நிகழ் அய்க்கண்
இந்நூலின் ஆசிரியரான நேஹல் அகமது புதுதில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவராக இருந்த சமயம், 2019 – குடியுரிமைத்திருத்தச் சட்டத்திற்கெதிரான அம்மாணவர்கள் போராட்டம் மற்றும் இஸ்லாமியப்பெண்கள் தலைமையிலான ஷாகின்பாக் போராட்டங்களின் போது நேரடிச்சாட்சியாக விளங்கியவராவார். அவரது சாட்சியத்தினை மிகவும் சுருக்கமாக ஆக்கித்தரப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் 11 அன்று, இந்திய மக்களவையிலும், டிசம்பர் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்தியக்குடியுரிமைச்சட்டத் திருத்தமானது நிறைவேற்றப்பட்டது.

குடிமக்கள் பதிவேட்டினைச் செயல்படுத்தும் முன்மொழிவோடு கூடிய அக்குடியுரிமைச்சட்டமானது, குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியக்குடியுரிமைக்காக நேரடியாக அணுகும் முறையை ஒருபக்கம் அனுமதிக்கிறது.
இன்னொருபக்கம், ஆவணமற்ற இஸ்லாமியக் குடியேற்றவாசிகளை அடையாளம் கண்டு, அம்மக்களை நாடற்றவர்களாக ஆக்கும் இலக்கைக்கொண்டு நிறைவேற்றப்பட்டதாக இருக்கிறது. இதன்மூலம் குடியுரிமை வழங்கிட மதம் ஒருவகையினமாக வெளிப்படையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி, இச்சட்டத்தின் வழியாக, தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையோடு ஒத்துப்போகாத தன்மையையும் உருவாக்குவதாக அமைந்துள்ளது.
இந்தியக்குடியுரிமைச்சட்டத்திருத்தமானது, ஐக்கியநாடுகள் சபை தீர்மானத்தின் அடிப்படையில் பாரபட்சமானது எனவும், இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் இச்சட்டத்திற்கு எதிராகக், கண்டனம் தெரிவிக்கும் நோக்குடன், புதுதில்லியிலுள்ள ஜாமியா இஸ்லாமியா மாணவிகள் டிசம்பர் 12 அன்று, அறைகூவல் ஒன்றினை விடுத்து, பல்கலைக்கழக முக்கிய வளாகம் நோக்கித் திரண்டனர்.
ஆயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்ற அக்கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்று கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
டிசம்பர் 13 அன்று, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பானது பல்கலைக்கழக வளாகத்தினுள் ஓர்எதிர்ப்புக்கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது.
அதேநாள் மாணவர்கள் அமைப்பும் பாராளுமன்றம் நோக்கி அணிவகுத்துச்செல்ல விரும்பி, அதற்குத்தயாராகி நின்றனர். ஆனால், போலிஸார் அப்பேரணிக்கு அனுமதி மறுத்தது மட்டுமின்றி, மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், விரட்டியடிக்கப்பட்டு கண்ணீர்ப்புகைக்குண்டுவீசித் தாக்குதலுக்கும் உள்ளாக்கினர். இந்நிலையில், கல்லூரி வளாகத்திற்குள் திரும்பிய மாணவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய விவாதத்தில் ஈடுபடலாயினர்.
டிசம்பர் 14, அன்று, போலிஸாரின் தாக்குதலைக்கண்டிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகக் கூட்டுப்பொறுப்புணர்வை உணர்த்தும் விதமாகவும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்திற்கு மாணவ அமைப்புக்களால், அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேநாளில் பல்கலைக்கழகத் தேர்வுகளும் நடக்கவிருந்த நிலையில் அத்தேர்வுகளை புறக்கணிக்க மாணவ அமைப்புக்களால் ஒருபக்கம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இன்னொருபக்கம், தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டி நிர்வாகஅதிகாரிகளிடம் முறையீடும் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அன்று நடக்கவிருந்த பல்கலைக்கழகத்தேர்வும் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது, இதன் காரணமாக, மாணவர்களில் அதிகபட்சமானோர் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கு முந்தைய வருடங்களில் ஜாமியா அரசியல் ரீதியில் முடமாக்கப்பட்ட ஒரு வளாகமாகயிருந்தது. எவ்வித சங்கங்களோ, குழுக்களோ அல்லது அரசியல் கூட்டங்களோ கிடையாது. 2014 பி.ஜெ.பி ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகுதான், ஜாமியா இத்தகைய கலாச்சார மற்றும் மதம்சார் அமைப்பு வகைகளில் வளர்ச்சி கண்டது.
