ஆ. தினேஷ்குமார்
சென்னை பதிப்புலக வரலாற்றில் தனித்துவமிக்கவராகத் தனக்கென முயலா பிறர்க்கென உழைத்து வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர். எண்பத்தேழு ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த அவர், ஆற்றிய தமிழ்ப் பங்களிப்புகள் நிலைபேறுடையன. தான் வாழ்ந்த வரலாற்றையும் தன் சமகால வரலாற்றையும் ஒருங்கே பொருத்தி அவர் இச்சமூகத்திற்கு உழைத்துச் சென்ற வரலாற்றுத் தரவுகள் தமிழ் ஆய்வுலகில் தனித்துவம் வாய்ந்தவைகளாய்த் திகழ்கின்றன.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து தமிழ் மீது எண்ணிலடங்காப் பற்றுக் கொண்ட உ.வே.சா-வின் உழைப்பிற்காகவே அவர் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர்.
உ.வே.சா வாழ்ந்த காலத்திலேயே தன் வரலாற்றுப் பதிவுகளைத் தொடராக ஆனந்த விகடனில் எழுதினார். பின்னாளில் அப்பதிவுகளே உ.வே.சா-வின் என் சரித்திரம் நூலாக வெளிவந்தது. தமிழ்ப் புலமை மரபில் உ.வே.சா வாழ்ந்த காலகட்டத்தில் உலகமெங்கும் இருக்கக்கூடிய அறிஞர்கள் உ.வே.சா-வுடன் தொடர்பில் இருந்தனர். இதனால் உலகத் தமிழர் வரலாறு, தமிழ்ச் சமூக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ப் பதிப்பு வரலாறு, என எத்துறையில் ஆய்வு மேற்கொண்டாலும் உ.வே.சா – வின் என் சரித்திரம் நூல் வரலாற்றுத் தரவுகளை தன்னகத்தே கொண்டு துணை புரிகிறது.
உ.வே.சா தன் வாழ்வின் அனைத்துச் செயல்களையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். என் சரித்திரம், நினைவு மஞ்சரி, நான் கண்டதும் கேட்டதும், நல்லுரைக் கோவை என அவர் எழுதிய இந்த நூல்களில் உ.வே.சா – வின் வாழ்க்கைச் செய்திகள் மட்டுமல்லாது அவருடன் தொடர்பிலிருந்த பெரும் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அவர் வாழ்ந்த ஊர்களில் வாழ்ந்த மக்கள் அனைவரைப் பற்றியும் எழுதியுள்ளார்.
உ.வே.சா.வின் என் சரித்திரம் அவர் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவதோடு தமிழ்ச் சமூகத்தின் புலமை மரபையும் கல்விப் புலச் சூழலையும் அவர் காலத்திய மக்கள் வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றது. உ.வே.சாமிநாதர், ஆரம்ப காலத் தமிழ்க் கல்வி திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தொடங்கி நவீன மயமாக்கப்பட்ட பல்கலைக்கழக கல்வி அமைப்பு வரை கல்விப்புலத்தில் செயலாற்றியுள்ளார். அவர்தம் இளமைக்காலக் கல்வி தொழில்முறை ஆசிரியர்களிடம் கற்றது அல்ல.
அவரின் தந்தையாரின் நண்பர்களுடனான தொடர்பாலும் அவரின் கூர்மையான அறிவுத்திறத்தால் விளைந்த தமிழறிஞர்களின் தொடர்பாலுமே அவரது தமிழ்க் கல்வி விரிவடைந்தது. அவரது இளமைக்காலக் கல்வி பெரம்பலூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இருந்திருப்பதை ஆவணப்பூர்வமாக உ.வே.சா.வும் பெரம்பலூரும் எனும் தலைப்பில் ஜெயபால் ரத்தினம் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் பெரம்பலூருக்கும் உ.வே.சா.வுக்குமான நெஞ்சார்ந்த உறவினை குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரச் செய்கிறது.
உ.வே.சா.வின் என் சரித்திரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள குன்னம், கார்குடி, செங்குனம், காரை, வெண்மணி, களத்தூர், மறவநத்தம், இரஞ்சன்குடி, இலந்தக்குழி, அரும்பாவூர், துறை மங்கலம், வெங்கனூர், ஆகிய அனைத்து ஊர்களும் பெரம்பலூர் மாவட்டத்தில் அடங்கிய ஊர்கள். உ.வே.சா.வின் இளமைக்காலம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குன்னம் பகுதியில் தொடங்கிய வரலாற்றை என் சரித்திரத்தில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளாரே அன்றி எந்த வயதில் குன்னம் பகுதிக்குச் சென்றார் என்பதைக் குறிப்பிடவில்லை.
