அடர் வனத்திற்குள் அலைந்து, ஒவ்வொரு மூங்கில் குச்சியாய்க் கொண்டு வந்து சேர்த்திருந்தோம். குடிசையின் உச்சி மூங்கிலில் கடைசி முடிச்சைப் போடுகிற போது அளவில்லாத மகிழ்ச்சி. ஒளி மங்கி மாலை வேளை பிறந்த போது குடிசைக்குள் விளக்கு ஒன்றை ஏற்றினோம். வெளிச்சம் கிடைத்தது; குடிசை நிறையவில்லை. ஒரு தோழர் சொன்னார், “பத்தி கொளுத்திப் பார்ப்போம்” என்று. வாசம் வந்தது. ஆனாலும் குடிசை நிறையவில்லை. பானை இருந்தது, சோறு பொங்கினோம். இப்போதும் குடிசை நிறையவே இல்லை. வாசல் வழியாகத் தென்றல் வந்தது. பயனில்லை. குடிசையின் முன் ரோஜா பூத்திருந்தது அவ்வளவே. குயில் கூடக் கூவுவது போலக் காதில் கேட்டது. நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கம் அமைதியாய் குடிசைக்குள் அமர்ந்திருந்தோம். அடுத்த நாள் வந்தது. அதற்கு அடுத்த நாளும் வந்தது. எல்லாம் முந்தைய நாளைப் போலவே இருந்தன.
இன்றைக்கு என்ன ஆயிற்று?
இத்தனை அழகாய், இதற்கு முன் எங்கள் குடிசைக்குள் தென்றல் வீசியது இல்லை;
இத்தனை அழகாய்க் கதிரவனைப் பார்த்ததில்லை;
இத்தனை அழகாய் ரோஜா சிவந்ததில்லை;
இத்தனை அழகாய்த் தோழர்கள் முகம் அரும்பியது இல்லை.
உங்கள் அனைவரின் வருகையால் அனைத்தும் அழகாய்த் தெரிகிறது இன்றைக்கு.
சமூகக் கட்டுமானங்களுக்குள், உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவை, தூக்கி எறியப்பட வேண்டியவை என்ற இரண்டுமே அமிழ்ந்து கிடக்கின்றன. அவை விழுமியங்கள் என்ற பெயரிலும், அடையாளங்கள் என்ற பெயரிலும், வழக்கங்கள் என்ற பெயரிலும் இறுகக் கட்டப்பட்டிருக்கின்றன. சமூக மனிதன் அதற்குள் உழல்கிறான். அதனைப் பூசிக் கொள்கிறான். எது சரி, எது தவறு என்கிற எந்தக் கூறும் அற்றவனாக வாழப் பழகிக் கொள்கிறான். முதலில் கட்டுமானத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு ஒரு கவிதை, அதன் ஒரு சொல் கூடப் போதுமானதாக இருக்கும். ஒரு சிறுகதையோ அல்லது சிறுகதையின் ஒரு வரியோ கூடப் போதுமானதாக இருக்கும். நாவலோ, குறும்படமோ, திரைப்படமோ அதற்குப் போதுமானதாக இருக்கும். சமூக மனிதனுக்கான பொறுப்பினையும், இந்தப் படைப்புகள் அவனுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும். படைப்பின் மிகையுணர்வு, வெளியுணர்வு, நிலையுணர்வு, நீளுணர்வு, உள்ளுணர்வு எல்லாம் மனிதனை வசம் கொள்ளும். தேக்க முற்ற சமூகத்தின் வேர்களைத் தூரகற்றுவதும், அப்படைப்புகளை அங்கீகரிப்பதும், படைப்பாளனை ஊக்குவிப்பதும் நம் அனைவரின் கடமை. அது நம்மை நாமே வளர்த்துக் கொள்ள நமக்குக் கிடைத்த வாய்ப்பு. இன்றைக்கு உங்களால் நாங்கள் அந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ளோம். எங்கள் மூங்கில் குடிசை நிறைந்து கிடக்கிறது. இந்தக் குடிசையில், இந்த நிகழ்வுகளும், நினைவுகளும் எப்போதும் நிறைந்து கிடக்கட்டும்.
பொறுங்கள், இனிப்புகளைக் கையளிக்கிறோம்! நன்றி. இப்போது நீங்கள் எங்களுக்கு விடை கொடுங்கள், தோழர்களே! மீண்டும் மூங்கில் குச்சிகளைச் சேகரிக்க அடர் வனத்திற்குள் செல்லவிருக்கிறோம். இன்னொரு குடிசை, இன்னொரு நிகழ்வு, இன்னொரு நினைவு நிறைக்க; அப்போது மீண்டும் வாருங்கள்! அத்தர் வாசனையோடும், மெல்லிய இசையோடும், அக்கார அடிசிலோடும் காத்திருப்போம்..! l
