ப்ரதிபா ஜெயச்சந்திரன்
“இசையின் நல்ல குணம் என்ன தெரியுமா? அது உங்களைத் தாக்கும்போது உங்கள் வலிகள் எல்லாம் பறந்து போய்விடும்” – பாப் மார்லி.
உலகெங்குமுள்ள இளைஞர்களைக் கவர்ந்த ஓர் ஆளுமை யார் என்று கேட்டால், சே குவேரா என்று சொல்லிவிடலாம். அவருக்கு இணையாகப் பேசப்படும் வேறோர் ஆளுமைதான் பாப் மார்லி. இவர் கைகளில் கிடார் ஏந்திக் கலகம் செய்தவர். ‘நான் இறந்தாலும் என் இசை வாழும்’ என்று அவர் தன் வாழ்நாளில் அறைகூவினார். ‘உங்கள் வரலாற்றை மட்டுமல்ல, உங்கள் விதியையும் மறந்துவிடாதீர்கள்’ என்று தன் பின்னால் திரண்டிருந்த இளைஞர்களிடம் கூறினார் பாப் மார்லி. ஒரு நாட்டின் இளைஞர்கள் தங்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டுமானால், அவர்கள் தங்கள் வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.
பாப் மார்லியின் வாழ்க்கைத் தொடர் ஜூனியர் விகடனில் வெளியாகி வாசகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். அதற்குக் காரணம், இந்நூலாசிரியர் ரவிக்குமார் அவர்களின் விறுவிறுப்பான நடை என்று அத் தொடரைப் படித்தோர் உணர்ந்துகொள்ள முடியும். கட்டுரைத் தொடரைக்கூட இவ்வளவு விறுவிறுப்பாக எழுத முடியுமா என்று அனைவராலும் வியந்து பாராட்டப்பட்ட தொடராகும்.
பாப் மார்லியின் ‘பஃபல்லோ சோல்ஜர்’ என்னும் பாடல் நம் தமிழ்த் திரையிசையில் இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்ட வரலாறும் உண்டு.’ ‘தமிழ் இளைஞர்கள் பாப் மார்லியைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால் அவர்களின் இசை ரசனை மாறும் என்பதற்காகவே நான் இந்த நூலை எழுதினேன்’ என்று இந்நூலாசிரியர், இந்நூல் எழுதப்பட்டதற்கான காரணத்தைக் கூறுகிறார்.
பாப் மார்லியின் தனித்த இசைப்பாணி ‘Reggae’ ஆகும். ரெகே அவர் செதுக்கி எடுத்த இசைப் பாணி. இது உலகெங்கும் பரவியுள்ள ராக் இசை போன்ற முக்கியமான இசை வகைமை ஆகும். இது அவரே எழுதி, இசை அமைத்து அவரே பாடி இவ்வுலகின் இசை மேடையில் அரங்கேற்றினார். ரெகே பாடல் வரிகள் உலகம் உள்ளவரை மனித குலத்தின் நீதிக்காகவும் சமாதானத்திற்காகவும் குரல் கொடுக்கும். ரெகே என்னும் இசை வகைமை, ஜமாய்க்காவின் நாட்டுப்புற இசைக்கான ஸ்கா, ராக்ஸ்டெடி, டஃப், டான்ஸ் ஹால், ரக்கா ஆகிவற்றின் ஒரு கலவையான, அவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த இசை வடிவமாகும்.
மலை நகரங்களுக்குப் பொழுது போக்க வந்த நார்வெல் சிங்லோ மார்லி என்ற ஐரோப்பிய ராணுவ அதிகாரிக்கும், செடெல்லா புக்கர் என்னும் ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு கறுப்பினப் பதின்ம வயதுப் பருவப் பெண்ணுக்கும் (06/02/1945-இல்) பாப் மார்லி பிறந்தார். அந்த ஐரோப்பியரால் கைவிடப்பட்ட செடெல்லா என்ற தன் தாயுடன் கிங்ஸ்டன் சேரியில் வளர்ந்தார் பாப். படிக்க வசதியற்ற நிலையில் தனது பதினான்கு வயதில், வெல்டராகப் பணியில் சேர்ந்தார்.
