சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஓர் அற்புதமான மொழிபெயர்ப்பு நாவல் ‘கரு மிளகுக்கொடி’. நம் அண்டை வீட்டிலிருந்து வந்திருக்கிறது. தெலுங்கில் டாக்டர் வி. சந்திரசேகர ராவ் எழுதிய நாவலைத் தமிழில் தந்திருப்பவர் க. மாரியப்பன் அவர்கள். ஏற்கெனவே இவர் மொழிபெயர்த்த அத்தங்கி மலை என்ற சிறுகதைத் தொகுதிக்கு அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவரின் இன்னொரு மொழிபெயர்ப்பு நூலான ‘மகா வித்துவான்’ திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது 2023-இல் பெற்றுள்ளது. கருமிளகுக் கொடியைப் படிக்கும் போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சமூக அமைப்பில் எத்தகைய ஓர் அநீதியான, சாதிய ஆதிக்கமிக்க கொடுமைக்காரச் சூழலில் மக்கள் அவலம் மிக்க ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள் என்பதை அடிவயிற்றில் கத்தியைச் சொருகுவது போலக் கூறுகிறது.
தண்டோரா இயக்கம் என்ற ஒரு தலித் இயக்கம் ஆந்திரமாநிலத்தில், குறிப்பாகக் குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களிலும், கடலோர ஆந்திரப் பகுதிகளிலும் நடந்திருக்கிறது. அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களான மாதிகா சாதியினர், தங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரினார்கள். அன்றைய ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடந்த மிகப் பிரம்மாண்டமான மாதிகா தண்டோரா இயக்கப் பேரணி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்றைய முதல்வராயிருந்த (இன்றைய முதல்வர்) சந்திரபாபு நாயுடு,கமிஷன் ஒன்றை அமைத்து அந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறார். இன்றளவும் அந்தக் கோரிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்த மாதிகா தண்டோரா இயக்கம் பற்றிய நாவல்தான் கரு மிளகுக்கொடி. ராஜசுந்தரம் என்ற மாதிகா ஆசிரியர், கவிதைகள் எழுதுபவர். கட்டுரைகள் எழுதுவார். உயிர்ப்புடன் போராடி வந்த அவர், மெல்ல மெல்லத் தன்னை விலை பேசிககொள்கிறார். ஓர் அடிமையாக, ஆதிக்க சாதியினரின் அடிவருடியாக ஆகிறார். பணம் சேர்த்துப் பெரும் செல்வாக்குடன் வாழ்கிறார். அவரின் தம்பியோ நேர் எதிரான திசையில் பயணிக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் ஆக, தண்டோரா இயக்கப் போராளியாக ஆகிறார். பெரும் போராட்ட இயக்கங்களைத் தலைமை தாங்கி நடத்துகிறார்.
கொலைவெறித்தாக்குதல்களுக்கு ஆளாகித் தன் உயிரையும் இழக்கிறார். கொலைக்குச் சதித்திட்டம் தீட்டியவரே அண்ணன் ராஜசுந்தரம்தான் என்று தெரியவரும் போது ஏற்படும் அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கா. அண்ணனும் தம்பியும் இரு வேறு இயக்கத்திசைகளில் செல்லும் போதும், தம்பி கருணாவிடம் இழையோடிக் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாட்டை அவர் அண்ணனுக்கு எழுதும் கடிதங்களில் காண்கிறோம். ஒரு கடிதத்தின் சில வரிகள் இவை: “ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும் நாம்? அவர்களின் அனுபவங்கள் நமக்கு ஞான தீபங்கள். முக்கியமாக, தலித் இலக்கியம். நீ கவிதைகள் எழுதிய நாள்கள் நினைவுக்கு வந்தன. எவ்வளவு சிறப்பாக எழுதியவன் நீ. அந்தக் கவிதைகள், அந்த நாள்கள், அந்த ராஜசுந்தரம் இப்போது எங்கே? ராஜண்ணா, நாம் இரண்டு கதைகளாகப் பிரிந்து விட்டோம். இரண்டு பயணங்கள். நம் பிள்ளைகள் “இது எங்கள் தந்தைகளின் புத்தகம்” என்று நம் வாழ்க்கையைத் திறக்கலாம். அவர்கள் முன் எத்தனையோ கேள்விகள். அடக்குமுறை. அவமானம். நிலவறைகள், தூக்குமேடைகள், வாக்கு அரசியல், தலித் பிராமணர்கள்- நாம் நடந்த பாதைகள், நம் கண்ணீர், எதிர்காலத்தை நாம் எப்படித் தரிசித்தோம்? எல்லாவற்றையும் அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?” –கருணா- இப்படியான பல கடிதங்கள். அண்ணன் அவற்றைப் படித்து விட்டுப் புத்தகங்களின் நடுவே பாதுகாத்து வைத்திருக்கிறார். ஆனால், திருந்தவில்லை. அதே சமயம், அவ்வப்போது குற்ற உணர்வுகளால் அவதிப்படுகிறார். நிமிடத்துக்கு நிமிடம் அவரின் முகங்கள் மாறுகின்றன.