இந்துத்துவ சக்திகளின் எழுச்சியானது பக்தியினை வெறுப்பாக மாற்றுவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றது. இந்துத்துவப் பக்தர்கள், முஸ்லிம்களைத் தங்களது எதிரிகளாகக்கண்டு ஒரு முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலை இயக்குகின்றனர். இது சிறுபான்மைச்சமூகங்களை அவர்களது சொந்தக்கலாச்சார மற்றும் மதம்சார் அமைப்புகளை உருவாக்குவதை நோக்கித்திருப்பியிருக்கின்றது.
குடியுரிமைத்திருத்தச்சட்டமானது இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தவில்லை ; மாறாக அது இந்திய அரசமைப்பு மீதே தாக்குதல் தொடுக்கிறது. நாம் நமது அரசமைப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவேண்டும். இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரம் என்கிற பெயரில் எதனைச்செய்தாலும் அது என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தது. இந்தியாவின் மக்களாகிய நாம் என்பதுதான் என்னுடைய குழந்தைப்பருவப்பாடலாகும். இதுபோன்ற பயங்கரமான காலங்களில், இந்து வலதுசாரி தீவிரவாதத்தின் வளர்ச்சியோடு முஸ்லிம்கள் தாழ்ந்தவர்களாக, பின் தங்கியவர்களாக உணரவைக்கப்படுகின்றனர்.
முஸ்லிம்கள் மற்ற சமூகத்தைப் போன்றவர்கள்தான் என்பதுபோன்று ஏதோவொன்றைச்சொல்ல உந்தப்பட்டதாக நான் உணர்கிறேன். காந்தி, அம்பேத்கர், நேரு, ஜின்னா, ஆசாத் ஆகியோர்களிடையே இந்தியா பற்றிய சிந்தனை மீதான விவாதம் மீண்டும் புதிப்பிக்கப்பட வேண்டிய தேவையிருக்கின்றது.
டிசம்பர் 14 அன்று மாணவ அமைப்புகள் பாராளுமன்றம் நோக்கி அணிவகுக்கக்கூடாது என முடிவெடுத்தன. இதற்குப்பதிலாக, ஜாமியா நகர் அருகில் வசிக்கும் மக்களுக்கு குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடியுரிமைப்பதிவேடு பற்றி விளக்குவது சிறப்பாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், வாயில் எண் 7 லிருந்து அந்தப்பகுதிக்குச்செல்ல மாணவர்கள் தாயாராகினர். கூடவே, பொதுமக்களும் இணைந்துகொண்டனர்.
கட்டுக்கடங்காமல், பெருங்கூட்டம் கூடியதும் அதனை முறையாக, ஒருங்கிணைத்து அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல மாணவ அமைப்புகள் தவறியது மட்டுமல்லாது, போராட்டத்தினைச் சட்டென விலக்கிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரும்பிவிட்டனர். அவ்வேளையில், சாலையில் நின்றிருந்த பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியானது பதட்டமானது.
போலிஸார் அந்நேரத்தினைப் பயன்படுத்தி, வளாகத்திற்குள் நுழைந்து கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிக் கண்மூடித்தாக்குதல்களை துவக்கி, மாணவர்களை அடித்து நையப்புடைத்தனர். இவ்வாறாகச் செய்ததில், ஏறக்குறைய 400 மாணவர்கள் காயமடைந்தனர். ஒருவர் பார்வையிழந்தார். இன்னொருவருக்கு இரண்டு கைகளும் உடைந்துவிட்டன.
இந்தியாவில் பல்கலைக்கழகம் பற்றிய சித்திரமானது 2016 க்குப்பிறகு குறிப்பிட்ட பெரும் சேதத்தை தாங்கி நிற்கின்றது. இதற்கு, ஹைதராபாத் மத்தியப்பல்கலைக்கழக ரோஹித் வெமுலாவின் நிறுவனப்படுகொலை; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் மீது தேசவிரோத வழக்கு; அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்க அறையில் ஜின்னாவின் போட்டோ இருந்ததற்காகத் தாக்கப்பட்ட விவகாரத்தைக்குறிப்பிடலாம்.
டிசம்பர் 16 அன்று பல மாணவர்கள் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக வாயில் எண் 7 ல் கூடினர். அக்கூட்டமானது, குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக்குடியுரிமைப்பதிவேட்டுக்கு எதிரான போராட்டத்தின் மைய அரங்காக மாறியிருந்தது. டிசம்பர் 17 அன்று, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாணவர்களும் கலந்துகொண்டு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் ஒன்று, வளாகம் திறக்கப்படவேண்டும்;
வளாகத்தில் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுதான் அது. இதனிடையே டிசம்பர் 18 அதிகாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல பங்கேற்பாளர்களைக் கொண்டு “ஜாமியா ஒருங்கிணைப்புக்குழு” உருவாக்கப்பட்டது. இதன் நோக்கமானது, ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிகாரமற்றவர்களாக மாற்றக்கோரும் CAA, NRC க்கு எதிரான போராட்டத்தைக் கூர்மைப்படுத்துதல் மற்றும் பொறுப்புணர்வோடு கூடிய அகிம்சைப் போராட்டங்களை ஒருங்கிணைப்பது என்பதாக இருந்தது.
