முனைவர் இரா. செங்கொடி
நாம் கடந்து வந்த பாதையில் நாம் அறிந்த என்கவுண்டர் படுகொலைகள், காவல்நிலையைக் கொலைகள் மற்றும் நீதிமன்றக் காவல் (சிறைச்சாலை) தற்கொலைகள், விடுதலை மற்றும் தண்டனை போன்ற அனைத்தும் குற்றம்சார் நீதி அமைப்பின் முக்கியத் தூண்களாகிய காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை போன்றவை இன்றும் மனுதர்மத்தின் அடிப்படையில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு இணங்க இயங்குகின்றதோ என்ற ஐயத்தை நமக்குள் எழுப்புகின்றது.

ஒரு சாமானியனாக, மாணவனாக, வழக்குரைஞராக இக்குற்றம்சார் நீதி அமைப்பில் நுழைந்து சமூகநீதிக்கான குரலை முன்னெடுத்து தான் சந்தித்த வழக்குகளில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைக்காகச் சட்டப்போராட்டம் நிகழ்த்தி அதன் காரணமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நீதியரசர் சந்துரு தனது சுயசரிதைக்கு ‘நானும் நீதிபதியானேன்’ எனப் பெயரிட்டிருப்பது, அவர் கடந்து வந்த பாதையில் சந்தித்த சவால்களை நமக்கு உணர்த்துகின்றது.
தனது பதின்பருவத்தில் கல்லூரிக் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகப் போராடிய சந்துரு, இன்றும் ஒரு முன்னாள் நீதிபதியாகத் தொடர்ந்து நீதிபரிபாலனையைக் கவனித்து வருவதோடு அதன் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி தனது சமூகச் சீர்திருத்தத்தோடு சட்டத்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
தனிமை சவாலாகவும் சாபமாகவும் பார்க்கப்படும் சூழலில் தனது பதின்பருவத்திலேயே தாய் தந்தையை இழந்த நீதியரசர் சந்துரு அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடங்கிய சந்துருவின் சட்டப் போராட்டம் இன்றுவரை எந்தவொரு அரசியல் சார்பும் சமரசமும் இன்றி தொடர்ந்து வருகின்றது.
நீதியரசர் சந்துரு கம்யூனிச, பெரியாரியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த போதிலும் அதன் தலைவர்களோடு சமரசம் செய்துகொள்ளாமல் உடன்பட்டும் முரண்பட்டும் நிற்பது குற்றம்சார் நீதியமைப்பில் இறுதிவரை அவர் நேர்மையோடு பயணித்ததைக் காட்டுகின்றது.
நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டங்களைக் கட்டமைத்து செயல்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு களநிலவரம் தெரியாமல் இருப்பதினாலேயே பெரும்பான்மையான செயற்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. மாறாக, மக்களின் நிலையிலிருந்து சிந்திக்கும் மனிதர்களால் மகத்தான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு நீதியரசர் சந்துரு மகத்தான உதாரணம் ஆவார்.
வழக்குரைஞர் ஆவதற்கு முன்பாகவே சிறைப்பட்ட அனுபவமே காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை மூன்றையும் கேள்விக்குட்படுத்தி சீர்திருத்தத்திற்கு வழிவகை செய்துள்ளது. காவல்துறையின் மேல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது – வழக்குகளைச் சோடித்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல், அதன் இறுதி விளைவான உயிரிழப்பு ஆகியவை ஆகும். இதனை நன்குணர்ந்த நீதிபதி சந்துரு ஒரு வழக்குரைஞராக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்துள்ளார்.
