பிரேமா இரவிச்சந்திரன்
“தூர்” எனும் நூலின் ஆசிரியர் தஞ்சை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி. இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளையும் பெண்ணின் பார்வையிலிருந்து, பெண் எனும் அடையாளமில்லாமல், பாலினப் பாகுபாடின்றி, பொதுவான பார்வையில் நிகழ் காலச் சம்பவங்களை நேரடியாகக் கதைகளாக்கியிருக்கிறார். இக்கதைகளில் நிகழ்வுகளோடு மக்களின் எதிர்பார்ப்புகளையும், தீர்க்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனது உறுதியான வெளிப்பாட்டை எப்படி இவரால் மென்மையாக, எதிர்க்கருத்து கொண்டோரும் ஏற்கும்படியாகக், கடத்த முடிகிறதென வியக்க வைக்கின்றன ஒவ்வொரு கதையும். அவரது மென்மையான குணமும், ஆழமான அன்பும், சமூகத்தில் தூர்வார வேண்டிய இடங்களில் அவரது ஆர்ப்பாட்டமில்லாத போர்க்குணமும் அழகாக ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகின்றன.
இந்நூலின் தலைப்பான “தூர்” என்ற சொல்லைக் கூட அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. இறுதிக் கதையில், “மஞ்சள் தடவிய வேப்பம் தூரில் கோர்த்திருந்த ஈரம்போல், அப்பாவின் கைகளை மிதிலா இறுகக் கோர்த்துக் கொண்டாள்” என “அடிமரம்” எனும் பொருளில் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். முதல் கதையில், யானை கட்டிப் போரடித்த தஞ்சை மண்ணில் தற்போது பெய்யும் மழை, வான் சிறப்பில் வள்ளுவன் குறிப்பிடும் மழையாக இல்லாமல், வெள்ளாமைக்குக் கூட வந்து சேராத, சாக்கடை நீரைத் துரத்தித் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் மழையாக மாறிப் போனதையும், அவ்வாறான தேவையும் இருப்பதை, நிகழ்கால சாட்சியாக இக்கதையில் நிறுத்தியிருக்கிறார்.
ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கும் கணப்பொழுதில் பெய்த மழையை, மிகக் கனமான கருத்துகளைக் கொண்ட கதையாக மாற்றிக் களம் கண்டிருக்கிறார். இயற்கையின் எதிரிகள் தானே நாம்? அதனை எதிர்ப்பே இல்லாமல் நம்மை ஏற்க வைத்திருக்கிறார். மலையை வெட்டி, மரத்தை வெட்டி, ஆற்றைச் சுரண்டி, மண் செரிக்காத விஷமான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கும் நம்மைப்பற்றி அழுத்தமாகப் பேசியிருக்கிறார். அத்தனையும் மீறி, “அக்கறை கொண்டவர்கள் அதிகாரத்துக்கு முன்னால் சல்லிக் காசுக்குப் பெறமாட்டார்கள். பணம் சம்பாதித்தவர் மேல் இருக்கும் பயம், ஒரு நல்லவன் மேல் இருப்பதில்லை. தவறுகளை உணருகிற அத்தனைபேரும் கடவுள்கள் தான்”. போன்ற வரிகளெல்லாம் விழிக்கச் செய்கின்றன.
அடுத்தடுத்து வரும் கதைகளில் நம் நிலத்தின் அடையாளம் சார்ந்த பதிவுகளும், நிகழ்காலப் பழக்கவழக்கங்களும், நிறையவே இடம் பெற்றிருக்கின்றன. “சரக்கொன்றை மலர்போல், மரமேறிக் கொண்டையைப் போல், போன்ற மண் மணம் கொண்ட, கதையில் மாறாப் பொருள் கொண்ட மொழிபெயர்ப்பிற்குச் சவாலான சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன. “ஃபாரின் அப்பா” எனும் கதையின் கருவில் தனக்குப் பொருந்தாத கணவனை, தன் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்த பெண், தன் தந்தையின் அறிவுரையைக் கேளாமல் சிக்கலில் தவித்து, தன் மகளின் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் வரை, அப்படியே வாழ்கிறார். அன்னை தன்னிடம் மறைத்து வைத்து வாழ்ந்து வந்த துன்பங்களை வளர்ந்த மகள் அறிந்த பொழுது, விவாகத்திலிருந்து விடுப்பு ஒன்றே விடுதலை எனும் முடிவினை அன்னைக்கு அறிவுறுத்துவதும் ஏற்கும்படியாகவே இருக்கிறது.
