அண்மையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து மதுரைக்கு வந்திருந்த நண்பரும் படைப்பாளருமான நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பிரெஞ்சு மொழியில் நாவல்களுக்குத்தான் முதன்மை இடம், சிறுகதைகள் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு” என்றார். பிரெஞ்சு மொழியில் சிறுகதைகள் எழுதிட இளைஞர்களுக்கு ஆர்வமில்லை என்ற கூடுதல் தகவல், எனக்கு வியப்பளித்தது. உலகம் முழுக்க நாவல்கள் கொண்டாடப்படுகின்ற இன்றையச் சூழலில் இருபதோராம் நூற்றாண்டில் இருநூறுக்கும் கூடுதலான சிறுகதை ஆசிரியர்கள் தமிழில் காத்திரமான கதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றனர். எல்லாருக்கும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றபோது பலரும் கதைசொல்லிகளாக மாறியுள்ளனர். வெகுஜனப் பத்திரிகைகள் சிறுகதைகளைப் புறக்கணித்த காலகட்டத்தில் மின்னணு ஊடகம் பலரையும் தேர்ந்த கதைசொல்லிகளாக மாற்றியுள்ளது. கவிதைத் தொகுப்புகளுக்குப் போட்டியாகச் சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கும் நிலை வரவேற்கத்தக்கதுதான். தமிழ்ச் சிறுகதைகள் ஆக்கத்தில் சாதனை படைத்திட்ட முன்னோடி எழுத்தாளர்களின் பெரிய தொகுப்புகளை வாசிக்காமல் சுயம்புவாகக் கதைகளை எழுதிக்குவிக்கிற போக்கு, இன்று வைரலாகாகியுள்ளது. இத்தகைய சூழலில் நண்பர் மதுரை சரவணனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான ‘பூனை உலவும் வீடு’ நூலுக்கு அணிந்துரை அளித்திடுமாறு அன்புடன் அவர் கேட்டபோது மறுக்க இயலவில்லை. ‘பூஸ்ட் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்று சச்சின் டெண்டுல்கர் காணொலியில் தோன்றிச் சொல்கிற வாசகத்தினால் எவ்வளவு பூஸ்ட் குப்பிகள் விற்றிருக்கும் என நினைத்திடத் தோன்றும். இளவல் மதுரை சரவணன் எழுதியுள்ள புதிய சிறுகதைத் தொகுப்பு என்னுடைய அணிந்துரையினால் நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. வேறு வழி?
மதுரை சரவணன் என்ற பெயர், சங்க காலத்தில் மதுரை என்ற முன்னொட்டுப் பெயருடன் கவிதை எழுதிய 38 கவிஞர்களின் பெயர்களை எனக்கு நினைவூட்டுகிறது. மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் முதலாக மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன், மதுரை வேளாசன் என்ற அட்டவணை மதுரை நகருக்கும் படைப்பாளர்களுக்குமான நெருங்கிய உறவைச் சுட்டுகின்றது. தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகின்ற மதுரை சரவணன் படைப்பாளர் மட்டுமின்றிச் சிறார்களுக்குக் கதைசொல்வதில் தேர்ந்த கதைசொல்லியாக விளங்குகிறார் (மதுரை தலைமை ஆசிரியர் சரவணன் என்ற பெயர்கூட ஒருவகையில் பொருத்தமானதுதான்). இலக்கியத்தை முன்வைத்து எங்காவது ஊர் சுற்றிடக் கிளம்பினால், மகிழுந்து சாரதியாகப் புறப்படும் சரவணனுடன் பயணம் செய்வது உவப்பான விஷயம். பேச்சு சுவராசியத்திற்காக முன்னர் நடந்த எந்தச் சம்பவத்தைச் சொன்னாலும் “அண்ணே, நீங்க சொல்றது அருமையான கதை. அதைக் கதையாக எழுதட்டுமா?’’ என்று வெள்ளந்தியாகக் கேட்பார். அவருடைய பார்வையில் நடந்தவை எல்லாம் கதைகள், மனிதர்கள் எல்லாரும் கதைமாந்தர்கள்தாம். அவர், சொந்த அனுபவம் அல்லது கேள்விப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் கதையாகப் பார்க்கின்ற அவதானிப்புத்தான் பூனை உலவும் வீடு தொகுப்பு வெளியாவதற்கு அடிப்படை.
