எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்து சுதந்திர மறுப்பு, ஆட்சியாளரை விமர்சித்தால் பிடித்து உள்ளே வைத்தல், கேள்வி கேட்டாலே தீவிரவாதிகள் பட்டம், விசாரணையற்ற கைது நடவடிக்கைகள், எங்கே கொண்டு போகிறோம் என்று சொல்லாத வேட்டையாடல்கள், லாக்கப் மரணம், ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா தட்டும் ஊடகச் செய்திகள், உள்நாட்டில் ஜனநாயக மறுப்புக்கு எதிராக வெளியே இருந்து யாரேனும் குரல் கொடுத்தால் அந்நியத் தலையீடு என்று பாய்ந்து பிடுங்கல்…
உள்நாட்டு விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா… அல்லவே அல்ல… 1990களில் வாசித்த நெருப்புக் கவிதைகளின் கருப்பொருள்கள் இவை என்றால் நம்புவீர்களா?
இப்போது புதுவையில் வசித்துவரும் வங்கி தோழர் பால்கி எனும் பாலகிருஷ்ணன், சில தேர்வு செய்த புத்தகங்கள் கொடுத்து வாசிக்க வைத்ததுண்டு. அப்படியாகக் கிடைத்த சவுத் ஏசியன் வெளியீடான ‘தலைப்புச் செய்திகள்’ எனும் மொழி பெயர்ப்புக் கவிதைகள் தொகுதி அவர் பரிசளித்ததுதான். குமாரசாமி, உமா, சித்கலா, தமிழ்தாசன் இவர்களோடு இணைந்து இந்தக் கவிதைகளை மிக அருமையாகத் தமிழில் வழங்கியவர்களில் ஒருவரான நெடுஞ்செழியன் அவர்களை அறிந்ததால், அவரது மறைவின் அதிர்ச்சியோடு இந்தக் கவிதைகளைத் தொடுவதுண்டு. அடிக்கடி எடுத்து வாசிப்பது உண்டுதான் என்றாலும், எனது மோசமான பலவீனங்களில் ஒன்று புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்திப் பயன்படுத்தாதது. பல நேரம் சட்டென்று மறைந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடும் புத்தகங்கள்.
நடப்பு அரசியல் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் இந்தக் கவிதைத் தொகுதியை எடுத்து மேற்கோள் காட்ட விரும்பியும் கைக்குள் சிக்கவில்லை, பல கவிதைகளும் மனத்தில் நின்றிருப்பவைதான் என்றாலும், அதே வரிகளில் எடுத்துக்காட்ட இயலாமல், பதிப்பாளர் தோழர் பாலாஜியைத் தொடர்பு கொண்டபோது, அவர், ‘எனது கணினி கணக்குப்படி இரண்டு பிரதிகள் என்னிடம் உண்டு, ஆனால், புத்தகங்களோடு புத்தகமாகக் கலந்திருக்கும், எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துத் தேடி எடுத்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு’ என்று தம் கஷ்டத்திற்கும் சேர்த்து நகைத்தார். போகலாம் என்று ஒரு முறை முயற்சி செய்தபோது அவர் வீட்டுக்கு வெளியே இருந்ததால், அன்று போக முடியவில்லை. அந்த உணர்வின் துரத்தலில் வீட்டுக்குத் திரும்பி அலமாரியின் ஒரு குறிப்பிட்ட வரிசையில் மளமள என்று சில புத்தகங்களை வெளியே எடுத்ததும், கையில் கிடைத்துப் பேரானந்தக் கிளர்ச்சி கொள்ளவைத்தது அந்த பிரதி.
புத்தகத்தின் முற்பகுதி முழுக்க ஒரே படைப்பாளியின் கவிதைகள், மலேசிய கவிஞர் சிசில் ராஜேந்திரா அவர்களது அதிரடி சாட்டைகள். பிற்பகுதியில் வெவ்வேறு நாட்டுக் கவிஞர்களது ஆவேசப் பொறிகள்.