“நிலா வாசம்” எனும் கதையில், “நிலவின் முன்பு தன் கண்களை இறுக மூடிக்கொண்டு நமக்குப் பிடித்தமானவர்களை மனதில் நினைத்து, மெல்லத் திறந்து பார்த்தால், நிலாவில் அவர்களது உருவமும் வாசமும் நம் கண் முன்னே வந்து நிற்கும்”. என நிலா வாசம் பிடிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். நெருக்கமான உறவுகளை இழந்தவர்கள் ஆறுதல் தேடுவது இயற்கையிடம்தான். நமது இயற்கையின் மீதான விதிமீறல்களைப் பொறுத்துக் கொள்வது என்னவோ பூமிதான். இயற்கையை மட்டுமே வழிபட்டு வழிவழியாக வந்திருந்தோமெனில் தற்போது பால்நிலாவின் மீது கரும்புகையைப் பூசிப் பௌர்ணமியை அமாவாசையாக மாற்றம் கொள்ளச் செய்வதெல்லாம் நடந்திருக்காதுதான். எத்தனை கொடுமை செய்யினும் பூமி தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு பொறுமையைக் கையாளுகிறது. வெடிக்கும் நாள் எந்நாளோ? அதற்கு முன் நாம் விழிக்க வேண்டும்.
மற்றுமொரு கதையில், குழந்தைகளின் கனவைப் பூர்த்தி செய்கிறேனென்று அவர்களைக் காப்பகத்தில் விட்டுவிட்டுப் பொருளீட்டச் செல்லும் பெற்றோர்களே அறியாத குழந்தைகளின் மனதை, உட்புகுந்து அறிந்திருக்கிறார். காற்றிலே கரைந்து போகும் குழந்தைகளின் எதிர்பார்ப்பைக் கதையாக வடித்திருக்கிறார். “அன்பெனப்படுவது” என்னும் கதையில் தன் விருப்பத்திற்கு இடம் கிடைக்காத ஆடம்பர வாழ்க்கையையும் சிறையென உணரும் பெண், தன்னை விடுவித்துக் கொள்ள, “வல்லமை தாராயோ” எனும் பாரதியின் வரிகளையே நாடுகிறாள். கணவனின் அன்பில் அடங்கியிருக்கும் பெண்ணுக்குத் தன் அன்னையைக் காண்பதற்குக் கூட கணவனின் அன்பை உடைத்தெறிந்து வெளியே வர வலியைத் தாங்கும் வலிமை தேவைப்படுகிறது. சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
பழைய வீடு எனும் தலைப்பிட்ட கதையில் கதையின் நாயகி தன்னை ஆராதிக்கும் மகிழ்ச்சியை உணராதவளாக அழுகையை இழுத்து அணைத்துக் கொள்கிறாள். பழையன கழிந்து தனது வாழ்க்கையின் வெற்றியாகப் புதிய வீட்டைக் கட்டி முடித்துக் குடியேறிய பிறகு அங்கும் அவளது அழுகை அவளோடு தொடர்ந்து வருகிறது. அதற்கு அவள் உணரும் காரணம் மட்டும் தினமும் மாறும் சட்டையைப் போல மனதில் மாற்றம் கொள்கிறது. தனது குழந்தைகளுக்குப் பழைய வீட்டில் இருந்த சுதந்திரம் புதிய வீட்டில் இழந்ததை எண்ணி ஞானம் அடைந்தவளாக வருந்துகிறாள். “வாழ்க்கை என்பது உரிக்க உரிக்க வெங்காயம்” என்ற சொற்றொடர் தான் நினைவிற்கு வருகிறது.
தேடுதல் கொண்ட வாழ்க்கையானது முடிவே இல்லாமல் தொடர்ந்து நீண்டு கொண்டே இருந்தாலும் சில உணர்வுகள் வட்டமடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இவற்றையும் இந்தக் கதையில் பார்க்க முடிகிறது. பழைய வீட்டுச் சுவரில் பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்த குழந்தைகளின் கிறுக்கல்கள், புதிய வீட்டுச் சுவர்களில் தவிர்க்கப்படும் போது, அவர்களது சிறகுகளை ஒடித்த உணர்வையே வாசிப்பவர்களும் பெறுகிறோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அறைகள் அமைந்த புதிய மாளிகை போன்ற வீட்டில் பிள்ளைகள் கைதிகள் போலக் குடியேறிய பிறகு,
“பழைய வீட்டை விடக் குழந்தைகள் இங்க சந்தோஷமாத் தானே இருக்காங்க?”
