மு. இராமனாதன்
தமிழ்ச் சமூக வரலாறு, இலக்கியம், பண்பாடு, அரசியல், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் பங்களித்து வருபவர் சலபதி. அவர் ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர். என்றாலும் அவருக்கு உரிய அறிந்தேற்பு சமீப காலமாகத்தான் கிடைத்து வருகிறது. 2019இல் அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ விருதும், 2021இல் கோவை பாரதி பாசறையினரின் விருதும் வழங்கப்பட்டது. சிகரம் வைத்தாற்போல் வந்தது, இவ்வாண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ விருது. ஒருவரின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் விருது இது. தகுதியான ஒருவருக்கு அறிந்தேற்பு கிடைக்கிற தருணம் மகிழ்வானது. அப்படியான தருணமிது.

சுந்தர ராமசாமி சலபதியைப் பற்றி இப்படிச் சொன்னார்: “இன்று ஒரு இளைஞர் – தமிழ் அறிஞர் என்று அவரைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை, இளைஞனும் அறிஞனாக இருக்கமுடியும் – புதுமைப்பித்தன் கதைகளுக்கு மிகச் சிறப்பான ஒரு பதிப்பை உருவாக்கித் தந்து விட்டார்”
சுந்தர ராமசாமி சொன்னது புத்தாயிரமாண்டின் துவக்கத்தில். [‘உரைநடையும் யதார்த்தமும்’, தமிழ் இனி 2000 மாநாட்டுக் கட்டுரைகள், 2005]. அப்போது சலபதிக்கு வயது 33.
ஓர் இளைஞர் அறிஞராக இருக்க முடியாதா? அப்படி இருப்பது நம் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளுக்கு எதிரானது ஆயிற்றே! அதனால்தான் அவரை அறிஞராக இனங்கண்டு கொண்ட சுந்தர ராமசாமி ‘ஓர் இளைஞர் தமிழறிஞராகவும் இருக்க முடியும்’ என்று சேர்த்துச் சொல்கிறார்.
சலபதி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development studies) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய- பண்பாட்டு-வரலாற்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
அறியப்படாத காலம் இருந்தது
ஒரு சம்பவத்தைச் சொல்லாமல் என்னால் தொடர முடியாது. ஹாங்காங்கில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நடத்தி வந்தோம். தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு, அதுவும் அயல் நாட்டில் கிடைக்கக்கூடிய ஆதரவைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை. என்றாலும் 15-20 பேராவது கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அக்டோபர் 2008இல் ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஒரு கூட்டம் நடத்தினோம். நண்பர்கள், திரு.வி.க, வ.உ.சி, மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறித்துப் பேசினார்கள்.
நண்பர்கள் மறைந்த தமிழறிஞர்களையே தேர்ந்தெடுத்திருந்தார்கள். நான், ஒரு வாழும் தமிழறிஞரைக் குறித்துப் பேசுவது என்று முடிவெடுத்தேன். கல்விப் புலம் சார்ந்த ஆய்வு நெறிமுறைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் பண்டிதத்தனம் இல்லாமல், சுவாரசியமும் குறையாமல் எழுதுபவர் சலபதி என்று நான் கண்டு கொண்டிருந்தேன். ஆகவே அவரைப் பற்றிப் பேசினேன். அந்த உரையை ஒரு கட்டுரையாக எழுதினேன். அதை அப்போது வெளியாகிக் கொண்டிருந்த ஓர் இலக்கிய இதழுக்கு அனுப்பியும் வைத்தேன். அதன் ஆசிரியர் கண்ணியமானவர். கட்டுரையை வெளியிடுவதற்கில்லை என்று எனக்கு எழுதித் தெரிவித்தார். நான் அசராமல் ஓர் இணைய இதழுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் வெளியிட்டார்கள். எனில், இப்போது நிலைமை மாறிவிட்டது. தனது தொடர்ச்சியான பங்களிப்பால் சலபதி அறியப்படுகிற அறிஞராகிவிட்டார். இந்த இயல் விருது சுட்டுவதும் இதைத்தான்.