குற்றவாளி இறந்ததற்கு நாங்கள் ஏன் பணம் தர வேண்டும்? எனும் காவல்துறையின் கேள்வி, அரசு கொடுக்கும் இப்பணம் இறந்தவரை மீட்டுத்தருமா? என இழப்பீட்டாளர்கள் எழுப்பும் கேள்வியென அனைத்திற்கும் சமூகத்தின் குரலாக நீதியரசர் சந்துரு இவ்வாறாகப் பதிவுசெய்துள்ளார். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் “மரணத்திற்குச் சம்பளம் ஊதியம் பிடித்தம்” என்றுதான் தீர்ப்பெழுத முடிந்தது மாண்டவரை மீட்டுவர முடியாவிட்டாலும், இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு என்ற களிம்பைத்தான் தர முடிந்தது. இழப்பீட்டுத் தொகைகள் வழக்குக்கு வழக்கு மாறுபடலாம். ஆனால் இறப்புகளுக்குப் பொறுப்பான அரசும், அரசு அதிகாரிகளும் இழப்பீடுகள் தருவதிலிருந்து இனி தப்ப முடியாது என்பதை நீதிமன்றம் நிரந்தரமாக உறுதிசெய்ததுதான் வரலாறு.
சுதந்திர இந்தியாவில் சிறைசீர்திருத்தத்திற்காக 1983 இல் நீதியரசர் முல்லா கமிட்டி, 1987 இல் பெண் சிறைவாசிகளின் நிலைகுறித்த வி.ஆர். கிருஷ்ணய்யரின் கமிட்டி போன்றவை சிறைசீர்திருத்தத்திற்கு வழிவகை செய்தன. நீதியரசர் சந்துருவின் சிறை அனுபவம் சிறைவாசிகளின் நிலையை மாற்றவும், உரிமையைப் பெற்றுத் தரவும் போராட வழிவகுத்ததோடு, சிறையில் பணி புரியும் பெண்காவலர்களின் அடிப்படை உரிமைகளான வார விடுமுறை, ஓய்வறை, சீருடை, காலணிகள், மழைக்கோட்டுகள், அடையாள அட்டை போன்றவற்றைப் பெற்றுத் தரவும் வழிவகை செய்தது.
குற்றம்சார் நீதியமைப்பு ஆளும் அரசின் கைப்பாவையாக இருப்பதும், ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுவதையும் நூலின் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளார். இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் மிசா சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் சிறையும், சிறை அதிகாரிகளும் ஆளும் வர்க்கத்தின் எண்ணங்களைச் செயல்படுத்தும் முகமைகளாகச் செயல்பட்டதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றளவும் சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் மர்மமாக உள்ளதன் மூலம் அன்றைய மிசா காலகட்டத்தில் முக்கியமான எதிர்கட்சித் தலைவர்களுக்கு நடந்த கொடுமைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். ஆளும் அரசு தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்குக் கொண்டுவந்த மிசா, பொடா, தடா போன்ற கருப்புச் சட்டங்களையும் இச்சட்டத்தின் அடிப்படையில் தனிமனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் நீதியரசர் சந்துரு தான் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளார்.
சிறைவாசிகள் அடிப்படை உரிமைகளோடு நடத்தப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டிருந்த நீதியரசர் சந்துரு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறைவாசிகளுக்குக் கைவிலங்கிடுவதை வன்மையாகக் கண்டித்துள்ளார். கைவிலங்கு இடுவது என்பது எத்தகைய மனிதத்தன்மையற்றது என்பதனை “விலங்கிலிருந்து பரிணமித்த மனிதனை மிண்டும் விலங்காக்கும் கருவி விலங்கு என்ற எண்ணம் எனக்கு ஆழமாக உண்டு. மிகச் சாதாரணமான விஷயமாகத் தெரியும் விலங்கை அகற்ற இவ்வளவு போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழலியேயே நாமும், இந்த நாடும் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறைவாசிகளுக்கு மதிய உணவு உறுதிசெய்யப்பட வேண்டும், கைவிலங்கு கூடாது என்பன போன்றவற்றிற்காகச் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
நீதியரசர் சந்துரு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை உள்வாங்கி தனது தீர்ப்புகளில் சமூகநீதிக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இன்று கேரளாவின் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த விவாதம் நடந்து வரும் வேளையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதியாக இருந்தபோது பின்னையக்காள் என்ற பெண் பூசாரியாக இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பின்னையக்காளுக்கு பூசை செய்யும் உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளார். பெண் தெய்வங்களுக்குக் கூழ் ஊற்றும் திருவிழாவின்போது பெரும்பாலும் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி வந்த வழக்கில் பெண் தெய்வங்களுக்கு மேற்கொள்ளப்படும் விழாவில் பெண்ணைக் கேவலமாகச் சித்திரிக்கும் ரெக்கார்ட் டேன்ஸ் போன்ற ஆபாச நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளார்.
