தமிழகக் கல்வி நிலையங்களின் இன்றைய கல்விச் சூழலைக் கவனத்தோடும் கவலையோடும் 30 தலைப்புகளில் இந்த நூல் தொகுப்பில் எட்வின் அவர்கள் மிக அருமையாக எடுத்துச் சென்றிருக்கின்றார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்த நூலில் சொல்லி இருக்கின்றார். கல்விச் சூழலில் நிகழ வேண்டிய அல்லது மேலும் நிகழ்த்த வேண்டியவற்றை முன்வைப்பதாக இந்நூலினை அமைத்திருக்கின்றார்.
தெருவிளக்கின் அறிமுகமும் தார்ச் சாலையின் புதிய வரவும் தொடக்கப் பள்ளியின் துவக்கமுமாக ஊருக்கு ஒரு துவக்கப்பள்ளி என்ற முதல் கட்டுரையை எழுதியிருக்கின்றார். மாணவர்கள் எவ்வளவு கடினப்பட்டுச் சென்று பள்ளிப் படிப்பைக் கற்கின்றார்கள் என்பதை இந்தக் கட்டுரையானது மிக அருமையாக எடுத்து இயம்புகிறது. வேதாரண்யத்துக்கு அருகே உள்ள ஓர் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குத்தான் குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். இரண்டு ஊர்களுக்கும் இடையே ஓர் ஆறோ வாய்க்காலோ ஓடுகிறது. தாண்டியெல்லாம் அதனைக் கடக்க இயலாதபடி அகலமானது அது. கரையும் உயரமானது. எனவே, பனைமரங்களாலான ஓர் பாலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஓர் ஆறேழு பனைமரங்களைப் பக்கம் பக்கமாக அடுக்கிவைத்துப் பாலம் மாதிரிச் செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அதில் மிதிவண்டிகளைத் தள்ளிக்கொண்டும், நடந்துமாகக் குழந்தைகள் கடப்பது மிக ஆபத்தானதாக உள்ளது. எனவே, இந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை, கல்வி மிகவும் ஆபத்தானது. அவர்களால் முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இந்த ஆபத்துக்குப் பயந்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்களும் அந்த ஊரில் இருக்கவே கூடும். அவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் உயிர் என்பது, குழந்தைகளின் கல்வியை விட முக்கியமானது. ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி சாத்தியமெனில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே என்ற பதிவு பாராட்டத்தக்கது. ஆனால் இன்றோ, பத்துக் கிலோ எடையுள்ள LKG குழந்தை பதினைந்து கிலோ புத்தக மூட்டையை முதுகில் சுமக்கிறாள். M.A படிக்கும் மாணவன் ஒரே ஒரு நோட்டை எடுத்தபடி கல்லூரிக்குப் போகிறான். அதிலும் சிலர் இரண்டு ஆண்டுகளையும் ஒரே நோட்டில் முடித்து விடுகிறார்கள். LKG குழந்தையிடம் புத்தக மூட்டையையும் MA படிக்கும் மாணவனிடம் ஒரே ஒரு நோட்டையும் கொடுத்திருக்கும் இன்றைய கல்வி முறையை என்ன செய்வது? என்று சமூகச் சூழலை எள்ளி நகையாடிச் சிந்திக்கவும் வைக்கிறார்.
பள்ளி தொடங்கும் நாட்களில் குழந்தைகளின் புதுப் புத்தகப்பைக் கனவு என்பது எவ்வளவு அழகானது, அழுத்தமானது என்பதை உணர்ந்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் வலி சொல்லாமலேயே புரியும். எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளிக்கான கணக்கை நாம் பள்ளிக் குழந்தைகளிடம் நீட்டுகிறோமா? உண்மையைச் சொல்வதெனில் நாம் தொழிலாளர்களை விடவும் பேரதிகமாய்க் குழந்தைகளைக் கசக்கிச் சுரண்டுகிறோம் என்று குழந்தைகளின் சுழலை எட்வின் அவர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளமை சிறப்பு.
காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என்பதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடையாது. முழு ஆண்டு விடுமுறை என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடையாது. முழு ஆண்டு விடுமுறையில் அவர்களுக்குப் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் ஆரம்பமாகிவிடும். கேட்டால் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காகத்தானே இவ்வளவும் செய்கிறோம் என்கிறார்கள். அறிவை விரிவு செய்தல் என்பது கல்வியின் நோக்கங்களுள் ஒன்றென்பது கல்வியைச் சந்தைப்படுத்தியவர்களும் ஒத்துக்கொள்ளும் கருத்தாகவே இருக்கிறது. அதில் கல்வி வியாபாரிகளுக்கும், மாற்றுக் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கல்வியாளர்களுக்கும் எந்த இடத்திலும் பிரச்சினை இல்லை. விரிகின்ற அறிவு எதைச் செய்ய வேண்டும் என்பதில்தான் இரு சாராரும் முட்டி மோதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் வளர்ந்து செழிப்படைந்து விட்டால் வசதி படைத்தவர்களும் அதன் பக்கம் சாய்ந்துவிடக் கூடும் என்ற அச்சம் கல்விச் சந்தையாளர்களை இதற்கு எதிராக மிகுந்த நுணுக்கத்தோடும் நரித்தனத்தோடும் காய் நகர்த்த வைக்கிறது. முன்வரிசைப் பிள்ளைகளில் இருந்து சான்றோனை, மருத்துவனை, வழக்கறிஞனை, பொறியியல் வல்லுனரை, பெரிய அதிகாரிகளை நம்மால் உருவாக்க முடியும். அதைச் செய்வோம். அதே வேளை சமூக அக்கறையுள்ள கங்குகளை தலைவர்களைப் பின்னிருக்கைகளிலிருந்து உருவாக்க முடியும் என்று கூறியிருப்பது எண்ணத்தக்கது. எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என்பதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சமீப காலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மாதாமாதம் உயரதிகாரிகளைக் கூட்டி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும்படியாகக் கல்வித்துறையின் செயல்பாடுகளை முடுக்கிவிடும்படி அறிவுறுத்துகிறார். ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் யாரையும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இவ்வளவு அக்கறை காட்டுவது குறைந்த பட்சம் அனைத்து மாணவர்களும் பத்து ஆண்டுகளாவது பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். ஒரு போட்டி வைத்து அதில் யார் முதல் என்று தேர்ந்தெடுத்தால் அது கார்பரேட் கல்வி. ஒவ்வொரு குழந்தையும் முதல் பரிசு பெற வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் போட்டிகளைத் தர முன் வந்தால் அது குழந்தை நேயக் கல்வி’ எனக் கல்வி குறித்தான தன் சிந்தனையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பாம்பு பிடிக்கிற காட்டுப்பயலுக எதுக்குடா? பள்ளிக்கூடம் வந்து எங்க உசுர எடுக்கறீங்கன்னு கேட்ட வாத்தியாரின் குரலுக்குப் பயந்து ஓடி வந்து செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் இருளர் குழந்தையின் குரல் என்னை அறுக்கிறது.’ என்று தோழர் பர்வதா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அழுதுகொண்டே எழுதியிருந்ததைப் படித்ததும் ஏகத்துக்கும் ஏற்கனவே ரணமாகிப் போயிருந்த மனது இன்னும் பேரதிகமாய்க் கிழிந்து வலித்தது என்கிறார். பெண் குழந்தை பிறந்ததற்காக இனிப்பு வழங்குபவன் மனசெல்லாம் கசப்பு
உலகில் 6.2 கோடிப் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல், எழுத்தறிவே இல்லாமல் இருப்பதாக தோழர் ஜீவசுந்தரி பாலன் அவர்கள் தனது ’தி இந்து’ கட்டுரை ஒன்றில் மிகுந்த வேதனையோடுஎழுதியிருப்பதை, வேதனைப்படாமல் யாராலும் கடந்துபோக இயலாது.பள்ளிக்குப் போகாத, எழுத்தறிவே இல்லாத ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை விடவும் கூடுதலாகக்கூட இருக்கக்கூடும். பிரச்சினை என்னவெனில் ’ஆண்’ என்ற காரணத்திற்காக எந்த ஓர் ஆண் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்பட்டிருக்காது. ஆனால் பெண் குழந்தைகள் விஷயத்தில் ’பெண்’ என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே கல்வி மறுக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்கிற புரிதல் வரும் பொழுதுதான் எல்லாருக்குமான கோரிக்கையை வைக்க இயலும். அதுவரை பெண் கல்விக்கான குரலை இன்னும் பேரதிகமாய் உயர்த்திப் பிடிக்க வேண்டும். நாடே சந்தையாய் மாறிப்போன ஒரு சூழலில் கல்வி சரக்காகவும் மாணவர்கள் நுகர்வோராகவும் மாறிப் போக வேண்டும் என்பதை ஆசிரியர் கேள்வி கேட்பது சிந்திக்கத்தக்கது.