வ.உ.சி.யில் தொடக்கம்
சலபதியின் ஆய்வுப்பணி வ.உ.சி.யில் தொடங்கியது. தமிழ் நாடெங்கும் தேடியலைந்து கண்டெடுத்த ‘வ.உ.சி கடிதங்க’ளை 1984ல் பதிப்பித்தார். அப்போது அவருக்கு வயது 17. ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ நூலை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் எழுதினார். அது சிறு நூல். அதன் பிறகான 35 ஆண்டுகளில் நூலைத் திருத்தியும், செழுமையாக்கியும், புதிய சான்றாவணங்களின் வெளிச்சத்தில் விரிவாக்கியும் “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூலை இவ்வாண்டு வெளியிட்டார். முந்தைய நூலைக் காட்டிலும் இந்த நூல் மும்மடங்கு பெருகியிருந்தது.
1933-34 காலகட்டத்தில் வ.உ.சி எழுதிய “திலக மகரிஷி” (2010) நூலையும், 1935இல் வ.உ.சி எழுதிய “சிவஞானபோத உரை” (2022) நூலையும் சலபதி பதிப்பித்தார். “வ.உ.சி.யும் காந்தியும்- 347 ரூபாய் 12 அணா (2021)” என்கிற நூலில், இரண்டு பேராளுமைகளுக்கும் இடையிலான உறவு, வ.உ.சி. எழுதிய எட்டும் காந்தியடிகள் எழுதிய பதினொன்றுமாக மொத்தம் 19 கடிதங்களின் வாயிலாக துலக்கம் பெறுகிறது. இந்தக் கடிதங்கள் எதுவும் நூறு பெருந்தொகுதிகளாக வந்துள்ள காந்தியடிகளின் தொகை நூல்கள் எதிலும் இடம் பெறவில்லை. வ.உ.சி. நூல் வரிசையில் இப்போதைக்குக் கடைசி வரவு: “வ.உ.சி.: வாராது வந்த மாமணி”. வ.உ.சி.யின் புகழ் ஓங்கியிருந்த காலத்தில் வெளிவந்த அவருடைய வாழ்க்கை வரலாறுகளின் வாயிலாகவும்,அவர் மறைந்தபொழுது வெளியான இரங்கலுரைகளின் வாயிலாகவும் வ.உ.சி.யை அணுகுகிறார் சலபதி.
சமீபத்தில் சலபதி இப்படிச் சொன்னார்: “வ.உ.சி.யை மட்டும் ஆராய்ந்தால் வ.உ.சி.யைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். தேசிய இயக்கம் மட்டுமல்லாமல், தொழிற்சங்க இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், சைவச் சீர்திருத்த இயக்கம் எனத் தம்காலத்து இயக்கங்கள் எல்லாவற்றிலும் வ.உ.சி. பங்காற்றியிருக்கிறார். அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில்தான் நான் வரலாற்று ஆய்வாளனானேன்” [இந்து தமிழ் திசை, 5.6.2022].
புதுமைப்பித்தனுக்குச் செம்பதிப்பு
ஆ. இரா. வேங்கடாசலபதி 2000ஆம் ஆண்டில் “புதுமைப்பித்தன் கதைகள்” நூலைப் பதிப்பித்தார். இந்த நூலில் 97 கதைகள் தொகுக்கப்பட்டன. 1948இல் புதுமைப்பித்தன் காலமானபோது, இதில் சரி பாதிக் கதைகளே நூல் வடிவம் பெற்றிருந்தன. ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் நமக்கு எட்டாதபடி உள்ள ரகசிய உற’வின் காரணமாகவோ என்னவோ, ‘வறுமை பிடுங்கும் இந்தியாவில் எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்த நாற்பதையொட்டிய வயதுகளில்’ புதுமைப்பித்தன் மறைந்தார். அவரது மறைவிற்குப் பின் வெளியான நூல்களில் கதைகள் வெளியான காலமும் இதழும் சுட்டப்படவில்லை.
கதைகளும் கட்டுரைகளும் தழுவல்களும் மாறி மாறி இடம்பெற்றன. பிழைகளும் இருந்தன. அவை செம்மையாகவும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு குறைபாடுகளுடன் பதிக்கப்பட்டவை அன்னியில், தொகுக்கப்படாத, அச்சிடப்படாத படைப்புகளும் இருந்தன. அதுகாறும் நூல் வடிவம் பெறாத படைப்புகளை மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான நூல்களையும், அவை வெளியான இதழ்களையும் சலபதி கண்டடைந்தார்.