ஆனால் அரியலூர் ஊராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் – மாணவர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் உரையாற்றிய போது தனது ஏழாம் பிராயம் முதல் பதினோராம் பிராயம் வரை அரியலூரில் இருந்து வரும் பேறு கிடைத்தது என நல்லூரைக் கோவை நூலில் உ.வே.சா குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி தனது 11 -ஆம் வயதில் தான் குன்னம் கிராமத்திற்கு வந்துச் சேர்ந்தார் என்பதை ஜெயபால் ரத்தினம் கண்டறிந்து இந்நூலில் எழுதியுள்ளார்.
உ.வே.சா.வின் தந்தை வேங்கட சுப்பையர் வருவாய் ஈட்டுவதற்கு கடினமுற்ற காலகட்டத்தில் பேருதவிப் புரிந்தவர்கள் பெரம்பலூர் வாழ் மக்கள். அம்மக்கள் சங்க காலந்தொட்டு பாணர்களைக் காக்கும் மரபினை உடையவர்கள் தமிழர்கள் என்பதற்கு இலக்கணமாகவும் திகழ்ந்துள்ளனர். கதைச் சொல்லும் பாங்கில் ஆங்கிலக் கவிஞர் விட்மன் நான் பக்கங்களிலிருந்து கைகளுக்கு தாவுகிறேன் என்று குறிப்பிடுவதை இந்நூல் மெய்ப்பிக்கிறது. வரலாறு என்பது வற்றாத ஆறு சருகுகளும் மிதந்து வரும் சந்தனங்கங்களும் சேர்ந்து வரும் என்பதனை நிறை-குறைகளோடு அத்துணையையும் ஜெயபால் ரத்தினம் விவரித்திருக்கிறார்.
சடகோப ஐய்யங்காரிடம் பாடம் கேட்கத் தொடங்கி குன்னம் சிதம்பரம் பிள்ளை, கதிரைவேற் பிள்ளை, கஸ்தூரி ஐயங்கார்,தஞ்சை சீனிவாசனையங்கார்,அமிர்த கவிராயர்,விருத்தாசல ரெட்டியார், பெருமாளையர் ஆகியோர் உ.வே.சா.வின் தமிழ் அறிவுப் பரப்பை பரவலாக்கியவர்கள் என்பதை ஜெயபால் ரத்தினம் இந்நூலில் எடுத்தியம்பும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. பெரம்பலூரில் உ.வே.சா.வும் அவரது குடும்பத்தினரும் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். உ.வே.சா. பெரம்பலூர் பகுதிக்கு வருவதற்கு முன் நடந்த வாழ்க்கைச் செய்திகளை குன்னம் வருவதற்கு முன் என எழுதியிருப்பது தொடர் வாசிப்புக்கு பயன் அளிக்கிறது.
19- 02 – 1855 – ஆம் நாள் உ.வே.சா. தன் தாயாரின் சொந்த ஊரான சூரிய மூலையில் பிறந்தார். உ.வே.சா.வின் தந்தை அரியலூர் ஜமீன்தார் அரண்மனையில் இசைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். வேங்கட சுப்பையருக்கு அரியலூர் ஜமீன் நிர்வாகத்திற்கு உட்பட்ட இருந்த இலந்தங்குழி என்னும் கிராமத்தில் பத்துக்காணி நிலம் இலவசமாக ஜமீன்தாரால் பரிசளிக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக வந்த வருவாயில் வாழ்ந்துக் கொண்டிருந்த உ.வே.சா.குடும்பம் அவரது பாட்டனாரின் இறுதிக்கால விருப்பத்தின் பேரில் உ.வே.சா.வின் சொந்த ஊரான உத்தமதானபுரத்திற்கு குடிபெயர்ந்து சிலகாலம் வசித்தனர்.