இந்தப்போராட்டமானது டிசம்பர் 15 முதல் 2020 மார்ச் 24 வரை நீடித்தது. இதற்கிடையில் இரண்டு ஊர்வலத்திற்குத் தயாரானோம். அதில் ஒன்று காந்தி சுடப்பட்ட (ஜனவரி 30) 72 வது நினைவு நாளையொட்டி ராஜ்காட் வரையிலான ஊர்வலமாகும். அவ்வூர்வலமானது போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அன்றைய நாளில் போலிஸ் முன்னிலையிலேயே கையில் துப்பாக்கியுடன், ஜெய் சிரிராம் என முழக்கமிட்ட சிறுவனொருவன் மாணவர்களை நோக்கிச்சுட்டதில் ஜமாலியா மாணவரொருவர் கையில் காயமேற்பட்டது. இதற்கடுத்து, 2020 பிப்ரவரி 2 ந் தேதியன்று மாணவர்களின் போராட்டத்தில், இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.
இதற்கிடையே, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டன.

மாணவர்களின் அப்போதைய கோஷமானது ”படி , போராடு” என்பதாக இருந்தது. பிப்ரவரி 10 ஆம் தேதி மற்றோர் ஊர்வலத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அந்த ஊர்வலத்தினைப் போலிஸ் தடுத்தி நிறுத்தியது மட்டுமல்லாமல், மாணவ, மாணவிகளைப் போலிஸார் தாக்கினர். இப்படியான சூழ்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக, மாணவர்கள் ஜாமியா போராட்டத்தினைக் கைவிட நேர்ந்தது.
உலகம் முழுவதிலுமுள்ள பெண்களுக்கு, குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு டிசம்பர் 14 வரலாற்றில் முக்கியமான நாள். அதுதான் சாதி, மதம் அல்லது வர்க்கம் கடந்த ஷாகின்பாக் போராட்டம். இப்போராட்டமானது, பெண்களின் தலைமையில், பெண்களால் வழி நடத்தப்பட்டு, பெண்களால் கையாளப்பட்டு மற்றும் பெண்களை மையப்படுத்தியதாக இருந்ததுதான் இதன் சிறப்புக்கூறு.
டெல்லி –நொய்டாவை இணைக்கும் சாலையிலமைந்திருக்கும் ஷாகின்பாக்கில் பெண்களின் போராட்டமானது, குடியுரிமைத்திருத்தச்சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவோட்டுக்கு எதிரானதாக மட்டும் தன்னை எல்லைப்படுத்திக் கொள்ளவில்லை; அதனையும் தாண்டி பெண்களின் ஒற்றுமையை நாடு முழுக்கப்பறைசாற்றவுமானதாக அமைந்திருந்தது.
பெண்கள் ‘நாங்கள் இந்த அரசமைப்பைக்காப்போம்’ என்றனர். இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். முஸ்லிம் சமூகம் இன்னும் அதிகளவில் அரசியல் தன்மை கொண்டதாக மாறியிருக்கின்றது. ஷாகின்பாக் போராட்டம் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனக்கோருவதன் மூலம், முஸ்லிம்கள் இந்த அரசமைப்பைப் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்கிற பார்வையை முன்வைத்தது.
இது குரலற்றவர்களுக்கான ஒரு வழியாக இருந்தது. ஷாகின்பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் குடியுரிமை பெற்றவராகவும், தலைவராகமாறிடவும், மத நல்லிணக்கத்தைப் போற்றிடவும் கற்றுக்கொண்டனர். 101 நாட்கள் தொடர்ந்த இப்போராட்டமானது கோவிட் -19 காரணமாக 2020 மார்ச் 24, போலிஸார் காலிசெய்யும் வரை தொடர்ந்தது.
“முதலில் அவர்கள் பொதுவுடைமைவாதியைத் தேடி வந்தார்கள், நான் அதுபற்றி பேசவில்லை;
ஏனென்றால் நான் பொதுவுடைமை வாதியல்ல.
பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிக்காக வந்தார்கள்
நான் பேசவே இல்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதியல்ல ;
பிறகு அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள் ; நான் அதுபற்றியும் பேசவில்லை
ஏனென்றால் நான் யூதன் அல்ல
பிறகு அவர்கள் என்னைத்தேடி வந்தனர் – ஆனால் எனக்காகப் பேச யாருமில்லை ”
(கவிதை)
– மார்ட்டின் நீமோல்கர்