புதுமைப்பித்தனின் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று சாத்தியமான எல்லாக் கதவுகளையும் அவர் தேடித் திறந்தார். சென்னை, காரைக்குடி, புதுக்கோட்டை, மருங்கூர், ஆண்டிப்பட்டி, தில்லி, லண்டன், சிகாகோ போன்ற இடங்களில் உள்ள தமிழ் நூல் நிலையங்களில் ஏறி இறங்கினார். 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான, நூற்றுக் கணக்கில் மட்டுமே அச்சாகியிருக்கக் கூடிய இலக்கியச் சிற்றிதழ்களையும், நூல்களையும் கண்டடைவது தமிழ்ச் சூழலில் புலிப்பால் பருகுவதற்குச் சமமானது. அதைச் சலபதி செய்தார்.
புதுமைப்பித்தனது அனைத்துப் படைப்புகளையும் துரத்தித் துரத்தி மீட்டெடுத்தார். அப்படிக் கண்டெடுத்தவைகளைக் கால வரிசைப்படி தொகுத்தார். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் வெளியீட்டு விவரம் இருக்கிறது. கதை முதலில் வெளியான இதழ், பயன்படுத்திய புனைப்பெயர், நூலாக்கம் பெற்ற விவரம் அனைத்தும் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர புதுமைப்பித்தனின் கதைகள் இதழ்களில் வெளியானதற்கும் நூலாக்கம் பெற்றதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
புதுமைப்பித்தனின் காலத்தில் வெளியான நூல்களில் அவரே மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘கலைமக’ளில் வெளியான கதையில் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ அருந்தும் இரண்டு கப் காப்பியின் விலை இரண்டணாவாக இருக்கிறது, பிற்பாடு காஞ்சனை(1943) என்கிற தொகை நூலில் கதை வெளியாகும்போது மூன்றணா ஆகிவிடுகிறது! இன்னும் வடிவ நேர்த்தி, சொல்முறை, ஆங்கிலப் பயன்பாடு, கதைப் பொருள் முதலான பல காரணங்களையொட்டி புதுமைப்பித்தனே சிறிதும் பெரிதுமான பல மாற்றங்கள் செய்திருக்கிறார். இந்தக் கதைகளுக்கெல்லாம் நூற்பதிப்புகளை மூல பாடமாகக் கொண்டு, இதழ்களில் வெளியானவற்றில் இருக்கும் வேறு பாடங்களை, பின்னிணைப்பில் பட்டியலிட்டிருக்கிறார் சலபதி.
புதுமைப்பித்தன் மறைவிற்குப் பிறகு சில கதைகள் நூல் வடிவம் பெற்றன, பல பெறவில்லை. இவற்றுக்கெல்லாம் இதழ்களில் வெளியான பாடத்தையே மேற்கொண்டார் சலபதி. இந்த நூல் ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவை புதுமைப்பித்தனை அணுகும் எளிய வாசகனுக்குத் தடையாக இல்லை. மாறாக கதைகளுக்கு வெளியே தரப்பட்டிருக்கும் ஆய்வுக் குறிப்புகள், அவனுக்கு புதிய வாசிப்பனுபவத்தை நல்குகின்றன.
நவீனத் தமிழிலக்கியத்தில் மூலபாட ஆய்வையும் பாடபேதத்தையும் அறிமுகப்படுத்தியவர் சலபதி என்று பாராட்டுகிறார் பெருமாள் முருகன். நவீனத் தமிழ்ப் பதிப்பிற்கு ஒரு முறையியலை வழங்கியவர் சலபதி என்கிறார் கவிஞர் சுகுமாரன். ‘புதுமைப்பித்தனின் தவப்புதல்வன் சலபதி’ என்று உச்சி முகர்பவர் வேறு யாருமில்லை, புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் [காலச்சுவடு, மார்ச் 2019].