உ.வே.சா.வின் பாட்டனார் மற்றும் பாட்டியின் இறப்பிற்கு பிறகு மீண்டும் உ.வே.சா.குடும்பத்தினர் அரியலூருக்கு குடிபெயர்ந்தனர். உத்தமதானப்புரத்தில் ஆரம்பக் காலத்தில் தெலுங்கு மொழியும் இசையும் உ.வே.சா. கற்றுக்கொள்ள அவரது தந்தை வேங்கட சுப்பையர் வழி செய்தாலும் உ.வே.சா.இசையை மட்டும் கற்றுக்கொண்டு தெலுங்கு மொழி மீது அதிக நாட்டம் உடையவராக இல்லை.
உ.வே.சா. அரியலூருக்கு குடிபெயர்ந்த போது அவரின் தமிழ் ஆர்வத்தைக் கண்டு சடகோப ஐய்யங்காரிடம் கல்வி பயில சேர்ப்புவித்தார் உ.வே.சா.வின் தந்தை. தமிழ்த் தாத்தாவாக ஒளிர்ந்த உ.வே.சா.வுக்கு தமிழ்க் கல்வியை விதைத்தவர் சடகோப ஐய்யங்கார் என்பதை நெகிழ்ச்சியுடன் ஜெயபால் ரத்தினம் என் சரித்திரத்திலிருந்து மேற்கோள்காட்டி எழுதியுள்ளார். பின்னர் அரியலூர் ஜமீன் நலிவுற உ.வே.சா. தந்தையின் பணிவாய்ப்பு பறிபோய் அவரின் குடும்பம் பெரும் இன்னலுக்கு ஆளாகியது. வேங்கட சுப்பையருக்கு நயன்தூக்கி நன்மை செய்தார் குன்னம் சிதம்பரம் பிள்ளை.
உ.வே.சா.குன்னம் பகுதியில் வாழ்ந்த செய்திகளை நெகிழ்ச்சியுடன் என் சரித்திரத்தில் பதிவு செய்திருப்பதை எடுத்தியம்பி நூலாசிரியர் குறிப்பிடுவது வாசிப்போரை குன்னம் பகுதிக்கே அழைத்துச் செல்கிறது.
குன்னம் பகுதி மக்கள் உ.வே.சா.வின் குடும்பத்தை ஆரத் தழுவி செய்த உதவிகளையும் உ.வே.சா. அம்மக்களுடன் கொண்டிருந்த சான்றாண்மையையும் இந்நூல் ஒளிப்பாய்ச்சி எடுத்தியம்புகிறது. சிதம்பரம் பிள்ளை தமிழ் இலக்கியங்கள் கற்றறிந்தவர் ஆதலால் உ.வே.சா.வுக்கு அவரே தமிழ்ப் பாடம் சொல்லித் தந்தார்.சிதம்பரம் பிள்ளையிடம் கல்வி கற்ற காலத்தில் தான் தமிழறிஞர்களின் தொடர்பு உ.வே.சா.வுக்கு ஏற்பட்டு அதன் மூலம் உ.வே.சா.பெற்ற நிறை – குறைகளை இந்நூல் விவரித்துக் காட்டுகிறது.ஆடம்பரப் புலவரும் சிதம்பரம் பிள்ளையும் எனும் தலைப்பில் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளச் செய்தி சுவாரஸ்யமானது.
குன்னம் பகுதி மக்கள் தங்களிடம் நாடி வரக்கூடிய புலவர்களின் அறிவுத் திறத்தை அங்கீகரித்து அவர்களுக்கு வாரி வழங்கி அனுப்பி வைக்கும் மரபினர். ஆனால் சொற்குற்றம் பொருட்குற்றத்தோடு செய்யுள் ஒன்றைக் கொண்டு வந்து குன்னம் பகுதி மக்களை அறம் வைத்து பாடி விடுவேன் என மிரட்டிப் பரிசல் பெற வரும் ஆடம்பரப் புலவர் ஒருவரை சிதம்பரம் பிள்ளை கையாண்ட விதத்தினை உ.வே.சா.எழுதியிருப்பதிலிருந்து தமிழுக்கு இழுக்கு உண்டாயின் அதை எதிர்க்கவும் துணிந்தவர்கள் என்பதை இந்நூல் எடுத்தியம்பும் பாங்கு நகைச்சுவையானது.
