கோ.கணேஷ்
இந்திய வரலாறு குறித்த ஓர்மை தற்போது பரவலாக மேலெழுப்பப்படுகிறது. அது ஆய்வுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும், முன்பு எப்போதும் இல்லாததைவிட கடந்த பத்து ஆண்டுகளில் உருவாகியுள்ள அரசியல் சூழல் அதற்கான கட்டாயத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஓட்டு அரசியலுக்காக மேலெழுப்பப்படும் கதையாடல்களின்வழி உருப்பெறும் கருத்தாடல்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அணுகப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக ‘இந்திய வரலாறு’, ‘இந்தியப் பண்பாடு’, ‘யார் இந்தியர்’ என்பன போன்ற கதையாடல்கள்வழி, திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் ‘நவீன இந்திய வரலாறு’ பற்றிய அபாயத்தை அல்லது அதிலுள்ள திரிபுவாதத்தை பொதுதளத்தில் கொண்டுபோக வேண்டியதன் அவசியத்தையும் கடமையையும் இன்றைய கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
வரலாறு என்பது அறிவியல்ரீதியாக, தர்க்கப்பூர்வமான சான்றாதாரங்களுடன் எழுதப்படுவது. ஆனால் நவீன இந்திய வரலாற்றை எழுத ‘விரும்புவோர்’ புராண/இதிகாச மரபையும் புராணிக வேதமரபையும் சாதிய சனாதனிகளால் உருவாக்கப்படும் (மனு முதலானவர்கள் எழுதியவை) கதைகளையே வரலாற்றெழுத்தியலுக்கான ஆதாரங்களாகக் கூறுகின்றனர். இவ்வாறான புராணிக மரபை ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டிற்கான வரலாறாக முன்னெடுக்கின்றனர்.
அதன்மீது எத்தகைய விமர்சனமும் எழாத வண்ணம் புனிதப்படுத்துதல் ஒருபுறமும், எதிர்க்கருத்தாடல்களை அரச இறையாண்மைக்கு எதிரானதாகச் சித்தரிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக மதரீதியிலான உணர்ச்சிகளை மேலெழும்பச் செய்வதன் ஊடாக; “ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு……” என ஒற்றை வரலாற்றைக் கட்டமைக்க ஒருசாரார் முனைகின்றனர். ஆனால் இந்திய வரலாறு ஒருபோதும் அவ்வாறு இருந்ததில்லை.
இந்தப் பின்புலத்தில்தான் இந்திய வரலாற்றெழுதியலுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் அதிலுள்ள அரசியலை ஊடாட்டங்களைக் குறித்தும் கூர்ந்து அவதானிக்க வேண்டியதாகிறது. அதற்கு ரொமிலா தாப்பர் (30 நவம்பர் 1931 – அகவை 90) போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகள் நமக்கு பல்வேறு திறப்புகளை/ தெளிவுகளை வழங்குகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியவியல் தொடர்பான அவரின் எண்ணற்ற ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் பெருவிவாதத்தினை ஏற்படுத்திருக்கின்றன. அவ்வாய்வுகள் இந்திய வரலாற்றை பன்முகத்தளத்தில் புரிந்துகொள்ளவும்/ எழுதப்படவும் வேண்டிதன் அவசியத்தை இன்றைய கல்வியாளர்களுக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் இக்கட்டுரை ரொமிலா தாப்பரின் ஆய்வுகள் பரவலாக வாசிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவ்வாய்வுகள் மேலெழுப்பும் விவாதத்தையும் முன்னிறுத்தி அமைகிறது. (ரொமிலா தாப்பரின் வாழ்வியல் செய்திகளை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும்).
இந்திய வரலாறும் பிரித்தானியர்களும்
இந்திய வரலாறு பிரித்தானியர்களின் வருகையின் ஊடாகவே மிகப்பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றது.
குறிப்பாக, வில்லியம் ஜோன்ஸ் (1746 – 1794), மாக்ஸ் முல்லர் (1823 – 1900) போன்றவர்களின் இந்தியா பற்றியும் இந்தியர்கள் பற்றியும் கூறிய கருத்தாடல்கள் முதன்மையானவை. “இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள்; எதையுமே முறையாகப் பேணிப் பாதுகாத்து, குறித்து வைக்கம் வழக்கம் அற்றவர்கள்” – என்று நம்பினர். இக்கருத்தின் வழியாகவே அவர்கள் இந்திய வரலாற்றை எழுதத்தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாகவே “இந்தியாவின் மொழி சமஸ்கிருதம் மட்டுமே” என்றும் “இந்தியர் அனைவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள்” என்றும் தாம் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு எழுதினார் வில்லியம் ஜோன்ஸ். (வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமியச் சட்டங்களின் நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர்). குறிப்பாக, இவர் 1770-ஆம் ஆண்டில் “மனுதரும சாத்திரம்” எனும் நூலை ஆங்கில மொழியில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாக்ஸ் முல்லரும் இந்திய வரலாறும்
வில்லியம் ஜோன்ஸைத் தொடர்ந்து மாக்ஸ் முல்லரும் இந்தியப் பண்பாட்டை ஆரிய- சமஸ்கிருதப் பண்பாடாகவே காண்கிறார்.
