எஸ். வி. வேணுகோபாலன்
சுற்றம் சூழ வந்து வாழ்த்தியருள நடைபெறும் திருமணத்திற்குப் பிறகான இல் வாழ்க்கை அதே இன்பத்தோடு தொடர்கிறதா என்ற கேள்வியை எடுத்துக்கொள்ளும் ‘அன்னமழகி’ நாவல், வாழ்க்கை இணையரை நெருங்கும் நாட்டமற்ற ஓர் இளைஞனின் குறைபாட்டை மையக்கருவாகக்கொண்டு புனையப்பட்டிருப்பது. ஆனால், மூன்று தலைமுறை மக்களது வேளாண்குடி வாழ்க்கையைப் பேசுகிறது. அந்தந்தக் காலத்துப் பஞ்சத்தை, எலிக்கறி தேடியலையும் கொடுமையை, விதைநெல்லை விற்றுத் தின்னவோ, அதையே பொங்கிக் கண்ணீர் வடிக்கவோ நேரும் அவலத்தை, நவீன ரகங்கள் பாரம்பரிய நெல் வகைகளை ஒழித்துக் கட்டிய கார்ப்பொரேட் அராஜகத்தை எல்லாம் கண்முன்கொண்டு நிறுத்துகிறது.

ஆண் மகவு பெற்றுத்தர வேண்டிய பொறுப்பையும் சேர்த்துக் கருப்பை சுமக்கும் பெண்ணினத்தின் விதியை, அதற்கு எதிரான கலகத்தை, பண்ணையடிமைக் கூறுகளை, சடாரென்று முறியும் உறவுகளையும் பளீர் என்று திரும்பக் கொண்டு இழையொட்டும் வண்ணம் இணைக்கும் எளிய மனிதர்கள் வாழ்க்கையை அண்டனூர் சுரா அருமையான சொலவடைகளோடும், உவமைகளோடும், பண்பாட்டுச் சுவடுகளின் சுவையோடும் வட்டார வழக்கின் இனிய மொழியில் படைத்திருக்கிறார்.
வேளாண் குடிகள் விதைநெல்லை எப்படி பராமரிப்பார்கள், நாள், நட்சத்திர சகுனங்கள் எல்லாம் பார்த்து எந்தப் பக்குவத்தில் வெளியே எடுப்பார்கள் என்பதிலிருந்து உள் வீட்டுச் செய்தி எல்லாம் ஊரம்பலத்தில் எப்படிப் போய் என்னவாகச் சேர்ந்து நட்ட நாற்றிலிருந்து பயிராகி என்னமாக அறுவடையாகிறது என்பது வரை அபார நடையில் சொல்லிப் போகிற கதையில், அன்னமழகி ஓர் அரிய வகை நெல்லின் பெயர் என்பது தொடக்க அத்தியாயங்கள் ஒன்றிலேயே பேசுபொருள் ஆகிவிடுகிறது. விதைநெல் களவு போனதில் அதிர்ச்சியுறும் கூத்தனின் தேடலில் தொடங்கி, வெறுத்து வெளியேறிய மருமகளை மீண்டும் மகனோடு சேர்த்து வைத்துப் பிறக்கும் தன்னுடைய பேத்திக்கு, கூத்தன் அதே நெல்லின் பெயரை வைத்துப் பூரிப்படையும் இடத்தில் நிறைவு பெறுகிறது கதை.
பண்ணையடிமை பஞ்சன் – பாஞ்சாலை இணையரின் மகன் கூத்தன். கஷ்ட காலத்தில் தந்தையோடு சேர்ந்து வளைகளைத் தேடி அடைந்து எலியைப் பிடிக்கப் போனால், பொற்காசுகள் கொட்டிக் கிடக்கிறது அதனுள், அதாவது நெல்! அரிசிச் சோறு என்ன, கிழங்குக்குக்கூடக் கதியற்றுப் போன காலத்தில் எலி சேமித்து வைத்த நெல் அவர்களுக்குத் தங்கம்தானே! எலியும் சேர்த்துப் பிடித்துப் போனால், ‘அய்யய்யோ அது நமக்கு சோறு கொடுத்த சாமி’ என்று அதை விடுவித்துவிடச் சொல்கிறாள் பாஞ்சாலை, கருணையோடு!
சாகும்போது பஞ்சன் தனது மகனுக்குச் சொல்வது, உனது மூத்த தங்கை இந்த அன்னமழகி நெல்தான், இது வந்த வேளை தான் உனக்கு வாய்த்த அடுத்த இரண்டு தங்கச்சிகள் என்று!
அரும்பாடுபட்டு அந்த நெல்லைப் பெருக்கி ஓகோ என்று வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் விடைபெற்றுப் போய்விட்ட நேரத்தில் சோம்பிக் கிடக்கும் மகன் சோமனுக்கு சீரங்கம் என்ற தாயற்ற பெண்ணை மணமுடித்து வைக்கிறார். அவளை வளர்த்த தாய் பேச்சி. ஆனால், பேச்சற்றுப் போன உறவு அது, வளர்ப்பு மகள் திருமணத்தைத் தவிர்க்கும் காரண கோபம் பேச்சிக்கு!
