மயிலம் இளமுருகு
சாலை செல்வம் அவர்கள் பெண்ணிய செயல்பாட்டாளர், குழந்தைகளுக்கான கதைசொல்லி. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளின் கல்வி உரிமை, மாற்றுக் கல்வி குறித்து எழுதியும், பேசியும் வருகிறார். இது குறித்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்சமயம், புதுவையில் கல்வி குறித்த தன்னார்வக் குழுவில் பணியாற்றி வருகிறார். ‘அம்மாவின் சூப்’, ‘தம்பி தொலைந்து போனான்’, ‘மனிதர்கள் குரங்கான கதை’, ‘பறவைகளின் வீடுகள்’, ‘யானை’, ‘இரவு’, ‘யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்திருந்தால்’ உள்ளிட்ட பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதியுள்ள நூலே வாழ்வியலாகும் கல்வி என்பதாகும். சுதந்திரமான கல்வி, குழந்தைகள், பள்ளிக்கல்வி குறித்த தெளிவான புரிதல் கொண்டு செயல்பட்டு வருபவர்களில் இவரும் குறிப்பிடத்தகுந்தவர்.

மாற்றுக்கல்வி என்பது என்ன என்றும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 17 பள்ளிகளின் சாதனைப்பணிகளை மிக விரிவாகவும் நம்பகத்தன்மையோடும் இந்நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். அவருக்கும் அவரோடு பயணிக்கும் செயல்பாட்டளர்களுக்கும் வாழ்த்துகள். இப்படியான பணிகள், இது போன்ற பள்ளிகள் இன்னும் சிறப்பாகத் தொடர உத்வேகம் அளிக்கும். மேலும் பல பள்ளிகள் தோன்ற வழிவகுக்கும் என்றும் சொல்லலாம். கல்விக்கான தாகம்! அது-வெறும் புத்தகக் கல்வி அன்று. மாற்றுக் கல்வி- உரிமைக் கல்வி- சுதந்திரக் கல்வி- விடுதலைக் கல்வி என்பதாகும். சாலை செல்வமும் அவர் நண்பர்களும் குழந்தைகளுக்காகத் தொடங்கிய நூலகத்தின் பெயர் கூழாங்கல். உண்மையில், நூலக வரலாற்றில் அது ஒரு மைல் கல்! கூட்டு வேலையிலும், உரையாடல்கள் மூலமும் செழுமைப்பட்டவர் சாலை செல்வம். எனவேதான், பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், இடையறாத போராட்டத்துடனும் தமிழகத்தில் நடந்து வரும் மாற்றுக் கல்வி முயற்சிகளை ஒரு நூலாகத் தொகுக்க அவரால் முடிந்திருக்கிறது. ஆழ்ந்த ஈடுபாடும், தொடர் சந்திப்பும், சலியாத உழைப்பும் இருந்தால் மட்டுமே இத்தகைய நூலைத் தருவது சாத்தியம்… என்று கல்வியாளர் ச. மாடசாமி அவர்கள் முன்னுரையில் கூறியுள்ளார்.
சமம் என்ற கருத்தையும் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள். ‘சமமாக நடத்துவது என்பது ஒரே மாதிரி சொல்லிக் கொடுத்துவிட்டுப் படித்துக்கொள்ளுங்கள் என்பதா? ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதுதான் சமத்துவம்’ (மருதம்) என்ற பார்வை பாராட்டுக்குரியது. ஒரே நாடு என்று பொய் முழக்கமிட்டு, தடுமாறும் எளிய மக்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் அரசியல் தந்திரத்தை ஊடுருவி உடைக்கும் பார்வை இது! என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
வஷீம் சீலியின் ‘குழந்தைகள் வாழ்க’, டெட்சுகோ குரோயாநாகியின் ‘டோட்டோ – சான்’, ஜிஜுபாய் பதக்கின் ‘பகல் கனவு’, எச்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்ற புத்தகங்களை 24வது வயதில் படிக்கும் வரம் பெற்றவள் நான். இந்தக் காலகட்டத்தில் நான் படித்த ‘ஒற்றை வைக்கோல்’ புரட்சி நூல் என்னை விவசாயத்தை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது.
