முனைவர் இரா. மோகனா
தன் வாழ்க்கை அனுபவங்களை இடையிடையே தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களைப் பதிவு செய்வதாக அமைவதே பயண இலக்கியம். அந்தப் பயண இலக்கியத்தில் கடுமையான பாதையைக் கடந்து சென்ற சௌகத் உஸ்மானியின் வாழ்க்கை அனுபவத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதால் இது வெறும் பயணக் கதை அல்ல. உஸ்மானி அவர்கள் சந்தித்த கண்ணீர்க் கதையாக அமைந்துள்ளது.

“1923ல் கான்பூரில் நடைபெற்ற சதிவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக ஒவ்வொரு நாளும் 15 மைல்கள் என் காலில் பூட்டப்பட்ட விலங்குகளை இழுத்துக் கொண்டே செல்லும்படி நடத்தியே கூட்டிச் சென்றபோதும்கூட எனக்கு அத்துன்பங்கள் எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை” என்கிறார் செளகத் உஸ்மானி. இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தை முளையிலேயே கிள்ள (வெள்ளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பெஷாவர் சதி) வழக்கிலிருந்து மயிரிழையில் தப்பியவரே உஸ்மானி.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்னப்பட்ட கான்பூர் மற்றும் மீரட் சதிவழக்குகளில் 16 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் இவர். இறுதிவரை புரட்சிக்காரராய் வாழ்ந்து மறைந்த இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சௌகத் உஸ்மானி அவர்களின் உள்ளம் கவரும் அனுபவப் பதிவுகளை இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
தேச விடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு மலை தாண்டி, நதி தாண்டி பெஷாவரிலிருந்து மாஸ்கோவிற்கு நடந்த ஒரு சாகசப் பயணம். விடுதலைப் போருக்கு உதவி கோரி கராச்சியிலிருந்து மாஸ்கோவிற்கு மீண்டும் ஓர் பயணம். தோழமை நாட்டின் வெற்றியைக் கண்டுகளிக்க டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு மூன்றாவது பயணம் என மூன்று முறை சோவியத் யூனியனுக்கு, தான் பயணித்ததைச் சொல்லும் பயணநூலே ‘ஒரு புரட்சியாளனின் பயணங்கள்.’ எனும் இந்நூல் ஆகும். இவரின் முதல் பயணம் சோவியத் நாட்டில் தாஷ்கண்டில் 1920 அக்டோபர் 17ஆம் நாள் தொடங்கியது. அக்டோபர் புரட்சிக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக கலகம் செய்வதற்கான தூண்டுதலை அளித்தது.
மெளலா பக்ஸ் உஸ்தா என்ற இயற்பெயர் கொண்ட செளகத் உஸ்மானி இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானீர் நகரில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர். 1920ஆம் ஆண்டு ஆப்கன் அமீர் அமானுல்லாகானின் அழைப்பை ஏற்று ஆஃப்கன் சென்றார். அமீர், நீங்களே சகோதரர்கள் என்று அழைத்து ஆப்கானிஸ்தான் நாடு உங்கள் நாடு. நான் மக்களின் பாதுகாவலன் மட்டுமே. உங்களை என் சகோதரர்களாக வரவேற்கிறேன், என்னிடம் உள்ள வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்ப உங்களை நான் கவனித்துக் கொள்வேன் என்று எங்களிடம் கூறினார். அமீருடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நேர்காணலுக்குப்பின் நாங்கள் ஒரு விருந்தினர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோம். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் மிகவும் தீவிரமாக விவாதிக்கத் துவங்கினோம்.
இன்பச் சுற்றுலா செல்வதற்காக இந்தியாவைவிட்டு நாம் வரவில்லை. எங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக நாங்கள் சுமார் 40 மைல்கள் நடந்தே பயணத்தைத் துவங்கினோம். எங்களைப் போலவே ஹிஜ்ரத் இயக்கத்தில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட ஏராளமான இளைஞர்கள் புறப்பட்டனர். ஒன்றல்ல, இரண்டல்ல 36 ஆயிரம் பேர்.
நாங்கள் நடந்தே கடந்த தூரம் சுமார் முன்னூறு மைல்கள். பனிக்காற்றிலும் மழையிலும் போதுமான உணவின்றி இந்திய விடுதலை என்கிற ஒன்றையே லட்சியமாகக் கொண்டு நடந்தோம். சோவியத் வெற்றியும் சாதனைகளும் ஒரு பகுதி இளைஞர்களை ஈர்த்தது. துருக்கியில் பிரிட்டிஷாரால் அநியாயமாக பதவி நீக்கப்பட்ட காலிஃபை மீண்டும் அப்பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்கிற எண்ணமும் இதில் இருந்தது.
