பிரேமா இரவிச்சந்திரன்
இவ்வுலகில் மனித சமூகமானது யாருக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்தால் அதிகாரம், வணிகம், மருத்துவம், கல்வி, விவசாயம் எனத் தொடரும் வரிசையில் அனைத்திற்கும் அடிப்படையாக மனித நாகரிகம் உருவான முதல் புள்ளியிலிருந்து இன்றளவும் சொல்லப்படுவதாக விவசாயமே விளங்கி வருகிறது. உணவு கொடுத்து உயிரைக் கொடுப்பவர்கள் யாவருக்கும் தலைவணங்க வேண்டியதில்லாமல் விண்ணின் மழையை மட்டுமே நம்பியிருந்து மக்களின் தலைவனாக வாழ்ந்து வந்தார்கள்.

பெருகிவரும் தொழில் புரட்சியில் பெரு வணிகர்களுக்கு சாதகமாக செயல்படும் நோக்கில் சிறு விவசாயிகளை வதைத்து வருவது இன்றைய நாடுகளின் போக்காக இருக்கிறது. ஆங்கிலேயரது ஆட்சியில் இந்திய விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி குறைந்த விலைக்கு தானியங்கள், பருத்தி போன்ற கொள்முதல்களை, பயிரிடுபவர்களிடம் பெற்று ஏற்றுமதி செய்தபோது விலையில் ஏற்றம் ஏற்பட்டால் விற்பனையை நிறுத்தி வியாபாரிகள் விலை ஏற்றத்திற்காகக் காத்திருந்தபோது, விவசாயிகளும் முதல் தரகர்களும் அந்தப் பாதிப்பினை சுமக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். காக்க வேண்டியவனை கருத்தில் கொள்ளாமல் இந்நிலை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
வள்ளுவனின் வாக்காக,
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)
இதன் பொருளாவது,
‘இவ்வுலகம் பல்வேறு தொழில்களைக் கொண்டு சுழன்று வந்தாலும் ஏர்கொண்டு உழும் உழவுத் தொழிலின் பின்னால்தான் நிற்கிறது. எனவே எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவுத் தொழிலே சிறந்தது’
என்பதாகும்.
முக்காலத்திற்கும் பொருந்துகின்ற குறளினை வழங்கிய திருவள்ளுவரது வாக்கிலிருந்து பிறழ்ந்து புதிய பாதையைத் தேடினால் எதிர்கொள்ளவிருப்பது சிக்கலாகவே இருக்கிறது. எவ்வளவு துன்பப்பட்டாலும் காக்க வேண்டிய உழவையும் உழவனையும் நிர்கதியாக தவிக்க விட்டுவிட்டு அவர்களுக்கு சரிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யாவற்றிற்கும் அடிப்படையான உழவுத் தொழிலை பொருளீட்டும் பொருட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கத் துணிவது நமக்கு நாமே தேடிக்கொள்கின்ற வீழ்ச்சியில் முடிவடைந்து விடும் என்பது திண்ணம்.
