வாசிப்பின் மகத்துவத்தை வரலாறாக்கிட மாவட்டத் தலைநகரங்கள்தோறும் தொடங்கி இருக்கும் புத்தகக் கண்காட்சிகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது நம் அனைவரின் கடமை ஆகும். மாவட்டத் தலைநகரங்களில் தொடரும் ஆண்டு நிகழ்வாக மாவட்ட நிர்வாகம் கண்டிப்பாக மக்கள் இயக்கங்கள், அறிவியல் இயக்கம், மகளிர் சங்கம் மற்றும் அரசு – ஆசிரியர் அமைப்புகளோடும் தமுஎகச போன்ற எழுத்தாளர் கலைஞர்கள் அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு புத்தகத் திருவிழா என்னவெல்லாம் செய்யும்…. கீழ்கண்ட ஐந்து அற்புதங்களை அது நிகழ்த்தும்.
வேற்றுமையில் ஒற்றுமையை நிலைபெறச் செய்யும்
இன்று வெறுப்பரசியலும் பிரிவினையும் தலைவிரித்தாடுகிறது. மதவெறி சாதியப் பூசல்கள் ஊர்ப் பிரச்சனைகள் எனப் பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒன்றிணைத்து அனைத்து வகை மக்களும் கொண்டாடும் ஒற்றை திருவிழாவாகப் புத்தகக் கண்காட்சிகள் அமைவதைப் பார்க்கிறோம். மக்கள் தங்களது அறிவின் அடையாளமாக எதிர்காலத்தின் ஒப்பற்ற நுழைவாயிலாக தன் அடுத்த சந்ததியின் அறிவுசால் வாய்ப்பாக ஒன்றுபட்ட இந்தப் புத்தகத் திருவிழாக்களில் கூடி மகிழ்வதைப் பார்க்கிறோம்.
அறிவார்த்த விவாதங்களை, அறிவியலைச் சமூகத்தின் அங்கமாக்குதல்:
மூடநம்பிக்கைகள், முரட்டு ஒற்றைச் சிந்தனை ஆக்கிரமிப்புப் பெண் அடிமைத்தனம், ஒடுக்குமுறை மற்றும் பிற்போக்குச் சிந்தனை துறந்து மனிதநேயம், பகுத்தறிவு சார்ந்து சமூகத்தைச் சிந்திக்க தூண்டும் விவாதங்களை அறிவியல் பூர்வ அணுகுமுறையை புத்தக கண்காட்சி அரங்கம் – பேச்சு. விவாதம் என முறைப்படுத்தும்போது புதிய சிந்தனைப்போக்கை நாம் விதைக்க முடியும்.
பள்ளிதோறும் வாசிப்பு வரவு உறுதி செய்கிறது
இன்று தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை வாசிப்பு இயக்கம் தொடங்கி உள்ளது. தங்களது அன்றாட வாழ்வின் அங்கமாகப் புத்தக வாசிப்பைப் பள்ளி மாணவர் மனதில் விதைப்பது அவசியம். கைபேசி, கணினி, முகநூல் என்று மின்னணு சாதன மயக்கத்தில் இருந்து குழந்தைகளை மீட்டு புத்தக வாசிப்பாளர் எனும் வாழ்வின் வெற்றியாளர் ஆக்கிட ஒவ்வொரு பள்ளியும் திட்டமிட்டுக் குழு அமைத்து மாணவர்கள் அனைவரையும் மாவட்டத் தலைநகரில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று புத்கம் வாங்கிட வைக்கவேண்டும். பொழுதுபோக்கிற்குச் சாகச விளையாட்டு வாசஸ்தலம் போவதைவிட நம் ஊருக்கே வரும் சாகச அனுபவம் புத்தகத் திருவிழாவே என உணரவைத்தால் போதும்.
இல்லம் தோறும் நூலகம் அமைக்க ஓர் அரிய வாய்ப்பு
குடும்பம் குடும்பமாகப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது, அவற்றை வாங்கி வீட்டில் ஓர் அறையை அல்லது ஒரு மூலையில் குறைந்தபட்சம் ஓர் அலமாரியை ஒதுக்கி அதில் இல்லத்து நூலகத்தைத் தொடங்கலாம். ஆண்டிற்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு இரண்டு நூல்கள் என்று நூலகத்தை வளர்த்தெடுத்து வீட்டில் வளமான அறிவுச் சந்ததியை உருவாக்கிட மாவட்டப் புத்தக காட்சிகளைப் பயன்படுத்தலாம். இல்லத்தில் நடக்கும் வைபவங்களான திருமணம். காதுகுத்து போன்ற நிகழ்வுகளுக்குப் புத்தகம் ஒன்றை விருந்தினருக்குத் தாம்பூலத்தோடு வழங்குதல் என்பதைப் பாரம்பரியமாக்கலாம்.
நல்ல, தரமான இலக்கியங்களை வளர்க்கும் புத்தகக் கண்காட்சிகள்
நூலக-ஆர்டர்களை மட்டுமே நம்பி புத்தக வெளியீட்டாளர்கள் இருந்து வந்தனர். தரமான சிறப்பான இலக்கிய வளர்ச்சியைப் புத்தகக் கண்காட்சிகளே இன்று வளர்த்தெடுப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு சிறந்த தமிழ்ப் பதிப்பாளரும் தங்களது அரங்கில் புதிய புதிய நூல்களை வெளியிடுவதும் நூல்-விமர்சனம், எழுத்தாளர் வாசகர் சந்திப்பு என இலக்கியத்தைப் பலவிதமான கோணங்களில் செழுமைப்படுத்துவதைப் புத்தகக் கண்காட்சிகளின் ஓர் அங்கமாக இன்று காண்கிறோம்.
இவற்றோடு தமிழின் தொன்மையை கண்டறிந்த கீழடி அகழ்வாய்வு முதல் மக்கள் இயக்கமாக வடிவெடுத்த இல்லம் தேடிக் கல்வி போன்ற தன்னார்வலர் இணைந்த சேவைகளை மக்களின் பார்வைக்கு வைக்கவும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் பயன்படுகின்றன. மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களில் அணிவகுப்போம்… வாசிப்பைச் சமூகத்தின் அங்கமாக்குவோம்.
