நேர்காணல்: டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
சந்திப்பு: ஆயிஷா இரா. நடராசன், அ. வெண்ணிலா
கடந்த 60 ஆண்டு காலமாக தமிழின் கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் ஆளுமையின் முழுமையை அடைந்தவர் கலைஞர் மு. கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கும் தமிழ்மொழி, கலை, இலக்கிய வடிவங்களில் முதிர்ச்சியோடு முதுமையற்ற முயற்சிகளில் அயராது பங்கேற்கும் இவர், தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சார பண்பாட்டு மீட்புக்கும் முக்கிய பங்காற்றி வருபவர். தமிழகத்தின் முதலமைச்சராக நாளொன்றுக்கு சில மணி நேரமே உறங்கி அயராது உழைக்கும் இவர், தனது சுறுசுறுப்பான நாளுக்கு இடையே நமது வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி தன் மௌனத்தை கலைத்தார். இந்த உரையாடலின் மூலம் இதுவரை வெளிவராத கலைஞரின் புதிய பக்கங்கள் வெளிவருவதை இதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சங்க இலக்கியங்களில் தங்களை மிகவும் கவர்ந்த பகுதி எது? ஏன்?
தமிழ் இலக்கியம் என்பது அதிலும் குறிப்பாக சங்க இலக்கியம் என்பது மிகப் பெரிய, ஆழமான கடல். அந்தக் கடலில் எந்தப் பகுதி என்னைக் கவர்ந்தது என்பதை, ஒரு கேள்விக்கு நான் பதிலாக அளிக்க முடியுமா? சங்க இலக்கியங்கள் முழுமையுமே என்னைக் கவர்ந்தவைதான்!

உங்களின் எதிர்கால இலக்கியக் குறிக்கோள் என்ன?
ஆட்சியிலே தற்போது இருக்கின்ற காரணத்தினால் எதிர்கால இலக்கியக் குறிக்கோளைப் பற்றி எண்ணிட போதுமான நேரமற்ற நிலையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் ஏராளமாக இலக்கியப் படைப்புகளை உருவாக்கிட வேண்டுமென்ற தாகம் மட்டும் தணிந்திடாமல் உள்ளது.
உங்களின் தலைசிறந்த படைப்பாக எதை நினைக்கிறீர்கள்?
ஒரு தாயிடம் சென்று உங்களின் பிள்ளைகளில் எந்தப் பிள்ளையைச் சிறந்த பிள்ளையாக கருதுகிறீர்கள் என்று கேட்டால் அந்தத் தாயால் என்ன சொல்ல முடியும்? “தன் மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய்” – இந்தக் குறள் வாசகம் நினைவுக்கு வருகிறது அல்லவா? எனினும் “காலப்பேழையும், கவிதைச் சாவியும்” என்ற நான் எழுதிய நூல்தான் இப்போதெல்லாம் நான் அடிக்கடி கொஞ்சி மகிழ்கின்ற குழந்தையாகும்.
நவீன இலக்கிய வாசிப்பிற்கும் உங்களை உட்படுத்த முடிகிறதா? புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் தொடங்கி, இன்று வரை உள்ள நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் உங்களைத் தொட்டுள்ளனவா?
படிக்கத் தூண்டும் ஆவலில் நான் எல்லாவற்றையுமே படிக்கிறேன். சங்க இலக்கியங்கள் என்னை எப்படி கவர்ந்துள்ளனவோ, அது போலவே நவீன எழுத் தாளர்களின் பல படைப்புகள் எனது நெஞ்சத்தைத் தொட்டுள்ளன என்பதும் உண்மை.
இலக்கியத்திற்கும் வாரிசு உங்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்கிறதா?
என் குடும்பம் என்று தனியாக எதுவும் இல்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். தமிழகமே என் குடும்பம்தான்! அந்தப் பெரும் குடும்பத்தில் எனக்கு இலக்கிய வாரிசுகள் ஏராளம்.
நவீன விஞ்ஞானமும், கலையும் ஆரம்பப்பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை. தங்கள் காலத்தில் இந்தக் கோரிக்கை கவனம் பெறுமா?
உங்களின் இந்தக் கோரிக்கை கழக அரசின் கவனத்தில் இடம் பெறும்.
இலக்கியம் இளைப்பாறுதலுக்காக எனக் கூறுகிறீர்கள். இலக்கியம் வாழ்வைப் புரிந்துகொள்ள, வாழ்வின் சாரத்தை உணர, ஆதாரக் கருவியல்லவா?