“நமது மிக நெருங்கிய அறிவுலக உறவினர்களான இந்தியாவின் ஆரியர், சமஸ்கிருதம் என்ற அற்புத மொழியை உருவாக்கியவர்கள்; நமது அடிப்படையான கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில் உடனுழைத்தவர்கள்; இயற்கை மதங்களிலேயே மிக இயற்கையான மதத்தின் தந்தையர்; மிக வெளிப்படையாகப் பொருள் உணர்த்தும் புராணங்களை இயற்றியவர்கள்; மிக நுட்பமான மெய்யியலை உருவாக்கியவர்கள்; மிக விரிவான சட்ட இயலைத் தந்தவர்கள்…” (India, What Can it Teach Us, p15 என்ற கட்டுரையில் குறிப்பிடுவதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.)-வரலாறும் கருத்தியலும், (பக்.9)
இந்தப் பின்புலத்தில் கீழைத்தேய அறிஞர்களின் கருத்தியலின் நீட்சியாக வலதுசாரிகள் இந்தியாவின் உயர்ந்த நாகரிகமாக ஆரியப் பண்பாட்டையும் சமஸ்கிருதப் பயன்பாட்டையும் வலிந்துப் புகுத்தி வருகின்றனர். அது மேலும் அரசியலமையப்படுத்தப்பட்டு ‘இந்து’ – ‘இந்திய’ என்ற ஒற்றை முறையியலை, சார்பு வாதத்தை விடாப்பிடியாகக் பேசிவருகிறது.
எல்லீஸ், கால்டுவெலின் இந்திய வரலாறு
தென்னிந்தியாவில் இருந்தே இந்திய வரலாறு எழுதப்படவேண்டியதன் அவசியத்தையும் ஆரியப்பண்பாட்டிற்கு நேரெதிர் கருத்தியலாக, “திராவிடக் கருத்தியல்” இன்றளவும் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமானவர்கள் எல்லீஸ் (1777 – 1819), கால்டுவெல் (1814 – 1891) ஆகியோர் ஆவர்.
இதில் விவிலியக் கருத்திற்கு இணையாக திருக்குறளை உள்வாங்கிய எல்லீஸ், கிபி 1812இல் அதனைப் பதிப்பித்து வெளியிட்டார். அதிலிருந்து தமிழ்நூல்களின் அச்சாக்கச் செய்பாடுகளின்வழி உருப்பெற்ற வரலாறுகள் இந்தியவியல் ஆய்விலும் கீழைத்தேயவாதிகளிடம் மேலும் பல திறப்புகளை உருவாக்கியது.
அதன் தொடர்ச்சியாக கால்டுவெல்லின் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856) (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) என்ற இந்திய மொழிகள் குறித்த ஆய்வினை முன்னெடுத்தார். இதன்மூலம் இந்தியாவில் “ஒற்றை மொழி” என்ற வாதம் உடைபட ஆரம்பித்தது. மேலும் இந்திய மொழிகள் சார்ந்த ஆய்வுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் பின்புலத்தில்தான் இந்திய வரலாற்று எழுதியலை மறுவிசாரணைக்கு உட்படுத்துகிறார் ரொமிலா தாப்பர். மேற்குறிப்பிட்ட இவ்விருவேறு கருத்தியல்களும்தான் இந்திய வரலாற்றெழுதியலிலும் இந்தியப்பண்பாட்டிலும் பிரதானமாகப் பிரதிபலிக்கிறது என அவர் கருதுகிறார். குறிப்பாக, இந்து மீட்புவாதமும் அதற்கு எதிரானவர்களின் நிலைப்பாடும் இந்திய வரலாற்றெழுதியலில் தொழிற்பட்டுள்ளது என்கிறார். இதனை காந்தியடிகள், விவேகானந்தர், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், ரானடே போன்றோரின் கருத்தியல்களைவைத்து புரிந்துகொள்ள இயலும் என்கிறார்.