பயணம் புறப்படுகிறபோது எந்த இளைஞரும் கம்யூனிஸ்டாக வேண்டும், மார்க்சியம் கற்க வேண்டும் எனும் வேட்கையோடு புறப்படவில்லை. ஆனால் இந்திய விடுதலைப் போரில் தலைமை தாங்கிய மிதவாதத் தலைமையின் போக்கில் நம்பிக்கை அற்ற இளைஞர்களுக்கு செஞ்சேனையின் வீரம் ஈர்த்தது. அவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்து நின்றனர்.
ஆப்கானிலிருந்து சோவியத் எல்லையிலுள்ள திர்மிஷ் எனும் இடம் வரை நடந்தே சென்றோம். பிறகு ஒட்டகம், படகு எனப் பயணித்த சாகச அனுபவம் குறித்தும் உஸ்மானி எழுதியுள்ளார்.
பயணத்தின் கடுமையைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது, “அந்த இடத்தை நோக்கி நாங்கள் இறங்கிச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. வழுக்குப் பாறையில் கவனமாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அந்தப் பாதையில் ஒரு டஜன் மைல் நடந்து வந்தபின் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கும் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம், நாங்கள் பாதை மாறி வந்து விட்டோம்” என்று தன் பயண அனுபவத்தை எழுதியுள்ளார். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைத் தாண்டுவது, வெயிலைத் தாங்க முடியாமல் இரவு மட்டும் பயணிப்பது. அந்த வலியை என்னென்பது? என்று வினாவுகிறார் ஆசிரியர். சோவியத் யூனியனில் திர்மிஷ் நகரில் உற்சாகமாக கம்யூனிஸ்டுகள் வரவேற்றாலும் அதன் பின்னரும் பயணம் எளிதாகவில்லை.
சோவியத் யூனியனைச் சூழ்ந்திருந்த எதிர்ப்புரட்சிக்காரர்களிடம் சிக்கிப் பட்ட வேதனை கொடுமையானது.
“என்ன வாழ்க்கை இது! ராஜஸ்தானில் ஒட்டகங்கள் அல்லது குதிரைகள் இரண்டைப் பிணைத்திருப்பது போன்று கால்களில் சங்கிலிகளால் நாங்கள் பிணைக்கப்பட்டிருந்தோம். கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தோம். ஒரு தடித்த வளையம் எங்கள் கழுத்தைச் சுற்றி மாட்டப்பட்டது. அது எங்களைப் பிணைத்திருந்த சங்கிலியுடன் கோர்க்கப்பட்டது. இரவு நேரங்களில் எங்களின் கால்களில் பிணைக்கப்பட்ட சங்கிலிகள் நீக்கப்பட்டன. ஏனோ நாங்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். எங்கள் கால்கள் ஒரு சங்கிலியுடன் பிணைக்கப்பட்டன. ஒருவரின் இடது காலுடன் மற்றவரின் வலது கால் பிணைக்கப்பட்டது. இதன் காரணமாக இரவு முழுவதும் ஒரே நிலையில்தான் நாங்கள் தூங்கியாக வேண்டும்.” பயணக்குழுவினர் எல்லோரும் ஒரே நோக்கத்தோடு இல்லை. அதனால் பிளவு, கருத்து வேறுபாடு, சிக்கல் எல்லாம் வந்ததாக செளகத் உஸ்மானி சொல்கிறார்.
இறுதியில் கெர்கி புரட்சிக் குழுவுடன் இணைந்து போரிட்ட அனுபவத்தையும் சோவியத்தைக் காக்கும் சர்வதேசக் கடமையைச் செய்த தோழர்களின் தியாகத்தையும் தன் எழுத்தில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். எதிர்ப்புரட்சியை முறியடித்து தாஷ்கண்ட் செல்வது, மாஸ்கோ மற்றும் தாஷ்கண்ட் ராணுவப் பள்ளியில் பயில்வது, கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவாவது என முதல் பாகம் விரிந்துள்ளது. தன்னுடைய குறிக்கோள் ஒரு ராணுவ வீரனைப்போல் சண்டையிட வேண்டும் என்பது மட்டுமே ஆகும்.

இந்தியாவை விடுவிப்பதற்கான போராளியாய் இருக்க விரும்பியதாக நூலில் எழுதியுள்ளார் செளகத் உஸ்மானி. இந்திய விடுதலை மீதும் இந்தியர்கள் மீதும் சோவியத் மக்களின் நல்லெண்ணமும் நட்பார்ந்த பார்வையும் அங்கு சோவியத் தேசம் முழுவதும் விரவிக் கிடப்பதைப் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக் கூறி விளக்கிச் சென்றுள்ளார்.