வாழ்வைப் புரிந்துகொள்ள இலக்கியம் ஆதாரக் கருவிதான். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எனக்குள்ள பல்வேறு பொறுப்புகளுக்கிடையே இலக்கியத்திற்காக நான் செலவிடுகின்ற நேரத்தைப் பற்றிக் கூறும்போது, அந்த நேரத்தினை இளைப்பாறுதலுக்காகச் செலவிடுகின்ற நேரம் என்ற பொருளில்தான் கூறினேன். இளைப்பாறுதலும் வாழ்வின் ஓர் அம்சம்தானே!
சங்க இலக்கியம் குறித்த உயர் ஆய்வுகள் இன்று தேக்கமடைந்துள்ளன. தமிழறிஞர் என்ற முறையில், முதல்வர் என்ற முறையில் சங்க இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்த என்ன திட்டங்கள் உங்களிடம் உள்ளன?
சங்க இலக்கியம் குறித்த உயர் ஆய்வுகள் தற்போது தேக்கமடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்காங்கு பல பேராசிரியர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் ஊக்கமளிக்கின்ற வகையில் அரசின் சார்பில் விருதுகள், பரிசுகள் போன்றவற்றை அளித்து மேலும் உற்சாகப்படுத்துவதைப் பற்றி அரசு சிந்தித்துச் செயல்படும்.
தமிழ் செம்மொழி ஆன பிறகு பல்கலைக்கழகங்களில் மாற்றம் வரும் என்றீர்கள். என்ன மாற்றம் வந்துள்ளது?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நூற்றாண்டு காலக் கனவு. அதன் முதற்படியாக தற்போது மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ளது. இரண்டாவது வெற்றியாக மத்திய அரசின் சார்பில் சென்னையில் செம்மொழிக்கென தனியே மையம் ஒன்றினை நிறுவிட வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு கோரிக்கையாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பல்வேறு திட்டக் குறிப்புகளை மத்திய அரசிடம் நாம் முன்வைத்துள்ளோம். நான் டெல்லி செல்லும்போதெல்லாம் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களிடம் இது குறித்து தொடர்ந்து நினைவூட்டி வருகிறேன். கடிதங்கள் வாயிலாகவும் கவனமூட்டி வருகிறேன்.
எண்பேராயம், ஐம்பெரும்குழு போன்ற குழுக்களைத் தமிழ் வளர்ச்சிக்காக நியமித்தீர்கள். இந்தக் குழுக்கள் என்ன விதமாகச் செயல்படுகின்றன?
எண்பேராயம், ஐம்பெரும்குழு போன்ற குழுக்கள் தமிழக அரசினால் முன்மொழியப்பட்டு மத்திய அரசும் கொள்கை அளவில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. சென்னையில் தமிழ்ச் செம்மொழி மையம் நிறுவப்பட்டவுடன் இந்தக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படும்.
கியூபா போன்ற நாடுகளில் எழுத்தாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது.
தமிழக அரசுக்கு இதுபோன்ற திட்டங்கள் உள்ளனவா?
இந்தக் கேள்வி எனக்கு வருத்தமாக உள்ளது. கியூபா நாட்டில் அரசு செய்கின்ற செயல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்போது தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு என்னென்ன செய்கிறது என்பது தெரியவில்லையே என்று எனக்கொரு வருத்தம். இருந்தாலும், தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு என்ன செய்கிறது என்பதை மக்களுக்கு தங்கள் இதழ் மூலம் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நலிந்த தமிழறிஞர்களும், எழுத்தாளர்களுமாக உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசிலே நடைமுறையிலே இருந்து வருகிறது. அதுபோலவே பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எழுத் தாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களை ஒவ்வொரு துறை சார்பிலும் தேர்ந்தெடுத்து நிதி உதவி அளித்து வருகிறோம்.
எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், நூல்களை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அரசின் சார்பில் பல தலைவர்கள் பெயரால் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் போது, பெரும்பாலும் அவை எழுத்தாளர்களுக்குத்தான் அளிக்கப்படுகின்றன. அரசின் சார்பில் மட்டுமல்ல, என்னுடைய சொந்தப் பொறுப்பில் எழுத்தாளர்கள், பதிப்பகச் சங்கத்தினருக்கு கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியளித்து, அதனை வங்கியில் இருப்பு வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன். இந்த ஆண்டிற்கான அந்த நிகழ்ச்சிகூட 8-1-2008இல் நடைபெறுகிறது.