பாரதி தேடல்
சலபதியின் இன்னொரு முக்கியப் பங்களிப்பு பாரதி தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகும். பாரதியும் (1882-1921) ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் உள்ள ரகசிய உறவின்’ கரங்களில் பலியானவர். எனில், அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மேதாவிலாசம் உணரப்பட்டது. அதன் விளைவாக கடந்த நூறாண்டுகளில் அவரது தொகுக்கப்படாத அச்சிடப்படாத பல்வேறு படைப்புகளை வெளிவந்த வண்ணமிருக்கின்றன. ‘வ.உ.சி. பற்றிய ஆய்வினூடாக பாரதி ஆய்வுக்குள் நுழைந்தவர்’ சலபதி. வ.உ.சி. கடிதங்கள் (1984), ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ (1987) ஆகிய நூல்களைத் தொடர்ந்து, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ (1994) ‘பாரதியின் கருத்துப் படங்கள்’ (1994) ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
பாரதி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை (1904-1921) பத்திரிகையாளராகக் கழித்தவர். அவர் ‘இந்தியா’, ‘சுதேசமித்திரன்’, ’சூரியோதயம்’ ஆகிய இதழ்களில் எழுதியதில் கணிசமானவற்றை பாரதி ஆய்வாளர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். எனில், பாரதியே ஆசிரியராக விளங்கிய ‘விஜயா’ நாளேட்டின் இதழ்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ‘விஜயா’ 1909-10இல் புதுச்சேரியிலிருந்து வெளியானது. பாரதியின் அரசியல் தோழர்களான வ.உ.சி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் 1908இல் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தான் சிறைப்படுவதும் உறுதி என்று கருதிய பாரதி, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரான்சின் ஆளுகையிலிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் செப்டம்பர் 1909இல் தொடங்கப்பட்ட ‘விஜயா’, அதன்மீது தடையாணை விதிக்கப்பட்ட ஏப்ரல் 1910 வரை வெளியானது. ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலில் பாரதியின் எழுத்துகளை அறிகிற வாய்ப்பு – ஓரிரண்டு நறுக்குகள் தவிர- பாரதி அன்பர்களுக்குக் கிட்டவில்லை.
பாரதி ஆய்வாளர்கள் விஜயா இதழ்களைத் தமிழகத்திலேயே தேடிக் கொண்டிருந்தனர். சலபதி புதுச்சேரியை ஆண்ட பிரான்ஸில் தேடினார். அதற்குப் பலன் இருந்தது. சலபதி பதிப்பித்திருக்கும் ‘பாரதி விஜயா கட்டுரைகள்’ (2004) நூலின் செம்பாகம் இரண்டு இடங்களிலிருந்து பெறப்பட்டவை.
பிப்ரவரி 1910இல் வெளியான 20 ‘விஜயா’ இதழ்களை பாரிசில் கண்டு பிடித்தார் சலபதி. ‘விஜயா’ tabloid அளவில் நான்கு பக்கங்களில் தலையங்கம், படங்கள், விளம்பரங்களுடன் வெளியாகியிருக்கிறது. ‘விஜயா’ சுமார் 150 இதழ்கள் வெளியாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் முழுமையாகக் கிடைத்திருப்பவை இந்த 20 இதழ்கள் மட்டுமே.