நூலின் இரண்டாம் பாகம், காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்தது, உடல் நலிவுற்று சிங்காரவேலர் வீட்டில் ஓய்வெடுத்தது, பல்வேறு புரட்சிகர இளைஞர் குழுக்கள், காங்கிரஸ் தலைவர்களோடு உரையாடியது, தொடர்புகொண்டது எனத் தொடங்குகிறது. 1928 ஜூலையில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் சிக்கந்தர் சூர் என்கிற புனைபெயரில் செளகத் உஸ்மானி பங்கேற்றது,ஸ்டாலினுடன் தலைமைக்குழுவாக மேடையில் அமர்ந்தது எனப் பல அரிய தகவல்களின் தொகுப்பாய் நீள்கிறது.
ஒரு போதும் தனிநபர் சாகசத்தையோ பயங்கரவாதத்தையோ உஸ்மானி ஆதரிக்கவில்லை என்பதை அவர் எழுத்தின் வழியாக அறிய முடிகிறது.
“தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களைத் தவிர்ப்பது குறித்தும், மக்களைப் பெரும்திரள் போராட்டங்களுக்குத் தயாரிப்பது குறித்தும் புரட்சியாளர்களிடம் அறிவுறுத்தும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். கம்யூனிஸ்ட் அகிலம் தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை ஊக்குவிக்கவில்லை என என்னிடம் சொல்லப்பட்டது” என்ற செய்தியையும் தன் நூலில் பதிவு செய்துள்ளார். இந்த அத்தியாயத்தைப் படித்தபின் தாஷ்கண்ட் பெஷவார் சதிவழக்குகள், கான்பூர் சதிவழக்கு, மீரட் சதிவழக்கு விவரங்கள் என்ன? இப்படிப் பலவற்றைத் தேடிப் படிக்க வேண்டிய – அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை இளம் கம்யூனிஸ்டுகளுக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது.
இந்நூலின் மூன்றாம் பாகம், 1974இல் செளகத் உஸ்மானி சோவியத் நாடு சென்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு இடைவெளியில் ஏற்பட்ட பிரமாண்டமான வளர்ச்சியை மாறுதலைக்கண்டு, தான் வியந்த செய்தியை மிக அருமையாக விவரித்துள்ளார். “நான் முதன்முதலில் சோவியத் யூனியன் சென்ற போது இருந்த நிலைமைகளுடன், இன்றைய நிலைமை [1974] மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. வளமான சோவியத் யூனியனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.” ஏராளமான தகவல்கள், புள்ளிவிவரங்கள், நேரில் கண்ட காட்சி சித்தரிப்பு மூலம் சோவியத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சியைச் சுட்டுகிறார் உஸ்மானி.
சமய சகிப்புத்தன்மை குறித்து நேரில் கண்டதை, முஸ்லிம்கள் தொழுகைக்குப் போவதை சுட்டிக்காட்டுகிறார்.
ஓர் இடத்தில், ரஷ்யர் அல்லாத நண்பர் என்னிடம் கூறினார் என்கிற பீடிகையுடன் நண்பர் கூற்றாகச் சொல்கிறார், “மாஸ்கோவில் உள்ள தேவாலயம் வரலாற்றில் எப்போதும் போலவே இப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால், மக்கள் அங்கு சென்று வழிபடாவிட்டால் அது சோவியத் அரசின் குற்றமல்ல. “சோவியத்தில் மக்கள் நல்லபடி வாழ்ந்ததை இந்நூலில் படித்து முடித்தபின், அந்த சோவியத் ஏன் சிதைந்தது என்பதை அறியும் ஆவலும் இயல்பாகவே ஏற்படுகிறது.
கம்யூனிசம் உருவாக்கப்பட்டதற்குப் பின் உள்ள மகத்தான தியாகத்தின் ஆழமும் வலியும் லட்சியமும் படிக்கின்ற நம் கண்களைக் குளமாக்குகின்றது. நாளை கம்யூனிச லட்சியத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும், இந்நூலை உண்மைத் தன்மையோடு சிறப்பாக எழுதிய சௌகத் உஸ்மானி அவர்களுக்கும் தமிழில் நன்கு மொழிபெயர்த்த தோழர்கள் ச. வீரமணி, தஞ்சை ரமேஷ் ஆகியோருக்கும் பாராட்டுகள்.