ஒரு புறம் நம்மாழ்வாரின் கொழுஞ்சிப் பண்ணையை நோக்கியும் மற்றொரு புறம் பள்ளிக்கூடங்கள் நோக்கியும் பயணித்தேன் என்று என்னுரையில் எழுத்தாளர் சாலை செல்வம் எழுதியுள்ளார். கல்வி என்பது பணம் சம்பாதிக்க மட்டுமானதன்று; மதிப்பெண்களை மையமாக வைத்துக் குழந்தைகளை அணுக வேண்டிய அவசியமில்லை; மனப்பாடக் கல்வியை விட்டு விடுதலையாகி குழந்தைகளின் திறன்களை வேறு அளவுகோல்கள் கொண்டு மதிப்பிட முடியும் போன்ற கருதுகோள்கள் குறித்து நம்மில் பலரும் பேசுகிறோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுவோர், முன்மாதிரிகளாகக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாக இப்பள்ளிகள் இருக்கின்றன. இப்புத்தகம் இத்தகைய பள்ளிகளைப் பற்றியது என்று நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வியில் ஈடுபாட்டை வளர்க்கும் புதுமையான வகுப்பறை முயற்சிகளைப்பற்றித் தொடர்ந்து வாசித்து வந்த வாசகர்கள், அவை பற்றி உரையாடத் துவங்கினர். ஆசிரியராக, பெற்றோராக, கல்வியில் ஈடுபாடுடையவராக, சமூக ஆர்வலர்களாக, நல்முயற்சிகளைப் பாராட்டுபவர்களாக பலநிலைகளில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இவர்களின் கருத்துகள், அக்கறைகள்தான் இந்நூல் வெளிவரக் காரணங்களாக இருந்திருக்கின்றன. மாற்றுக் கல்வி என்பது குறித்து விளக்கமாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. மணியடித்தால் வகுப்பறைக்குள் இருக்க வேண்டிய ‘நிர்ப்பந்தம்’, எங்கு சென்றாலும் சீருடை அணிந்து வரிசை யில் நடந்து செல்வது, குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள் முடக்கப்படும் உணவு நேரம், விளையாட்டு, வகுப்பறையில் பேச, கேள்வி கேட்க இயலாததால் பறிபோகும் சுதந்திரம், தனித்தன்மைக்கு மதிப்பளிக்காத கற்றல், மதிப்பீட்டு முறைகள் – சுருக்கமாகச் சொல்வதென்றால் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதல் என்பதுடன் மட்டும் பிணைக்கப்பட்டவற்றைக் கல்வியாகக்கொண்டு அவற்றை நமது பள்ளிகளில் பத்திரப்படுத்தி வருகின்றனர்.
சமூக மாற்றத்தைச் சாதிக்க சாவித்திரிபாய் பூலே கட்டமைத்த கல்வி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் வளர்க்கவல்ல கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த பெரியாரின் கருத்துகள், பண்பாடு, கலைகளை இணைத்து வழங்கிய தாகூரின் கல்வி உலகம், காந்தி முன்வைத்த செயல்வழிக் கற்றல் முறை, மாண்டிசோரி குறிப்பிடும் சுதந்திரமான கற்றல் முறை, ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்று அழைப்பு விடுத்த அம்பேத்கரின் கல்விச் சிந்தனை, செயல்பாடுகள் என இந்திய அளவிலும் நமக்கு ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன. மாற்றுக் கல்வியை வழங்கும் பள்ளிகளின் சிறப்பம்சங்களை நாம் இவ்வாறு தொகுக்கலாம்: தாம் தேர்ந்தெடுத்துள்ள கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் கற்றலை முன்னெடுத்துச் செல்லுதல். அதாவது கல்வி என்பதை வெறும் செயல்திறன்களை வளர்ப்பதாக மட்டும் கொள்ளாது சமூக மாற்றம், சமூகத் தேவைகள் ஆகியவற்றுடன் இணைத்துச் செயல்படுதல்.