இவையன்னியில், ‘விஜயா’வில் வெளியான மேலும் சில கட்டுரைகளையும் சலபதி வெளிக் கொணர்ந்தார். அன்றைய ஆங்கிலேய அரசின் புலனாய்வுத்துறை பொதுமக்கள் கருத்து எப்படித் திரள்கிறது என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு சுதேசப் பத்திரிக்கைகளில் வெளியானவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தது. இந்த ரகசிய அறிக்கைகளில் ‘விஜயா’வில் வெளியான 45 கட்டுரைகள் கிடைக்கின்றன. இவற்றை சலபதி தமிழில் மீள மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றுள் ஒன்று:-
“….அவர்(கவர்னர்) வரும் பாதையில் வேறு வாகனம் ஓடக் கூடாது. வரவேற்புப் பந்தல்களும் தோரணங்களும் வழியெங்கும் போடப்படவேண்டும். கவர்னர் எங்கேனும் தாமதிப்பாரானால், கிராமத்தாரெல்லாம், இரவல் வாங்கியேனும், நல்ல வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அதிக வரி செலுத்துபவரின் தலைமையில் சென்று, பெரிய புஷ்ப மாலைகளுடன் அவரை வரவேற்கவேண்டும். வைஸிராய் ரயிலில் பிரயாணம் செய்வாரானால், எல்லா ஸ்டேஷன்களும் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதோடு, ராத்திரியில் ஒவ்வொரு தந்திக் கம்பத்திலும் ஒருவன் தீப்பந்தத்தோடு நிற்கவேண்டும். இவ்வாறு செய்ய வேண்டுமென்று எந்தச் சட்டமும் இல்லை. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சென்ற நான்கைந்து வருஷங்களாக இயற்றப்பட்ட சட்டங்களையெல்லாம் ஒருவன் படிப்பானாகில் அவன் அதை ராமராஜ்யம் என்றும் தர்ம ராஜ்யம் என்றும் புகழ்வான். சட்டத்தில் என்ன சொல்லியிருந்தபோதிலும் நடைமுறை வேறாயிருக்கிறது…” (விஜயா, 3.3.1910)
நூறாண்டுகளுக்குப் பிறகு வைஸ்ராய் போன்ற பதவிப் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றன என்பதற்காக இதை நான் எடுத்துக் காட்டவில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கட்டுரைகளை, நூறாண்டுகளுக்குப் பிறகு சலபதி பாரதி காலத்து வசன நடையிலேயே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை இதை வாசிக்கும்போது உணரலாம். இந்த நூல் ஒரு முக்கியமான காலகட்டத்தில் பாரதியின் எழுத்துக்களையும், கூடவே சலபதியின் புலமையையும், அர்ப்பணிப்பையும் புலப்படுத்துகிறது.
பாரதியியலுக்கு சலபதி அளித்திருக்கும் இன்னொரு கொடை ‘பாரதி கருவூலம்’ (2008). பாரதி ‘இந்து’ நாளிதழுக்கு ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதிக்கு எழுதிய 16 கடிதங்களையும், அதன் செய்திப் பகுதியில் வெளியான இரண்டு ‘பகிரங்க’க் கடிதங்களையும், இன்னும் இரண்டு கட்டுரைகளையும் சலபதி இந்த நூலில் பதிப்பித்த்தார். பாரதியின் ஆங்கிலப் புலமையும், அவர் ‘இந்து’விற்கு அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார் என்பதையும் பாரதி ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். எனில், இரண்டொரு கடிதங்களையும் சில நறுக்குகளையும் மட்டுமே அவர்கள் பார்த்திருந்தனர். ‘பாரதி கருவூலம்’ நூலில் இடம்பெற்றிருக்கும் பாரதியின் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் முதல் முறையாக நூலாக்கம் பெற்றன. இவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையத்தில் இருந்த நுண்படச் சுருள்களிலிருந்து பெற்றிருக்கிறார் சலபதி.
1904 முதல் 1911 வரையிலான நெடிய காலகட்டத்தில் வெளியான இந்தக் கடிதங்கள் பாரதியின் சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்த எழுத்துகளின் வீச்சும் விரிவானது. திலகரின் மீதான அபிமானம், அன்னிபெசன்ட் மீதான விமர்சனம், தென்னாப்பிரிக்காவில் அல்லலுறும் இந்தியத் தொழிலாளிகள் மீதான கரிசனம், புதுச்சேரியிலும் பிரிட்டிஷ் ஒற்றர்களால் பாரதி படும் அவதி போன்றவை கடிதங்களில் வெளிப்படுகின்றன. தமிழைப் போலன்றி, பாரதி ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களைக் கைக்கொள்கிறார். சலபதி இந்தக் கடிதங்களையும் பாரதி காலத்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
பாரதியின் சில கடிதங்கள் ‘இந்து’வில் வெளியான செய்திகளுக்கு ஆற்றப்பட்ட எதிர்வினை. பாரதியின் கடிதங்களுக்கும் எதிர்வினைகள் வெளியாகியிருக்கின்றன. இவையும் நூலில் இடம்பெறுகின்றன. கடிதங்களோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளும் தரப்படுகின்றன. எனில், சலபதியின் நூல்கள் வெறும் ஆவணத் தொகுப்பு மட்டுமில்லை. அவற்றை விரிவான ஆய்வு முன்னுரைகள் அணி செய்கின்றன. அவற்றில் தன்னுடைய ஆய்விலிருந்து பெறப்படும் கருதுகோள்களையும் அவர் முன்வைக்கிறார்.
