நேர்காணல்:
த.வி.வெங்கடேஸ்வரன்
சந்திப்பு : நர்மதா தேவி
விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் (த.வி.வெ) கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருபவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளராக அதன் தொடக்க காலத்தில் த.வி.வெ ஆற்றிய பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். கிட்டத்தட்ட 70 அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார். பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன் இவருடைய பல நூல்களை வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு எளிய முறையில் அறிவியலைப் புரிய வைப்பதில் பெரும்பங்கு ஆற்றி வருகிற விஞ்ஞானி. சமீபத்தில் சந்திராயன் 3 திட்டம் பற்றி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இவர் விளக்கியிருந்த காணொலிகள், அறிவியலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் பணியில், ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. லட்சக்கணக்கானோர் பார்த்த அந்தக் காணொலிகள் மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சந்திராயன் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டுசேர்த்தன.
சந்திராயன் – 3 ஐ கவனிக்க வைத்தன. சந்திராயன் 3 திட்டம் குறித்தும், சமூகத்திற்கு, குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு இத்தகைய பெரிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் தரக்கூடிய பலன்கள் குறித்தும், சமூகத்தில் மக்களின் அறிவியல் பார்வையை செழுமைப்படுத்த இயக்கங்கள், அரசு மேற்கொள்ளும் பணிகள் பற்றியும், சமூகத்தின் வளர்ச்சியில் அறிவியலின் பங்கு குறித்தும் விஞ்ஞானி த. வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் ‘புத்தகம் பேசுது’ செப்டம்பர் இதழின் நேர்காணல் வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறார்…
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO) செயற்கைக்கோள் ஏவுதல் போன்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்துவருகிற ஓர் அமைப்பு. ஆழ்விண்வெளி ஆராய்ச்சிக்குள் இஸ்ரோ போகவேண்டும் என்கிற திட்டம் எப்போது, எப்படி தொடங்கியது? குறிப்பாக, சந்திராயன் – 1, 2, 3 மங்கல்யான் போன்ற மிகப்பெரும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குள் இந்தியா நுழைந்த பின்னணி என்ன?
த.வி.வெ: சந்திராயன், மங்கல்யான் போன்ற திட்டங்கள், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா என்ற விண்கலம், காமா போன்ற கதிர்களை ஆராய்ச்சி செய்வதற்கான விண்வெளி தொலைநோக்கி அஸ்ட்ரோசாட் போன்ற நிகழ்வுகள் எல்லாம் பெரிதும் கவனிக்கப்படுகின்றன; பேசப்படுகின்றன; ஊடகங்களில் செய்தியாகின்றன. ஆனால், இஸ்ரோவைப் பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் எல்லாம், நாம் என்றைக்காவது பிரியாணி விருந்து சாப்பிடுவது போன்ற அரிய நிகழ்வுகள்தான். தினந்தினம் நாம் பிரியாணி உண்பது கிடையாது. அன்றாடம் நாம் சாப்பிடுவது ரசம், சோறு, முட்டைப் பொரியல் போன்ற உணவைத்தானே.
அதேபோலத்தான், இஸ்ரோவின் அன்றாடப் பணிகளாக இருப்பவை, வானிலை ஆராய்ச்சி, பூமியின் வளங்களைக் கண்டறிவதற்கான தொலை உணர்வு செயற்கைக்கோள்களை உருவாக்கி, ஏவுதல், தொலைத்தொடர்பு போன்ற விஷயங்களே. அடுத்ததாக, சமீப காலத்தில் இஸ்ரோ தன்னுடைய ராக்கெட்டுகளை வெகுவேகமாகக் கட்டக்கூடிய திறனை எட்டியிருக்கிறது. அதுவும், பாகங்களாக (Module) உருவாக்கி கட்டக்கூடிய முறையில் அதிவேகமாகக் கட்டமைத்து ஒரு மாதத்தில் பல ராக்கெட்டுகளை ஏவக்கூடிய திறனை இஸ்ரோ பெற்றுவிட்டது. இந்தக் கட்டமைப்பு முழுவதையும் நாம் பயன்படுத்தப் போவதில்லை.
நம்முடைய தேவைக்குப் போக, மீதித் திறனை வெளிநாட்டு விண்கலங்களை ஏவுவதற்காகப் பயன்படுத்தி, அதிலிருந்து ஒரு வருமானம் ஈட்டுவது இஸ்ரோவின் மற்றொரு அன்றாடப் பணி. இந்த இரண்டும்தான் இஸ்ரோ தினந்தினம் ஈடுபடக்கூடிய பணிகள்.
இஸ்ரோவை உருவாக்கிய காலத்தில் விஞ்ஞானி விக்ரம் சாராபாய், ‘எங்கள் நோக்கம் வீம்புக்காக செயல்படுவதல்ல. ஏதோ நாட்டுப்பெருமைக்காக விஷயங்களை செய்துமுடிப்பதல்ல.
சாதாரண மனிதர்களின் தேவைக்கு விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எங்கள் லட்சியம். அந்த வழியில் பயணிப்பதே எங்கள் நோக்கம்’ என்று குறிப்பிட்டார். இஸ்ரோ பெரும்பாலும் இந்தத் திசைவழியில்தான் பயணித்திருக்கிறது. எனவே, சந்திராயன் போன்ற திட்டங்கள் எல்லாம் எப்போதோ ஒரு முறை நிகழ்கிற பிரியாணி வகை. கவர்ச்சிகரமாக இருப்பதால் அவை பேசுபொருளாக இருக்கின்றன. பேசுபொருளாக அவை இருப்பதும் தவறல்ல. இந்தத் திட்டங்கள் பேசப்பட வேண்டும். ஆனால், இவைமட்டுந்தான் இஸ்ரோவின் வேலை எனக் கருதினால், அது தவறான மதிப்பீடாகிவிடும்.
ஆழ்விண்வெளி ஆராய்ச்சி வரிசையில் முதலில் நடைபெற்ற திட்டம் சந்திராயன் 1. இவ்வகையான ஆராய்ச்சிக்குள் செல்லலாம் எனும்போது இஸ்ரோ, ’நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டோம். ராக்கெட் கட்டமைப்பில் செழுமை அடைந்துவிட்டோம். நம்முடைய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்பம் தோல்வி அடையாத அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டது என்ற நிலையை எட்டிவிட்டது. பல ஆண்டுகள் செயல்படக்கூடிய திறன்கொண்ட செயற்கைக்கோள்களை நம்மால் கட்டமைக்க முடிகிறது.
இவ்வகையில், கற்றுத்தேர்ந்த நிலைக்கு வந்துவிட்ட நாம், நமது நாட்டிலேயே மேலும் சில அறிவியல் ஆய்வுகளை நடத்தவேண்டும் என விரும்புகிறோம்; அதன் மூலம், நவீன ஆராய்ச்சிகளுக்கான வசதிகளை நமது ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும், நமது நாட்டின் இளம் மாணவ, மாணவிகளுக்கும், உயர் கல்வி கற்பவர்களுக்கும், இங்கேயே உயர் ஆராய்ச்சிக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என நினைக்கிறோம்; அப்படிச் செய்தால்தான் ஒரு நாடு அடுத்த கட்டத்திற்குள் போக முடியும் என்பதால், அதற்கான கட்டமைப்பு வசதியின் ஒரு பகுதியாக இஸ்ரோ ஆழ்விண்வெளி ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளலாம், இஸ்ரோவின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், ஒரு சிறிய சதவிகிதம் இதற்காக ஒதுக்கலாம்’ என்று முடிவுசெய்தது.