இரண்டாயிரமாண்டுகளாக உயிர்த்திருக்கிற மதுரை மாநகரில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையும் நிலவெளியும் படைப்புகள் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. சங்க காலத்தில் ‘மதுரைக் காஞ்சி’ மூலம் மதுரை மாநகரம் இப்படியெல்லாம் இருந்தது என்று விவரிக்கிற மாங்குடி மருதனாரின் படைப்புப் பணி, ஒப்பீடு அற்றது. ப.சிங்காரம், ஜி.நாகராஜன், கோபிகிருஷ்ணன் தொடங்கி இன்றுவரையிலும் நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் மதுரை மண் வாசத்துடன் எழுதிக்கொண்டிருக்கின்றனர். சமகாலத்தில் சிறார் இலக்கியப் படைப்புகளுடன் சிறுகதைகள் எழுதுகின்ற மதுரை சரவணன் சித்திரிக்கின்ற கதையாடலில் மனிதர்கள் மட்டுமின்றி, மதுரை நகரத்தின் வீதிகளும் நுணுக்கமாகப் பதிவாகியுள்ளன. மதுரை மண்ணுக்கெனத் தனித்த மொழியும் வட்டாரப் பின்புலமும் இருக்கிறதென்ற ஓர்மையில் மதுரை சரவணன் கதைகளை மதுரை மண்ணின் கதைகள் என்று குறிப்பிட்டுள்ளேன்.
நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த நகர மாந்தர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற சம்பவங்களை முன்னிலைப்படுத்திக் கதைசொல்லல், சரவணனின் தனித்துவம். பொதுவாகக் குடும்பம், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களைக் கதைகளாக்கியுள்ள சரவணன், தான் கண்டறிந்த வாழ்க்கையின் விநோதங்களைப் பதிவாக்கிட முயன்றுள்ளார். ஒருகணத்தில் எல்லாம் மாறுகின்றபோது நிகழ்கணத்தில் தத்தளிக்கின்ற மனிதர்கள், பூமியில் கைவிடப்பட்ட உயிரினமாக மாறுவதைச் சரவணன் கதைகளின்மூலம் சித்திரிக்கிறார். அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள், பிரதிகளில் இருந்து வெளியேறி வாசிப்பின்மூலம் கண்ணெதிரே நடமாடும் நிழல்களாக மாறுகின்றனர். எளிய வாழ்க்கையில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ஏன் மனிதர்கள் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள்? உடல்கள்தாம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலமாக இருக்கின்றனவா? உடலில் இயல்பாகக் கொப்பளிக்கிற காமம் எப்படிச் சிக்கலாக மாறுகிறது? இப்படிப் பல்வேறு கேள்விகளைச் சரவணனின் கதையாடல் முன்வைக்கிறது.
