எழுத்தாளர் சுகுமாரன் ஒரு பள்ளி ஆசிரியர்; படைப்பாளி. தமிழ் இலக்கிய உலகிற்கு மிகச் சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார். இவர் படைப்புகளில் பெரும்பாலானவை சிறுவர் இலக்கியமானாலும், பிரபல இலக்கிய இதழ்களில் குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதித் தனி முத்திரை பதித்து பரிசுகள் பெற்றவர். இவர் இதுவரை 66 நூல்களை எழுதியிருக்கிறார். 2007 -இல் நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சுகுமாரனின் படைப்புலகம் என்ற இந்த நூலில் 34 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இரண்டு நேர்காணல்களும் இறுதியில் சுகுமாரன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் மிக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. சுகுமாரன் எழுதியுள்ள 30 மொழிபெயர்ப்பு நூல்களில் ஒரு சிலவே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என விவரித்துள்ளார் கே.பி. அறிவானந்தம்.
வீழ்ச்சி நாவல் குறித்துக் கவிஞர் ஜெயநேசன் பின்வருமாறு கூறியுள்ளார். சாதாரணமாகப் போலீஸ் ஸ்டேசன் போய் வந்தாலே ஏதோ பாவப்பட்ட இடத்திற்குப் போய் வந்தது போல் குளித்து விடுவது நம் சமூக இயல்பு. தங்கத்துரை முதன் முதலில் சிறைப்பட்டுத் திரும்பியதும் ஜான்சி குளிக்க வற்புறுத்தும்போது “நான் என்ன களவாடி விட்டு களவாளித்தனம் பண்ணி விட்டா சிறையில் இருந்தேன். உரிமைக்காக ஒட்டுமொத்தச் சமூகத்திற்காகச் சிறை சென்றேன்” என்று ஆசிரியையான தனது மனைவிக்கு விளக்கும் விதம் அழகு. உண்மை நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கும் இந்த ஆவணம், FREEDOM AT MIDNIGHT, O JERUSALEM நூல்களைப் போன்ற ஆவணம் என்றே கருதப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும் என்கிறார், மு. குமரேசன். ஒரு மனிதன் தான் அனுபவிக்க விரும்பியதை, அனுபவிக்க முடியாத சூழல் அமைகிறபோது வேறு பலவிதமான வழிகளில் அதைக் கற்பனையாக வேணும் அனுபவிக்க ஒரு மனம் விரும்புகிற அடிப்படை உளவியலைப் படம்பிடித்துக் காட்டியது பாராட்டப்பட வேண்டிய இடம். குழந்தை இலக்கியத்தில் கதைகளின் போக்குகனை ஆரம்பம் தொட்டு இந்நாள் வரையில் (2015 ஆண்டு) விவரித்துள்ளார். நிச்சயம் இந்த உதாரணங்களே புதிதாக எழுத வருபவர்களுக்குப் பரந்த பார்வையைக் கொடுக்கும். இன்னும் எங்கெல்லாம் எழுதத் தேவை இருக்கின்றது என்பதனை உணரச் செய்யும் என விழியன் அவர்கள் கூறியுள்ளார்.சொல்லில் வசப்படும் நினைவுகள் நூலில் ஐம்பது ஆண்டுகள் நிகழ்வுகளை, நினைவுகளைக் கோர்த்து இருபத்து மூன்று அத்தியாயங்களாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் புதிய கவிஞர்கட்கும், படைப்பாளிகட்கும் சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையில்லை. கொரோனா காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்திற்கு அளவில்லாமல் போனது. வாழ்வைச் சிலுவையாகச் சுமந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீதும் உரிமைக்காகப் போராடும் மக்கள் மீதும் காவல் துறையின் தாக்குதல்கள் நடைபெற்றன” எனக் கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளை மிகவும் சரியாகவே இந்நூலில் நூலாசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
கனவு நாடு அமெரிக்கா என்ற நூல் பற்றி… சுந்தரமூர்த்தி கூறும்போது தான் எழுத உள்ள புத்தகம், இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கச் சுற்றுலா வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அதே நேரத்தில் அமெரிக்கா வந்து, அதன் அழகையும் செழிப்பையும் அனுபவித்துத் திரும்பியவர்கள் படிக்கும் போது மலரும் நினைவுகளைத் தூண்டும் என்பார். இவர் அமெரிக்க அனுபவங்களை இங்கே பகிர்ந்து மகிழ்வதுடன், நம்மையும் கைப்பிடித்து அவ்விடங்களுக்கு அழைத்துச் செல்வதுடன், கனவு காண வைப்பதுதான் சிறப்பு. குடும்பத்தாருடன் சென்ற பல இடங்கள் பற்றிய குறிப்பே இதற்குச் சாட்சி… சுகுமாரன் அவர்கள் கூறும்போது “நான் 1990-2000 களில் சிறுவர் கதைகள் எழுதத் துவங்கிய நேரத்தில் சிறுவர் சிறுமிகளைப் பாத்திரங்களாகக் கொண்ட நடப்பியல் கதைகளே புத்தகங்களிலும், சிறுவர் இதழ்களிலும் அதிகம் இடம் பெற்றிருந்தன. அழ.வள்ளியப்பா, ரேவதி, பூவண்ணன், ஆர்.வி.தங்கமணி, பூதலூர் முத்து, ஆகியோர் நடப்பியல் கதைகளே அதிகம் எழுதியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் நானும் முன்னோர் வழியைப் பின்பற்றினேன். முன் ஏர் வழி பின் ஏர். என்றும், “கால ஓட்டத்தில் குழந்தை இலக்கியம் பற்றிய என் பார்வை மாறியிருக்கிறது.” என்றும் மனம் திறந்து எழுதியிருப்பதைப் பார்க்கும்போது எழுத்தாளரின் மாற்றத்தை உணர முடிகிறது. அந்த மாற்றத்தை உணரும் வகையில் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ‘ண்டு குண்டு’ தொகுப்பில் 18 கதைகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்ற எளிய நடை, விரும்பிப் படிக்கும் கதையோட்டம், புதிய கற்பனைகள், நடைமுறை வாழ்வியல், புதிய பார்வை, முற்போக்கு எண்ணம், உளவியல் உத்திகள், மக்கள் நேயம் என சுகுமாரனின் ‘வண்டு குண்டு’ கதைகள் அதன் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் சிறப்பாக வெளிப்படுகின்றன என்று வெற்றிச்செழியன் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. “இன்னைக்கும் என்னோட சின்ன வயசு ஞாபகங்கள்ல மறக்காம இருக்குறது எங்க வீட்டுல இருந்த ரெண்டு பீரோ புத்தகங்கள். நானும் தங்கச்சியும் போட்டி போட்டு புத்தகம் படிப்போம். அப்பா நைட் தூங்கும் போது நெறைய கதை சொல்லுவாங்க. அதுவே அப்பாவ குழந்தை எழுத்தாளரா மாத்திடுச்சி” என்று மகள் பாரதி குறிப்பிட்டுள்ளமை எண்ணத்தக்கது. “எனக்கு ஒரு ஒன்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன், அப்பா ஒரு A4 சைஸ் பேப்பரில் ஒரு கதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னாங்க. அந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, ஏன்னா அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் பாரதி.”