இந்த ஆராய்ச்சிகளை இஸ்ரோதான் துவக்கி வைக்கிறது என்றாலும், பின்னணியில் நிறைய அறிவியல், உயர் கல்வி நிறுவனங்களும் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுகின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமே இந்த ஆராய்ச்சிகளில் தனித்து ஈடுபடுவதில்லை. இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பல்வேறு துறைகள் (IISER), இந்திய வானியல் இயற்பியல் நிறுவனம் எல்லாம் இஸ்ரோவுடன் இணைந்து கூட்டாக ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இஸ்ரோவின் நிறுவனங்களுக்கும் இந்த ஆராய்ச்சிகளில் பெரும்பங்கு இருக்கிறது. இப்படித்தான் இந்த விஷயங்கள் சிந்திக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நாமும் இந்தத் திசையில் அடியெடுத்து வைக்கலாம் என்ற ஒரு கருத்து உருவாகி, அதன் அடிப்படையில்தான் சந்திராயன் போன்ற திட்டங்களை இஸ்ரோ தொடங்கியது.
குறிப்பாக, சந்திராயன் 1, 2, 3 திட்டங்கள் எப்படித் தொடங்கிப் பரிணமித்தன?
த.வி.வெ: தொடக்கத்தில் நிலவை சுற்றிச் மட்டும் வருகிற கோள் சுற்றித் திட்டமாக (Orbiter mission) மட்டுமே சந்திராயன் 1-ஐ செயல்படுத்தலாம் என முன்வைக்கப்பட்டது. திட்டத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான விவாதத்தில், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ‘இதுதான் முதல் அடி என்றாலும், நிலவைத் தொட்டுவிட்டோம்’ என்று குறிப்பிடுகிற மாதிரி ஒரு சிறிய விஷயத்தையாவது நாம் செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், ஒரு சிறிய பொதியை (Impactor) நிலவில் விழவைக்கும் நிலவு மோதிக் கலமாக (Moon Impactor Probe) சந்திராயன் 1 மேம்படுத்தப்பட்டது. கீழே வரும்போது ஆய்வுக்கான புகைப்படங்களை எடுத்துக்கொண்டே வரும்;
ஒரு கட்டத்தில் சந்திராயன் -3ஐ போன்று மென்தரையிறக்கம் செய்யாமல், மேலிருந்து அந்தப் பொதியை (மோதியை) விழவைக்கும்; அது கிளப்பக்கூடிய தூசியை சந்திராயன்-1 ல் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் ஆய்வு செய்யும் என்ற வகையில், சந்திராயன் 1 திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிலவின் தூசியில், ’நீரின் துவக்க கட்டம்’ என்று நாம் கருதக்கூடிய ஹைட்ராக்சில் பொருட்களை சந்திராயன் 1 இவ்விதம் கண்டறிந்தது.
பிற கோள்களுக்கான பயணத்தை ஐந்து நிலைகளில் சிந்திக்கலாம்.
கோளை நெருங்கிவிட்டு தரையிறங்காமல் அப்படியே கடந்து செல்வது. நியூ ஹரய்சான் என்கிற விண்கலம் புளூட்டோவிற்குப் பக்கத்தில் சென்று அப்படியே கடந்துவிட்டது. பக்கத்தில் நெருங்கும்போது வரிசையாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டே போன அந்தக் கலம், ஒரு கட்டத்திற்குப் பிறகு புளூட்டோவைக் கடந்ததும் (திட்டமிடப்பட்ட) வேறு வேலைகளுக்குள் சென்றுவிட்டது. இதனை ஃபிளை-பை (Fly-by) எனச் சொல்வார்கள்.
கோளை சுற்றி வருவது கோள் சுற்றித் திட்டம் (ஆர்பிட்டர் திட்டம்).
கோளில் தரையிறங்குதல் தரையிறங்கு திட்டம் (லேண்டர் திட்டம்).
ஊர்திக் கலத்தை செலுத்துவது. பொம்மைக்கார் போன்ற ரோவர் எனப்படும் ஒரு சிறிய
ஊர்தியை தரைப்பரப்பில் இயக்கி ஆய்வு செய்வது (ரோவர் திட்டம்).
மாதிரியை எடுத்துவருவது (சாம்பிள் ரிட்டர்ன்), கோளில் இருந்து கற்கள் போன்ற பொருட்களை சேகரித்து அங்கிருந்து, ஒரு ராக்கெட்டைக் கிளப்பி பூமிக்கு எடுத்து வருவது.
ஐந்தில் இரண்டை சந்திராயன் 1 செய்துமுடித்தது. தரையிறங்குதல், ஊர்திக்கலத்தை இறக்கிப் பார்ப்பது என்ற அடுத்த இரண்டு பணிகளை சந்திராயன் 2-ல் திட்டமிட்டோம். கோள் சுற்றி நன்றாக வேலை செய்தது. தரையிறங்கும்போது கடைசி நிமிடத்தில், ஒரு பிழை ஏற்பட்டு தோல்வி அடைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சந்திராயன் 2 (நிறைவு செய்யாமல்) விட்ட இடத்தில் இருந்து ஆய்வைத் தொடங்கும் விதமாக சந்திராயன் 3-ஐ அனுப்பினார்கள். அதனால்தான் சந்திராயன் 3-ல் ஆர்பிட்டர் கிடையாது. தரையிறங்கு கலமும், ஊர்திக்கலமும் மட்டும்தான் அதில் அடக்கம். தரையில் இறங்கி, ஊர்திக்கலத்தை இயக்கும் பணியை அது நிறைவேற்றியது. எதிர்காலத்தில் ஒருவேளை சந்திராயன் 5 அல்லது 6 திட்டங்களில் நிலவில் இருந்து பூமிக்குக் கிளம்பி வரக்கூடிய அம்சங்களையும் சேர்க்கக்கூடிய நிலைக்கு இஸ்ரோ வளரும். இதெல்லாம் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய திட்டங்கள். அதற்கு நிறைய பரிசோதனைகள், தொழில்நுட்ப வளர்ச்சி தேவைப்படும். இதுதான் சந்திராயன் 1,2,3 திட்டங்களின் வளர்ச்சிப்பாதை.
2008ஆம் ஆண்டில் சந்திராயன் 1 தொடங்கியதில் இருந்து 2023ஆம் ஆண்டில் சந்திராயன் 3 வரை மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா மாதிரியான மூன்றாம் உலக நாடு எட்டியிருக்கிறது எனக் குறிப்பிடலாம். சந்திராயன்–3ல் பெரும்பாலும் இந்திய விஞ்ஞானிகளின் முகங்களையே நாம் கண்டோம். தனித்த ஆய்வாக சந்திராயன் திட்டத்தை நாம் மேற்கொண்டோமா? எந்த அளவிற்கு வெளிநாட்டு உதவி, கூட்டுமுயற்சி இந்தத் திட்டத்தில் அடங்கி இருந்தது?