“பாரதி ‘இந்து’வில் எழுதியதில் வியப்பொன்றுமில்லை. அவர் பத்திரிகையாளராகவே இருந்து வந்தார். ஆகவே அப்போதையத் தலையாய ஆங்கில நாளேட்டை அவர் தொடர்ந்து வந்தது இயல்பேயாகும்” என்றார் சலபதி [தி இந்து, 6.4.2008]. மேலும், “காலனீயப் போலீஸ் அவரது வாயைக் கட்ட முயன்ற ஒரு காலகட்டத்தில் அவரது எழுத்துகளுக்கு மேடை அமைத்துத் தந்ததில் ‘இந்து’ பெருமைப்படலாம் என்றும் சொன்னார் [தி இந்து, 30.3.2008]. ஆனால் இந்தப் பாராட்டுரைகளின் புறமே நின்று அவர் ‘இந்து’வை விமர்சனமும் செய்தார். “பாரதியின் மேதைமையை ‘இந்து’ ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்று கொள்ளத்தக்க எந்த முகாந்திரமும் இல்லை” என்றும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பாரதி மறைந்த பொழுது ‘இந்து’ ஒரு சிறு தலையங்கக் குறிப்பை மட்டுமே வெளியிட்டது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். அக்குறிப்பும் பாரதியைக் குறித்து ‘இந்து’வில் வெளியான சில உதிரிச் செய்திகளும் நூலில் இடம் பெறுகின்றன.
பாரதியின் மாறிவரும் நிலைப்பாடுகளையும் சலபதி படைப்புகளுக்கு வெளியே நின்று சுட்டுகிறார். எடுத்துக்காட்டாக, பாரதி 1904இல் ‘இந்து’ ஆசிரியருக்கு எழுதிய Mr. Sankaran Nair’s Pronouncement என்கிற கடிதத்தைக் குறிப்பிடலாம். ‘சாதிகள் ஒழியும் வரை இந்தியா விடுதலை பெறக் கூடாது’ என்று சென்னை ஆசாரத் திருத்த சங்கம் என்கிற அமைப்பின் தலைவர் சங்கரன் நாயர் பேசியது ‘இந்து’வில் விரிவாக வெளியானது. இந்தக் கருத்தை மறுத்து ஒரு வாசகர் எழுதியிருந்தார். வாசகரின் கருத்தை மறுத்தும், சங்கரன் நாயரை ஆதரித்தும், சமூக சீர்திருத்தம் ஏற்படாமல் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது வெறும் கனவுதான் என்று பாரதி வாதிடும் கடிதம்தான் மேலே சுட்டப்படுவது. இந்தக் கடிதத்தை எழுதியபோது பாரதிக்கு வயது 22.
பாரதியின் பிரசுரமான முதல் ஆங்கிலப் படைப்பு இதுவாகவே இருக்கக்கூடும். கடிதத்தின் கீழுள்ள வரலாற்றுக் குறிப்பில், கடிதம் வெளியான சில மாதங்களிலேயே பாரதி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டதை சலபதி ‘இந்தியா’ இதழொன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தப் பின்குறிப்பை ‘ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி?; ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர், தம்முட் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?’ என்ற வரிகளோடு வாசகனால் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
பாரதி இயலுக்குச் சீரியதொரு பங்களிப்பாக அமைகிறது சலபதி எழுதிய “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” (2015) என்கிற நூல். இது பாரதி படைப்புகளின் பதிப்புரிமை அரசுடைமை ஆக்கப்பட்ட வரலாற்றைப் பேசுகிறது. வையகம் அதுகாறும் காணாத புதுமையாக அது அமைந்தது. ஓர் எழுத்தாளனின் பதிப்புரிமையை அரசாங்கமே வாங்கி அதை மக்களின் உடைமை ஆக்கியதை உலகம் அதுவரை கண்டதில்லை. மேலதிகமாக, தமிழ்ச் சூழலில் எழுத்தாளரின் காப்புரிமை பற்றி அண்மைக் காலங்களில் நடந்துவரும் உரையாடலுக்கு ஊட்டம் தருவதாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது.