கதிரைவேற் பிள்ளைத் தொடர்பில் உ.வே.சா.கல்வி பயின்றதுத் தொடங்கி கார்குடியில் கஸ்தூரி ஐயங்காரிடம் ஆறுமாத காலம் தங்கி கல்வி கற்றது வரை வரலாற்றுப் பகுதிகளை பெரம்பலூர் மக்களுடன் இணைந்து இந்நூல் எடுத்தியம்புகிறது. வெண்மணியில் தங்கி உ.வே.சா.வின் தந்தை ஆற்றிய உபந்நியாசத்தில் நடந்த நிகழ்வுகளையும் தெளிவுற இந்நூல் பதிவு செய்துள்ளது.பெரும்புலியூர் தலைமையாசிரியர் தொடர்பில் உ.வே.சா.திருக்குறள் நூல் தருவதாகச் சொல்லி அந்நூலினை உ.வே.சா. பெற்றது குறித்தும் நூலாசிரியர் நெகிழ்வுற எழுதியுள்ளார்.
களத்தூரில் உ.வே.சா.வும் அவருடையத் தந்தையும் ஆற்றிய உரைகளையும் இந்நூல் என் சரித்திரச் செய்திகளுடன் விளக்கியாய்ந்துள்ளது. மாளாபுரத்தில்
உ.வே.சா.வுக்கு மதுராம்பிகை என்ற பெண்ணுடன் 16.06.1868 இல் திருமணம் நடந்ததையும் இந்நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. திருமணம் நிறைவுற்றப்பின் சிலகாலம் உத்தமதானப்புரத்தில் இருந்த உ.வே.சா. அருகிலிருந்த பாபநாசத்தில் இராகவையங்கார் என்பவரிடம் பாடம் கேட்டுள்ளார். உ.வே.சா.வின் வாழ்வின் மிக முக்கியமான நபர்களான தியாகராச செட்டியார் பெயரையும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் பெயரையும் முதன்முதலில் உ.வே.சா.வுக்கு அறிமுகம் செய்தவர் இராகவையங்கார் தான். அன்று முதல் தியாகராச செட்டியாரிடம் பாடம் கேட்க வேண்டும் என்ற ஆவல்உ.வே.சா.வுக்கு தோன்றிற்று.
ஆனால் உ.வே.சா. தியாகராச செட்டியாரிடம் பாடங் கேட்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லையென்றாலும் அவரின் உற்றத் தோழராக, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் ஒரு சாலை மாணக்கராக, இச்சமூகத்தில் ஆற்றிய பங்களிப்புகள் நிலைபேறுடையன. தியாகராச செட்டியார் பின்னாளில் தான் பணிச் செய்த குடந்தைக் கல்லூரி தமிழாசிரியர் பணியினை தன் ஓய்வுக்கு பின் உ.வே.சா.வுக்கு ஏற்படுத்தி கொடுத்தார் என்பது நெகிழ்ச்சிற்குரியது.
அரும்பாவூர் நாட்டார் குன்னம் வந்திருந்த போது வேங்கட சுப்பையரிடம் உ.வே.சா.வை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்க்கச் சொல்லிச் சென்ற செய்தியையும் இந்நூல் குறிப்பிட்டுக் காட்டுகிறது.பின்னாளில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தலை மாணக்கராக உ.வே.சா.மாறினார் என்ற வரலாறு நெகிழ்விற்குரியது.
குன்னத்தில் உ.வே.சா. வசித்த வீட்டின் உரிமையாளரான இராமையங்கார் செங்குனம் கிராமத்தில் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்பவரிடம் சென்றால் உ.வே.சா.வுக்கு தமிழ்ப் பாடம் கற்பிப்பத்தோடு குடும்பத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்தளிப்பார் எனச் சொல்ல உ.வே.சா.குடும்பம் செங்குனத்திற்கு குடிபெயர்ந்தனர். விருத்தாசல ரெட்டியார் ஆசிரியரோ பாடம் சொல்லித் தருபவரோ அல்லர்.

குன்னம் இராமையங்கார், களத்தூர் இராமையங்கார், கஸ்தூரி ஐயங்கார், மற்றும் சாமி ஐயங்கார் ஆகிய நண்பர்கள் உடன் சென்றமையால் பாடம் எடுக்க ஒப்புக்கொண்டார். விருத்தாசல ரெட்டியார் உ.வே.சா.வுக்கு விருத்தாசல ரெட்டியாரின் பாடம் சொல்லும் முறைமையில் தானே தமிழ் இலக்கியங்களை புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்ததாக எழுதியதை இந்நூல் குறிப்பிடுகிறது.