த.வி.வெ: சந்தியாயன் போன்ற திட்டங்களில் பிற உலக நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக ஏவுவதற்கோ, சுற்றுப்பாதையை அடைவதற்கோ, தரையிறங்குவதற்கோ எந்த ஓர் உதவியையும் நமக்கு செய்யவில்லை.ஒரு சைக்கிளில் நாம் போகிறோம் எனக் கொள்வோம். நடுவில் ஒரு நண்பரைப் பார்க்கிறோம். ‘என்னை அங்கே கொண்டுபோய் விடு’ என அவர் கேட்கிறார். நம்முடைய சைக்கிளின் பின்னால் அவர் அமர்ந்ததால், சைக்கிள் ஓட்டுவதில் நம்மோடு அவர் கூட்டு சேர்ந்தார் எனக்கொள்ள முடியாதல்லவா? சைக்கிள் ஓட்டும் பணியில் அவர் ஒரு பங்காளி இல்லைதானே.
சைக்கிளில் ஏறி வந்திருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிடலாம். இதேபோலத்தான், சந்திராயன் 1-ல் ஐரோப்பிய விண்வெளி மையம், அமெரிக்காவின் நாசா மையம் போன்றவை ஆய்வுக்காக இணைத்து அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டு அனுப்பிய வெளிநாட்டுக் கருவிகளை இணைத்து அனுப்பினோம். அந்தக் கருவிகள் அனுப்பும் தகவல்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள்.
சந்திராயன் 2-லும் இப்படிப்பட்ட கருவிகள் சென்றன. சந்திராயன் 3-ல் தரையிறங்கி கலமான லேண்டரின் தலையில் இணைக்கும்படி கண்ணாடி போன்ற ஒரு பிரதிபளிப்புமானியை (Reflectometer) நாசா கொடுத்தனுப்பியது. எங்கள் ஊரில் இருந்து லேசர் கதிர்களை அந்தக் கருவிக்கு அனுப்பி, நிலவின் தொலைவைக் கண்டுபிடிக்க நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்கள். இப்படிப்பட்ட கூட்டுதான் சந்திராயனில் இருந்துள்ளதே தவிர, தொழில்நுட்பம் மற்றும் பிற விஷயங்களில் கூட்டு கிடையாது.
அதேபோல், பூமி தன்னைத்தானே சுற்றும்போது, இந்தியா எப்போதுமே நிலவை நோக்கி இருக்காது. விண்ணில் இருக்கும் விண்கலத்தோடு தொடர்புகொள்ள, நீங்கள் இந்தியாவில் மட்டும் ஆண்டனா வைத்திருந்தால் தொடர்புகொள்ள முடியாது. 120 டிகிரி கோணத் தொலைவில் உலகில் குறைந்தது 3 ஆண்டனாக்கள் தேவைப்படும். பல சமயங்களில் மற்ற இரண்டு ஆண்டனாக்களை வெளிநாட்டில் இருந்து உதவிக்கு பெற்றுக்கொள்கிறோம். விலை கொடுத்து வாங்காமல், சிறிய ஒத்துழைப்பு அடிப்படையில் இவ்விதம் பயன்படுத்திக்கொள்கிறோம். பிறரும் நம்முடைய ஆண்டனாக்களை தேவைப்படும்போது வாங்கிக்கொள்வார்கள்.
சில சமயங்களில் கடலில், கப்பலில் ஆண்டனாவை நிறுத்தி தொடர்புகொள்ள முடியுமா என்று சோதனை செய்து, வெற்றி பெற்றிருக்கிறோம். செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியபோது இவ்வாறு கடலில் ஆண்டனாவை எடுத்துப்போய் சோதித்துப் பார்த்தோம். இது அதிகச் செலவாகும் பணி என்பதால் பரிசோதனை முயற்சியாக மட்டுமே முயன்று பார்த்தோம். பிற நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆண்டனாவைக் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரியான உதவிகள், கூட்டுகள், ஒத்துழைப்புகள்தான் சந்திராயனில் உள்ளன. தவிர, இந்தத் திட்டங்களில் நேரிடையான வெளிநாட்டு உதவி என்பது கிடையாது.
நிலவு ஆராய்ச்சி சோவியத் ரஷ்யா காலத்தில் இருந்து தற்போது சந்திராயன் 3 வரை தொடர்கிறது. சர்வதேச ஆராய்ச்சியின் பின்னணியில் சந்திராயனின் முக்கியத்துவம் என்ன? அதன் தனிச்சிறப்பு பற்றி சற்று விரிவாக் கூறுங்கள்.
த.வி.வெ: இது முக்கியமான அம்சம். அனைவரும் நான்காவது நாடு இந்தியா என்பதை மட்டுமே வலியுறுத்திக் குறிப்பிடுகிறார்கள். பல விஷயங்களை இந்த ஆய்வில் நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
முதன்முதலாக நிலவை சென்றடைந்த நாடு சோவியத் யூனியன். நிலவில் முதன்முதலாக மனிதர்களை தரையிறக்கியது அமெரிக்காவாக இருந்தாலும், நிலவிற்குச் சென்றது, தரையிறங்கியது எனப் பல விஷயங்களை சோவியத் யூனியனே முதன்முதலாக செய்தது. சோவியத் யூனியன், ‘நாங்கள் நிலவில் மனிதர்களை இறக்கப்போவதில்லை. அது தேவையற்றது, வீம்புக்கானது, நாங்கள் ரோபோக்களைத்தான் அனுப்பப்போகிறோம். நிலவில் இருந்து கல், மண்தானே எடுத்து வர வேண்டும்.
மனிதர்கள் செய்யக்கூடிய இந்தப் பணிகளை நாங்கள் அனுப்பும் ரோபோக்களே செய்துவிடும்’ என்று சொல்லி, மனிதர்களை அனுப்பவில்லை. அமெரிக்கா தனது தொழில்நுட்பத் திறனை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பியது. என்றாலும், அதற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நாம் எல்லோரும் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியதைப் பெருமையோடுதான் பார்க்கிறோம். இவை எல்லாம் 1960,70க்குள் முடிவடைகிறது. கடைசியாக சோவியத் யூனியன் 1976-ல் நிலவில் தரையிறக்கும் விண்கலத்தை அனுப்பியது. அதன் பிறகு, பல பத்தாண்டுகள் நிலவில் தரையிறங்கும் முயற்சியை யாருமே மேற்கொள்ளவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சிகள் தொடங்கின. இந்த 5 ஆண்டுகளில் சந்திராயன் 3 உட்பட மொத்தம் ஏழு தரையிறங்கும் முயற்சிகள் நடந்துள்ளன. இந்த ஏழு நிகழ்வுகளில் மூன்றுதான் வெற்றியடைந்தது. இரண்டு, சீனாவின் முயற்சிகள், ஒன்று, இந்தியாவின் சந்திராயன்-3. நான்கு, தோல்விகளில் இந்தியாவின் சந்திராயன் – 2, இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யாவின் லூனா 25 அடக்கம். வளர்ந்த நாடுகளின் திட்டம், இந்தியாவின் திட்டம் உள்ளிட்ட நான்கு தோல்விகள் நிகழ்ந்துள்ளன. இரண்டு ஆசிய நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.
1960, 70களில் வளரும் நாடுகள், பின்னடைந்த நாடு என்று சொல்லப்பட்ட நாடுதான் இன்றைக்கு நிலவில் தரையிறங்கியுள்ளது. இது சர்வதேச விண்வெளித் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நான், ‘மற்ற நாடுகளைவிட எங்களிடம் அதிக தொழில்நுட்பம் உள்ளது’ என்று சொல்ல வரவில்லை. மற்ற நாடுகள் பல்வேறு காரணங்களால் தொழில்நுட்ப உச்சவிளிம்பை (Technical edge) விட்டுவிட்டார்கள். அதனால், பல தொய்வுகள் அவர்களிடம் இருக்கின்றன. ஐரோப்பிய விண்வெளி மையம் எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை அறிவோம். அவர்களாலும் நிலவில் இறங்குவதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. எனவே, இந்தியாவின் முயற்சி ஒரு புதிய சூழலை சர்வதேச விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தியுள்ளது.