40 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பகுத்தறிவுப் பாதையில் முழுமையாகச் சென்றிருக்கிறதா? மூட நம்பிக்கைகள், மூலைக்கு மூலை அதிகரித்து வருகின்றனவே?
ஆட்சி வேறு – பகுத்தறிவு பாதை என்பது வேறு. பகுத்தறிவுப் பாதையில் நடப்பவர்கள் ஆட்சியிலே இருக்கின்ற காரணத்தால் மதச்சார்பற்ற ஒரு ஆட்சியில் தங்களது சொந்தக் கொள்கைகளை யாரும் நுழைத்துவிடக் கூடாது. மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டுமென் றால், அதனைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே மன மாற்றம் செய்துதான் செய்ய முடியுமே தவிர, அரசின் மூலமாக ஆணையிட்டுச் செய்திட இயலாது. எங்களைப் பொறுத்தவரையில் மதம், கடவுள், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளை ஆட்சியின் மூலம் சாதிப்பதைவிட பிரச்சாரத்தின் மூலம் செய்வதுதான் சரி என்றும், அது தான் நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறோம்.
திராவிட இயக்கங்களுக்கு இன்று பெரியார் என்னவாக இருக்கிறார்?
திராவிட இயக்கங்களுக்குத் தந்தை பெரியார் ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எல்லாமாக விளங்குகிறார். திராவிட இயக்கம் என்று பெயர் அளவில் சொல்லிக்கொண்டிருக்கின்ற இயக்கங்களுக்குப் பெரியார் பெயர் அளவில் இருக்கிறார். அதாவது ஊறுகாய் போல உபயோகப்படுத்தப்படுகிறார்.
திரைப்படத் துறை மட்டுமே பெருமளவுக்கு அரசியலுக்கான நுழைவுப் பாதையாக தமிழகத்தில் இருப்பதற்குக் காரணமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒருசிலரை மட்டுமே மனதிலே கொண்டு இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.
அரசியலிலே இருந்தவர்களில் ஒரு சிலர் திரைப்படத் துறையிலும் ஈடுபட்டு, பெரும் பதவிகளிலே அமர்ந்த காரணத்தினால் அந்தத் துறை நுழைவுப் பாதை என்பதைப் போலத் தோன்றலாம். ஆனால் திரைப்படத் துறையைச் சாராத வர்கள்தான் பெரும்பாலோர் அரசியலில் ஈடுபட்டிருக்கின் றார்கள். திரைப்படத் துறையின் பால் மக்களுக்குள்ள கவர்ச்சியின் காரணமாக அந்தத் துறையிலே உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடும்போது தொடக்கத்தில் ஓரளவிற்கு மக்களை ஈர்க்க முடிகிறது.
பல்துறை மன்னராக சுழன்றோடிக்கொண்டிருக்கும் பொழுதிலும் நீங்கள் தனிமையை உணரும் கணங்கள் உள்ள னவா? எப்படி அத்தனிமைத் துயரை வென்றெடுக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரையில் என்னோடு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். நான் தனிமையில் இருக்கும் நேரம் மிக மிகக் குறைவு. அப்போதும்கூட எனக்குத் துணையாகப் புத்தகங்களும், எழுதுகோலும் இருக்கும். எனவே தனிமைத் துயரை வென்றெடுக்க வேண்டிய நிலையெல்லாம் என் வாழ்வில் ஏற்பட்டதில்லை.

செங்கோல், எழுதுகோல் இரண்டையும் முன்வைத்தால் உங்கள் மனம் முதலில் எதை நாடும்?
செங்கோலைத்தான் எதிரே வைக்க வேண்டியிருக்கும்! எழுதுகோல் எப்போதும் என் கையிலேயே இருப்பதாயிற்றே?
ஒரு எழுத்தாளர் முதல்வராய் இருக்கும் பெருமை எங்களுக்கு இருக்கிறது. தங்கள் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவம் என்ன?
எழுத்தாளர்களை அலட்சியப்படுத்தாத ஒரு முதல் அமைச்சர் ஆண்டுகொண்டிருக்கிறார் என்பதே எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவம்தானே?
(2009 ஜனவரி மாதம் புத்தகம் பேசுது சிறப்பிதழுக்கு கலைஞர் அளித்த நேர்காணலின் மறுபிரசுரம்)
கலைஞரின் படைப்புகள்
நாடகங்கள்
- அனார்கலி, 1957
- உதயசூரியன், 1959
- உன்னைத்தான் தம்பி
- இளைஞன் குரல், 1952 (31.8.52 ஆம் நாள் தேனி வழக்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)
- ஒரே முத்தம்
- காகிதப்பூ, 1966
- சாக்ரடீஸ் 1957
- சாம்ராட் அசோகன்
- சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம்
- சேரன் செங்குட்டுவன், 1978
- திருவாளர் தேசியம்பிள்ளை
- தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.
- நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது)
- நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
- நானே அறிவாளி, 1971
- பரதயாணம் 1978
- பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
- பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர்.
- பிரேத விசாரணை, 13-4-1947ஆம் நாள் திருவாரூரில் திராவிடர் கழக நிதியளிப்பு விழாவில் அரங்கேற்றப்பட்டது.
- புனித இராஜ்யம் 1979
- மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்)
- மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
- மந்திரிகுமாரி
- வாழமுடியாதவர்கள் (27-7-1951 இரவு 10;30 மணிக்கு, காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்)
வரலாற்றுப் புனைவுகள் - ரோமாபுரி பாண்டியன் 1974
- தென்பாண்டிச் சிங்கம் 1983
- பாயும்புலி பண்டாரக வன்னியன் 1991
- பொன்னர் சங்கர் 1988
புதினங்கள் - அரும்பு 1978
- இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி
- ஒரே ரத்தம், 1980
- சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
- சுருளிமலை
- நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்)
- புதையல், 1975
- பெரிய இடத்துப்பெண் (1948 செப்)
- வான்கோழி, 1978
- வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை.
சிறுகதைத் தொகுதிகள் - ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979
- கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது)
- கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977, 1982, 1991
- கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர்.
- சங்கிலிச்சாமியார், 1945
- தப்பிவிட்டார்கள் 1952
- தாய்மை 1956
- தேனலைகள் 1958
- நளாயினி (1956) திராவிடப்பண்ணை
- பழக்கூடை 1979
- பதினாறு கதையினிலே
- பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)
- மு.க.வின் சிறுகதைகள், முத்துவேல் பதிப்பகம், கோபாலபுரம், சென்னை -6.
- முடியாத தொடர்கதை 1982
கவிதைத் தொகுதிகள் - அண்ணா கவியரங்கம் 1968
- கலைஞரின் கவிதைகள் 1977
- கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
- கவியரங்கில் கலைஞர் 1971
- கவிதையல்ல 1945
- கவிதைமழை – மூன்று தொகுதிகள் 2004
- காலப்பேழையும் கவிதைச்சாவியும்
- முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு)
- வாழ்வெனும் பாதையில் – கவியரங்கக் கவிதைகள்
உரைநூல்கள் - திருக்குறள் உரை 1996
- சங்கத் தமிழ் 1987
- தொல்காப்பியப் பூங்கா, 2003
இலக்கிய மறுபடைப்புகள் - குறளோவியம் 1968, 1985
- சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம் 1967
- தாய்
- பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)
தன்வரலாறு
இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
பேட்டிகள் - கையில் அள்ளிய கடல் 1998
சொற்பொழிவுகள் - தலைமையுரை, பாரிநிலையம்
- போர்முரசு
- மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
- பெரியார் பிறவாதிருந்தால்
கட்டுரைகள் - அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம்,
- அல்லிதர்பார், 1953, பாரி நிலையம்,
- ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி.
- இந்தியாவில் ஒரு தீவு 1978
- இளைய சமுதாயம் எழுகவே
- இருளும் ஒளியும்
- இலங்கைத் தமிழா, இது கேள்! 1981
- இனமுழக்கம்
- உணர்ச்சிமாலை 1951
- உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
- உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
- கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை
- களத்தில் கருணாநிதி 1952
- சரித்திரத் திருப்பம்
- சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை
- மயிலிறகு 1993
- மலரும் நினைவுகள் 1996
- முத்துக்குவியல்
- பூந்தோட்டம், திராவிடப்பண்ணை
- பெருமூச்சு 1952
- பேசுங்கலை வளர்ப்போம் 1981
- பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு)
- தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
- திராவிடசம்பத்து 1951
- துடிக்கும் இளமை
- நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
- யாரால்? யாரால்? யாரால்? 1981
- விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி.
- பேசும்கலை வளர்ப்போம்
கதை, வசனம் - பராசக்தி மலர், 1953
- மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை
- நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
- திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
பயணக்கட்டுரைகள் - இனியவை இருபது
கடிதங்கள் - கலைஞர் கடிதம் தொகுதி 12 தொகுதிகள்
