இரா. விஜயன்
உலகம் பரந்துபட்டது, தனித்துவமானது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு தனி உலகம் உள்ளது. அது, புதிரான மாயங்கள் நிறைந்தது. சமூக மனிதனாக மாறியபின் அந்த உலகத்தின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டு விடுகின்றன.

“குழந்தை, நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப்பெட்டியல்ல; அசைவற்ற ஜடம் அல்ல. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மால்தான் என்று கருதக் கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே. எந்த மனிதனும் ஒரு காலத்தில் குழந்தையாகத்தான் இருந்தான். இன்று மனிதன், அன்று குழந்தை” என்கிறார் மரியா மாண்டிசோரி.
குழந்தைகளுக்காக கதைகள் சொல்லவோ எழுதவோ முனைகையில், நாம் தொகுத்துச் சேகரித்த அனைத்து அறிவும் நம்மை ஒரு வறண்ட பெரும் பாலையில் விட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கான கதைகள் பொதுவாக, ஏதேனும் நீதியைப் போதிக்கும் தன்மையோடு இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நம்பப்படுகிறது. நீதி, மனிதனுக்கானது அல்லது உலகத்திற்கானது. குழந்தைகளின் உலகத்தில் நீதி, அநீதி கிடையாது. அவர்கள் கோடையில் வெடித்து மழைக்குக் காத்திருக்கும் நிலம் போன்றவர்கள்.
இயற்கை அவர்களுக்குப் பல எதார்த்தங்களை தனது புதிர் மொழியின் வழியே அகலத் திறக்கிறது. நாம் அவர்களை அதற்குள் அழைத்துச்செல்வதற்கு மாறாக அவர்களிடம் முரண்படுகிறோம். ஆக, குழந்தைகளுக்கு கதை சொல்பவர் அவர்களை, நீதி, அநீதியற்ற உண்மைக்கு அருகில் அழைத்துச்சென்று வருகிறார். அவ்வாறு அவர் தன் குழந்தைமைக்குள் சென்று திரும்புகிறார்.

வன்மி அவர்களின் ‘பறக்கும் வெண்குதிரை’ அவ்வாறான ஒரு கதை வெளிக்குள் பயணிக்கிறது. வளர்பிறை எனும் சிறுமியின் விடுமுறை நாளொன்றில் மிக எதார்த்தமாக தொடங்கும் கதை, வெண்குதிரையின் சிறகுகளில் பனிக்காலப் புலர்காலையில் பயணிப்பதாக மெல்ல நகர்கிறது.
ஒரு சிறிய தோப்புக்குள் விளையாடுகிறார்கள் வளர்பிறையும் அவள் நண்பர்களும். வெண்குதிரையும் அதன் பல வண்ண குதிரை தோழமைகளும் அங்கு இறங்கும்போது குழந்தைகள் அதிசயத்தில் ஆழ்ந்து போகிறார்கள். அப்போது அவர்களின் முதுகிலும் இறக்கைகள் துளிர்ப்பதை நாம் கதைக்குள் காணலாம். மிக இயல்பாக, எதார்த்தத்தில் இருந்து அற்புத உலகத்தில் குழந்தைகள் நுழைந்து விடுகிறார்கள். கதை சொல்பவர் இயல்பில் கூடுவிட்டுக் கூடு பாய்பவர். அந்த வித்தை வன்மிக்கு கூடிவந்துள்ளது. டால்ஸ்டாய் போன்ற பெரும் ஆளுமைகள் ‘குழந்தைகளுக்கு கதை சொல்வது சவாலான பணி’ என்று கூறியது ஒன்றும் மிகையாகாது.
“நாம இந்தக் குதிரைகள் எல்லாவற்றையும் கட்டிப்போடணும். அப்பதான் நாம திரும்பிப் போகலாம்… இல்லன்னா, இந்தப் பூக்காட்டுக்குள்ள நாம மாட்டிக்குவோம்…” என்கிறான் நடராசன். சலீமும் அதனை ஆமோதித்தான். மம்முவும் சுந்தரியும் வளர்பிறையும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
“கொஞ்சம் திரும்பிப் பாரு. அதெல்லாம் எப்பவோ போச்சு… அவை நமக்கு அடிமை இல்லை… நாமதான் எல்லாத்துக்கும் அடிமைகள்…”என்கிறாள் வளர்பிறை.குழந்தைகளின் உலகம் சுதந்திரமானது; பெரியவர்கள் அதற்குள் தங்களுக்கான விதிமுறைகளைத் திணிக்கிறார்கள் என்பது கதைப் போக்கில் மிக ஆழமாக சுட்டிச் செல்லப்படுகிறது. காடும் மலைகளும் மனிதனின் தொல் நினைவுகளாக அவனுக்கு வழி வழியாக வந்து கொண்டே இருக்கிறன. அது குழந்தைகளிடம் கனவிலும் நடைமுறையிலும், வாய்க்கும்போது தெள்ளென விழித்துக்கொள்கிறது. பறவைகளும் விலங்குகளும் பூக்களும் மரங்களும் வண்ணத்துப்பூச்சிகளும் இல்லாமல் குழந்தைகள் உலகம் இல்லை.
இன்று குழந்தைகள் மெய்நிகர் உலகில் மூழ்கடிக்கப்பட்டு குழந்தைமையின் நுண்ணுணர்வுகளை இழந்துகொண்டிருக்கும் நிலையில், கதை என்பது எப்போதும் நுண் அதிகாரக் கட்டுகளை உடைக்கும் தன்மை கொண்டிருக்கிறது.வன்மி அவர்கள் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் கதையில் காட்சிப் படிமங்கள் துல்லியமாகப் பதிவாகியிருக்கின்றன. இந்தத் தன்மை கதைப் போக்கை எளிமையாகவும் நுண்மையாகவும் மாற்றித் தருகிறது.
‘கதைக்குள் கதை என்ற பாணியில், உள் அடுக்குகளோடு நாவல் பயணிப்பது நம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்’ என்று முன்னுரையில் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியுள்ளது நாவலுக்கு சாலவும் பொருந்தும். உலகின் எல்லா இடங்களிலும் பாட்டிகள் எப்போதும் ஒரு கதைப்பெட்டகமாக இருக்கிறார்கள். வளர்பிறையின் பாட்டி பல கதைகளை தனகுள்ளாக சுமக்கும் ஒரு பெட்டகமாக நாவலை உயிர்ப்பிக்கிறார். பறக்கும் வெண்குதிரை குழந்தைகளின் அகவெளியில் அற்புதமாகப் பறக்கிறது.