“அம்மனைப் பெண்ணின் வடிவில் வழிபடும் நேரத்தில் ஆபாச நடனங்களால் பொது இடங்களில் பெண்களின் சித்திரிப்பை ஆபாசப்படுத்துவது கிரிமினல் குற்றம் மட்டுமல்ல. அவற்றிற்கு அனுமதி தருவது முற்றிலும் தவறு” என்று உத்தரவிட்டுள்ளார்.
இடதுசாரி சிந்தனையாளராக இருந்தபோதிலும் மதம்சார்ந்த வழக்குகளில் மதச்சார்பற்று செயல்பட்டுள்ளார். அரசு என்பது எல்லா மதங்களிலிருந்தும் தள்ளி வெளியே நிறுத்திக் கொள்வது எனும் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்.

கோவில் நிலங்களைக் கையகப்படுத்துதல், கோயில் விழாக்களில் அனைத்துச் சாதியினரும் பங்கேற்றல் போன்ற வழக்குகளில் சட்டத்தின் வாயிலாக சமூகநீதியை நிலைநாட்டியுள்ளார்.
2010 இல் கலைஞர் அரசு சத்துணவு மையங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவைச் சமைத்து அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விநியோகிக்கும்போது சமூகத்தில் கடைபிக்கப்பட்டு வரும் தீண்டாமை எனும் கொடிய நோய் குறைவதற்கு வாய்ப்புண்டு என்று கருதிய நீதியரசர் சந்துரு அளித்த தீர்ப்பே கலைஞரின் மேற்கண்ட இடஒதுக்கீட்டு அரசாணைக்கு அடிப்படையாக அமைந்தது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் மாநாட்டிற்குப் போடப்பட்ட தடைக்கு எதிராகப் போராடி அனுமதி பெற்றது, போராடிய தலைவர்கள் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைப்படும்பொழுது அவர்களுக்காக வாதாடி பிணைவாங்கியது, ஈழத்தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப முற்பட்டபோது அதனை சட்டப்பூர்வமாகத் தடுத்தது போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார்.
தந்தை பெரியாரின்மீதும், அவரது கோட்பாட்டின்மீதும் தனக்கிருந்த நம்பிக்கையினால் தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி போன்றவற்றை சட்டத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் இன்றைய பெரியாரிய இயக்க கழகத் தலைவர்களிடம் முரண்பாடுகள் தோன்றும்போது அவற்றை நடுவுநிலையோடு பதிவு செய்யவும் அவர் தயங்கவில்லை.
‘குடியரசு’ இதழில் பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிடுவதற்குத் தடைகோரி தொடர்ந்து வழக்கில் வீரமணிக்கு எதிராகப் பெரியாரின் எழுத்துகளுக்கு வீரமணி காப்புரிமை கோரமுடியாது என்று தீர்ப்பளித்ததுடன் “இந்த சகோதர யுத்தத்தால் பெரியாருடைய எழுத்துகள் நீதிமன்றக் கோப்புகளில் மூழ்கிவிடக் கூடாது. பகுத்தறிவு மேலோங்குமென நீதிமன்றம் நம்புகின்றது” எனத் தனது தீர்ப்பில் எழுதியுள்ளார்.
நானும் நீதிபதி ஆனேன்’ எனும் இச்சுயசரிதையில் நீதியரசர் சந்துரு தனது அனுபவங்களை 22 தலைப்புகளில் பதிவு செய்துள்ளார். நீதியரசர் சந்துரு தனது சட்டப் போராட்டக் களத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காகப் போராடியுள்ளார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே நீதியரசராகப் பொறுப்பேற்றுள்ளார். தனது பதவிக் காலத்தில் அரசியல், சுயகருத்து என எவற்றோடும் சமரசம் செய்து கொள்ளாமல் சட்டத்தின்படி தனது மகத்தான தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதியரசர் சந்துரு குற்றம்சார் நீதி அமைப்பில் சமூகநீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார்.