அவ்வகையில், சந்திராயன் 3-ன் தரையிறக்கம் துல்லியமாக நடந்தது என்பது, நாம் எதிர்பார்த்த செயல்பாடுகளை அது செய்து வருகிறது என்பது, மிக முக்கியமான ஒன்று.
ஓர் ஊடகத்தில், ‘1960லேயே மனிதனை நிலவில் இறக்கிவிட்டார்களே, இப்போது போய் நாம் இறங்குவதை ஏன் பெரிதாகப் பேசுகிறோம்’ என்று என்னிடம் கேட்டார்கள். பெருமிதம் என்ற அடிப்படையில் குறிப்பிடத் தேவையில்லை.
200 ஆண்டுகளுக்கு முன்பே கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டறிந்தார். ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் செல்போனும் அந்தத் தொலைபேசியும் ஒன்றா? இரண்டும் வெவ்வேறு தொழில்நுட்பம்தானே? ‘இப்போது பயன்படுத்தும் செல்போனும் தொலைபேசிதானே?’ எனப் பேசுவது சரியான வாதமா? இந்தக் கண்டுபிடிப்பு நவீனமானது, மேலும் செழுமையானது, மேலும் நுட்பமானது என்ற விஷயம் இருக்கிறதல்லாவா? அதேபோலத்தான், சந்திராயன் 3-ன் தரையிறக்கம் என்பது மேலும் நுட்பமானது.
அன்றைக்கு உருவாக்கிய பெரும் பொருட்செலவு மிக்க தொழில்நுட்பத்தில், ஆண்டுக்கு ஒன்று, எப்போதோ ஒன்று என்ற அளவில்தான் ஆராய்ச்சிகள் சாத்தியம். ஆனால், எதிர்காலத்தில் நாம் ஒரு குடியிறுப்பை நிலவில் ஏற்படுத்தப்போகிறோம், தொடர்ந்து நிலாவுக்கு பொருட்களை எடுத்துப்போக வேண்டும், அங்கிருந்து கொண்டுவர வேண்டும் என்றால், அதுவும், மனிதர்கள் செல்லாமல் தானியங்கியாகப் போக வேண்டும் என்றால், புதுவிதமான தொழில்நுட்பங்கள் அவசியம்.
அந்தத் தொழில்நுட்பங்கள்தான் இவை எல்லாம். எனவே, அன்றைக்கு இருந்த தொலைபேசி தொழில்நுட்பத்தை வைத்து, ‘அன்றைக்கே தொலைபேசி கண்டுபிடித்துவிட்டார்களே!’ என்பது போதுமான பின்னணி இல்லாமல், மேலோட்டமாகப் பேசும் விஷயம் என்றே பார்க்கிறேன்.
சந்திராயன் 3, சீனாவின் தரையிறக்கம் எல்லாம் புதிய தொழில்நுட்பத்தை சார்ந்த விஷயங்கள். ரஷ்யாவும் புதிய தொழில்நுட்பத்தை வைத்துதான் முயற்சி செய்தது. ஆனால், அது தோல்வி அடைந்துவிட்டது. கடைசி ஏழு தரையிறக்க முயற்சிகளில், ஏழுமே புதிய தொழில்நுட்பத்தின் முயற்சிகள். செயற்கை நுண்ணறிவு போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய முயற்சி இது.
குறிப்பாக சந்திராயன் 3 என்ன மாதிரியான ஆய்வுகளை செய்து அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும்?
த.வி.வெ: சந்திராயன் 3 செய்யக்கூடிய ஆராய்சிகளை ரோவர் என்று சொல்லக்கூடிய ஊர்திக்கலம் செய்யும் ஆராய்ச்சிகள், தரையிறங்கிக்கலம் செய்யும் ஆராய்ச்சிகள் என இரண்டாகப் பார்க்கலாம். ஊர்திக்கலம் தரையிறங்கிக் கலத்தை ஒட்டி ஓர் அரைகிலோ மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் நிலவின் பரப்பில் நகர்ந்து ஆய்வு செய்யும்.
மாட்டை ஓர் நீளமான கயிற்றால் ஒரு கொம்பில் கட்டிப் பிணைத்திருப்பார்கள் அல்லவா? மாடு குறிப்பிட்ட எல்லைவரை சென்று மேய முடியும். அதைப் போலத்தான் இந்த ரோவரும் தரையிறங்கிக் கலத்தைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்லாமல், ஓர் எல்லைக்குள் நகர்ந்து ஆய்வு செய்யும். அந்த எல்லைக்குள்தான் தகவல்தொடர்பு இருக்கும், அதற்கு அப்பால் சென்றால் தொடர்பு துண்டிக்கப்படும் என்பதால், தாண்டிச் செல்லாது.
ஆங்காங்கே இருக்கக்கூடிய கல், மண் மாதிரிகளை எடுத்து சோதனை செய்யும். என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பாஸ்பரஸ், கால்சியம், அலுமினியம் போன்ற தாதுப்பொருட்கள், தனிமங்கள் என்னென்ன உள்ளன என ஆராய்ச்சி செய்யும். ஒரு வகையில் சொல்வதென்றால் வேதிக் கலவை (Chemical Composition) பற்றி ஆராயும்.
1976க்குப் பிறகு யாரும் நிலவை நோக்கிப் போகவில்லை என்று குறிப்பிட்டேன் அல்லவா? நிலவில் தரையிறங்காமல் கோளைச் சுற்றி, தொலை-உணர்வு அடிப்படையில் (ரிமோட் சென்சிங்) நிலவின் தரைப்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்கான, சந்திராயன்-1 உட்பட பல திட்டங்கள் சென்றுள்ளன. எங்கெங்கே என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்ற ஆராய்ச்சியை இவை செய்தன. அந்தத் தொலை-உணர்வு தரவுகளை எவ்வளவு தூரம் நம்பலாம் என்ற கேள்வி இருக்கிறதல்லவா? 100 கி.மீட்டர் உயரத்துக்குமேல் நாம் கண்டறிந்த தரவுகளும், கீழே தரையிறங்கி நாம் கண்டறிந்த தரவுகளும் பொருந்துகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
தரைத்தள உண்மையை (Ground Truth) தரையில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் கருவிகள்தான் வழங்கும். அதைத்தான் சந்திராயனின் ரோவரும், சீனக்கலத்தின் ரோவரும் சேகரிக்கின்றன. இது உலக அறிவியலுக்கு ஒரு பங்களிப்பு. சந்திராயன் ரோவரில் இருந்து வரக்கூடிய தரவுகள் உலக அளவில் ஆராய்ச்சிக்கான கொடை.
