ஜெயபால் இரத்தினம்
நாட்டாரியல் வழக்காறுகள், மக்களது உணர்வுகளுடனும், அவர்தம் வாழ்வியல் நெறிமுறைகளுடனும் நேரடித் தொடர்பு கொண்டவை. பொதுவாக மக்களது வாழ்வியல் நெறிமுறைகளும் அவர்களது இறை நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சடங்குகளை, நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகள் சார்ந்தவை மற்றும் நிறுவனமயமாக்கப்படாத அமைப்பு சார்ந்தவை என இருவகையாக ஆய்வாளர்கள் பகுக்கின்றனர்.
ஆய்வாளர்களது பகுப்பு அல்லது கோட்பாடுகள் எப்படியிருப்பினும் மக்களது நடைமுறை வாழ்வியல் என்பது அவரவர் வாழ்ந்து வரும் சூழல்களுக்கேற்பவே அமைகிறது. ஆதலால் மக்களது நம்பிக்கைகளும் சடங்குகளும் பல நேரங்களில் நெகிழ்வு பெற்று நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் நிறுவனமயமாக்கப்படாத என்ற ஆய்வியல் கோட்பாட்டு எல்லைகளைத் தாண்டி ஒன்றின் நடைமுறை மற்றொன்றில் இடம் பெறுவது தவிர்க்க இயலாதது.

நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பான இசுலாத்தைப் பின்பற்றும் மக்களில் சிலர், வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக நாட்டார் கோவில்களில் இடம் பெற்றிருக்கின்றனர். நாட்டார் மக்கள் பள்ளிவாசல் மற்றும் தர்க்காக்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் வழிபாடு நடத்துவதும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில்,இசுலாம் நிறுவனத்தைச் சார்ந்த ‘இராவுத்தர்‘, சில நாட்டார் கோவில்களில் பரிவார தெய்வங்களில் ஒன்றாக வீற்றிருப்பதை அடையாளப்படுத்தி அதற்கான வரலாற்றை எடுத்துரைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவான நூல் இது.
நூலாசிரியர் குறித்து: நாகை மாவட்டத்திலுள்ள ஆயக்காரன்புலம் என்னும் ஊரைச் சேர்ந்தவரும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவருமான முனைவர்.கனிமொழி செல்லத்துரை இந்நூலின் ஆசிரியர் ஆவார். ஜமால் முகமது கல்லூரிப் பேராசிரியர்கள் வழி காட்டுதலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட பன்னாடு மற்றும் தேசியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
நூல் கட்டமைப்பு: இந்நூலை, ’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ளது.
இயக்குநர் முனைவர்.கோ.விஜயராகவன் அவர்களது சிறப்பான அணிந்துரையுடன் நூல் துவக்கம் பெறுகிறது. நூலாக்கத்திற்கான நோக்கங்கள், மேற்கொண்ட கள மற்றும் பிற ஆய்வுகள் உள்ளிட்ட நூலாக்கம் தொடர்பான பல்வேறு செய்திகளை முன்னுரையில் விவரிக்கிறார் நூலாசிரியர். ஆறு அத்தியாயங்களில் தனது ஆய்வுக் கருத்துக்களை விவரிக்கும் நூலாசிரியர், களஆய்வுக் குறிப்புகள், தகவலாளர்கள் பட்டியல் மற்றும் துணை நூற்பட்டியல் ஆகியவற்றை பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார்.
உள்ளடக்கம் மற்றும் ஆய்வுக்கருத்துக்கள்: நாட்டார் தெய்வங்கள் மற்றும் நாட்டார் கோவில்களில் பின்பற்றப்படும் வழிபாட்டுச்சடங்குகள் குறித்தும், தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு மன்னர்கள் உள்ளிட்டவர்கள் வழங்கிய கொடை, பள்ளிவாசல் வாயில்களில் நாட்டார் மக்கள் குழுமி, தங்களது குழந்தைகளது நோய் மற்றும் பிணி தீர முகமதிய அவுலியக்களின் ஆசி பெறுவது, தர்காக்களில் நாட்டார் மக்கள் வழிபடுவது, வேண்டுதல்கள் வைப்பது, அங்கேயே தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட விரிவானத் தகவல்களை, மூத்த ஆய்வாளர்களது நூல்களிலிருந்து திரட்டி அவற்றைத் தொகுத்தளித்து ஒரு வலுவான அடித்தளம் அமைத்துக்கொண்டு, பின்னர் தன்னுடைய ஆய்வுவழி அறிந்த தகவல்களையும், அவற்றின்மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்தியல்களையும் தெளிவாகப் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
‘துலுக்க’ என்ற இசுலாமிய சாயலில் பெயர் அமைந்த, துலுக்கானத்தம்மன், ஆதி துலுக்கானத்தம்மன், துலுக்க சூடாமணி ஆகிய நாட்டார் வழிபாட்டிலுள்ள பெண் தெய்வங்களுக்கான வழிபாட்டுச் சடங்குகளில் இசுலாமிய வழிபாட்டுக் கூறுகள் இல்லை எனவும் ஆதலால், அத் தெய்வங்கள் இசுலாமியக் கடவுளர்களாக அல்லாமல் நாட்டார் கடவுளர்களாக மட்டுமே கொள்ளப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர். அதே சமயம், திருவரங்கம் கோவிலில் வழிபடப்படும் துலுக்க நாச்சியார் மற்றும் மதுரை கள்ளழகர் வழிபாட்டுடன் தொடர்புபடுத்தப்படும் துலுக்க நாச்சியார் ஆகிய இருவருக்கும் வரலாற்று அடிப்படையில் முகமதியர் வரலாற்றுடன் தொடர்பு உள்ளது எனவும் குறிப்பிடுகிறார்..
