நூலின் பெயர்: சொக்கரா
ஆசிரியர்: பிறைமதி குப்புசாமி
வெளியீடு: Dravidian Stock
விலை: 130/-
தொடர்புக்கு: 9092787854
சற்றே திறந்திருந்த சன்னல் வழி, அதிகாலை வெளிச்சம் வரத் தொடங்கியது. கதவின் இடைவெளியில், வெளிச்சத்தை நட்டு வைத்தது போல இருந்த ஒளியை விழி நுகர எழுந்தேன்.விடியலில், எழுத்துகளோடு இணைந்திருப்பதென்பது தனித்ததொரு மகிழ்வனுபவம். அப்படித்தான் எழுத்தாளர் பிறைமதி குப்புசாமி அனுப்பி இருந்த சிறுகதைகள் சிலவற்றை வாசிக்கத் தொடங்குகிறேன். ஏற்கனவே அவரின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான அவரின் நூலொன்றிற்கு சௌமா இலக்கிய விருது வழங்கப்பட்டது என்பதும் நினைவில் இருக்கிறது. வாழ்க்கை என்னும் சங்கிலி, சம்பவங்கள் என்னும் கண்ணிகளால் கோக்கப்பட்டது.சம்பவங்களால் நிறைந்தது தானே வாழ்க்கை. அவை இன்பம்,துன்பம், உயர்வு, தாழ்வு,வறுமை, வளமை, நட்பு, உறவு, சமூகம் எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவை.
அவ்விதமாக, வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட வாழ்வின் சுவாரஸ்யம் அல்லது வெறுமை, துயரம் அல்லது மகிழ்ச்சி போன்றவை மிகவும் முக்கியமானவை. அவற்றைக் காண்பதும் கவனிப்பதும் கணிப்பதும் அவதானிப்பதும், உணர்வதும் ஓர் எழுத்தாளனின் அடிப்படையாகிறது. அவையே படைப்பு மனத்தில் கருக்கொண்டு படைப்பாக வெளிப்படுகிறது. பிறைமதி குப்புசாமியின் படைப்புகள் எப்போதும் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசுபவை. இன்றைக்கு எனக்கு வாசிக்கக் கிடைத்த கதைகளும் அத்தன்மைத்தானவையே.
கிராமம் சார்ந்த இவரின் கதைகளில் இவர் காட்டும் காட்சிச் சித்திரம் வாசகனை வசீகரித்துக் கொள்ளக்கூடியவை. மழை என்றொரு கதை.பெருமழைக்காலம். பெருமழைக்காலத்தில் நகர் வாழ்மக்கள் படும் துயரம் ஒரு வகையானது. அதே பெருமழையில் கிராமத்தில் வாழ்வோர் எதிர் கொள்ளும் சிக்கல் வேறு விதமானது. தங்கையன் மழையின் உக்கிரத்துக்கிடையே வயலில் வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். அந்த சமயம் வீட்டில் உள்ள ஆடு மாடுகள் குறித்த ஞாபகம் வருகிறது. தன் துயர் ஒருபுறம்; தான் வளர்க்கும் பிராணிகள் குறித்த கவலை ஒரு புறம். “காக்கை குருவி எங்கள் சாதி”, என்றானே பாரதி அதனொப்ப. ”’மழைக்காலம் வந்தாலே சற்று பதற்றமாகவே இருக்கும், தான் வாழ்வதற்கு இடமில்லை என்றாலும் பரவாயில்லை, தான் வளர்க்கும் பிராணிகளுக்கு தங்குவதற்கு இடமில்லை என்பதை நினைத்தால் தான் அவனுக்கு பயம் தொற்றிக் கொள்ளும்’’,என்று எழுவதில் ’பாரதியின் உயிர்களிடத்தில் அன்பு வேணும்’, என்னும் வரிகளை வாழ்வியலாய்க் காட்டுகிறார். நண்டு பிடிக்கும் காட்சியை விவரிக்கும் போது கிராமம் குறித்த ஏதுமறியா நகர் வாழ் வாசகனுக்கும் நண்டு பிடிக்கக் கற்றுத்தந்து விடுகிறார்.
ஒரு விவசாயியின் மனம் தான் எத்துணை நேர்மறையாக இருக்கிறது. பெருமழையிலும், ஊரில் இல்லாத பக்கத்து வயல்க்காரரின் நிலத்தில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவது பெருமழையினும் அதிக ஈரமனத்தையல்லவா காட்டுகிறது.இது போலவே இன்னொரு புயல் மழைக்காலத்தில் குடிசைகளில் நீர்புகுந்துவிட, பஞ்சாயத்துத் தலைவரிடம் பள்ளிக்கூடத்தில் தஞ்சம் கேட்கும் மக்கள். மறுப்பின் வாயிலாக, இங்கே சாதியத்தின் கொடுமனம் எவ்வாறு இருக்கிறது என்பதை மிக வலிமையாக முன்வைக்கும் உரையாடல்கள். பூனை குறித்த கதை மீண்டும் பாரதியை நினைவு படுத்தவல்லது. ஒரு வளர்ப்புப் பிராணிமேல் வைக்கும் பிரியம் என்பது அளவிடமுடியாதது. அந்தப்புனை சாலை விபத்தில் சிக்கிக் கொள்கிறது . அது படும் துயரத்தின் தீவிரத்தை எழுதி விட முடியும் என்னும் நம்பிக்கையை நிறைவேற்றியிருக்கிறார் என்பேன். பூனையின் மரணத்தின் பொருட்டு வாசகனை அழ வைத்துவிட முடியும் என்பது எழுத்தாளனின் வெற்றி. சமூகத்தில், காதலுக்கு எதிராக பல காரணிகள் இருந்தாலும் சாதி மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. பேச்சாயி கதை இதைப்பேசுகிறது. தன் கணவனைத் தாக்கிய சாதி வெறியனை அம்மிக்கல்லால் அடிக்கிறாள். பெண்ணுக்கு ஞானத்தை மட்டுமல்ல ,வீரத்தையும் வைத்திருக்கிறான் என்பது உண்மை தானே. ’மி’, என்னும் கதை முற்றிலும் மாறுபட்ட நனவோடை யுத்தியில் எழுதப் பட்டது.
வாடகை வீடு தேடுவது குறித்த கதையில் வாடகை வீடு தேடும் போது எதிர் கொள்ளும் சிக்கல்கள் எத்தனை வலி நிறைந்ததாக இருக்கிறது என்பதை மிக நுட்பமாகப் பேசுகிறது. இறுதியில் நிலவையே வீடென பாவிக்கும் வரிகள் கவித்துவமானவை. கிராமம் சார்ந்த கதைகளை எழுதும் போது அதற்கான மொழியும் நகரம் சார்ந்த கதைகளில் அதற்கான மொழியும் நனவோடை உத்தியில் எழுதுகையில் அதெற்கென ஒரு மொழியுமென கதைக் களத்திற்கேற்ப இவரின் மொழி தகவமைகிறது வாசகனைப் பிரதிக்குள் நிற்க வைக்கும் கதைகள். எதேனும் ஒரு புள்ளியில் இணைத்து விடும் களம் மற்றும் மொழி.எளிய மக்களின் வாழ்வியலைப் பிரதானமாகப் பேசும் இவர் மேலும் தொடர்ந்து எழுத வேண்டும். வாழ்த்துகள். எப்போதும் அன்புடன்
– முனைவர் தமிழ்மணவாளன்