அடுத்தாக, தரையிறங்கிக்கலம் எனும்போது அதில், நான்கு கருவிகள் உள்ளன. ஒன்று, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட நாசா வழங்கிய பிரதிபளிப்புமானி. அடுத்து, நிலவின் மண்ணுடைய வெப்பக் கடத்தும் திறனைக் கண்டறியும் கருவி. அடுத்து, நிலவில் சூரியனின் கதிர்பட்டு உருவாகும் பிளாஸ்மாவை ஆராயும் கருவி. பொருட்களின் திட, திரவ, வாயு என மூன்று வகை நிலைகளைப் பற்றி நாம் படித்திருப்போம். பிளாஸ்மா என்பது நான்காவது நிலை. அதீத வெப்பநிலையில் உருவாகக்கூடிய நிலை இது. பூமியில் மின்னல் போன்ற அரிதான நிகழ்வுகளில் இது உருவாகும். சூரியன் முழுவதுமே பிளாஸ்மாதான்.
நிலவில் வாயுமண்டலம் இல்லாததால் அதன் தரைப்பரப்பு மேல் சூரியக்கதிர்கள்பட்டு பிளாஸ்மா உருவாகும். அந்தப் பிளாஸ்மாவை ஆராய்ச்சி செய்யக்கூடிய கருவி ஒன்றும் சந்திராயனின் தரையிறங்கிக்கலத்தில் உள்ளது. அடுத்து, பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல, நிலவில் ’நிலா நடுக்கம்’ ஏற்படும். அதை ஆராய்ச்சி செய்யக்கூடிய கருவியும் உள்ளது.
நிலவின் தென்துருவத்தில் இறங்கியுள்ள சந்திராயன் கலம், அங்கே நிகழும் நிலா நடுக்கத்தை ஆராய்ச்சி செய்கிறது. ஏற்கெனவே சென்ற சோவியத், அமெரிக்க விண்கலங்கள் நிலவின் வேறு பகுதிகளின் நடுக்கங்களை ஆராய்ச்சி செய்தன. இந்த ஆய்வுகளின் தரவுகள் வாயிலாக நிலவிற்குள் என்ன அமைப்பு இருக்கிறது என்ற அனுமானத்திற்கு நாம் வர முடியும். தேங்காயைத் தட்டிப் பார்த்து, குலுக்கிப் பார்த்து உள்ளே எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதுபோல, நிலாவின் நடுக்கத்தை வைத்து, நிலவிற்குள் எப்படிப்பட்ட அமைப்பு இருக்கிறது என ஆராய்ச்சி செய்கிறோம்.
இவை எல்லாம் தரவுகள் மட்டுமே. இதுவே ‘யுரேகா! யுரேகா!’ என ஆராவாரம் செய்யும், ஆய்வு முடிவுகள் அல்ல. கருவிகள் வாயிலாக இந்தத் தரவுகளை நாம் சேகரித்து வழங்குகிறோம். அந்தத் தரவுகளைப் பகுத்து, ஆராய்ந்து, அதிலிருந்து விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு காலம் ஆகும்.
பொதுவாக இது போன்ற சர்வதேச விண்வெளி ஆய்வுகளில், இந்தத் தரவுகள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை திட்டங்களை அனுப்பும் நாடுகளுடைய நிறுவனங்கள் வசம் இருக்கும். உதாரணத்திற்கு தற்போது இஸ்ரோ இந்தியாவின் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து அனுப்பிய திட்டத்தின் தரவுகள் தொடக்கத்தில் இந்த நிறுவனங்களின், இந்த ஆய்வுக் குழுவின் வசம் மட்டுமே இருக்கும். அதன்பிறகு, அந்தத் தரவுகளை ’அனைவரும் பயன்படுத்த முடியும்’ என்ற நிலையில் வைத்துவிடுவார்கள்.
பிற நாடுகளைச் சார்ந்தவர்களும் அவற்றைப் பயன்படுத்த முடியும். இதேபோல், பிற நாடுகளும் தங்கள் தரவுகளை வழங்குவார்கள். தற்போது சந்திராயனின் தரவுகளை நாம் வழங்கியுள்ளோம். அதேபோல், ஹபுல் தொலைநோக்கியின் தரவுகளை நமது இந்திய விஞ்ஞானிகள் தற்போது பயன்படுத்துகிறார்கள். இப்படித்தான் அடிப்படை அறிவியல் ஆய்வுகள், சர்வதேச கூட்டு ஒத்துழைப்பு அடிப்படையில் நடைபெறும். இந்தத் தரவுகளை வைத்து பிற அம்சங்களை சரிபார்ப்பது, நம்முடைய அறிவியல் கோட்பாடுளை செழுமைப்படுத்துவது போன்ற விஷயங்களை நாம் செய்ய வேண்டும்.

மிகவும் வெற்றிகரமான திட்டமாக சந்திராயன்-3 திகழ்கிறது. மக்கள் மத்தியில் இந்தத் திட்டத்தின் வெற்றி ஏற்படுத்திய தாக்கம் என்ன?
த.வி.வெ: என்னுடைய அனுபவத்தில் (என்னுடைய அனுபவம் சற்றுக் குறைவுதான், நிறைய பேருக்கு நிறைய அனுபவம் இருக்கும்) நிச்சயமாக சந்திராயன் 3 மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதேபோல, கோவிட் வந்த காலத்தில் 2019-ல் தமிழகத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உருவானது. மக்கள் தெரிந்துகொள்ள முன்வந்தார்கள்.
மக்கள் என்பவர்கள் யார்? சிந்திக்கும் திறன் படைத்த மனிதர்கள். அவர்களிடம் நாம் யார்? நம்மைச் சுற்றி இருப்பவை என்ன? இந்தப் பிரபஞ்சம் எப்படி வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. அந்தக் கேள்விகளுக்கு, விடை தரக்கூடிய விதத்தில் நாம் செயல்படுகிறோமா என்பதுதான் கேள்வி. யாருக்கும் புரியாத விதத்தில் நாம் பேசிக்கொண்டே இருந்து, ‘மக்கள் புரிந்துகொள்ளவில்லை’ என்று தொடர்ந்து புலம்புவதில் பயனேதும் இல்லை.
மக்கள் என்ன செய்வார்கள்? தங்களால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் என்ன தகவல்கள் இருக்கின்றனவோ அவற்றை மட்டுமே அவர்கள் புரிந்துகொள்வார்கள். எப்போது நாம் மக்களுடைய மொழியில், அவர்களுக்குப் புரிகிற விதத்தில் சொல்கிறோமோ, அப்போதுதான் மக்கள் மத்தியில் நாம் சென்றடைய முடியும். இதைத்தான் சந்திராயன் 3 உட்பட, கடந்தகால அனுபவங்கள் நமக்கு உணர்த்துவதாக நான் கருதுகிறேன். மக்களிடம் இயற்கையாகவே தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய முறையில் நாமும், சமூகமும் செயல்படுகிறோமா என்பதே நம்முன் இருக்கக்கூடிய கேள்வி.