சோமனிடமிருந்து குறைந்தபட்ச காதல் உணர்வும் படராத வெற்றுப் படுக்கையை வெறுத்து உதறி எழுந்து போகும் சீரங்கம், பேச்சியின் படலைத் தட்டித்தான் கட்டிக்கொண்டு அழ வேண்டி இருக்கிறது. இப்போது கூத்தன் மேற்கொள்ளும் பயணம் தான் மொத்தக் கதையும். மருமகளை மீட்க, மகனுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. நாட்டு வைத்தியரோ அன்னமழகி நெல்லைக் கைகாட்டி விடுகிறார். ‘தாது விருத்திக்கான வகை அது. காலம் கடந்தும் அடங்காத காமத்தை அடக்க கூளமாதோரை நெல் இருக்கவே இருக்கிறது’ என்கிறார். ‘எல்லாவற்றுக்கும் உணவில் உண்டு, உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று விவரிக்கிறார்.

விதைநெல் வேட்டையில் போய்க் கேட்கும் எல்லா இடத்திலும் இல்லை என்பதே பதிலாக இருக்க, அருமைத் தங்கை கல்யாணியின் சேமிப்பில், தான் பிறந்த வீட்டு சீதனமாக அவள் பெற்றுப் போன அன்னமழகி உட்கார்ந்திருக்கிறாள் என்று கேட்டறிகிறார். ஆனால், சட்டென்று கால் பாவ முடியுமா, கல்யாணி வீட்டுக்கு. அதற்கு ஒரு பின்கதை உண்டு. ஒட்டும் உறவும் இனி கிடையாது என்று இரண்டு பட்டுப் போய் ஊர் பார்க்க அடிதடி விலக்கி ஆகாது போய்விட்ட உறவு அது. அந்தப் புயலையும் கடந்துபோய்க் கையேந்தி நிற்கிறார் கூத்தன்.
தங்கையோ நெகிழ்ந்து போகிறாள், அவளது பானைகளோ சுரண்டப்பட்டு நிற்கின்றன வறுமையின் பாட்டில். பிள்ளைக்கறி சமைத்துப் போட்டபின், பிள்ளை எங்கே என்று கேட்ட கதையாக, வாராத அண்ணனுக்கு விதை நெல்லை எடுத்து வடித்துப் போட்டவளிடம், அண்ணன் அதே நெல்லைக் கேட்குமிடம் அவளை உறைய வைத்து, இல்லை என்று சொல்ல நேர்கிறது. அவரோ பழைய பகை மறக்கவில்லை அவள் என்ற ஆற்றாமை அதிர்ச்சியோடு புறப்பட்டுப் போகிறவர் ஆகிறார். ஆனாலும், காலம் அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவை மீட்டு எடுப்பதில் கொஞ்சம் கருணையோடு இருக்கவே செய்கிறது, கணவனை எழுப்பி மிஞ்சிக் கிடந்த நெல்மணிகளைத் திரட்டிக் கிழிந்த துணியில் பொட்டலாமாக்கி ஓடோடிப் போய்க் கொடுத்துவரச் செய்கிறாள்.
அடுத்த அத்தியாயங்களில் இன்பமாகப் பயணித்து நிறைவடைகிறது கதை. பிணக்குகளின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு இணக்கத்தை நோக்கி நகர்வது கூடியவரையில் இயல்பாகவே படைக்கப்பட்டிருக்கிறது.தனது வெறுப்பைப் பாத்திரங்களை ஓசையெழுப்ப வைத்து பேச்சி வெளிப்படுத்துவதை விவரிக்கும்போது, ‘மனிதர்கள் வாய் பேசும்போது அவர்கள் செய்த மண் பாண்டங்கள் பேசாதா என்ன?’ என்று எழுதுகிறார் சுரா. ‘ஓங்கி உடைத்தும் பானையின் வயிறு உடைந்ததே தவிர, வாய் உடையவில்லை’ என்று இன்னோரிடத்தில்! கன்னக்கங்காய் விதைபோல் ஒட்டிக் கொண்டது என்கிற உவமை மற்றுமோரிடத்தில். ஏக்கம், காதல், கோபம், ஒவ்வாமை, வெறுப்பு எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் மொழி நாவல் நெடுக அம்சமாக விளைந்திருக்கிறது.
பெண் குழந்தை என்றால் கேவலமா என்று தனது அடுத்த தங்கையைப் பெண் கேட்டு வரும் தங்கை கல்யாணியின் கணவனைக் கடுமையாகச் சாடும் கூத்தன் பாத்திரம் நாவல் முழுவதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. கல்யாணி, பேச்சி பாத்திரங்கள் காத்திரமாக வடிக்கப்பட்டிருப்பவை. கிராமப்புறச் சடங்குகள், சம்பிரதாயங்கள், சொலவடைகள் யாவும் போகிற போக்கில் விறுவிறுப்புக் குறையாதபடிக்கு நிறைகின்றன.
சோறு என்றால் எத்தனை வகை சோறு என்று அடுக்குகையில், பாத்திரம் தொட்டு வழங்கினால் சமச்சோறு, தொடாமல் வழங்கினால் தீண்டாச்சோறு என்று முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் சுரா! ‘அரிசியைத் திருடுபவனுக்கு வயிறாரச் சோறு போடு, நெல் திருடியவனை ஊர் பார்க்கக் கட்டி வை’ என்ற முன்னோர் மொழியைச் சொன்ன மூதாதையருக்குத்தான் நாவலை அர்ப்பணித்திருக்கிறார் அவர். வித்தியாசமான கதைக்களத்தில் பயிரான அன்னமழகி, எழுத்து நாவல் போட்டியில் விருது பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. சிறந்த கதைசொல்லியான அண்டனூர் சுரா, ஒரு பள்ளி ஆசிரியர், வேளாண் குடிகள் வாழ்க்கையை இத்தனை அருகிருந்து பார்க்கும் பார்வையில் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