சுகுமாரனின் நாடகங்கள் ஓரங்க நாடகங்கள் என்பதிலிருந்து குறைந்து ஒரு காட்சி நாடகம், இரு காட்சி நாடகம் என அமைந்து சட்டென முடிந்து விடுகின்றன. இவர் குழந்தைகளுக்காக எழுதுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். சுகுமாரன், பெரியாரின் வாழ்க்கையை 52 தலைப்புகளில், எளிய நடையில், மனதில் பதியும்படி சொல்லியிருக்கிறார். காலத்தை வென்றவர் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணாவைப் பற்றி அவர்கள் 144 பக்கங்களில் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்குத் தினமும் ஒரு பைபிள் கதை குறித்து லூர்து எஸ்.ராஜ், அவர்கள் நண்பர் திரு. சுகுமாரன் எழுதிய ’குழந்தைகளுக்கு தினமும் ஒரு பைபிள் கதை’ உண்ணத் திகட்டாத கற்கண்டு என்று சொன்னால் அதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் அது ஒரே மூச்சில் படித்து முடித்து ஒதுக்கி வைக்க வேண்டிய நூல் அன்று. ஒரே மூச்சில் சிறுவர்களால் அதை வாசிக்க முடியவில்லை என்றாலும், சில மணி நேரத்தில் அவர்கள் வாசித்து முடிக்கலாம். எப்படித் தின்றாலும் அது கற்கண்டு தானே. தாத்தாவின் புத்தகம் என்று கிறிஷ்யா, பள்ளி மாணவி பின்வருமாறு தனக்குத் தெரிந்த ஆங்கில நடையில் தம் கருத்தைக் கூறியிருப்பது சிறப்பு. I really enjoy thatha’s thangachi papa book. It is full of hilarious songs about us, his grandchildren, and brings wonderful memories to all. Thatha is a wonderful author with a creative mind. Only the best ideas come to him. I have always loved to help him make up songs. I think thatha is very kind to include us in his writing. I have always enjoyed spending time with thatha.
உலகப் புகழ்பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து வரும் சுகுமாரன் மொழி பெயர்த்திருக்கும் புத்தகம், “நூலகத்தில் ஓர் எலி”. இது உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் மொத்தம் ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையான எழுத்து நடை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் என்கிறார் பரிமளா தேவி.
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பிற்கு என்று ஓர் இடம் உண்டு என்பதை தம் நூல் வழியாக எடுத்துரைத்துள்ளார். எழுத்தார்வம் குறித்து சுகுமாரன் அவர்கள் கூறும்போது, மாணவப் பருவத்திலேயே எனக்குக் கதைப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் என் அக்கா வைலட், வாண்டு மாமா, தமிழ்வாணன் புத்தகங்களைப் படிக்கத் தருவார். நான் நல்ல இலக்கிய நூல்களைப் படிக்கத் தூண்டு கோலாக இருந்தவர் நண்பர் ஈஸ்வர் சுப்பையா: சாத்தான் குளத்தில் இருந்த கோபாலகிருஷ்ணப் பிள்ளை இலவச வாசக சாலையை நாங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம். எழுத்து என்பது எப்போதும் ஒரு கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதாகவும், உண்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நோக்கத்தில்தான் எனது சிறுகதைகளின் கருக்கள் அமைந்திருந்தன. நான் வாழ்ந்த, வாழும் காலத்தின் சமூகம்தான் எனது இலக்கியப் பணிகளுக்கு அடித்தளமாகி இருக்கிறது. ஆகச்சிறந்த ஆளுமை சுகுமாரன் அவர்களின் நூல்களை ஆய்வுசெய்து மிகச் சிறப்பாகத் தொகுப்புப் பணியை மேற்கொண்ட கலைமாமணி கே. பி. அறிவானந்தம் அவர்களுக்கும் சிறப்பான முறையில் பதிப்பித்த கிறிஷ் கயல் பதிப்பகத்தாருக்கும் படைப்பாளர் எழுத்தாளர் சுகுமாரன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இது போன்ற சிறந்த பணிகளை மேலும் செய்து தமிழ் உலகுக்கு ஆக்கம் செய்வார் என்று நம்புகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகள். l
previous post