ஹீப்ருவின் எழுச்சியை மொழி குறித்துக் கவலைப்படும் யாவரும் கவனத்தோடு கற்க வேண்டும். ஒரு கட்டத்தில் பயன்படுத்தாது அழிவின் விளிம்பில் இருந்த அந்த மொழியை இன்று ஒரு கோடி மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம்தான். தங்களது மொழி அழிந்து கொண்டிருப்பதை முதலில் அவர்கள் உணர்ந்தார்கள். மீட்டெடுக்க ஆசைப்பட்டார்கள். தங்கள் மொழியை மட்டுமே தங்களுக்குள் புழங்கினார்கள். கடையில் காய்கறி உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் மொழியிலேயே கேட்டார்கள். மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் தங்கள் மொழியிலேயே எழுதினார்கள், அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹிப்ரு மொழியிலேயே படிக்க வைத்தார்கள். கல்லறைக்கு வெகு அருகில் சென்று கொண்டிருந்த தங்கள் மொழியை உயிர்ப்பித்திருக்கிறார்கள். நமது கல்விக் கூடங்கள் இந்த வரலாறை நமது குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். அந்தக் காலத்தில் கல்வியின் விளைவாக ஒழுக்கமும் பண்பாடும் எதிர்பார்க்கப்பட்டது. ’படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோன்னு போவான்’ என்று பாரதி சொன்னான். பாவம் செய்யாமை படித்தவன் அடையாளமாக இருந்த காலம் மாறி இன்று காரும், நகையும், ஏசியோடு கூடிய பங்களாவும், மின்னணு சாதனங்களுமே படித்தவனின் அடையாளமாகிப் போயின. தாய் மொழியின் அவசியத்தையும் மொழியை நேசித்து அதனை அழிக்காமல் அதிலிருந்து மீட்டெடுக்கின்ற செய்தியையும் கல்லறைக்கு மிக அருகில் இருந்து காப்பாற்றப்பட்ட மொழி என்ற கட்டுரை மிக அருமையாகச் சொல்லுகிறது. திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்குக் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் திருநங்கையின் சிறப்பையும் அவளும் ஒரு மனித உயிர் என்பதையும் எனக்கு ஒரு மகள் திருநங்கை என்ற கட்டுரை வழியாகச் சிறப்பாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் சிறுநீர் கழிக்க அனுமதி வழங்காத காரணத்தால் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் சிறுநீர் கழிக்க ஒருவர் செல்ல அனைவரும் அடுத்தடுத்ததாகக் கேட்கின்ற நிலையையும் போனவன் வந்ததும் போ என்கின்ற கட்டுரையில் நிதர்சனமாகச் சொல்லி இருக்கின்ற தன்மை சிறப்புடையது. மிக நேர்த்தியான முறையில் இந்த நூலானது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூலைச் சிறப்பான முறையில் எழுதிய ஆசிரியர் இரா. எட்வின் அவர்களுக்கும் இதனைச் சிறப்பான முறையில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். l
previous post
