பிரியா ஜெயகாந்த்
கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நம்மை சிக்கித் தவிக்கவைக்கிறது நாவல். காற்று அல்லது மேகம் என்ற பொருள் கொண்ட ‘கொண்டல்’ நாவலுக்கு பொருத்தமான தலைப்பாக அமைகிறது. எளிமையான நடையுடனும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும் நாவலை நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர் சக்தி அவர்கள். தமுஎகச கலை இலக்கிய விருதுகள் வழங்கிய ‘விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்புக்கான விருது’ பெற்ற நாவல் என்ற சிறப்பையும் ‘கொண்டல்’ பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் தலைக்காடு நகராட்சியின் கிராமமான கோட்டகம் கிராமத்தைச் சுற்றிய கதைக்களத்துடன் சாதிய அரசியல், உப்பளம், இறால் பண்டு, பெட்ரோலியம் மீத்தேன் வாயு ஆராய்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, ஜாதிப் பாகுபாடு, இயற்கைச் சீற்றம் போன்ற பல்வேறு கட்டமைப்புகளையும் அதன் விளைவாக அரசாங்கத்தாலும் காவல்துறையினராலும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, பாதிப்பு என அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து அளிக்கப்பட்டிருப்பது வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் உள்ளது. அந்தச் சிறிய கிராமத்தில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு அத்தியாயமாக விறுவிறுப்பு குறையாமல் கதைக்கு வடிவம் அளிக்கிறது. கதாசிரியரே கதையின் நாயகன்.
தன்னிலை பாணியில் தனக்கே உரிய கவித்துவமான மொழிநடையில், வேகத்தில், யதார்த்தமாக கதையை வடிவமைத்து நகர்த்திச் செல்கிறார். நாமும் அவர் செல்லும் இடமெங்கும் அவரைப் பின்தொடர்வதைத் தவிர்க்க இயலவில்லை. அதுவே நாவலின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது.
மக்களுக்காகப் போராடி கொல்லப்படும் தனது அண்ணனின் இறப்பைப் பற்றி கூறுவதில் நாவல் துவங்குகிறது. அந்த இறப்பிற்கும், தாமதிக்காமல் உடலை தகனம் செய்வதற்கும் பின்னணியில் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியின் மீதான கேள்வியை ஒவ்வொரு வரியும் நம்மீது தொடுக்கிறது. வீட்டின் ஆணிவேராக இருக்கும் ஒரு மனிதரின் இழப்பு அந்த வீட்டில் உள்ள உறவினர்களின் மனங்களில், வாழ்வில் எத்தகு தூயரத்தையும் வேதனையையும் அளிக்கும் என்பதை, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கும் காளியண்ணனின் மரணம் உணரச்செய்கிறது. தவறைத் தட்டிக்கேட்கும் போராளிக்கு அளிக்கப்படும் உயரிய தீர்ப்புதான் மரணம்.
உவர்நீர் பரப்பில் இறால் வளர்ப்பு என்பது வர்த்தக மதிப்பு நிறைந்த தொழில் என்பதாலும், குறுகியகால வருமானம் அளிப்பதாலும் முதலீட்டுப் பணம் மிக விரைவில் பன்மடங்கு லாபத்தை அளிப்பதாலும் விலை நிலங்களாக இருந்த தலைக்காட்டு நிலங்கள் எவ்வாறு இறால் பாண்டுகளாக மாறின என்பதையும் இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் ரசாயங்களால் குடிநீர் ஆதாரம் பாழாகி வயல் நிலங்கள் எவ்வாறு பாழாகிறது என்பதையும், இறால் பண்டுகளின் பராமரிப்பு மற்றும் கழிவுகளின் வெளியேற்றத்தினால் ஏற்படுத்தும் நீர் மற்றும் நிலமாசு குறித்த அபாயத்தையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நாவல்.