சமூக ஆய்வு:
சலபதி பண்பாட்டுக் களத்தில் கணிசமாகப் பங்களித்திருக்கிறார். சலபதியின் ‘நாவலும் வாசிப்பும்’ (2002) என்கிற நூல், புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 1995ல் முனைவர் பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம். ‘இரங்கற்பா பாடப்படும் போதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது’ என்கிற கவித்துவம் மிக்க வரியோடு நூல் தொடங்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெள்ளமாய்ப் பாய்ந்தது. அவற்றில் பலவும் நடுத்தர வர்க்க அறிவாளர்களுக்கு உவப்பாயில்லை. ‘பச்சை மோதிரத்தின் மர்மம் அல்லது புருஷனை ஏமாற்றிய புஷ்பவல்லி’ போன்ற தலைப்புகளில் வந்த நாவல்களை அவர்கள் கடுமையாகச் சாடுகிறார்கள். எனில், இந்த எதிர்ப்புகளூடேதான் நாவல் என்ற வடிவம் நிலைபெற்றது என்று நிறுவுகிறார் சலபதி.
நடுத்தர வர்க்கத்தின் கலைவடிவமாக நாவல் உருப்பெற்றதன் உடனிகழ்வாக மெளன வாசிப்பு முறை தமிழ்ச் சமூகத்தில் தோன்றியது என்றும் துணிகிறார். இதற்காக அதற்கு முன்பு நிலவிய வாசிப்பு முறைகளையும் விரிவாக ஆய்கிறார். ஏட்டுச் சுவடிகளை வாய்விட்டுப் படிப்பதும், மனனம் செய்வதும் அவசியமாக இருந்ததையும், நாட்டுப் புறங்களில் அல்லியரசாணி மாலை, தேசிங்கு ராஜன் கதை போன்றவற்றைக் கூட்டாக வாசித்ததையும் விரிவாகப் பேசுகிறார். நூலெங்கும் பல தரவுகள் முன் வைக்கப்படுகின்றன. சலபதியின் தமிழ்நடை மெல்லிய தென்றலாக வாசகனை வருடிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலை வாசிப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக ஆய்வேடுகள் சாதாரண வாசகர்களின் பாவனைக்கானதல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
சலபதியின் ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ (1995), ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை, முதலான ஆய்வுக் கட்டுரைகள்’ (2000), ‘முச்சந்தி இலக்கியம்’ (2004), ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ (2016) போன்ற நூல்களும் மிகுந்த உழைப்பிற்குப் பின் உருவாகியிருப்பவை; ஆய்வு நெறிகளிலிருந்து வழுவாதவை; எளிய வாசகனின் கைக்கெட்டுபவை; ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கலக்காத தனித் தமிழ் நடையில் எழுதப்பட்டவை. நேரானவை. கட்டுச் செட்டானவை. கட்டுரைகளேயாயினும் புனைவு மொழி பயின்று வருபவை.
ஆங்கிலப் புலமை
சலபதி, EPW, The Hindu, Economic Times, Book Review, The Telegraph, The Wire முதலான ஆங்கில இதழ்களில் எழுதி வருகிறார். வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா தொகுத்து வெளியிட்ட Makers of Modern India (2012) என்ற நூலில் இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட 21 ஆளுமைகளின் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் இருவர் தமிழர்- ராஜாஜி, பெரியார். இந்த நூலுக்காகப் பெரியாரின் கட்டுரையை மொழிபெயர்த்தவர் சலபதி. அந்தக் கட்டுரை இந்தியா எங்குமுள்ள வாசகர்களிடையே பரந்த கவனிப்பைப் பெற்றதை குஹா குறிப்பிட்டிருக்கிறார் .