சமூகத்தில் மக்கள் மத்தியில் ஒரு இரட்டைத்தன்மையை (Dichotomy) நாம் பார்க்க முடிகிறது. ஒரு புறம் அறிவியலின் விளைவான அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளும் பொதுமக்கள், இன்னொரு புறம் சகலவிதமான மூடநம்பிக்கைகளோடும் வாழ்கிறார்கள். சமூகத்தில் பெரும்பாலோனோர் பகுத்தறிவுவாதிகளாக இருக்கவில்லை. ஆனால், விஞ்ஞானிகள் மத்தியிலும், ஒரு புறம் தூய்மையான அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் தன்மையையும், மறுபுறம், கடவுள் நம்பிக்கை, ‘நல்ல’ நாள், ’நல்ல’ நேரம் குறிப்பது போன்ற மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் தன்மையையும் காண்கிறோம். விஞ்ஞானிகள் சமூகத்தின் இந்த அம்சம் பொதுமக்களில் ஒரு பகுதியினரான பகுத்தறிவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிறது. இந்த இரட்டைத்தன்மையை ஒரு சமூகமாக நாம் எப்படி அணுக வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
த.வி.வெ: பல்வேறு தளங்களில் இதை நான் பார்க்கிறேன். நம்முடைய நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் அவ்வளவு வசதிவாய்ப்புகள் இல்லாத ஒரு பகுதியினரை எடுத்துக்கொள்வோம். அவர்கள் மத்தியில் மந்திரிப்பது, காப்புக் கயிறு கட்டுவது போன்ற பழக்கவழக்கம் இருந்தாலும், மருத்துவமனைக்குச் செல்வதை, தடுப்பூசி போடுவதை அவர்கள் மறுக்கவில்லை. விவசாயிகளாக இருந்தால் நவீன அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அவர்கள் மறுக்கவில்லை. ஒரு சிறிய செய்தியைக் குறிப்பிடலாம் எனக் கருதுகிறேன். நானும், எனது நண்பர் முனைவர். தியாகராஜன் மற்றும் சிலர் வார்தாவில் ஒரு சிறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.
நான் விளிம்புப் பகுதி ஆராய்ச்சியில் ஈடுபட, அவர்கள் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அந்த ஆய்வு, விவசாயிகளுடைய பார்வை பல்வேறு விஷயங்களில் எப்படி இருக்கிறது? பூச்சிமருந்து தொடர்பாக, உரம் தொடர்பாக, நடுதல் போன்ற காரியங்களுக்கு பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தேதி தொடர்பாக அவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றியது. அந்தப் பகுதியின் பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேதியில் நட வேண்டும், அப்போதுதான் விளைச்சல் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் பெரும்பாலும் அந்தக் குறிப்பிட்ட நாளில் பூஜை, சடங்கு போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். செய்யாமல் இருப்பவர்கள் சிலரும் இருக்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்பவர்கள், ‘அந்த தினத்தில்தான் நாம் செய்தாக வேண்டும்’ என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நிலத்தை முழுமையாக உழுது, அன்றைக்கே விதைத்து முடித்திடவில்லை.
கிருஷி விஞ்ஞான் கேந்திரா போன்ற அரசு சார்ந்த விவசாய விரிவாக்கப் பணிகளுக்கான அமைப்புகளிடம் இருந்து வரக்கூடிய தகவல்களை, பிற விவசாயிகளிடம் இருந்து வரக்கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் விதைக்கிறார்கள். மூடநம்பிக்கையின் முழுமையான சிறையில் அவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அதையும் செய்து வைப்போம்’ எனச் செய்கிறார்களே ஒழியே, அதையே முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் அவர்கள் இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும். இது முதலாவது அம்சம்.
இரண்டாவது, இன்றைக்கு இந்தியாவில் ஓரளவிற்கு வசதி படைத்த, நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை, கடந்தகால வளர்ச்சியின் காரணமாக கூடியிருக்கிறது. அதிகக் குரல் வலிமை கொண்டவர்களாக இந்தப் பகுதியினர் இருக்கிறார்கள். ஊடகங்களில், பிற தளங்களில் வலுவாகத் தங்களின் கருத்துகளை பதிவு செய்யக்கூடிய திறன்கொண்ட இந்தப் பகுதியினரின் குரலை, ‘செழிப்பின் போலி அறிவியல்’ எனக் குறிப்பிடலாம் (Pseudoscience of Affluence). ‘எனக்கெல்லாம் கிடைத்துவிட்டது.’ எனவே நான் இப்போது, ‘நவீன மருந்தெல்லாம் தேவையில்லை’ எனப் பேசலாம் என்ற மனநிலை.
ஏன் பேசலாம் என்றால், ‘எனக்கு நல்ல குடிதண்ணீர் இருக்கிறது. அப்படியே எனக்கு உடல்நிலை சரியில்லை எனில், நான் மருத்துவமனைக்கு நிச்சயம் செல்வேன். போகாமல் இருக்கப் போவதில்லை.’ ஆனால், ஒரு மறுப்பாக என்னால் இவ்விதம் பேச முடியும். இதன் மூலமாக, அறிவியலுக்கு விரோதமான, எதிர் அறிவியல் கருத்துகள் கொண்ட மூடநம்பிக்கைகள் ஏற்படும். முதலாவதையும், இரண்டாவதையும் சேர்த்து நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. முதலாவது அம்சம் ஒரு காரணத்தினால் இருக்கிறது. இரண்டாவது அம்சம் ஒரு காரணத்தினால் இருக்கிறது.
மூன்றாவது, பொதுவாக நம்முடைய இந்தச் சமூகமே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கிறது. என்ன பயிரிட வேண்டும் என்பதை எப்படி நான் தீர்மானிக்கிறேன்? இந்த நிலத்திற்குத் தகுந்த பயிர் என்ற அடிப்படையில் நான் தீர்மானிக்கவில்லை. என்னிடம் ஏதோ ஒரு கருத்து வந்து சேர்கிறது. ‘இதைப் பயிரிட்டால், வருகிற விளைச்சலில் இருந்து எனக்கு நிறைய லாபம் கிடைக்கும்’ எனக் கருதுகிறேன். எனவே, லாபம் என்னை உந்துகிறது. ’இந்த விதையைப் போடு, இந்த பயிரைப் போடு!’ என்பதை லாபம் என்கிற கருந்து என்னிடம் திணிக்கிறது. அறிவியல் தரவுகள் அல்ல. இது பகுத்தறிவான விஷயமோ, தர்க்க அடிப்படையிலான விஷயமோ கிடையாது.
இப்படி, லாபம் என்கிற கருத்து பல விஷயங்களில் அழுத்தம் தருகிறபோது, அதனடிப்படையில் பல விஷயங்கள் செயல்படும்போது, இயற்கையாகவே நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. எனக்கு உடம்பு சரியில்லை என்றால், ‘அந்த நோய் என்ன? அந்த நோய்க்கு என்ன மருந்து?’ என்று நான் செயல்பட்டால், அது தர்க்க அடிப்படையிலான விஷயம். பகுத்தறிவு சார்ந்த விஷயம் அது. ‘எனக்கு உடம்பு சரியில்லை.
என்னிடம் ஐந்து ரூபாய் தான் இருக்கிறது. அதற்குள் என்ன மருந்து வாங்க முடியுமோ, அதைத்தான் நான் செய்ய முடியும்’ என்றால், அது சரியான காரண அடிப்படையிலான நடவடிக்கை இல்லை. பகுத்தறிவான விஷயம் கிடையாது. லாபம், பணம் என்ற அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஆனால், எல்லா அம்சங்களிலும் இதை நாம் காண்கிறோம்.