அவருக்கு, தன் மகனும், மகளும் தனது பேச்சுக்கு விரோதமாகத் தண்டோரா இயக்கத்தில் இணைந்து செயல்படுகிறார்களே என்ற ஆத்திரம். அதன் வெளிப்பாடுகள் மிகுந்த வன்முறைத்தாக்குதல்களாக, பயங்கரமாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் கடைசி வரை அப்பாவை எதிர்த்தே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இரு பிள்ளைகளிடமும், கட்டிய மனைவியிடமும் ராஜ சுந்தரம் காட்டும் ஆத்திரமும், வன்முறைத் தாக்குதல்களும் படிக்கும் போதே ரத்தத்தை உறைய வைப்பவை. அவரின் தம்பி இறந்த பிறகு அந்த இயக்கத்தை ஆளும் கட்சித் தலைமை அங்கீகரிப்பதாக ஒரு நாடகம் நடத்துகிறது. அதற்கு வித்திட்டவர் என்ற பெருமையை ராஜசுந்தரம் பெறுகிறார். ஆனால், அவரின் மகன் ரூமியே அந்த மனிதரின் வேஷத்தைக் கலைப்பதற்காகத் தீயில் கருகுகிறான்.
நாவலின் நடை, இயக்கங்களைப் பற்றிய சித்தரிப்புகள், கனவுகள், தொன்மங்கள், ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும் கூட நாவலின் கருப்பொருளுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தி, ஒவ்வோர் இயக்க நடவடிக்கையும் அரசுகளின் ஆயுதப்படைகளின் பயங்கரவாதத்தால் சிதறடிக்கப்படும் விதம் பற்றிய எழுத்து வீரியம்- எல்லாம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
மொழி பெயர்ப்பாளரின் குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார் : “இந்த நாவலை மொழி பெயர்க்கையில் பல இரவுகள் எனது பேனா ருத்ர தாண்டவம் ஆடுவதை உணர்ந்திருக்கிறேன். பேனாவில் மைக்குப் பதிலாகக் கண்ணீர்ச் சொட்டுகள் சிந்துவதையும் பார்த்திருக்கிறேன்…“
ஆம்;இந்தக்கூற்று முற்றிலும் உண்மையே. படிக்கும் நமக்கும் அதே உணர்வு கடத்தபடுகிறது. நாவலாசிரியர் சந்திரசேகர ராவ் நான்கு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாவல்கள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றின் ஆசிரியர். ஐ. ஆர். எஸ். பட்டம் பெற்றுப் பணியில் இருந்தவர்.
மொழிபெயர்ப்பாளர் மாரியப்பன் ஆந்திரப்பிரதேசம், குப்பம் நகரிலுள்ள திராவிடப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி – மொழி பெயர்ப்பியல் துறை யில் உதவிப்பேராசிரியர். ஒப்பியல் இலக்கியம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியங்கள் குறித்துத் தீவிர அவதானிப்புகளுடன் எழுதியும், பேசியும் வருபவர். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
உருது, அரபி, பாரசீகம் ஆகிய அயல் மொழிகள் பலவற்றுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே நீண்ட காலமாக ஓர் ஆழ்ந்த, வலுவான உறவு இழையோடிக் கொண்டிருக்கிறது. அந்த மொழிகளிலிருந்து வெகுகாலமாகவே பல மொழி பெயர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு வந்திருக்கின்றன. நடுவே கடந்த காலங்களில் இந்தப் பரிமாற்றங்களில் ஓர் இடைவெளியும், தேக்கமும் நிலவி வந்திருந்தது. இப்போது, மிக சமீப காலமாக, பேராசிரியர் அ.ஜாகிர் ஹூசைன் போன்றவர்களின் முயற்சிகளால் மீண்டும் அரபி மொழிப் படைப்புகள் ஆங்கில வழி அல்லாமல், நேரடியாகத் தமிழ் மொழிக்கு வரத் தொடங்கி இருக்கின்றன.