கற்றல் என்பது வெற்றி, தோல்வி என்கிற பொது விதிக்கு உட்பட்டதன்று. ஒரு விஷயத்தைப் புரிந்து, அறிந்து, வாழ்க்கையில் பயன்படுத்துவது என்பதற்கு இட்டுச் செல்வதாகும் என்பதால் அந்த அடிப்படையில் பள்ளிகளின் நடைமுறையை வடிவமைத்தல். இப்பள்ளிகளில் மாணவர்களைச் சக மனிதர்களாக பாவிக்கின்றனர். அவர்களுடன் இணைந்து விளையாடுதல், சேர்ந்து உணவு உண்ணுதல், வாசித்தல் என மாணவர்களுக்கான பலவிதமான ஏற்பாடுகள் இயல்பாகவே அமையும்படி ஏற்படுத்தியுள்ளனர். குழந்தைகளைத் தண்டித்தல் என்பது அறவே தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அப்பழக்கம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய, பள்ளி, வீடு, அக்கம்பக்கம் என்று குழந்தை புழங்கும் வெளிகளைப் பற்றி யோசிக்கின்றனர். குழந்தைகளுடன் தொடர் உரையாடலில் ஈடுபடுகின்றனர். ஒரு முறை ‘இனி செய்யாதே’ என்று குறிப்பிடுவதால் இப்பழக்கம் மாறப்போவதில்லை. ஆகவே அதற்கென்று குறிப்பிட்ட செயல்பாடுகளைக் குழந்தைகளின் முன்வைக்கின்றனர். குழந்தையின் தனித்துவத்தை வளர்ப்பதோடு குழந்தையின் உள்ளார்ந்த திறன்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்துதல்.
பள்ளிப்பாடம் என்பதுடன் முடித்துக்கொள்ளாமல், உழைப்பை, குறிப்பாக உடலுழைப்பை மதித்தல், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை, வன்முறையற்ற மனநிலையை வளர்த்தல், ஆண்-பெண் சமத்துவம் என்பன போன்ற விழுமியங்களை முன்வைத்துச் செயல்படுதல். சில மாணவர்களுக்கு எழுதப் படிக்க ஆர்வமில்லை என்றால் அவர்களுக்கு அதை இரண்டாவது செயலாக மாற்றுகின்றனர். மற்றவர்கள் படிப்பதைக் கவனிப்பது, அவர்களின் கருத்தை மற்றவர்கள் மூலம் எழுத வைப்பது, வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தத் தொடர் செயல்பாடுகளை முன்வைப்பது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அக்குழந்தைக்கு எதில் ஈடுபாடு உள்ளது என்பதை உணர்ந்து அதை ஊக்குவிப்பது என இச்செயல்பாடுகள் நீள்கின்றன.
ஆசிரியர்களிடமிருந்து குழந்தைகள் கற்பது போலவே குழந்தைகளிடமிருந்து ஆசிரியர்கள் கற்கும் கூறுகள் பற்றி நாம் பேசி வந்தாலும், நடைமுறையில் இது மிக அரிதானதாகவே உள்ளது. அரச இலையில் பீப்பி செய்தல், பறவைகளின் வாழ்வுமுறையை உற்று நோக்குதல், நியாயம் அநியாயம் சார்ந்த விவாதங்களில் கருத்துகளைப் பயமின்றி முன்வைத்தல் என்பன போன்ற மாணவர்களின் செயல்பாடுகள் ஆசிரியர்களை நின்று நிதானிக்கச் செய்கின்றன. எளிய குடும்பங்களிலுள்ள மாணவர்களின் திறன், அவர்களின் வாழ்வியல் கற்றுத்தரும் பாடங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் இப்பள்ளிகளில் கற்றலுக்கானவையாக முதன்மைப்படுத்தப்படுகின்றன. எல்லாப் பண்புகளும் செயல்பாடுகளும் ஒரு பள்ளியில் காணக்கிடைப்பது அரிது என்றாலும், இவற்றில் பலவற்றை இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பள்ளியும் பின்பற்றுவதைக் காண முடியும் என்ற தகவல்களை ஆசிரியர் விரிவாகவே கூறியுள்ளார். வித்யோதயா பள்ளி இடைநின்ற மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் உதவியுடன் இடைநின்ற மாணவர்கள் நூறு பேர் உண்டுஉறைவிடப் பள்ளியில் தங்கி கல்வியைத் தொடர்கின்றனர்.