அச்சுப் பண்பாடு தமிழில் வேரூன்றிய வரலாற்றைச் சொல்கிறது The Province of the Book (2012) என்கிற சலபதியின் ஆங்கில நூல். சலபதியின் Tamil Characters: Personlities, Politics, Culture (2018), தமிழகத்தின் அரசியலையும் ஆளுமைகளையும் தமிழகத்திற்கு வெளியே அறிமுகம் செய்கிற நூல். தமிழகத்தைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதும் பலரும் அயல் நாட்டினர் அல்லது அயல் மாநிலத்தவர். ஆகவே தமிழகத்தை உள்ளிருந்து பார்க்கும் பார்வை அயல் வாசகர்களுக்கு வாய்ப்பதில்லை. சலபதியால் அந்தக் குறை நீங்கியது. இப்போது சலபதி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். இந்த நூல் அயல் வாசகர்களுக்கு பெரியாரைத் தமிழ்ப் பார்வையோடு அறிமுகம் செய்யும்.
மொழிபெயர்ப்பு
சலபதி மொழிபெயர்ப்பிலும் தடம் பதித்து வருபவர். பாரதிதாசனின் ‘அமைதி’ நாடகத்தையும், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சலபதியின் மொழிபெயர்ப்புகள் மூலப் பிரதியின் குரலை வெளிக்கொணர்வது. பாப்லோ நெரூடாவின் ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ (2005), ரொமிலா தாப்பரின் ‘வரலாறும் கருத்தியலும்’ (2008) ஆகிய நூல்களின் தலைப்புகள், முறையே மூலத்தின் Tonight I Can Write The Saddest Lines, The Past and Prejudice ஆகியவற்றின் வார்த்தைக்கு வார்த்தைக்கான மொழிபெயர்ப்பில்லை; ஆனால் மூலத்தின் ஆன்மாவை தக்க வைத்துக் கொண்டிருப்பவை.
இன்னும் பல பெருமைகள் சேரட்டும்!
சலபதியின் ஆய்வுப் பணி வ.உ.சி.யில் தொடங்கியது. புதுமைப்பித்தனுக்குச் செம்பதிப்புக் கண்டது. பாரதியின் தொலைந்துபோன எழுத்துகளைக் தேடிக் கண்டடைந்தது. அது உ.வே.சாமிநாதர் ஆய்வாகத் தொடர்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்தவர் உ.வே.சா. சலபதியின் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ (2018) எனும் நூல், உ.வே.சா.விற்கு வந்த சுமார் 700 கடிதங்களின் தொகுப்பாகும். இது முதல் தொகுதி. இனியும் ஐந்தாறு தொகுப்புகள் வரவுள்ளன. ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப்புலமை உலகை அறிந்து கொள்ளும் கருவியாக விளங்குகின்றன இக்கடிதங்கள்.
சலபதி பதிப்பித்தவர்களில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. நாற்பது வயதுக்குள் அவர்களைக் காலன் அள்ளிக்கொண்டு போனான்.
வாழ்ந்த காலத்தில் அவர்களது மேதைமையைத் தமிழ்ச்சமூகம் அறிந்திருக்கவில்லை. செல்லம்மாவும் கமலம்மாவும் அனுபவித்த துயரங்களைத் தமிழுலகம் அறியும். ஆனால் மீனாட்சியம்மா பட்ட துயரை தமிழ்ச் சமூகம் அறியாது. மீனாட்சியம்மா வ.உ.சி.யின் மனைவி. மீனாட்சியம்மாவின் ஆளுமையை “வ.உ.சி.யும் காந்தியும்- 347 ரூபாய் 12 அணா” என்கிற நூலில் அறியத் தருகிறார் சலபதி. வ.உ.சி.க்கும் அவருக்குரிய அறிந்தேற்பு கிடைக்கவில்லை. ஆனால் உ.வே.சா.விற்குத் தமிழன்னை கருணை காட்டினாள்.
சலபதியின் வார்த்தைகளில், ‘நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றிய உ.வே.சாமிநாதையருக்கு ஒரு தமிழறிஞர் நினைத்தும் பார்க்க முடியாத அனைத்துப் பெருமைகளும் அவர் வாழ்நாளிலேயே அடையும் அரிய பேறு வாய்த்தது.’ சலபதிக்கும் அப்படியான பேறு வாய்க்கட்டும்! இந்த இயல் விருது அதில் ஒரு படியாக அமையட்டும்! சலபதி இந்த விருதுக்கும் இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவர். அந்தப் பெருமையெல்லாம் தமிழன்னை அவருக்கு அள்ளித் தரட்டும்! அவருக்கு உரிய அறிந்தேற்பு கிடைக்கட்டும்.