய்வது வாசிப்பவர்களை நெய்தல் நிலத்தோடும் உழைக்கும் மீனவர்களோடும் நெருக்கமாக உணரத்தூண்டுகிறது என்று பதிவு செய்தார்.
அடித்தள மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் பதிவு செய்ய இன்னும் பல சிறுகதைகள் அவசியம். படைப்புகளில் இலக்கண, இலக்கியத்தைவிட, கடத்த விரும்புகிற உணர்வு மிக முக்கியமானது. அதை இந்தப் படைப்புகள் செவ்வனே செய்திருக்கின்றன. குழந்தைகள் மட்டுமே எல்லா சமூகத்திலும் நம்பிக்கை தரக்கூடியவர்கள் ‘அப்பாவின்; நோட்டு’ கதை மிகுந்த நம்பிக்கை தரும் சிறுகதையாக உள்ளது என்று எழுத்தாளர் கலகல வகுப்பறை சிவா பதிவு செய்தார்.
நல்லாசிரியர் விருது பெற்ற விசயலெட்சுமி அவர்கள் கதைகளை, பாடலாகவும், கவிதையாகவுமு; பதிவு செய்தார்கள். இரவு முழுவதும் உறங்கவிடாமல் கடலையும், கடற்கரையையும், மீனவர்களின் வாழ்வையும் பற்றியே சிந்திக்கத் தூண்டியது என்று பதிவு செய்தார். பேராசிரியர் சாந்தி அவர்கள் மீன்களை ருசித்து உண்டிருக்கிறோம், கடலை ரசித்துப் பார்த்திருக்கிறோம், ஆனால் அதற்கு அப்பால் அவர்களின் வாழ்வியலை நமக்கு உணர்த்தியது இந்த சிறுகதை தொகுப்பு என்று பதிவு செய்தார்.
இலக்கியம் இதயங்களை இணைக்கும் என்பது உண்மை உலகின் அனைத்து தரப்பு மனிதர்களின் வலியை உணர்த்துவதற்கு இலக்கியம் மட்டும் சரியான ஊடகம். பெண்கள், குழந்தைகள் புறக்கணிகப்பட்ட மனிதர்களின் வலியை உணர்த்தும் பல படைப்புகள் இருப்பதுபோல், மீனவர்களின் வாழ்வியலை முழுவதும் புரிந்துகொள்ள இச்சிறுகதை தொகுப்பு மிகச் சரியானத் தேர்வாகும்.
‘கச்சான் காத்து’ சிறுகதை நாடகமாக நடித்துக் காண்பிக்கப்பட்ட போது அனைவருக்கும் கண்ணீர் வந்தது. எழுத்துக்கு எவ்வளவு வலிமை பாருங்கள். இது இதயத்தை குத்திக்கிழித்துவிடுகிறது. நெய்தல் சமூகத்தின் வலி, சமவெளி சமூகத்திற்கு அறிமுகப்படுத்த இச்சிறுகதை தொகுப்பு மிக உறுதுணையாக உள்ளது.
தமிழ் சமூகம் என்பதற்கும், சாதி, சமயம், மொழி இன வேற்றுமைகள் நமது வாழ்விலிருந்து மறைய நல்ல நூல்களை நாம் வாசிக்க வேண்டும். இறுதியில் கதையில் எழுதிய அனைவரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்தார்கள். அனைவரும் தங்கள் சொந்த அனுபவம்தான் இந்தகதைகள் என்பதைக் கூறும் போது உள்ளபடியே எழுத்தின் மூலம் அனைத்து இதயங்களும் இணைந்தன. மனிதர்களை நேசிக்கத் தூண்டுவது இலக்கியம். கதைகள் வெறும் கதைகள் மட்டும் அல்ல; அவைகள் மனித உணர்வுகளைக் கடத்தும் கருவிகள். எழுத்தாளர் அமுதா செல்வி அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது இளம் எழுத்தாளர்களிடம் நீங்க எல்லாரும் நல்ல வரனும் என்ற சொற்கள் ஊக்கப்படுத்துவதோடு இளம் எழுத்தாளர்களுக்கு தோள் கொடுப்பதுபோல் இருந்தது. இதுபோன்ற வாசிப்பு இயக்கச் செயல்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும். அதற்கு இது முன்மாதிரி என்பதில் பெருமை கொள்வோம். l