சிசில் ராஜேந்திரா அவர்களது ‘அந்நியத் தலையீடு’ எனும் கவிதை, அவனது ஓட்டல் தொடர்களை நடத்துபவர்கள் ஆஸ்திரியர்கள், பால் பண்ணைத் திட்டத்தை மேற்பார்வையிடுபவர்கள் ஆஸ்திரேலியர்கள், மின்னணுத் தொழிற்சாலையைக் கட்டுப்படுத்துவது ஜப்பானியர்கள்… திருவோட்டிற்கு நிதிப்பிச்சை அளிப்பது அமெரிக்கா.. என்று வளர்ந்து கொண்டே போய்,
ஆனால்
நாட்டிலுள்ள
தடுப்புக்காவல் சாவுகள் பற்றி
போலீஸ் அராஜகம் பற்றி
சிறைக் கற்பழிப்புகள் பற்றி
ஒரு சர்வதேசக் குரல்
ஒலிக்கத் தொடங்கும்போது
அவன் குதிக்கிறான்
வானத்திற்கும், பூமிக்கும்
அந்நியத் தலையீடு என்று!
என சாட்டையடியாக முடியும்.
‘அச் சே தின்’ என்ற வாக்குறுதியை சொல்லித் தான் நம் நாட்டின் இப்போதைய ஆட்சியாளர்கள் இரண்டு முறையும் ஆட்சிக்கு வந்துள்ளனர். சிசில் அவர்களது சுருக்கமான ‘சோதிடம்’ என்ற கவிதையின் முதல் வரி, ‘நம் எதிர்காலம் / நம் / கண்முன்னே / பரப்பி வைக்கப்பட்டுள்ளது / வெள்ளைக் காகிதங்களில்…’ என்று தொடங்கி, ‘மீதி இருப்பவை / வெறும் வாக்குறுதிகளும் / பெரும் ஏமாற்றங்களும் / மட்டும் தான்’ என்று முற்றுப்பெறுகிறது. என்ன ஒரு பொருத்தம்!
‘தடா பூமி’ எனும் கவிதை இங்கே கூட நம் தேசத்தில் தடா, பொடா சட்டங்களும், அதைவிட மோசமாக இப்போது நடைமுறைப்படுத்தப்படும் உபா சட்டமும் என்னென்ன செய்யும் என்பதை அடுக்குகிறது. ‘அனைத்து இடங்களிலும் மக்கள் உரக்கப் பேசுவதை நிறுத்தி விட்டனர்’ என்ற வரி உணர்த்தும் அச்சம் விரிவாக விளக்க வேண்டியது. ‘அங்கு கைதாம், இங்கு தூக்கிச் சென்றனராம், இங்கு மாயமாய் மறைவாம், அங்கு போலீஸ் நிலையத்தில் இடுப்புக் கயிற்றில் தற்கொலையாம்…’ என்ற வரிகள் இன்னும் கனமானவை. குடிமக்கள் மட்டுமல்ல, சில விலங்குகளும் பறவைகளும் கூட விவரிக்க முடியாத பய பிராந்தியால் பீடிக்கப்பட்டு விட்டன என்கிறார் சிசில் ராஜேந்திரா. இந்தக் கவிதையின் கடைசி வரி அபாரமாக ஒலிப்பது:
ஆமாம்
மக்களுக்கு
உரக்கப் பேசும் பழக்கம்
மீண்டும்
எப்போது வரும்?
‘டகிள் பாட்சாவின் செய்திகள்’, ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்தின் குரலைத் தாங்கள் விரும்பும் செய்திகளையே பேசும்படி ஆட்டுவிக்கும் ஆட்சியாளர்களது அராஜகத்தைப் பகடி செய்யும் அங்கதக் கவிதை.