1960ஆம் ஆண்டுகளில் இந்திய நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டபொழுது பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு தாராளமாக கடன் வசதி அளித்தது. குறைந்தபட்ச ஆதார விலை என்கிற நடைமுறையை விவசாயிகளின் பாதுகாப்பிற்காக கொண்டுவந்து சந்தையில் சரிவு ஏற்பட்டாலும் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அரசு உரிய விலைக்கு வாங்கிக்கொண்டு உழைத்தவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் காப்பாற்றியது. இன்றைய காலங்களில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளின் விளைச்சலுக்கான முதலீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாதபடி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதியைக் கொடுத்திருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் விளைச்சலின் விலையைக் குறைத்து நெருக்கடி கொடுத்தாலும் அரசு அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் நழுவுவதற்கு வாய்ப்பாக சட்டங்களில் மாறுபாடுகளைக் கொண்டுவந்து இன்றைய விவசாயிகளை கண்ணீரில் மிதக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாநிலங்களில் அமைந்திருக்கும் அணைக்கட்டுகளின் மூலம் பெற வேண்டிய தண்ணீரையும் பெற முடியாமல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து அவர்கள் மனம் நோகும்படி விதைப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கைக்கே ஆதாரமானவர்கள் தங்களுக்கே வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் பசுமைப் புரட்சியை செயல்படுத்திய இந்திய நாட்டில் விவசாயப் புரட்சிக்குப் பதிலாக, போராட்டமே இன்று நடந்துகொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவு இந்தியாவாக இருக்க வேண்டிய 2020ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டதை எதிர்த்துப் போராடியதில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். புரட்சியைத் தூண்டுவதற்காகவோ வெடிக்கும் புரட்சியை பதிய வைப்பதற்காகவோ பத்திரிகைகளில் இடம்பெறுகின்ற எழுத்துகள் அன்றைய வரலாற்றை என்றென்றும் பேசிக் கொண்டிருக்கின்றன.
மக்களின் குமுறல்களும் எண்ணங்களும் கட்டுரையாகவோ, கவிதையாகவோ இடம்பெற்று விடுகின்றன. அவ்வாறான விளைவாக பச்சைப் பயிரை விளைவிப்பவன் வழி இல்லாமல் வீழும்போது, அதன் வலியை உணர்ந்தவராக பயிரையே இரத்தமாக்கி தனது பேனாவில் நிரப்பி விவசாயிகளில் ஒருவராக கொப்பளிக்கும் கவிதைகளைப் படைத்து தொகுத்து அளித்ததே ‘பச்சை ரத்தம்’ எனும் புத்தகமாகி இருக்கிறது.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் யாவும் உயிர் துடித்து வாடி வதங்கி சடலமான பின்பும் சாம்பலாகும் துன்பத்தை அனுபவித்தவாறு கவிஞரின் மனவெம்மை தாளாமல் வீரியமான வார்த்தைகளைக்கொண்டு விளாசியபடி தன்மீது விழுகின்ற சவுக்கு அடியால் துடிதுடித்துக் கொதித்து வந்த கவிதைகளாகப் பிறந்திருக்கின்றன. இறந்த விவசாயிகளின் பிணத்தை கறித்துண்டுகளாக்கி தட்டில் வைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் உணவு மேசையில் பரிமாறியிருக்கிறார்.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கவிதை வரிகளாக,
‘கலப்பைப் பேனாவால்
சேற்றுத் தாள்களில் விவசாயி எழுதும்
உழவுதான்
உலகிலேயே மிகச் சிறந்த கவிதை
விவசாயி எழுதும் கவிதைகளைப் படிக்காமலேயே
கிழித்துப் போடுபவன்தான்
உலகிலேயே மோசமான சர்வாதிகாரி.’
என்பது உலகிலேயே சிறந்த கவிதை எனும் தலைப்பில் வருகிறது.
இவ்வாறான சர்வாதிகாரிகளை விசாரிக்காமலேயே கம்பிகளுக்குப் பின் அடைத்து வைப்பதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்க வேண்டும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லாத சக மனிதனும் நாக்கு இழிவுபடும்படி பயன்படாத சொற்களை அறிக்கைகளாக அளிப்பவர்களும் அச்சொற்களாலேயே வீழ்ந்து, விவசாயிகள் எழ வேண்டும்.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளின் தொடர் வாசிப்பில் வெளிப்படும் வெம்மையால் நம் உடலில் இருக்கின்ற குருதி மெல்ல மெல்ல உறைந்து போய் விடுகிறது. அதன் ஓட்டத்தையே நிறுத்திவிட்ட பிறகுதான் கவிதைகளின் பக்கங்கள் நிறைவடைகின்றன. மனம் நிறைய சிந்தனைகளைச் சுமந்து வானம் பொய்த்தாலும் பூமி பொய்க்காமல் கிணற்று நீரினை நம்பி விதை விதைத்து நம் வயிற்றை நிறைத்தவனின் கொடுந்துயர்களை நம் மனம் நிரப்பிக்கொள்கிறது.