அதிக லாபம் கொழிக்கும் இறால் வளர்ப்புக் காரணமாக விவசாயம் செய்யும் தொழிலை கைவிட்டு இறால் பண்டுகள் அமைப்பது இயற்கையின் அழிவிற்கு இடமளிக்க ஆரம்பிப்பதற்கான அறிகுறி. வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் கேரளாவிற்குப் பயணமாவது வியாபார உத்தி என்றாலும் அவை வருங்காலத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றன என்பதும் நாவல் மூலம் எச்சரிக்கப்படுகிற உண்மை. கஜா புயலின் தாக்கம் எப்பொழுது ஏற்படும் என்ற பயத்துடனே பக்கங்களை நாம் கடக்க வேண்டியுள்ளது. புயல் குறித்து நாவலின் ஆசிரியர் என்ன எழுதப்போகிறார் என்ற எதிர்பார்ப்பிறகு அதிகமாகவே (கஜா புயலின் தாக்கத்தைப்போல) நமக்கான தகவல்களை வழங்குகிறார்.
புயலுக்கு முன் அமைதி ஏற்படுவதுபோல, வேலை பார்க்கும் இடத்தில் பழக்கமாகும் சிந்துவுடன் அரும்பும் காதல் அமைகிறது. அந்தக் காதலின் உச்சமாக அவளைத் தன் ஊருக்கு அழைத்து வரும் நாயகனுக்கு அவனது குடும்பத்தினரால் பெரிதளவில் எதிர்ப்பு, ஏற்படவில்லை என்றாலும் அவர்களின் உணர்வுகள் எவ்வாறு காயப்படுகிறது என்பதைச் சில வரிகளில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சிந்துவின் உறவினர்கள் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவனைத் தங்கள் மகள் திருமணம் செய்துகொண்டால் அந்த உறவையே முறித்துக்கொள்ளத் துணிவதும், அதை மறந்து, காதலையும் மறந்து சிந்து திரும்பிச் செல்வதும் சந்தர்ப்பவாதத்திற்கு உதாரணம். இருவருக்கும் இடையிலான காதல் உருவான வேகத்திலேயே காணாமல் போவது உண்மைக்காதல் என்று ஒன்று இல்லையோ என்ற கேள்வியை நமக்கு ஏற்படுத்துகிறது.

வானிலை ஆய்வு மையங்களின் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருப்பதாக வரும் உரையாடல்கள் நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது. புயல் எப்பொழுது வரும், அது எந்தப் பகுதியில், எப்பொழுது கரையைக் கடக்கும், அதன் வேகம் எப்படி இருக்கும் என்று எதையுமே சரியாகக் கணிக்க முடியாத அளவு இயற்கையின் ஆற்றல் இருப்பதும் உண்மை.
ஓர் இரவில் கதையின் நாயகன் தனது நண்பர்களுடன் புயலை எதிர்கொள்வது குறித்த சம்பவங்களின் தொகுப்பு நம் கண்களை வாசிப்பில் இருந்து விலகவிடாமல் கட்டி வைத்துவிடுகிறது. புயலின் கோரத்தை, தாக்கத்தை, உக்கிரத்தை வரிவரியாக விவரித்திருக்கும் பாங்கு ஆசிரியருடன் நம்மையும் புயலில் சிக்கிப் பரிதவிக்க வைக்கிறது. காற்றின் வேகம் ஏற்படுத்தும் சப்தம் எத்தனை பயத்தினை உண்டாக்கும் என்பதையும், பனைமரங்களின் அழிப்பினால் கரைகளுக்கான பாதுகாப்பு எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதும் நமக்குச் சொல்லப்படும் தகவல்கள்.
இயற்கையின் ஆற்றலுக்கு முன் நாம் ஒன்றுமற்றவர்கள். புயலின் தாக்கம் எப்படி ஆரம்பிக்கும், அதன் ஆரம்பம் ஏற்படுத்தும் சேதத்தைவிட அது கடந்து போகும் போது ஏற்படுத்தும் சேதம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதையும், அதன் பிறகு மரங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் என்று வாழ்வாதாரத்திற்கு எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் அழித்துத் தரைமட்டமாக்கிச் செல்வது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மட்டுமல்லாமல் வாசிக்கும் நம்மிடமும் வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது.
