நிகழ் அய்க்கண்
பொது சிவில் சட்டம் பற்றிய பிரச்சினையை எதிர்பார்த்ததுபோல பாஜக அரசு இன்று ஓர் எரியும் பிரச்சினையாக ஆக்கியுள்ளது. காஷ்மீருக்கு வாக்களிக்கப்பட்ட சிறப்புரிமைகளை மறுப்பது; பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை எழுப்புவது ஆகியவற்றோடு பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதும் அவர்களின் மூன்று அடிப்படைத் திட்டங்களில் ஒன்றாகும். இங்கு பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் சட்டங்களை எல்லாருக்குமான பொதுச்சட்டங்களாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்கிற நியாயமான அச்சத்தை சிறுபான்மை மக்கள் மத்தியில் இன்று உருவாக்கியுள்ளது.

இந்தியா போன்ற ஒரு பன்மைத்துவ சமூகத்தில் நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்ட தனிநபர் சட்டங்கள் எல்லாருக்கும் பொதுவாக இருக்கமுடியாது என்பதை இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்நூலானது பதினோரு தலைப்புகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. பக்க விரிவஞ்சி அவற்றைப்பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.
எல்லாருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே? அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர் என்கிற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. மேலோட்டமாக இந்தப் பிரச்சினையை அணுகமுடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கின்றன. சிவில் சட்டத்தில் மட்டும், விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை, வக்ஃப் சொத்து நிர்வாகம் ஆகியவற்றில் மத அடிப்படையில் சில வேறுபாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இப்படியிருக்கும்போது, ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச்சொல்வது தவறு. இந்து மதத்திற்குள்ளேயேகூட சாத்தியமில்லை என்கிறபோது, பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களை குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை.
பொதுசிவில் சட்ட விவாதத்தில் சில குறிப்புக்களை நினைவிற்கொள்ள வேண்டியது அவசியம். உதாரணத்திற்கு, சிறப்புத் திருமணச் சட்டத்துடன், இந்திய வாரிசுரிமைச் சட்டத்தினை இணைத்து வாசிக்கும்போது, விருப்ப அடிப்படையில் எந்த மதத்தினர் வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளக்கூடிய பொது சிவில் சட்டம் இப்போதும் நடைமுறையிலுள்ளதை அறியலாம். ‘தலாக்’ என ஒரேநேரத்தில் மும்முறை சொல்லி ஓர் ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு திருக்குரானிலோ, ஹதீஸ்களிலோ இடமில்லை.
ஒரேநேரத்தில் சொல்லப்படும் ‘முத்தலாக்’ செல்லாது என்பதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காகவே பலர் முஸ்லிமாக மதம் மாறுகின்றனர் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், அப்படியான திருமணங்களை ஏற்க இயலாது என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் ஆணைப்போலவே முஸ்லிம் பெண்ணும் சுய விருப்பத்தின் அடிப்படையில் தன் கணவரை விவாகரத்து செய்யலாம்.
வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை என்கிற கருத்தை நம் அரசியல் சட்டம் வற்புறுத்துவதாகக் கொள்ளமுடியாது. பொது சிவில் சட்டமானது நம் அரசியல் சட்டத்தின் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், தனிநபர் சட்டங்களைப்பொருத்தமட்டில் அந்தந்த தேச வழமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதே.
முஸ்லிம் தனி நபர் சட்டங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலுள்ளன. ஒரு மதச்சார்பற்ற நாட்டில் முஸ்லிம் தனிநபர் சட்டங்களை ஏற்க முடியாது என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாடு என்பதன் பொருள் எந்த ஒரு மத நம்பிக்கையும் அதன் சடங்குகளும் பிற மத நம்பிக்கையாளர்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே. பொது சிவில் சட்டத்தினை முஸ்லிம்கள் மட்டுமே எதிர்க்கின்றனர் என்பதும், இச்சட்டத்தினை முஸ்லிம் பெண்கள் ஆதரிக்கின்றனர் எனச்சொல்லுவதும் தவறு. தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்து 1950 களில் அம்பேத்கரால் முன்மொழியப்பட்டபோது அதைக்கடுமையாக எதிர்த்தவர்கள் இந்து மகாசபையினர்தான்.
விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்கிற கண்மூடித்தனமான கருத்து பரவலாக எழுப்பப்படுகிறது. இந்திய நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை, இருக்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, பல தீர்ப்புக்களில் முத்தலாக் சொல்லப்பட்ட மனைவியரின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளன. விவாகரத்துக்குப் பின்னும் முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம், குடும்ப வன்முறைச்சட்டம் முதலான சட்டங்களிலிருந்து பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பார்சிகள், பழங்குடியினர் ஆகியோருக்குத் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை முதலானவற்றில் தனித்தனியான தனிநபர் சட்டங்கள் இருந்தபோதிலும் புதிய சட்டங்கள், சட்டத்திருத்தங்கள், நீதிமன்றத்தீர்ப்புகள், உள்ளுக்குள் நடக்கும் விவாதங்கள், இவற்றின் வழியாக ஏற்படும் மனமாற்றங்கள் ஆகியவற்றின் ஊடாக, எல்லாத் தனிநபர் சட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறைந்து, அவற்றுக்கிடையேயான பொதுமைக்கூறுகள் மிகுந்து வருகின்றன. இப்படியாகக் காலப்போக்கில்தான் மாற்றங்கள் வரவேண்டுமே ஒழிய, குறிப்பாக மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் அரசின் உள்நோக்கம் கொண்ட தலையீடுகளானது எதிர்விளைவுகளுக்கே இட்டுச்செல்லும்.
நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர் இன்று பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுவதற்கான காரணமாகச் சொல்வது முத்தலாக் மற்றும் ஹலாலா முதலான நடைமுறைகள், விவகாரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு இத்தா காலத்திற்கு அப்பாலும் உரியமுறையில் காப்புத்தொகை மறுக்கப்படுவது ஆகியவற்றால் முஸ்லிம் பெண்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.
உண்மையிலேயே இதுதான் பிரச்சினை ஆயின் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எப்படி வரதட்சணை ஒழிப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் எல்லாம் மத வேறுபாடின்றி உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறதோ அதுபோல விவாகரத்து தொடர்பாக, பெண்களைப் பாதுகாக்கும் பொதுச்சட்டம் ஒன்றைக்கொண்டு வந்திருக்கலாம்.
இப்படிப் பொதுவான முறையில் விவாகரத்து விஷயத்தில் எல்லா மதங்களைச் சார்ந்த பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக பிரச்சினையை நீதி மன்றத்திற்குக் கொண்டுசெல்வதென்பது இன்னும் பச்சையான உள்நோக்கம் கொண்ட செயலேயாகும். இவர்களது இப்போதைய உண்மையான பிரச்சினை பொது சிவில் சட்டம் ஒன்றை உருவாக்குவதல்ல. தற்போதுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்வதுதான்.
பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் மிகவும் அறிவார்ந்த தளத்தில் சட்டவியல் கொள்கை நுணுக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று. அது இங்கே முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்த பாஜக அரசின் அணுகல்முறையும் இந்துத்துவவாதிகளின் இது குறித்த பேச்சுக்களும் அவர்களின் ஐயத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன. தமது நோக்கம் சட்ட உரிமைகளைப் பொதுமைப்படுத்துவது என்பதைக் காட்டிலும் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை அழிப்பதுதான் என்பதை இந்துத்துவவாதிகளின் ஒவ்வொரு பேச்சும் உறுதிசெய்துகொண்டே உள்ளது.
இந்தியாவில் பல இன, மொழி, மத சாதி மக்கள் வசித்து வருகின்றனர். இப்படியான ஒரு சமூக அமைப்பில் ஒரு தாராள ஜனநாயக அமைப்பை உருவாக்க நினைக்கும் யாரும் ஒரே நேரத்தில் இரண்டு அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாகின்றனர். இப்படிப் பல்வேறு தனித்துவமிக்க சமூகக் குழுக்களின் குழும அடையாளங்களையும் உரிமைகளையும் ஏற்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம் உலகளாவிய முறையில் பண்பாடு, பொருளியல், என சகல அம்சங்களிலும் உருவாகியுள்ள உரிமைகள் அனைத்து மக்கட்பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுமாகும்.