தமிழகத்தில் உள்ள நாட்டார் கோவில்கள் சிலவற்றில், முக்கிய வழிபாட்டுத் தெய்வத்தின் பரிவார மற்றும் துணை தெய்வங்களில் ஒன்றாக ‘இராவுத்தர் சாமி’ வீற்றிருக்கிறார் என்றும் மற்ற பரிவாரத் தெய்வங்களைப்போலவே இவர்களும் நாட்டர் மக்களால் வழிபட்டு வரப்படுகின்றனர் என்ற தகவல்களை பதிவிட்டுள்ள இவர், அவ்வாறான சில ‘இராவுத்தர் சாமி’களது வரலாற்றை களஆய்வு மற்றும் இதர தரவுகளிலிருந்து திரட்டி பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோலியன்குளம் என்னும் ஊரில் அமைந்த ‘துலுக்கசாமி’ எனப்படும் ‘பட்டாணி சாயபு’ வழிபாடு தோன்றிய கதை, அதன் வழிபாட்டுச் சடங்குகள், திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார்களால் வழிபட்டு வரப்படும் ‘பட்டாணி சாமி’ வழிபாடு உருவான வரலாறு, உடன்குடியில் நடத்தப்பெறும் ‘குஞ்ஞாலி மரைக்காயர் வழிபாடு’ உருவான வரலாறு ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வட்டாக்குடி என்னும் ஊரில் அமைந்த வீரன் கோவிலில் இடம் பெற்றிருக்கும் பதினெட்டு பரிவாரத் தெய்வங்களில், ‘பட்டாணி சாமி’யும் ‘இராவுத்தர் சாமி’யும் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற தகவல்களோடு அவர்களது வரலாற்றையும் விவரித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் அமைந்த வாத்தலை நாச்சியம்மன் கோவிலில் அமைந்த பரிவார தெய்வங்களில் ஒன்றான, ’முத்தால் இராவுத்தர்’ குறித்து மக்களிடையே வழங்கிவரும் வாய்மொழிக் கதையையும் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தேரிக்காட்டில் உள்ள, ’கற்குவேல் அய்யனார்’ கோவிலில், பரிவார தெய்வங்களுள் ஒன்றாக இராவுத்தர் வழிபடப்பட்டு வருவதையும், நாகப்பட்டினம் ’குந்தாளம்மன்’ கோவிலில் அமைந்த பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக, குதிரைமீது அமர்ந்திருக்கும் சிலையாக ‘முத்தால் இராவுத்தர்’ வீற்றிருப்பதையும், நாகப்பட்டினம் மாவட்ட மீனவ மக்களின் குலதெய்வமான, ’குட்டியாண்டவர்’ என்னும் நாட்டார் தெய்வத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றாக ‘முத்தால் இராவுத்தர்’ இடம் பெற்றிருப்பதையும், மதுரை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் அமைந்த, ‘ஆதிகோரக்கர்’ ஆலயத்திற்கு முன்னே உள்ள புளியமரத்தடியில் அமர்ந்து ஆதிகோரக்கரின் காவலானாக ‘இராவுத்தர்’ இருந்து வருவதையும் நூலாசிரியர் விவரித்துள்ளார்..
மேலும், அனைத்து திரௌபதி அம்மன் கோவில்களிலும் காவல் தெய்வமாக போத்தராசாவும் முத்தால் இராவுத்தரும் இருப்பார்கள் எனக் குறிப்பிடும் நூலாசிரியர், அவர்கள் குறித்து மகாபாரதக் கதையுடன் தொடர்புபடுத்தும் புராண மற்றும் வாய்மொழிக் கதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் இந்நூலில் பதிவு பெற்றிருக்கும் சில தரவுகள் மற்றும் செய்திகள், நாட்டார் வழிபாட்டு வழக்காற்றியல் ஆய்வுக் களத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்ச முனைகிறது என்பதும், நாட்டார் மக்களது வழிபாட்டு நம்பிக்கைகளில் மதம் குறுக்கிடவில்லை என்ற உண்மையை உரத்துச் சொல்கிறது என்பதும் தெளிவு.