மலேசிய மனித உரிமை கவுன்சிலில் முக்கிய பங்களிப்பு செய்துவருபவரும், ஆசியாவின் முன்னோடிக் கவிஞராக அறியப்படுபவருமான வழக்குரைஞர் சிசில் ராஜேந்திராவின் ஒவ்வொரு கவிதையும் அரசியல் ஆழமிக்கது என்றாலும், மனத்தைப் பிழிந்தெடுக்கும் அவரது கவிதை ஒன்று இரவுகளைக் கண்ணீரால் ஈரப்படுத்தக் கூடியது – ஆவேசப் பட வைப்பது.

தனது குழந்தைகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தாயின் மொழியில் பேசும் இந்தக் கவிதை, அவளது கணவனைச் சரியாக அதிகாலை மூன்று மணிக்கு, தூக்கத்தில் இருந்து எழுப்பி அவர்கள் எப்படி கொண்டு போயினர் என்பதை நடுங்கும் குரலில் பேசுகிறது. அவரை ஏன் கைது செய்தனர், என்ன குற்றச்சாட்டு, எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற தகவல் எதுவும் தரப்படுவதில்லை. ஆனால், ஒரு தரவு இருக்கிறது:
அவர் நீதி குறித்துப் பேசினார்
நியாயம் குறித்து முழங்கினார்
அது அவரை ஆபத்தானவராக
நாட்டின் பாதுகாப்பிற்கு
அபாயம் விளைவிப்பவராக ஆக்கியது
அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார், ஆரோக்கியமாகவா, நோய்வாய்ப்பட்டா என்பது அவளுக்குத் தெரியாது. பசியோடா, பட்டினியோடா என்பதும் தெரியாது. மீண்டும் பார்க்க முடியுமா, முடியாதா என்பதும் தெரியாது. இந்தத் தொடர் கேள்விகள், சந்தேகங்களை அடுத்து அவளைக் கொன்று கொண்டிருக்கும் முக்கியமான விஷயம்தான், கவிதையின் தலைப்பாகவும் உருப்பெற்று விடுகிறது,
எல்லாவற்றிற்கும் மேலாக
நான் எப்படி சொல்லப் போகிறேன்
என் குட்டிச் செல்வங்களிடம்
அப்பா இன்று இரவுச் சாப்பாட்டிற்கு
வரமாட்டார்
என்பதை.
தொகுப்பில் பல நாட்டுக் கவிஞர்களது குரல்களும் ஒலிக்கின்றன. நிறைய விஷயங்கள் அலசப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டு கிரேஸ் ஆர் மாண்டி டி ரமோஸ் அவர்களது, ‘தைரியசாலித் தாய்’ எனும் கவிதை,
நான் ஒரு தாய்
மூன்று மகன்களைப் பெற்றவள்
இருவர்
இராணுவத்தில் சேர்ந்துவிட்டனர்
இளமையிலேயே
நாட்டுப்பற்று, தேசப்பற்று என்ற
காரணத்தினால் அல்ல
வேறு பிற தொழிற்சாலைகளில்
வேலை காலி இல்லாததால், மேலும்
இராணுவத்தில் சேர்வது எளிது
துப்பாக்கிகளைக் கையாளப் பழகுவது
சுலபம்
என்று தொடங்குகிறது. கடைசி மகன் இப்போது (இறந்து) போய்விட்டான் என்று அடுத்த கட்டத்தில் அந்தத் தாய் தெரிவிக்கிறாள். ‘அவனது இளமையின் உச்சத்தில் அடையாளம் தெரியாத சிலர் அவனைத் தூக்கிச் சென்றுவிட்டனர், அவர்கள் பெயர்களை நான் ஒரு போதும் அறியப்போவதில்லை’ என்று அவள் சொல்லுமிடத்தில் வாசகர் நெஞ்சம் சிதறுகிறது. அவர்கள் இராணுவத்தினர் என்பதையும் குறிப்பிடுகிறாள். அவர்களை விவரிக்கையில், ‘என் மகன்களைப் போலவே விஷம் கக்கும் கொடூர துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு திரியும் சைத்தான்கள்’ என்கிறாள்.