இன்றைக்கு தனியார் துறையில் மருத்துவம் இருக்கிறது. தனியார் மருத்துவம்தான் பலருக்கும் கிடைக்கும் எனும்போது, அவர்கள் லாபநோக்கோடுதான் செயல்படுகிறார்கள். ‘அவர்கள் செய்வது எல்லாம் உண்மையிலேயே தேவையா?’ என்ற கேள்வி வருகிறது? தேவையும் இருக்கலாம். எல்லோருமே பொய் சொல்பவர்களாக இருப்பதில்லை. ஆனால், இந்தச் சூழலில் நமக்கு ஒரு சந்தேகம் இயல்பாக வரும். இப்படிப்பட்ட சந்தேகங்களுடனே நாம் இருக்கும்போது, எனக்கு ஏதாவது ஒரு பிடிமானம் தேவைப்படும் அல்லவா? இந்த மாதிரியான நிச்சயமற்ற உலகில், அந்தப் பிடிமானத்தை நான் எங்கிருந்து எடுத்துக்கொள்வது? அப்போது எதாவது ஒரு மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான நம்பிக்கையில் நான் ஒரு பற்றை வைத்துக்கொள்கிறேன்.
போதிய அளவு கல்வியறிவு, முற்போக்குக் கலாச்சாரம் பரவாத, பிடிப்பு இல்லாத ஒரு நிலை இருக்கிறது. ஆரம்பகாலத்திலிருந்து வருகிற தொடர்ச்சியும், புதிதாக ஒரு பகுதியினரின் அவநம்பிக்கையிலிருந்து வரக்கூடிய விஷயங்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தச் சமூகமே பகுத்தறிவுக்கு முரணாக கட்டமைப்பட்டிருக்கிற சூழலில் வரக்கூடிய அவநம்பிக்கைகள், சந்தேகங்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் சேர்ந்துதான், இன்றைய சமூகத்தில் நிலவுகிற பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளுக்கு, கண்மூடித்தனமான நம்பிக்கைகள், கருத்துகளுக்குக் காரணம். விஞ்ஞானிகளும் இதே சட்டியில் இருந்துதான் வருகிறார்கள். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். விஞ்ஞானிகள் எங்கிருந்தோ வெளிஉலகில் இருந்து குதிப்பதில்லை.
எல்லா விஞ்ஞானிகளும் எல்லா விஷயங்களையும் குறித்து சிந்திப்பதில்லை. ராக்கெட் விஞ்ஞானி ஒருவர் மென்பொருள் எழுதுகிறார் என்றால், அந்தப் பணியை மட்டுமே அவர் செய்கிறார். அவருக்கு மற்றதைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மென்பொருள் எழுதும் இஸ்ரோவில் வேலை செய்கிற ஒரு விஞ்ஞானி, ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்கிற மென்பொருள் எழுதும் பொறியாளரைவிட வேறுபட்டவர் கிடையாது.
அதேபோல இஸ்ரோவில் பணியாற்றக்கூடிய மின்பொறியாளர், வெளியே பணியாற்றக் கூடிய மின்பொறியளரைவிட எந்த வகையில் வேறுபடுகிறார்? அந்தத் தனிப்பட்ட நபர் தன்னுடைய முயற்சியினால், சில சமூக ஏற்பாடுகளின் மூலமாக, ஆழமாக யோசித்தால் மட்டுமே வேறுபட்டவராக இருப்பார். எனவே, விஞ்ஞானிகளில் ஒரு பெரும் பகுதியினரும் அப்படித்தான் இருப்பார்கள். ஏனெனில் இந்தச் சட்டிக்குள் இருந்துதானே வருகிறது.
மக்களை அடுத்தகட்ட நிலைக்கு அழைத்துப் போவதற்கு நாம் அறிவியல் பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும்? அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடிய செயல்பாட்டாளர்கள் எப்படியான கூர்உணர்வுடன் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுபோக வேண்டும்?
த.வி.வெ: ஒரு துறையில், குறிப்பிட்ட பகுதியில் இவ்வளவு ஆழமான, சிறப்பான நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பவர்கள், ஏன் பிற விஷயங்களில் பகுத்தறிவுத் தன்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு எனது பதில், நமது சமூக அமைப்பில், விமர்சனப்பூர்வமாக நம்மையே நாம் மீள்பார்வைக்கு உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளே இல்லை. என்னுடைய நிபுணத்துவத் துறையில் அந்த வாய்ப்பு இருக்கும். என்னுடன் பணியாற்றுபவர்கள் கேள்விகள் கேட்பார்கள். அந்தக் கேள்விகளில் இருந்து, முரண்களில் இருந்து, நான் எழுந்து வரலாம். ஆனால், அதைத் தாண்டி விவாதிப்பதற்கான களமே இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட களங்களை அமைப்பதுதான் அறிவியல் இயக்கங்களுடைய பணி என்று நான் கருதுகிறேன்.
பல்வேறு துறைசார்ந்த நபர்களை ஓரிடத்தில் இணைக்கக்கூடிய முறையில் செயல்பட்டு, அந்த இடத்தில் பகுத்தறிவான முறையில் பல்வேறு விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். முத்திரை குத்தாமல், நிதானத்தோடு விவாதிப்பதன் மூலம், பலருக்கும் தங்களைக் குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். தங்களுடைய நிபுணத்துவத்திற்கு வெளியில் உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்கிற, சிந்திக்கிற வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். எனது தனிப்பட்ட வாழ்க்கையில், அறிவொளி போன்ற இயக்கங்களில் நான் ஈடுபடவில்லை என்றால் பல விஷயங்கள் எனக்கும் தெரிந்திருக்காது.
நான் அறிவொளி இயக்கத்தில் ஈடுபட்ட சமயத்தில், அதில் பங்கெடுத்த நபர்களும், அந்த இயக்கமும் சுட்டிக்காட்டிய பல பிரச்சனைகளை, அம்சங்களைப் புரிந்துகொள்ள முடிந்ததனால் எனக்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. இவை பிறக்கும்போதே நான் பெற்றுவந்த விஷயங்கள் அல்ல. எனக்கும் சமூகத்தில் ஒரு வாய்ப்பு வந்தபோது நான் அடைந்த விஷயங்கள்தான் அந்த மாற்றங்கள். அந்த வாய்ப்புகளுக்கான கட்டமைப்பை நாம் உருவாக்குவது அவசியம் எனக் கருதுகிறேன். இந்தத் திசையில் அறிவியல் இயக்கங்கள் நகர்ந்தால், கூடுதலான நபர்கள் அறிவியல் மனப்பான்மையோடு சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கும் ஒரு நிலையை நாம் உருவாக்குவோம்.

சமூகத்தில் சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிற செயல்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு பகுதியினர், ‘நாம் வறுமையை ஒழிக்கவேண்டி இருக்கிறது. நம்முடைய குழந்தைகளுக்கு கல்வியை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்க, நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவது அவசியமா?’ என்று கேட்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
த.வி.வெ: சிகரெட், பீடி போன்றவை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பீடிக்காக இந்தியாவில் நாம் செலவு செய்த தொகை 80,000 கோடி. நூறு சந்திராயன் திட்டங்களுக்கான தொகை இது. கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசிற்காக தமிழ்நாட்டில் செலவழித்த தொகை சுமார் 4,500 கோடி.
இது போன்ற விஷயங்களில் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை நாம் உணர வேண்டும். எனவே, ’சந்திராயனுக்கு செலவழித்தது பெரிய தொகை. இந்தத் தொகையால்தான் வறுமை ஒழிப்புப் பணி நிறைவேறவில்லை’ எனக் கருதினால் அது சரியான, பகுத்தறிவான பார்வை கிடையாது. எவ்வளவு வரிச்சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதோடு ஒப்பிட்டால், 10 ஆயிரம் சந்திராயன்களை ஏவலாம் அல்லவா? எனவே, சந்திராயன் போன்ற திட்டப்பணிகளை அநாவசியம் என்று வாதிடுவதை திசைதிருப்பும் செயலாக நான் கருதுகிறேன்.
