ஒரு நாட்டை வீண்படவைக்க வேற்றுமைகளைத் தூவு…
அதே நாட்டை மேம்பட வைக்க புத்தகங்களை விதை!
-ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (வங்காளக் கல்வியாளர்)
இன்று தமிழகத்தின் அறிவுச்சுடரை அசைத்துப் பார்த்து, பகுத்தறிவுப் பாதையைச் சிதைத்து, மத வேற்றுமை எனும் விஷத்தைக் காற்றில் தூவி, சனாதன – சாதிய அடுக்குகளில் புதைத்து, நம்மை சீரழிக்க நடக்கும் நாடகங்கள் ஒன்றா… இரண்டா? இந்தியா எனும் தேசம் உருவெடுக்கும் என்பதில் இருந்து நம் நாட்டு மக்களின் ஒரே நல்வழிச் சமூகத்தை கல்விநோக்கித் திருப்புவதில் உள்ளது. அதை பிரிட்டிஷ் ஆட்சி எப்படி எல்லாம் தன்னையும் அறியாமல் செய்யப்போகிறது என்பது வரை காரல்மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து எழுதிச்சென்றார்.
இன்று என்ன நிலை? நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்று அதிர்ந்துபோகும் அளவிற்கு மதவாதக் காவிவெறி ஆடை அரசியல் முதல், உணவு உளைச்சல் வரை எதையும் கொளுத்தி நம் அப்பாவி மக்களின் பிண வாடையில் குளிர்காயத் துடிக்கிறார்கள். இன்று ஆடை – அதிகாரம் செலுத்தும் இந்த அராஜகம், விரைவில், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு, புத்தகம் எதற்கு என்று சட்டமே இயற்றுவார்கள். அதனால்தான் புத்தகக் காட்சிகள் போன்ற அறிவுத் திருவிழாக்கள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன.
குழந்தைகள், பெண்கள் என அணி அணியாக நாம் புத்தகக் காட்சிக்கு அழைத்து வரவேண்டும். கடந்த இரண்டாண்டு கொரோனா முடக்கம் காரணமாக நம் தமிழகக் கல்வி விழுக்காடு குறைந்துவருவதாக கவலை தரும் குரல்கள் எழுகின்றன. அதனை நிவர்த்தி செய்ய புத்தகத் திருவிழா ஒரு முக்கிய சிகிச்சையாகும். சென்னையில் நடப்பது போல புத்தகக் காட்சியை மாவட்டந்தோறும் பபாசியே முன்னின்று நடத்த வேண்டும் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மிகுந்த நம்பிக்கை தருகிறது.
மாவட்டத் தலைநகரங்களில் இம்மாதிரி புத்தகக் காட்சிகளை நடத்தி முடித்த பிறகு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் புத்தகத் திருவிழாக்களை நாம் நடத்த வேண்டும். அவ்விதம் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் நடத்தி முடித்த பிறகு பஞ்சாயத்துதோறும் தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். வாசிப்பை நம் சமூகத்தின் அடையாளமாக்கிட தமிழக அரசு முன்வரவேண்டும், முன் வருவார்கள் என்கிற நம்பிக்கை சென்னைப் புத்தகக் காட்சி மூலம் நமக்கு ஏற்படுகிறது.
• பள்ளி கல்லூரி நூலகங்களுக்குப் புத்தகம் வாங்கிட புத்தகக் காட்சியைப் பயன்படுத்துவோம்.
• அடுத்த தலைமுறையான மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை விதைக்க அவர்களை ஆர்வத்தோடு வரும்விதமாய் போட்டிகளில் பங்குபெற வைப்போம்.
• இன்றைய வாசிப்பின் புதிய வடிவங்கள் ஒலி-புத்தகம் போன்றவற்றை ஆதரிப்போம்.
சமூகத்தைப் பதப்படுத்துவது புத்தகமே!
வாழ்வின் சிறப்பான வழிகாட்டி புத்தகமே.
இலட்சியங்களை விதைப்பதும் புத்தகமே.
அக்கனவுகளை நிறைவேற்றுவது புத்தகமே.
-என்கிற அப்துல் கலாமின் வாசகத்தை முன்னிறுத்தி புத்தகப் புரட்சி வெற்றிபெற அனைவரும் அணி திரள்வோம். பகுத்தறிவுத் தமிழகத்தை வெற்றிபெறசெய்வோம்