‘பூனை உலாவும் வீடு’ சிறுகதைத் தொகுப்பில் வாத்தியார், ஆணவம், வித்தைக்கார வாத்தியார் ஆகிய மூன்று கதைகளும் பள்ளிக்கூடத்தை முன்வைத்து மாணவன், ஆசிரியர் உறவின் மறுபக்கத்தைச் சித்திரித்துள்ளன. எல்லாரும் கடந்துவந்த பள்ளி வாழ்க்கையைப் பற்றிய பிரக்ஞை, பொதுவாகப் பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. சிறுவனாக இருந்தபோது பார்த்துப் பயந்த பள்ளி ஆசிரியரை முதியவராகத் தற்செயலாகச் சந்திக்கும்போது, ஏற்படும் மனவுணர்வு வாசிப்பில் அவரவர் கதையாக மாறிடும் வல்லமையுடையது. எனக்குச் சமயநல்லூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்து, பதினொன்று வகுப்புகளில் கணிதம் பாடம் நடத்திய ராஜு சார் நினைவுக்கு வருகின்றார். வகுப்பில் அருமையாகக் கணக்குப் பாடத்தை நடத்திடும் ராஜு சார், சிறிய தவறுக்குக்கூட அடி பின்னியெடுத்து விடுவார். அவர் ஒருவகையில் டெரர். என்றாலும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவரும் என்மீது ப்ரியமாக இருப்பார். ‘என்னடா’ என்று கரகரத்த குரலில் அவர் பேசுவது இப்பவும் என் காதுக்குள் ஒலிக்கிறது. 1979ஆம் ஆண்டு நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாகப் படித்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ராஜு சாரைப் பார்த்துப் பேசினேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. என்னை மிகவும் மரியாதையாகச் ‘சொல்லுங்க’ என்று பேசினார். வகுப்பில் சிங்கம்போல இருந்த ராஜு சாரின் தோற்றம் நினைவுக்கு வந்தது. சரவணன் எழுதியுள்ள ‘வாத்தியார்’ கதை ‘நினைவுகள் ஒருபோதும் அழிவதில்லை’ என்ற வாசகத்தை எனக்கு நினைவூட்டுகிறது. ‘வாத்தியார்’ கதையை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அவரவர் கடந்துவந்த பள்ளிக்கூட நினைவுகள் நினைவிலாடும். புனைகதைகளால் என்ன பயன் என்று ஒதுங்கிப் போகின்றவர்களுக்கும் சொல்வதற்கு ஏதோவொரு விஷயம் இருக்கிறது என்பதுதான் சரவணனின் படைப்பு நோக்கமா? யோசிக்க வேண்டியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் சாலையில் பயணிக்கும்போது யாராவது வண்டியை மறித்து லிப்ட் கேட்பதை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள ‘லிப்ட்’ கதை, சுவராசியமானது. விரைந்திடும் வாகனப் போக்குவரத்தில் தினமும் லிப்ட் கேட்டுப் பயணிக்கிறவர் ஒருவகையில் விசித்திரமானவர். லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி அமர்ந்து, தான் செல்லவேண்டிய இடத்தின் வழியாகச் செல்லுமாறு வற்புறுத்துகிறவரை எப்படி அவதானிப்பது? கதைசொல்லியின் பொறுமைக்கு அளவில்லையா? சரி, போகட்டும். வயிறு முட்டக் குடித்த குடிகாரரை வண்டியில் ஏற்றியபோது, அவர் வாந்தியெடுத்து, வண்டியிலிருந்து கீழே விழுந்திடும் கதைசொல்லியின் உடலில் காயமேற்பட அதன் பின்விளைவுகளாக விவரிக்கப்படும் சம்பவங்கள் வேடிக்கையானவை. வேலியில் போற ஓணானை எடுத்துக் காதுக்குள்ளே விட்ட கதை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். 1985ஆம் ஆண்டில் ‘சக மனிதர்களைச் சகிப்பதுதான் பெரிய விஷயம்’ என்று நண்பர் சுந்தரராமசாமி பேச்சுவாக்கில் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. வேறு வழி? கதைசொல்லியும் சரவணனும் ஒருவர்தானா? என்ற கேள்வி வாசிப்பில் உங்களுக்குத் தோன்றிட வாய்ப்புண்டு. யாரோ ஒருவரின் அனுபவத்தைத் தன்னுடைய சொந்த அனுபவம்போல விவரித்து, வாசிப்பில் நம்பிக்கையை ஏற்படுத்திட முயலும் யதார்த்தக் கதையாடல், சரவணன் கதைசொல்லலில் ஆகப் பெரிய பலம்.