விருத்தாசல ரெட்டியாரின் நண்பரும் நல்ல தமிழறிஞருமான பெருமாளையர் என்பவர் உ.வே.சா.வுக்கு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றைச் சொல்லித்தந்ததோடு சித்திரக் கவி இயற்றும் சொல்லித் தந்துள்ளார். விருத்தாசல செட்டியாரின் இல்லம் தமிழறிஞர்களின் ஒன்றுகூடல் நிகழும் இடம் ஆதலால் உ.வே.சா.வுக்கு எண்ணற்ற தமிழறிஞர்களின் தொடர்பு உருவாயிற்று.
வெங்கனூர் கோவில் குறித்து உ.வே.சா எழுதிய கட்டுரைக் குறித்தான தெளிவான வரலாற்றை இந்நூல் எடுத்தியம்புகிறது. விருத்தாசலம் ரெட்டியாரின் தூண்டுதலின் பேரில் உ.வே.சா.மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்த செய்திகளை உ.வே.சா.வின் என் சரித்திரம் வழிநின்று இந்நூல் காட்டுகிறது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவராகச் சேர்ந்த உ.வே.சா. திருவாவடுதுறை ஆதீனத்தில் சுப்ரமணிய தேசிகரிடமும் பாடங்கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து விட்டு பிறகு சிறிது காலம் தந்தையின் கடனை அடைப்பதற்காக மீண்டும் தாங்கள் பழகிய செங்குன்றம் முதலான இடங்களுக்குச் சென்று புராண இதிகாச கதைப் பொழிவுகளை நடத்த திட்டமிட்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ஆசிரமத்திலிருந்து வந்து 1871 மார்ச் வரை செங்குனத்தில் இருந்துள்ளார்.
விருத்தாசல ரெட்டியாரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது ரெட்டயாரின் மகனார் நல்லப்ப ரெட்டியார் தங்களது குலதெய்வமான அருளுறை நீலியம்மன் தகுதிச் செய்யுள்கள் இயற்றி பாடும்படி வேண்டினார். உடனடியாக உ.வே.சா.அருளுரை நீலியம்மன் இரட்டை மணிமாலை என்ற தலைப்பில் இருந்து கண்ணிகள் கொண்ட தகுதிச் செய்யுட்கள் எழுதித் தந்துள்ளார். இதுவே உ.வே.சா.எழுதிய முதல் நூல் என அறியப்படுகிறது.
ஜெயபால் ரத்தினம் எழுதியுள்ள இந்நூலில் அருளுரை நீலியம்மன் இரட்டை மணிமாலை செய்யுள்கள் முழுமையையும் முதன்முதலாக இந்நூலில் இணைத்து பதிப்பித்துள்ளார் என்பது பெரும் பாராட்டிற்குரியதாகும். காரை எனும் ஊரில் உ.வே.சா. திருவிளையாடற்புராணம் கதைப் பொழிவு நிகழ்த்தியச் செய்திகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
குன்னத்தில் தங்கியிருந்தபோது உ.வே.சா களத்தூரில் முகமதிய அறிஞர்களுடன் தொடர்பில் இருந்ததையும் இந்நூல் காட்டுகிறது. திருவிளையாடற் சொற்பொழிவு நிறைவுடன் உ.வே.சா.வின் பெரம்பலூர் வாழ்க்கை நிறைவு பெறுகிறது. பிறகு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து உ.வே.சா. வாழ்வின் அடுத்த கட்ட பயணம் தொடர்கிறது.
உ.வே.சா.வுக்கும் பெரம்பலூருக்குமானத் தொடர்பினை இந்நூல் சுவைபட எடுத்துரைக்கிறது.இனவரைவியல் குறித்தான ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உ.வே.சா.வுக்கும் பெரம்பலூருக்குமான உறவினைப் பறைசாற்றும் இந்நூல் கவனம் பெறுகின்றது.87ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த உ.வே.சா.வின் இளமைக்கால வரலாற்றை எடுத்தியம்பும் இதுபோன்ற ஆய்வுகள் அவையத்து முந்தி இருக்கக் கூடியச் செயலாகும். தொடர்ந்து பெரம்பலூர் வட்டாரம் சார்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஜெயபால் ரத்தினம் அவர்களின் முயற்சி தொடரட்டும்.
தமிழின் ஆகச் சிறந்த ஆளுமையின் வரலாறு பெரம்பலூர் பகுதியில் தொடங்கியிருப்பதை பதிவு செய்து நூலாகக் கொண்டுவந்திருக்கும் ஜெயபால் ரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