சிறு வயது முதலே, இசையில் நாட்டம் கொண்ட அவர், 1965 ஆம் ஆண்டில், தனது பதினாறாவது வயதில் ‘வெய்லர்ஸ்’ என்ற ஓர் இசைக்குழுவை உருவாக்கினார். அவர் தனது வாழ்நாளில் சாதிக்க நினைத்ததெல்லாம் ஒரு பெரிய இசைக்கலைஞனாக வேண்டும் என்பதுதான். அதுவே அவரது லட்சியமாக இருந்தது. ஆரம்ப நாட்களில் அவர், Simmer Down, Rule Them Rudie, It Hurts to be Alone போன்ற இசை ஆல்பங்களை வெளியிட்டார். ஆனாலும் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஜமைக்காவில் இந்தப் பாடல்கள் அவருக்குப் புகழ் தேடித்தந்தன.
பின்னர் 1966-இல் தனது தோழியான ரீட்டா ஆண்டர்ஸனை மணந்து கொண்டார். மணம் முடித்த மறுநாளே, தன் மனைவியைப் பிரிந்து அமெரிக்கா சென்று பொருளீட்டத் துவங்கினார். அங்கே தன் அம்மாவுடன் தங்கியிருந்து, பல வேலைகளைச் செய்து ஆல்பம் வெளியிட முயற்சித்தார். அங்கே அவர் துப்புரவுப் பணியாளராகவும் பணிபுரிந்தார். பின்னர் மீண்டும் ஜமைக்கா திரும்பினார். அங்கே, தன் மனைவியுடன் இணைந்து, கிங்ஸ்டனில் ஓர் இசைத்தட்டு நிறுவனத்தை உருவாக்கினார். ஆனாலும் இந்த முயற்சி, அவருக்குப் பெரும் தோல்வியைத்தான் தந்தது. இவர் தன் மனைவியைத் தொடர்ந்து ரஸ்தஃபாரி மதத்தைத் தழுவினார். இவரின் தலைமுடியைப் பின்னல்களாக்கிக் காட்சியளித்தார். இந்த சிகையலங்காரம் இன்றளவும் ஏராளமான இளைஞர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
‘பாப் மார்லி இசைப்போராளி’ என்னும் இந்நூல் ஆந்திரப் புரட்சிப் பாடகர் கத்தருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருபத்தேழு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இப்போதும் படிப்பதற்கு விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்ததாகத் திகழ்கிறது. மார்லியின் செல்லப் பெயர் நேஸ்டா. ஐந்து வயதுவரை தன் அப்பாவைப் பார்த்திராத சிறுவன் நேஸ்டா, முதல்முறையாகத் தன் அப்பாவைக் கிங்ஸ்டன் நகரில் சந்தித்தான். அப்பாவின் வற்புறுத்தலுக்காக நேஸ்டா தன் அம்மாவைப் பிரிந்து தன் படிப்பிற்காகக் கிங்ஸ்டன் நகருக்கு வந்திருந்தான்.
நேஸ்டாவுக்கு 12, 13 வயதிருக்கும்போது, பிரபலமடைய ஆரம்பித்தான் தனது பாடல்களால். அவன் வேலை பார்த்த வெல்டிங் கடை முதலாளி டெஸ்மண்ட் டெக்கரின் வற்புறுத்தலால் மார்லே மூன்று பாடல்களை எழுதினான். ‘மற்றவர்களை மதிப்பிடும்முன் உன்னையே நீ மதிப்பிட்டுப் பார்’ என்று அடிக்கடி தன் தாத்தா சொல்லும் இந்த வாசகத்தைக்கொண்டு பாடல் எழுதினான். அதேவேளையில் அப்போது புகழ்பெற்ற நிறுவன உரிமையாளர் லெஸ்லி கோங் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மார்லியின் பாடல்கள் அவருக்குப் பிடித்திருந்ததால், அவர் மார்லியுடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டார். அது 1962-ஆம் ஆண்டு. முதன்முதலாக மார்லியின் பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந்த வருடம். அந்தப் பாடல்களுக்கு அவனுக்குக் கிடைத்த ஊதியம் 20 பவுண்டுகள் மட்டுமே.