வானவில் பள்ளி – பள்ளி தொடங்கப்பட்ட சூழல், காரணங்களை அதன் நிறுவனர்களில் ஒருவரான பிரேமா ரேவதி இவ்வாறு குறிப்பிடுகிறார். “சுனாமியால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்துபோன நாகப்பட்டினத்தில் சீரமைப்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதே பகுதியில் சில குழந்தைகள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். அவர்களைப் பின்தொடர்ந்தபோது அவர்கள் நாடோடிச் சமூகமான பூம்பூம் மாட்டுக்காரர்கள் (ஆதியன் சமூகத்தினர்) என்பது தெரிய வந்தது. அவர்களுக்கான சுனாமி உதவிகளைப் பெற்றுத் தந்ததோடு நாங்கள் வீடு திரும்பிவிடவில்லை. தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சென்றடையாத கல்வியை வழங்குவது என்று தீர்மானித்து ‘வானவில்’ பள்ளியைத் தொடங்கினோம்.’’ வித்யாவனம் பள்ளி – ஒவ்வொரு வகுப்பறையும் ஆய்வுக்கூடமாகவும் கலைக் கூடமாகவும் காட்சியளிப்பதைப் பள்ளி நிர்வாகி ஸ்ரீகாந்த் இவ்வாறு விளக்குகிறார். “சர்வதேச அளவிலான ஐ.ஜி.சி.எஸ்.இ. கிரேடிங் முறையில் எங்கள் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். காரணம், கற்றலுக்கான நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தும்போது கற்றல் தானாக நடைபெறுவதுதான்.
‘‘துளிர் கல்வி மையம் – வழக்கமான கல்வித் திட்டத்தைப் பின்பற்றி பாடம் நடத்தும் முறை எங்கள் கல்வி மையத்தில் பலனளிக்கவில்லை. அதன் பின்னர்தான் வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கல்வியில் இணைத்தல் என்ற உத்தியைக் கையாண்டு பாடங்களை நடத்த வந்தோம்” என்கிறார்கள் ‘துளிர்’ அமைப்பை நிறுவிய அனுராதாவும் கிருஷ்ணாவும். கட்டைக்கூத்துப்பள்ளி- மூன்று காரணங்களுக்காக தங்கள் பள்ளிக் குழந்தைகள் படிக்க வருவதாகச் சொல்கின்றனர் ராஜகோபால், ஹன்னா இணையர். கூத்தை முறையாகக் கற்பதற்காக வருகின்றனர். வழக்கமான கல்வியில் ஆர்வமில்லாமல் இருப்பதால் இங்கு வருவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. கற்றல் திறன் குறைவாக இருந்தால் இங்கு வந்தால் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் நம்புவதால் இங்கு சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, நல்ல கல்விக்கான இடமாகவும் இப்பள்ளி இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி, திண்டிவனம் மதிய உணவு வழங்க ஆரம்பித்தோம். இதற்கெல்லாம் போதுமான நிதி எங்களிடம் இல்லை. ஆனாலும் இன்றுவரை தினசரி எங்களுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு மதியச் சாப்பாடு அளிக்க முடிகிறதுஎன்றால் சமூக அக்கறை கொண்ட பலரின் உதவிதான் காரணம்” என்கிறார் பூபாலன்.