நாம் ஏழை, ஏழை நாடு, நம் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், சந்திராயனால் மக்கள் வறுமையில் இல்லை. அதற்கான செலவு அவர்களை வறுமையில் வைத்திடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மக்களை வறுமையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் வேறு. அந்தக் காரணங்களை விட்டுவிட்டு வேறு விஷயங்களைக் கைகாட்டுவது, திசைதிருப்பும் பணியில் ஈடுபடுவதாக அமையும்.
மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சுரண்டலை ஒழித்து, மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் பணியில் அரசுகள் உள்ளிட்ட பிற அமைப்புகள் எத்தகைய பங்காற்றிட வேண்டும்?
த.வி.வெ: இந்த விஷயத்தை மூன்றாகப் பிரித்துப் பேச வேண்டும் எனக் கருதுகிறேன். ஒன்று, அடிப்படை அறிவியல் ஆய்வு. பூமியின் வடிவம் என்ன? E=mc^2 என்பதா? நிலவு எப்படி உருவானது? பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது? மனிதர்களுக்கு முந்தைய மூதாதையர்களின் உருவம் எப்படி இருந்தது? இவை போன்ற ஆய்வுகள் எல்லாம் அடிப்படை ஆய்வுகள். மொத்த அறிவியல் ஆய்வுகளிலேயே இந்த வகையான ஆய்வுகள் ஒரு சிறிய பகுதிதான்.
இரண்டாவது, தொழில்நுட்ப ஆராய்ச்சி. பயன்நோக்கு ஆராய்ச்சி (Applied Research) என்கிறோம். உதாரணத்திற்கு, மலக்குடல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் நூறு சதவிகிதம் குணப்படுத்தலாம். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அதைக் கண்டறிவது கடினம். தாமதமாகக் கண்டறிந்தால் நோயைக் குணப்படுத்த முடியாது. எனது ஆராய்ச்சியாளர் நண்பர் ஒருவர் இந்த நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிய முடியுமா என்று ஆய்வு செய்கிறார்.
என்ன விதமான மைக்ரோ ஆர்.என்.ஏ. பொருள் ஆரம்பக் காலத்திலேயே கண்ணுக்குத் தெரியும் என்ற ஆராய்ச்சியில் அவர் ஈடுபடுகிறார். மரபியல் ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பயன்நோக்கு ஆராய்ச்சி இது. அடிப்படை ஆராய்ச்சி அல்ல. மூன்றாவது வகையான ஆராய்ச்சி, பயன்நோக்கு ஆராய்ச்சியைத் தொழில்நுட்பமாக, ஒரு தயாரிப்பாக ஆக்குவது. தயாரிப்பு ஆராய்ச்சி. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறிய, ஒரு பட்டையில் சொட்டு ரத்தத்தை வைத்து, அளவைக் கண்டறிகிறோம். இது தொழில்நுட்பம். ஒரு தயாரிப்பு.
இந்த மூன்று வகையான ஆய்வுகளில் அடிப்படை ஆய்வு நம்முடைய கூர்நோக்கு ஆர்வத்தால் நிகழ்வது. வாய்ப்புகளும், அதற்கான கருவிகளும் கிடைத்தால் அந்த ஆராய்ச்சிகளில் நாம் ஈடுபடுவோம். பயன்நோக்கு ஆராய்ச்சியில், எதை நான் ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கிறேன், எதை நான் தேர்ந்தெடுக்கவில்லை என்ற அம்சம் அடங்கியுள்ளது. எதற்கு நான் முக்கியத்துவம் தருகிறேன் என்ற அம்சத்தோடு அது தொடர்புடையது. உதாரணத்திற்கு, இன்றைக்குப் பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள் காசநோய் குறித்து இல்லை.
பெரும்பாலான காசநோய் நோயாளிகள் ஏழைகளாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கிறது. அதே சமயத்தில் செல்வந்தர்களுக்கு வரக்கூடிய நோய்கள் அல்லது செல்வ செழிப்பில் வரக்கூடிய சில நோய்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. தனியார் துறைகள் இதில் ஈடுபட்டிருக்கிற காரணத்தால், எது லாபத்தை அதிகரிக்குமோ அதை நோக்கிய ஆராய்ச்சி மருத்துவத்துறையில் கூடுதலாக இருக்கிறது.
காசநோய்க்கான மருந்து ஆராய்ச்சியில் முதலீடு செய்து, ஏழை நோயாளிகளிடம் மருந்து விற்பனை செய்வதைக் காட்டிலும், வசதி படைத்தவர்களுக்கு வரக்கூடிய நோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டால், அந்த மருந்துகளை வாங்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். தனியார் துறையின் தாக்கம் மற்றும் பிற காரணிகளால், இரண்டாம், மூன்றாம் ஆராய்ச்சி அரங்கங்களின் ஆராய்ச்சி முக்கியத்துவங்கள் மாறுகின்றன. இது குறித்து, ஒரு சமூகமாக, ‘ஏன் இப்படி நடக்கிறது’ என்ற கேள்வியை நாம் நிச்சயம் கேட்க வேண்டும்.
இன்றைக்கு சர்வதேச அளவில் மருத்துவ ஆராய்ச்சி குறித்த விவாதங்களில் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, டாக்டர் டி. சுந்தரராமன் தலைமையில் சர்வதேச மக்கள் நல மருத்துவ இயக்கம் செயல்படுகிறது. அவர்கள் இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். ‘உலகில் என்னென்ன மருத்துவ ஆய்வுகள் நடக்கின்றன, ஏன் இந்த ஆய்வுகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை, ஏன் இந்த ஆய்வுகள் பின்னடைவில் உள்ளன?’ போன்ற கேள்விகளை இந்த இயக்கம் முன்வைக்கிறது. இந்தக் கேள்விகள் சமூக நோக்கம் கொண்டவை. அவற்றை நாம் கேட்க வேண்டும்.
எனவே, அறிவியல் என வரும்போது, அடிப்படை அறிவியல் என்பது எல்லோருக்கும் பொது. நம்முடைய கருத்துக்கு அது உதவி செய்யக்கூடும். நிலவு எப்படி உருவானது என்பதை நாம் கண்டறிந்தால், உலகில் நிலவின் தோற்றம் குறித்த கட்டுக்கதைகளுக்கு அந்த விடை கேள்விக்குறியாகிறது.
பரிணாம வளர்ச்சியின் வழியில்தான் உயிர் தோன்றியது என்றால், உயிரின் தோற்றம் குறித்த பண்டைய கருத்துகளை நோக்கி கேள்வி முன்வைக்கப்படுகிறது. எனவே, கருத்துநிலையில் அடிப்படை அறிவியலுக்கு ஒரு பங்கு இருக்கிறது. மற்றபடி சமூக நிலை என்று பார்த்தால், இரண்டாவது, மூன்றாவது ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இந்தப் பயன்நோக்கு ஆராய்ச்சி, தயாரிப்பு ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தனியார் துறையின் தாக்கம், பல்வேறு சமூக சக்திகளின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக ஒரு சமனற்ற தன்மை நிலவுகிறது, அவற்றின் திசைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை பற்றிய கூர்மையான விவாதங்கள் அவசியம்.