பாப் மார்லியை உணர்வுள்ள ஒரு விடுதலைப் பாடகனாக மாற்றிய சம்பவம் ஒன்று அப்போது நடந்தது. ஒருநாள் சாலையோரமாக இருந்த கடை ஒன்றில் பாப் உட்கார்ந்திருந்தான். அப்போது அவன் கண்ணில் பட்ட செய்தித்தாளிள் வெளியாகியிருந்த செய்தி ஒன்று அவனது பாதையை மாற்றி அமைத்தது. மேற்கத்தியப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.
“ஜமைக்காவின் கறுப்பின மக்கள் அந்நிய இனத்தவரிடம் பலகாலம் அடிமைகளாக உழைத்துவிட்டார்கள். இப்போது புதிதாக வந்துள்ள சீன நாட்டு எஜமானர்கள், வெள்ளையர்கள் நீக்ரோக்களை நடத்தியது போலவே நடத்துகிறார்கள். இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகும்கூட கறுப்பர்கள் தமது இனத்தவரைவிட வெள்ளையர்களுக்காகப் பாடுபடுவதையே விரும்புகிறார்கள்.
“மக்கள் தொகையில் 75 சதவீதத்தினராக கறுப்பின மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் இங்கே உள்ள வங்கி எதில் போய்ப் பார்த்தாலும், அங்கே கறுப்பினத்தவர்கள் தவிர மற்ற இனத்தவர்கள் வேலை செய்கிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒரு சில கறுப்பினப் பெண்களும் தாங்கள் நீக்ரோ என்று அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. இது நீக்ரோ இனத்துக்கே பெரிய அவமானம்
“கறுப்பின மக்கள் தமது நிலையை எண்ணித் திருப்தியடைந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது தவறு. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மரியாதையை விரும்புகிறார்கள். அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் பணம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அடுத்த முப்பதாண்டுகளில் நிலைமை இப்படியே இருந்துவிடாது. மாற்றம் என்பது சமூக வளர்ச்சிப் போக்கில் வரவேண்டும். இல்லாவிட்டால், வெள்ளையர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டார்களோ, அதே முறைகளைப் பயன்படுத்தி அந்த மாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும், எப்படியாவது நாம் விரும்பியதை நாம் அடைந்தே தீருவோம்” –என்று அக்கட்டுரை முடிந்திருந்தது.
இந்த அறிக்கை, தனது தலையில் யாரோ அடித்தது போன்ற ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போதுதான், மார்லி, தனது இசையைச் சமூக விடுதலைக்கான ஆயுதமாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தான். அவனது பாடல்களில் புரட்சி நெருப்பு அப்படித்தான் பற்றிக்கொண்டது. ஒரு வெள்ளையனின் மகனாகப் பிறந்த மார்லி தனது பிறப்பில் நேர்ந்துவிட்ட பிழையைச் சரி செய்யத் தனது கறுப்பின அடையாளத்தையே கொடியாக ஏந்தினான்.
எத்தனை இனிது எத்தனை இனிது
கடவுளின் முன்பு மனிதனின் முன்பு
கைகள் கோர்த்து ஆப்ரிக்கர்கள் யாவரும்
ஒன்றாய் நிற்பது
எத்தனை இனிது சொல்லிவிட்டார்கள்
இப்போது முடிப்போம்
ரஸ் டஃபாரியின் பிள்ளைகள் நாம்
உலகில் உயர்ந்த இனத்தவர் நாம் – புரட்சி வரிகள் மார்லியின் பாடல்களில் கொப்பளித்து வேகமெடுத்தன. அதன் பின்னர், தான் பார்த்துவந்த வெல்டிங் தொழிலைவிட்டு முழு நேரமாக இசையை நோக்கிப் பயணப்பட்டான் பாப் மார்லி.