தாய்த் தமிழ்ப்பள்ளி, சங்கரன்கோவில், சங்கர் ராம் – தாங்கள் பார்த்தது பற்றி பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது, அவற்றை வரைவது, எழுதுவது என ஒரு சங்கிலித் தொடராகக் கற்றல் நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். “இந்தச் செயல்பாடுகள் எதிலும் மாணவர்கள் சோர்ந்து போவதில்லை, மாறாக உற்சாகம் பெறுகிறார்கள். இதன் மூலம் குழந்தைகள் தொழில்களை மதிக்கக் கற்றுக்கொள்கின்றனர்” என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி. மருதம் ஃபார்ம் பள்ளி – பறவைகளைப் பார்க்கவும் அறியவும் ஆசைப்படும் குழந்தைக்கு அதில் முழுமையாக ஈடுபடும் வழிவகைகளைச் செய்து தருகிறோம். அதேபோல, சிற்பம் வடிக்க விரும்பும் குழந்தையின் ஆர்வத்தைக் கண்டுபிடிப்பதையும் ஊக்குவிப்பதையும் கடமையாகக் கருதுகிறோம்” என்கிறார் இப்பள்ளியின் ஆசிரியை பூர்ணிமா. புவிதம் பள்ளி, நல்லம்பள்ளி – ‘‘மண்ணில் ஏன் விதை முளைக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘மண்ணுக்கு உயிர் இருக்கிறது’ என்று ஒரு மாணவன் சொன்னது இன்னமும் மனதில் உள்ளது. அப்பதில் மகத்தான தத்துவார்த்தச் சிந்தனையை ஒத்திருந்ததை உணர்ந்தேன். புவிதம் பள்ளியின் கற்பித்தல் முறையை இதுபோன்ற உணர்தல்களிலிருந்து வடிவமைக்கத் தொடங்கினேன்” என்கிறார் அப்பள்ளியின் நிறுவனர் மீனாட்சி. சோலைப்பள்ளி, கொடைக்கானல் – தத்துவஞானியும் மாற்றுக் கல்விச் சிந்தனையாளருமான ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கல்விமுறையை முன்மாதிரியாகக்கொண்டு இந்தப் பள்ளி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
“தங்கும் விடுதியோடு சேர்த்து 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது எங்களுடைய பள்ளி. 5-க்கு 1 என்ற மாணவ- ஆசிரியர் விகிதம் இங்குள்ள தனிச் சிறப்பு. 7 வயதுக்குமேல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் IGSCE பாடத்திட்ட முறையில் தேர்வெழுதுகின்றனர். வழக்கமான பாடங்களைப் போதிக்கும் அதே நேரம் ஒவ்வொரு பாடத்திலும் ஆழமாகப் பயணித்தல், விதம் விதமான கற்றலில் ஈடுபடல், நுட்பமாகக் கற்றல் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்கே கற்பவை அனைத்தும் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக மாற்றப்பட்டிருப்பதால் அவர்கள் கற்க வேண்டிய பாடமாக இல்லாமல் அத்தியாவசியமான கற்றலாக மறி விடுகிறது” என்கிறார் பள்ளியின் செயலர் சித்ரா.
க்ரியா சில்ரன்ஸ் அகாடமி – ‘மரங்களைக் கொல்வது உயிர்க்கொலை’ என்ற பதாகைகளோடும் கோஷங்களோடும் தன்னெழுச்சியாகச் செயல்படத்துவங்கினர். ஒருமுறை பள்ளியில் அரச மரம் ஒன்று பட்டுப்போகும் நிலையில் இருந்ததைக் கண்டு, மரத்தை மீட்கும் வேலையில் இறங்கினார்கள் மாணவர்கள். கூடி நின்று கவனிப்பது, நீரூற்றுவது, மரத்துடன் பேசுவது, வீட்டிலிருந்து சாணி கொண்டுவந்து பதியம் போடுவது போன்ற செயல்பாடுகளால் அந்த மரம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது” என்கிறார் ‘மரங்களின் நண்பர்கள்’ இயக்கத்தை வழிநடத்தும் ஜான்பீட்டர். பயிர்ப் பள்ளி, தேனூர் – ‘‘மாற்றுக் கல்வி முறைகளைக் கடைப்பிடிக்கும் பள்ளிகளுக்கு எங்களுடைய ஆசிரியர்கள் செல்கிறார்கள். அங்குள்ள செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு அவற்றை எங்கள் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன” என்கிறார் பயிர்ப் பள்ளியின் தலைமையாசிரியர் பச்சைமுத்து.
இந்தியன் வங்கி ஊழியர் சங்கப் பள்ளி – வழக்கமான படிப்பைத் தாண்டி படைப்பாற்றலுக்குச் சனிக்கிழமைதோறும் நேரம் ஒதுக்குகிறோம்.