சரவணன் கதைசொல்லலில் விவரித்திடும் பெண்கள், வழமையிலிருந்து மாறுபட்டவர்கள். மறுமணம் கதையில் சில்வியா, பூனை உலவும் வீடு கதையில் கிரிஜா, வாசுகி கதையில் வாசுகி அக்கா… மூன்று பெண்களும் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பெண்கள்தான். எல்லாரைப் பற்றியும் சொல்வதற்கு ஏதோவொரு கதை இருக்கிறது. பெண்கள் மீதான பால் சமத்துவமின்மை, ஒடுக்குமுறை போன்றவற்றை மீறி யதார்த்தத்தில் பெண்ணின் இருப்பு இப்படியாக இருக்கிறது என்று சரவணன் கதைக்கிறார். அவருடைய கதைகளில் இடம்பெற்றுள்ள பெண்களின் அடையாளமும் கொண்டாட்டமும் அவர்களால் உருவாக்கப்பட்டவை. இப்படியான சூழலில் பெண் எப்படி வாழ்கிறாள்? அவளுடைய தேர்வு என்னவாக இருக்கிறது? என்று சரவணன் விவரித்துள்ள பெண் கதைமாந்தர்கள் ஆக்கம், முக்கியமானது.
‘ஏ.ஐ.தீவிரவாதி’ எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கலாம் என்று விரிந்திடும் அறிவியல் புனைகதை, வாசிப்பில் பூச்சாண்டி காட்டுகிறது. எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்வைத்துச் சரவணன் சொல்லியுள்ள அறிவியல் பின்புலத்தினாலான கதை, அவருடைய மொழியாளுகையை வெளிப்படுத்துகிறது. அறிவியல் என்ற சொல்லை முன்வைத்து உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சம்பவங்களாக்கிச் சரவணன் கதைத்துள்ளார். யோசிக்கும் வேளையில் தகவல் தொடர்பில் ‘பேஜர்’ என்ற கருவி அறிமுகமான 90களில் ஏற்பட்ட வியப்பு, இன்றுவரையிலும் வெவ்வேறு வழிகளில் முடிவற்று நீள்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் அறிவியலின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றங்கள், வளர்ச்சி பற்றிய உந்துதலினால் சரவணன் மனித உடல்களை முன்வைத்து எழுதியுள்ள கதை, அவருடைய அறிவியல் புலமைக்குச் சான்று. எவ்வளவுதான் அறிவியலினால் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கினாலும் மனித உடலும் மனமும் இயற்கையானவைதாம் என்று கதையை வாசித்து முடித்தவுடன் நிச்சயம் தோன்றும்.
பூனை உலாவும் வீடு சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளைத் திறனாய்வு செய்வது என்னுடைய நோக்கமல்ல. கதைகள் பற்றிய அறிமுகமாக என்னுடைய அபிப்ராயங்களைப் பதிவாக்கியுள்ளேன். நீங்கள் கதைகளை வாசித்து உங்களுக்கான பிரதிகளை உருவாக்கிடும்போது, கதைகளின் பின்புலத்தில் பொதிந்துள்ள உலகினைக் கண்டறிந்திட முடியும். மதுரை சரவணனின் புனைவுலகு என்னவாக இருக்கிறது என்பதை அறிந்திடலாம்.
மதுரை சரவணன் புனைகதை ஆக்கத்தில் இருந்து அடுத்த கட்டமாக மதுரை மாநகர் பின்புலத்தில் விரிவான நாவல் எழுதிட வேண்டும். அதற்கான படைப்புத்திறன் அவரிடமுள்ளது. கடந்தகால வாழ்க்கை அனுபவங்கள் அவருக்குள் ஈரமாகப் பொதிந்திருப்பதை அவருடைய நேர்ப்பேச்சுகள்மூலம் அறிந்திருக்கிறேன். l