தனியாகப் பாடிக்கொண்டிருந்த பாப் மார்லி, பின்னர் தன் நண்பர்களுடன் ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தான். 1963-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், அந்தக் குழுவிற்கு ஒரு பெரிய மாற்றம் ஒன்று வந்தது. அப்போது காக்ஸன் என்பவர் ஆரம்பித்த ரெக்கார்டிங் நிறுவனம் பாப் மார்லியை நெருங்கி ஒப்பத்தம் ஒன்றைப் போட்டது. பாடல் ஒன்றுக்கு 20 பவுண்ட் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஸிம்மர் டௌன் என்னும் அந்த இசைப் பாடல் ’இளைஞர்களே வன்முறையைக் கைவிடுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தது. அந்த ஆல்பம் ஏறக்குறைய 70,000 விற்றுத் தீர்ந்தது. இதனால் காக்ஸனுக்குத்தான் மிகுந்த லாபம் கிடைத்தது.
அதன்பின்னர் பாப் மார்லியின் வாழ்க்கை உலகம் அறிந்த ஒன்றுதான். அவன் வெற்றியின் சிகரங்களை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான். தன் வாழ்நாட்களில் மார்லி வாங்காத விருதுகள் இல்லை. ஜமைக்காவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது ஓயாத இசைப் பயணங்களின்போது 1977 –இல் அவருடைய கால் விரலில் புற்றுநோய் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர்கள் புற்றுநோய் மூளையை அடைந்துவிட்டதாகவும், விரைவில் இறந்துவிடுவார் என்றும் சொன்னார்கள்.
உடல்நிலை காரணமாகப் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எட்டு மாதங்களாக உயிருக்குப் போராடினார். 11/05/1981 –இல் மியாமி மருத்துவமனை ஒன்றில் தனது முப்பத்தாறாவது வயதில் மரித்தார். வாழ்ந்த காலங்களில் உயர்ந்தார், மரித்தபின் மனித மனங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்.
அவர் எழுதிப் பாடிய பாடல் ஒன்றைக் கீழே காணலாம்:
“ட்ரினிடாடில் ஒரு குடும்பம்
அந்தக் குடும்பத்தில் ஒரே குழப்பம்
ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பையன்
பையனுக்கு வயசாச்சு, கல்யாண ஆசை வந்தாச்சு
அழகான ஒரு பெண்ணைப் பார்த்தான்
ஆசையோடு அப்பாவிடம் சொன்னான்
‘அய்யய்யோ மகனே, அந்தப் பெண் வேண்டாம்
அவள் உன்னோட தங்கச்சி, உன் அம்மாவுக்குத் தெரியாது
அடுத்த வருஷம் வந்தது, கோடைக்காலம் பிறந்தது
அடடா இன்னொரு பேரழகி
அப்பாவிடம் ஓடினான், அவளைப்பற்றிக் கூறினான்
அய்யய்யோ மகனே அந்தப் பெண் வேண்டாம்
அவள் உன்னோட தங்கச்சி, உன் அம்மாவுக்குத் தெரியாது
ஆத்திரம் வந்தது அவனுக்கு, அம்மாவிடம் ஓடினான்
எல்லாவற்றையும் கூறினான், சிரிப்பு வந்தது அவளுக்கு
“அடப் போடா மகனே
உன் அப்பா உன்னோட அப்பா இல்லை
உன் அப்பாவுக்குத் தெரியாது
ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.”
பாப் மார்லியின் வாழ்க்கையை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதிய இன்னொரு புத்தகம் நிச்சயம் இருக்காது என்றுதான் கூறவேண்டும்.
இடையிடையே, பாப் மார்லியின் பாடல் வரிகள் விடுதலைக்கு வித்திட்டுச் செல்கின்றன. இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