ஜாகீர் ஹூசைன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபு, உருது, பாரசீக மொழிகள் துறையின் தலைவராகப் பணி செய்கிறார். மஹ்மூத் தர்வீஷ், நிசார் கப்பானி, வஃபா அப்துல் ரசாக் போன்ற மிக முக்கியமான புகழ் பெற்ற படைப்பாளிகளின் கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். அதே போலத் தமிழிலிருந்து ஆத்திசூடி, பாரதியார்-பாரதிதாசன் கவிதைகள், திருக்குறள் போன்ற இலக்கியங்களை அரபி மொழியில் பெயர்த்திருக்கிறார். ‘நாடோடிக் கட்டில்’ தொகுப்பில் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் புகழ் பெற்ற ஒன்றான ‘அடையாள அட்டை’, இன்றைய உலகில் மனிதர்களை வேட்டையாடுவதற்கென்றே தன் வானளாவிய அதிகாரப்படைகளை ஏவி விடும் அரசுகளுக்கு எதிரான ஒரு போர் முழக்கமாக ஒலிக்கிறது. இந்த மொழிபெயரப்புக்காக அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய விருதை இந்த ஆண்டு இவர் பெற்றிருக்கிறார். தர்வீஷின் இரு குறுங்கவிதைகள் : நான் / தரிசு நிலமாகி / விட்டேன் … என் நிகழ் காலம் / மேகம் / என் நாளை / மழை.
இரவென்பது / அன்பின் வரலாறு / நான் என் இரவு.
இவர் அரபி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கும் இன்னொரு நூல் ‘புயல் முட்டை’. இது குறுங் கவிதைகளின் தொகுப்பு. வஃபா அப்துல் ரஸ்சாக் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. புயல் முட்டை நூலிலிருந்து இரண்டு குறுங்கதைகள்:
‘அவள்’: “ஒளியும் கண்ணீரும் நெருப்பும் பெருக்கெடுத்து ஓடும் ஏராளம் கண்க ளுக்கிடையில் அவள் தீக்குளித்தாள். நாடே பற்றி எரிந்த பெரும் கலவரத்தில் உடைந்து போன கடைசிக் கைக்கு அவள் தீக்குளிக்குமுன் விடை கொடுத்தாள்.” ‘வீட்டுப் பாடங்கள்’: “புதிய பாடத்தின் வீட்டுப் பாடங்களால் நிரப்பப்பட்டு விட்டது அவனது பை. இனி அவன் மனித உணர்வுகளை மறந்தாக வேண்டும் அல்லது அவற்றைக் கைவிட வேண்டும். அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு அவன் தன்னுடைய ஆறு சகோதரர்களின் ஒரு துண்டு ரொட்டிக்காக மீண்டும் தன் உணர்வுகளை இழந்து விட்டான். குழந்தைப்பருவத்தை அடியோடு தொலைத்து விட்டான்.”
சமகால அரசியல், போர் எதிர்ப்பு, மனித உரிமைகள், படைப்புச்சுதந்திரம்,மத வெறி எதிர்ப்பு போன்ற விழுமியங்களை மிகவும் நுட்பமாகவும், பூடகமாகவும் பேசும் குறுங்கவிதைகள், கதைகளின் தொகுப்புகளைப் படித்த போது, இங்கு மட்டுமன்றி உலகெங்கிலுமே மனிதர்கள் இன்று எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவையே என்பது தெளிவாகிறது. இன்னொரு சிறிய ஆனால், சிறப்பான மொழிபெயர்ப்பு நூல் என இ.பா.சிந்தன் அவர்களின் ‘கதை சொல்லிகளின் கதைகள்’ என்ற புத்தகத்தைக் கூறலாம். ஒரு விதத்தில் இதை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்ல முடியாது என்றும் கூறலாம். பெல்ஜியம், எகிப்து, இந்தோனேசியா உள்பட 13 நாடுகளைச் சேர்ந்த 16 புகழ் பெற்ற பிரபல சிறார் எழுத்தாளர்கள், ‘இப்படித்தான் எழுத்தாளர்கள் ஆனாங்களா’ என நாம் வியக்கும் வண்ணம் அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கைக் கதைகளை மிகவும் சுவையாக சிந்தன் எழுதியிருக்கிறார். வெறுமனே தகவல்களின் தொகுப்பல்ல இது. வாசிக்கிற எவர் ஒருவரையும் நாமும் முயன்றால் எழுத்தாளர் ஆகலாம் போலிருக்கிறதே என ஆர்வமூட்டும் குறு நூல். சிந்தனின் நூல்கள் அனைத்துமே அரசியல், புவியியல், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, பலஸ்தீனம் குறித்த வரலாற்று நூல்கள் மிக முக்கியமானவை. சமீபத்தில் அவர் மொழி பெயர்த்த ‘பலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்? ‘ என்ற நூல் வாசிக்கிறவர்கள் மனங்களை உலுக்கும்,செயல் புரியத் தூண்டும் ஒரு வரலாற்று ஆவணம். இவை போல் இன்னும் பல அயல் வீட்டாரின், அண்டை வீட்டாரின் இலக்கியக் கொடைகளைத் தொடர்ந்து நாம் அறிந்து கொள்ளலாம். l
previous post