அறிவியலை அறிதல், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடல், சமூக ஆர்வத்தோடு செயல்படல் ஆகியவற்றை எங்கள் மாணவர்களுக்கு ஊட்டுகிறது ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’. தும்பைப் பூச்செடியைச் சாயம் ஊற்றிய நீரில் ஊற வைத்தால் அது எப்படி நிறம் மாறுகிறது, ஏன் அப்படி நடைபெறுகிறது, உருளைக்கிழங்கில் உள்ள சக்தி மூலம் டைனமோ எரிவதைச் செய்து காட்டல் போன்றவை மாணவர்களுக்கு விளையாட்டுப்போல் செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டப்படுகின்றன.
இன்னொன்று, அறிவியல் ஆய்வுச் செயல்திட்டம். இளம் விஞ்ஞானிகளுக்கான இந்தத் திட்டத்தில் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி விருதை எங்களுடைய மாணவர்கள் நான்கு முறை வென்றுள்ளனர்’’ என்கிறார் தலைமை ஆசிரியை செ.வாசுகி. சூர்யா பள்ளி, சேலம்- தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி தருவதை அவர்களுக்கான விடுதலையாக உணர்ந்து அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். ‘‘அவர்களுக்குத் தரமான கல்வியைப் பற்றி யோசிப்பதும், கட்டணமில்லாமல் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்வியைக்கொண்டு செல்வதும் எங்கள் கடமையாக மாறிவிடுகிறது” என்கிறார் பார்வதி. பெற்றோர்களின் தேவை, குழந்தைகளுடைய கல்வி பற்றிய புரிதல், அரசாங்க விதிமுறைகள் ஆகிய அனைத்தையும் சமன்செய்து பள்ளியை நடத்த வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஐக்கியம் பள்ளி, ஆரோவில் ‘‘பள்ளியைச் சமூகமாக மாற்றித் தேர்தல் நடத்தினோம். தேர்தலின் இலக்கு: குப்பை இல்லாப் பள்ளி வளாகத்தை உருவாக்குதல். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் இதைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்” என்கிறார். ‘ஐக்கியம்’ பள்ளியின் தலைமையாசிரியர் சங்கர் வெங்கடேசன். உதவிப் பள்ளி, ஆரோவில் ‘‘மனப்பாடம் செய்தல், கடுமையான பரீட்சை முறை என்கிற வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டம்தான் எங்களுடைய பள்ளியிலும் இருந்து வந்தது. பிறகு ஆரோவில்லில் உள்ள 15 தன்னார்வலர்களின் முயற்சியால் அந்த முறை மாற்றி அமைக்கப்பட்டது. பள்ளியை நிறுவிய நடா, மேகி, அனுபென் ஆகியோர் கல்வியில் புதுப்புது முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் பேரார்வம் கொண்டு பங்காற்றினார்கள்” என்கிறார் பள்ளி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த சஞ்சீவ்.
வெள்ளைத் தாமரைப் பள்ளி, கடலூர் – ‘‘நடனம், ஓவியம் உள்ளிட்டவை பற்றி அறிவார்த்தமான உரையாடலிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருகிறோம். ஆசிரியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பிரான்ஸிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மூலமாகவும் செயல்படுத்தி வருகிறோம்” என்கிறார் செல்வி சர்க்கார்.
இந்நூலின் இறுதியில் நூலாசிரியர் இந்நூல் எழுதக் காரணமாக இருந்தவர்கள், உதவி செய்தவர்கள், முன்னுரை, ஓவியம், வ.கீதா, நூலைச் சரிசெய்த கமலாலயன், பாரதி புத்தகாலயம் எனப் பலருக்கு தன் நன்றியைப் பதிவு செய்துள்ளார். இது போன்ற பணிகள், செயல்பாடுகள் தமிழ்ச்சமூகத்திற்கும் கல்விப்பணிக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு மேலும் பல ஆக்கங்களைத் தருவார் என்று நம்புகிறோம். எழுதிய சாலை செல்வம் அவர்களுக்கும் பதிப்பித்த புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகத்திற்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