முளைப்பாரி எனும் தலைப்பிட்ட கவிதையில் இடம் பெற்ற வரிகளான,
‘ஒன்று மட்டும் புரியவேயில்லை
மண்ணில்தான் புதைத்தார்கள்
விதைகள் முளைத்து விடுகின்றன…
எந்த மண்ணில் புதைத்தால்
இந்த மனிதர்கள் முளைப்பார்கள்?’
என்பதில் புதைந்திருக்கும் ரௌத்திரமான கேள்விகள் வினாக் கவிதைகளை வெகுவாகப் படைக்கின்ற மகாகவி ஈரோடு தமிழன்பனை நினைவுபடுத்துகின்றன. அவரது தேர்வில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றவர் இந்த நூலின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் கவிதைகளுக்கு விலை கட்டுப்படியாகாத கவிஞனும் விளைச்சலுக்கு ஏற்ற வருமானத்தைப் பெற்றுவிடாத விவசாயியும் மற்றுமொரு கவிதையில் ஒன்றாகிவிடுகிறார்கள். பேரணி எனும் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகளான,
‘உழவனைப் போலத்தான்
அடக்க விலையை நிர்ணயிப்பதில்
எனது கவிதைப் பயிர்களுக்கும்
விலை கட்டுப்படியில்லை.
ஒரு புயலுக்குப்பின் வயலிழந்து போன உழவனைப்போல
இலக்கியப் புயல்களால்
நானும் வலுவிழந்து போனதுண்டு.
விவசாயிகளுடையதைப் போலவே
எனது கவிதை நிலமும்
காய்ந்து கிடக்கலாம்
கடலிலிருந்து கால்வாய் கொண்டு வரும்
கவிதைத் திட்டம் என்னிடமிருக்கிறது.’
என்பதில், தீவிரமான மனதை வடிப்பதற்கு தேர்ந்தெடுத்த சொற்களால் அமைந்த கவிதைகளால் மட்டுமே முடியுமென எண்ண வைக்கிறது. மரித்துப்போன விவசாயி வாழும் கவிஞன் மூலமாகத்தான் பேசுகின்றான். தன்னிலையையும் தன் கவிதைப் படைப்பினையையும் விவசாயிகளோடு இணைந்து மௌனமாக மொழிந்து இவ்விருவருமே கைவிடப்பட்டவர்களாக இருப்பதை நயமாக இக்கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு கவிதையிலும் இடம் பெற்றிருக்கின்ற பெரும்பாலான சொற்கள் மற்றுமொரு கவிதையின் தலைப்பாக இருக்கும் தகுதியைக் கொண்டிருக்கிறது.
தான் எண்ணுகின்ற யாவற்றையும் சொல்லிவிடாமல் வாசிப்பவர்கள் இட்டு நிரப்பிக்கொள்கின்ற இடங்களும் கவிதைகளில் இருக்கின்றன. திணிக்கப்பட்ட வன்முறைகளை அழுத்தமாகப் பதிய வைக்கின்ற பகுதிகளில் வெவ்வேறு பரிமாணங்கள் பரிமளிக்கின்றன. புத்தகம் முழுவதும் பக்கத்திற்குப் பக்கம் ரத்த நாளங்கள் ஓடுகின்றன.
அட்சயப் பாத்திரமாக இருந்தவர்களை பிச்சைப் பாத்திரம் சுமக்க வைக்கின்ற துரோகம் இந்த மண்ணில் நடந்துகொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்ற கவிதைகள் அடங்கிய இந்த நூலினை எழுதிய பேனா முனைக்கு சராசரியைவிட கூர்மை அதிகம். ரௌத்திரமான கவிதைத் தொகுப்பு நூல்.