இப்போது, காணாமல் போன தனது மகனைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறாள்: ‘கண்ணிமை போல 17 வருடங்கள் காப்பாற்றி வந்த அவன் ஓர் அருமையான இளைஞன்’ என்கிறாள். ஒரு நொடியில் அவர்கள் தூக்கிச் சென்றுவிட, அவள் அவனது எலும்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறாள். முகாம்களில் குண்டுச்சத்தம் ஓய்ந்த பிறிதொரு நாளில், இராணுவத்தில் பணியாற்றும் இரு மகன்கள் வீடு திரும்பும் சமயம், அவர்களது சகோதரன் புகைப்படத்தை அவள் உள்ளே ஒளித்து வைத்துவிடுகிறாள் – அது அவர்களை அழ வைக்கக் கூடும் என்று! அந்தத் தாய் நினைத்துப் பார்க்கிறாள்:
ஒரு வேளை அவர்களும்
(கடவுள் மன்னிப்பாராக!)
பிற அன்னையருக்கு
இதே போன்ற துக்கங்களைத்
தோற்றுவித்திருக்கக் கூடும்
ஒரு வேளை
அவர்கள் பட்ட கடனை
என் இளைய மகன்
வட்டியும் முதலுமாகத்
திருப்பி அளித்திருக்கக் கூடும்
அழுதும் அவளால் தனது மன பாரத்தை இறக்கிவைக்க முடிவதில்லை, ஏனெனில், புதைக்கலாம் எனில், அவனது எலும்புகள் கூட அவளுக்குக் கிடைப்பதில்லை. கவிதையின் கடைசிப் பகுதி, இதயத்தைக் கிழித்துப் போடுவது:
ஒரு பெண்ணிற்கு வரவே கூடாத
துக்கத்திற்காக
நான் வெம்பித் துடிக்கிறேன்
கொல்வதற்காகவும் கொல்லப்படுவதற்காகவும்
மகன்களைப் பெற்ற
மகராசியாகி விட்டதற்காக!
அண்மையில், நாகலாந்து மாநிலத்தில், பயங்கரவாதிகள் என்று தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது என்று பின்னர் சாக்குபோக்கு சொல்லி சமாளித்த இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 14 பேர் மாண்டு போயினர். அதில் லாங்வாங், தாப்வாங் என்ற இரட்டையரை இழந்தது ஒரு குடும்பம். எல்லை மாநிலங்களில் எந்த விசாரணையுமின்றி என்னவும் செய்ய இராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் நாசகர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற ஜனநாயகக் குரல்கள் பல்லாண்டுகளாக ஒலித்துவருகின்றன.
மனிதர்களை பாதுகாக்க சட்டங்களா, அப்பாவிகளை அடக்கி ஒடுக்கி விரட்டிப் பிடித்து அடித்துத் துவைத்துச் சுட்டு வீழ்த்தி அடையாளமே தெரியாமல் செய்யவா, யாருக்காக சட்டங்கள் என்பதுதான் அப்பாவி மக்களின் கேள்வி. நாகலாந்து நிகழ்வைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் தைரியசாலித் தாய் கவிதை முகத்தில் வந்து அறைகிறது.
நூலின் முதல் பக்கத்தில் பதிப்பாளர் குரலாக தோழர் எம் பாலாஜி குறிப்பிடும் முத்தாய்ப்பான வரிகள்: ‘இது கவிதையா, இலக்கியம் சார்ந்தவையா, அரசியல் பிரச்சாரமா, வெறும் காகிதப் புலம்பல்களா என்பதை நீங்களே (வாசகர்கள்) முடிவு செய்து கொள்ளுங்கள்,
ஆனால்
இவைதான்
இன்றைய
தலைப்புச் செய்திகள்’.
உண்மைதான். முதல் பதிப்பு டிசம்பர் 1992இல் வந்திருந்தாலும், இப்போதும் இந்தக் கவிதைகள் தலைப்புச் செய்திகளாக இருப்பதை நாம் உணரமுடியும்.
(தொடரும் ரசனை)