என்ற நாயகியின் கேள்விக்கு அவளது சினேகிதியானவள் தனது அசைவுகளற்ற பார்வையைப் பதிலாகக் கொடுக்கிறாள். இவ்வாறான காட்சிகளைக் கதைகளில் சொல்வதற்கு நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கும் சொற்கள் கவிதைகளெனச் சுவைக்க வைக்கின்றன.

தஞ்சையின் வட்டார மொழியை பெரும்பாலான கதைகளில் அதிகமாகப் பயன்படுத்தியும், ஆங்காங்கே சில சொலவடைகளை இடத்திற்கு ஏற்றாற்போல் சொல்லியும், கரிசல் காட்டுப் புதல்வன் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் கதைகள் போல, தஞ்சையின் மண்ணைச் சுமந்து கதைகளில் மணக்கச் செய்திருக்கிறார். தமிழிலேயே இதுவரை இல்லாத வரியாக “அல்லியம்மா அரச்ச மருந்து” என்னும் கதையில், “உசுரோட சாகுற ஆம்பளையோட விதவத் தொயரத்த” எனும் வரியில் “விதவைத் துயரம்” எனும் சொல்லை ஓர் ஆணுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.
“கோப்பிரியா” எனும் மற்றுமொரு கதையில், பெண்ணானவள் புகுந்த வீட்டுச் சகல சங்கதிகளையும் தாய் வீட்டில் பகிரக் கூடாது எனும் பழங்கால அறிவுரைகளை, நிகழ்கால ஆண் கடைப்பிடித்து, தன் மனைவியின் மீதான கருத்து வேறுபாட்டில் சில மாதங்கள் பிரிந்து வாழும் கணவன், அதனைத் தன் பெற்றோரிடம் மறைத்து வாழும் போது, அதுவே அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வழியாகவும் அமைகிறது. மாறி வரும் காலச் சூழலுக்கேற்பக் கடைப்பிடிக்கவேண்டிய புதிய கலாச்சாரங்களைக் கதைகளில் சொல்லிச் செல்கிறார்.
“பறத்தலின் சப்தம்” எனும் கதையில் தன் மகளை மருத்துவராக்கும் கனவிலிருக்கும் பெற்றோருக்கு, அக்கனவை நிறைவேற்றத் தடையாக நிற்கும் நீட் தேர்வை, மகள் வசுமதியால் எதிர்கொள்ள இயலாமையைப் பற்றிப் பேசுகிறது. வீட்டிலிருந்து படிக்கும் இக்கதையின் நாயகி வசுமதிக்குப் பேசிக்கொள்ள, தான் வளர்த்த மல்லிகைச் செடியாவது காது கொடுக்கிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் உண்மை வசுமதிகளுக்கு அவ்வசதியும் இல்லை. புறக்கணிப்பு ஒன்றே புத்திசாலித்தனம் எனும் இக்கதையின் முடிவு, நமது இயற்கை மருத்துவம் ஓங்கி வளர்ந்தால், சிறப்பாக இருக்குமென எண்ண வைக்கிறது.
“தூர்” எனும் இறுதிக் கதையில், தந்தையின் சிதைக்குக் கொள்ளி வைக்கப் பிறந்த மகன், வாழும் போதே மனதில் கொள்ளி வைக்க, அசையாத சொத்துகளை உதறித் தள்ளிய மகளைப் பெற்ற தந்தையாகத் தன் இறுதிக் காலத்தை மகளுடன் கழிக்கும் பாக்கியசாலியாகிறார். “பெண்கள் மூட்டும் சவத்தீயும் பற்றி எரியும்” எனும் வரியில் முடியும் இந்நூல் நம் மனதையும் பற்றிக் கொள்கிறது. தான் கடந்து போன ஒவ்வொரு சம்பவத்தையும் கதையாக்கிச் சப்தமில்லாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் அகிலா கிருஷ்ணமூர்த்தி. வாசிக்க வேண்டிய சிறப்பான நூல்.