ஏதேனும் ஒரு குழுமம், குழும உரிமைகள் எனும் பெயரில் தனது குழுமத்தில் ஒருபிரிவினரின் உரிமைகளை மறுப்பதை ஏற்க இயலாது.
1857 தொடங்கி இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், சமூக மாற்றங்களின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடியின் விளைவாக, இங்குள்ள முஸ்லிம்கள் தம் குழும அடையாளங்களையும், குழும உரிமைகளையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். அதன் விளைவாகவே, 1937ல் ஷரியத் சட்டமாக வடிவெடுத்தது.
நமது அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகள் எனவும் வழிகாட்டு நெறிமுறைகள் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் நான்காம் பாகமாக அமைந்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசியல் சட்டத்தின் 37ம் பிரிவு அளிக்கும் ஓர் உறுதிமொழி முக்கியமானது. “இந்த (நான்காம்) பாகத்தில் கண்டுள்ள எந்த அம்சங்களையும் எந்த நீதிமன்றத்தாலும் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த முடியாது. இருந்தபோதிலும் இவற்றில் பதியப்பட்டுள்ள கொள்கைகள் நாட்டின் ஆளுகையில் அடிப்படையானவை.
சட்டங்களை உருவாக்கும்போது அரசு இந்தக் கொள்கைகளை பிரயோகிப்பது முக்கியமானது.” சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களைத்தான் இது பொருள்படுத்துகிறதே ஒழிய, நீதிமன்றங்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை.
பல்வேறு நம்பிக்கைகளும் வழமைகளும் நடைமுறையிலுள்ள ஒருநாட்டில் பொதுத்தனிநபர் சட்டம் சாத்தியமில்லை என்பதை இதுவரை ஆண்ட அரசுகள் ஏற்றுக்கொண்டுதான் ஆட்சி புரிந்தன. அவ்வாறு அனுசரித்ததற்குக் காரணம் அது சாத்தியமில்லை என்பதை நடைமுறையில் உணர்ந்ததுதான்.

இந்திய அரசியல் சட்டத்தின் 13ம் பிரிவின்படி, தனிநபர் சட்டங்கள் “சட்டங்கள்” அல்ல. எனவே அடிப்படை உரிமை, சமத்துவம் முதலியவற்றின் அடிப்படையில் அவற்றின் மீது தீர்ப்பு சொல்ல இயலாது. தனிநபர் சட்டங்கள் சமூக வழமைகளின் அடிப்படையில் சட்டங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. எனவே அரசியல் சட்டத்தின் 372 பிரிவைப் பயன்படுத்தி அச்சட்டங்களை குடியரசுத் தலைவர் அவற்றினைத்திரும்பப்பெறவோ, அவற்றில் திருத்தங்கள் செய்யவோ முடியாது.
முஸ்லிம் தனிநபர் சட்டங்களைப் பொருத்தமட்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட Muslim Shariat Application Act-1937, Dissolution of Muslim Marriage Act-1939, Protection of Muslim Women’s Rights on (Divorce) Act-1986 and Waqf Act-2013 ஆகியவற்றிற்கு மட்டுமே சட்ட அந்தஸ்து உண்டு. அவற்றின் மீது மட்டுமே அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை என நீதிமன்றத்தை அணுகமுடியும்.
சுருக்கமாகக்கூறின், பல்வேறு சமூகங்கள் வசிக்கும் இந்தியாவில், பொது சிவில் சட்டம் அல்லது பொதுத்தனிநபர் சட்டம் என்பது சாத்தியமில்லை.
தனிநபர் சட்டங்களுக்கும் அரசியல் சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உள்ள முரண்களும், இடைவெளிகளும் காலப்போக்கில் களையப்பட வேண்டும். இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதால், உரிய ஜனநாயகப்பூர்வமான விவாதங்கள், கருத்தொருமிப்புக்கு இடமின்றி அவசரமாகத் தலையிட்டு சட்டம் இயற்றுவதை ஏற்கமுடியாது. இதை அரசியலாக்கி மக்களைப பிளவுபடுத்தும் இந்துத்துவ அரசியல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று