இயற்கை ஆற்றல் பல நன்மைகளை அளித்து நம்மைப் பாதுகாப்பதுபோல அதன் ஒரே ஒரு சீற்றம் நம்மைச் சீரழித்து விடுகிறது. பேரிடர் நிகழ்ந்து, சாலைகளை இழந்து, விலைநிலங்களை இழந்து, வீடு, உடைமைகளை இழந்து உயிர்ச் சேதத்தையும் சுமந்து வாடும் மக்களுக்கான உதவிகளைச் செய்யவேண்டிய அரசு, மக்கள் கேட்கும் நியாயத்திற்கு அளிக்கும் தீர்ப்பு வன்முறை. உள்ளூர் தொழிலாளிகள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தருணத்தில் வடநாட்டில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து தங்கள் பணிகளைத் தங்கு தடையின்றி நிறைவேற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும் கார்ப்பரேட் சதியை நினைவுபடுத்துகிறது.
பெரியப்பா, அம்மா, சகோதரி லதா என்று பாசப்பிணைப்பிற்குள் வாழும் கதாநாயகன் சமூகச் சீரழிவும் அரசியல் அத்துமீறல்களும் நிகழும்போது ஒரு பொறுப்புமிக்க இளைஞனாகப் போராடுவது சிறப்பு. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நன்மையிலும் தீமையிலும் உடன் வருவது நண்பன் ஒருவனே என்பதற்கு பொதுவுடைமை கதாபாத்திரம் ஒரு சான்றாகத் திகழ்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக வந்து ஓட்டுக் கேட்கும் அமைச்சர் பேரிடர் காலத்தில் கூட தமது தொகுதியைப் பார்வையிட வர விரும்பாத நிலையே நம் நாட்டில் நிலவுகிறது. ‘ஒரு சராசரி மனிதனை தடம் மாற்ற – வறுமை, தனிமை இரண்டில் ஒன்று வேண்டும்’ என்ற வரிகளுக்குள் வாழ்வின் உண்மை பொதிந்திருக்கிறது.
இறப்பின் பின்னணி, இயற்கை வள அழிப்பு, கார்ப்பரேட் சூழ்ச்சி, அநீதியினை எதிர்க்கும் மக்கள் மீது புயலின் பாதிப்பிலும் அத்துமீறும் காவல்துறையின் வன்முறை என அனைத்திற்கும் அடித்தளமாக, சங்கிலித்தொடராக நடத்தப்படும் சாதிப்பிரிவினை ஆகியவை மனிதம் என்ற உணர்வைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்பதை ஒவ்வொரு பக்கமும் நம் மனதில் பதியவைக்கிறது. ஆற்று முகத்துவாரத்தில் அணை கட்டப்படாததால் அந்தக் கிராமமும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் சந்திக்கும் பேரழிவினை நாவல் ஒவ்வொரு காட்சியாக நிரூபிக்கிறது.
நாவலின் ஆரம்பத்தில் இருந்து சொல்லப்பட்ட ஒவ்வொரு இயற்கை விதி மீறல்களையும் ஒன்றிணைத்து அதன் விபரீதம் வெளிப்படுத்தும் பேரழிவை நம் கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர். தவறான இடத்தில் கட்டப்பட்ட அணையின் பின்னணியில் சுட்டிக்காட்டி வழக்குத் தொடுக்கும் இளமாறனின் முயற்சியின் வாயிலாக கோட்டகம் மக்கள் மீதும் கிராமத்தின் மீதும் சிறு வெளிச்சத்தை ஊடுருவச்செய்து நாவலை நிறைவு செய்திருப்பது நமக்கு நிம்மதியையும் நம்பிக்கையும் அளிக்கிறது.