ரொமிலாவின் ஆய்வுகளின் ஊடாக, நாம் இந்திய வரலாற்றை அல்லது அதனை எழுதுவதற்கான காரணிகளைக் கீழ்காணுமாறு தொகுத்து புரிந்துகொள்ளலாம்:-
- காலனியம் கட்டமைத்த கீழைத்தேயம் X மேலைத்தேயம் சார்ந்த கருத்தாடல்கள்
- ஆரியம் x திராவிடம் சார்ந்த இனம், மொழி சார்ந்த கூறுகள்.
- வகுப்புவாதம் – இந்திய X பாகிஸ்தான் உருவாக்கத்திற்கான இந்து – முஸ்லிம் பிரிவினைவாதம். அதன் மூலம் உருவேற்றப்பட்ட தேசியவாதமும் ஓட்டரசியலும்.
- இந்திய சமூக அமைப்பு – குறிப்பாக வேதங்கள் கூறும் வருணாசிரமக் கதையாடல்களும் சாதியக் கட்டமைப்புகளும்.
- மதவழிபாட்டு முறைமைகளும் சடங்கியல் பிணைப்புகளும் குறித்த நாட்டுப்புற வழக்காறுகளும்
- அரச வரலாறுகளும் புராண இதிகாசக் கதைமரபுகளும் மீள் ஆய்வுக்குட்படுத்தல்
- கோயில் – நிலம் – நிர்வாகம்சார்ந்த கட்டமைப்பு இந்தியப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்ட வரலாறு, காரல் மார்க்ஸ் இந்திய பொருளாதார வரலாற்றை “மேலிருந்து கீழாக” உள்ளது என்பதோடு இணைத்து எழுதப்பட வேண்டியதன் அவசியம்.
மேற்குறிப்பிட்ட, பல்வேறு காரணிகளை உள்வாங்குவதன்மூலம் இந்திய வரலாறு குறித்த புரிதலை நமக்கு ரொமிலா தாப்பர் வழங்குகிறார். மேலும் பன்முகத் தளத்தில் இந்திய வரலாற்றை அணுகுவதும் முக்கியமான ஒன்று என நினைக்கிறார். குறிப்பாக, சமூக இயங்கியல் நோக்கில் வரலாற்றினை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைக் காத்திரமாகப் பதிவு செய்கிறார். “இந்திய வரலாற்றை மறுஉருவாக்கம் செய்வதோ வரையறுப்பதோ என் நோக்கம் அன்று, எந்த வகையான பகுப்பாய்வுகள் செய்ய முடியும், அவற்றின் சமூகப் பொருத்தப்பாடு என்ன என்பதே நான் சுட்ட விரும்புவது” (வரலாறும் கருத்தியலும், பக்.24) எனக்கூறுகிறார்.
நிறைவாக
ரொமிலா தாப்பர் அவர்களின் வாழ்நாளில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக (இன்று 90 வயதைக் கடந்து) இந்தியவியல் பற்றியும் வரலாற்று வரைவியல் பற்றியும் தனது அயராது உழைப்பால் கண்டடைந்த ஆய்வுகளை; நாம் வாசிப்பது, மறுஆய்வுக்கு உட்படுத்துவது, பரவலாகக் கொண்டுசெல்வது என்பது வரலாற்று ஆய்வாளரின் அடிப்படைச் செயல்பாடாகும். அதேபோன்று இந்திய வரலாற்றை எழுத முனைவோர் ரொமிலா தாப்பரின் ஆய்வுகளைப் புறந்தள்ளிவிட்டு எழுத இயலாது. ரொமிலாவின் நூல்களை, கட்டுரைகளை வாசிக்கும் எவருக்கும் இந்திய வரலாற்றினைக் கட்டமைக்கும் காரணிகள் குறித்த தெளிவான பார்வையை, அவை நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், முன்பு எழுதப்பட்ட வரலாறுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் புரியும். ஒட்டுமொத்தமாக இந்திய வரலாறு பற்றிய ஓர்மையை நாம் பெறமுடியும்.
ஆதாரங்கள்
o ரொமிலா தாப்பர், (வானமாமலை,
நா.(மொ.பெ) – வஞ்சிக்கப்பட்ட வரலாறு, பானு பதிப்பகம், சென்னை, 2008.(1st Edition).
o ரொமிலா தாப்பர், (வானமாமலை நா. (மொ.பெ) – வரலாறும் வக்கிரங்களும், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2008.(1st Edition).
o ரொமிலா தாப்பர், (வான்முகிலன் (மொ.பெ) – கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா?, அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2008.(1st Edition).
o ரொமிலா தாப்பர், (வெங்கடாசலபதி, ஆ.இரா (மொ.பெ) – வரலாறும் கருத்தியலும், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, 2015 (2nd Edition).
o ரொமிலா தாப்பர், – கணேசன் வீ.பா. (மொ.ப) – இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல.. (நேர்காணல்), பாரதி புத்தகாலயம், சென்னை, 2021.
