இரா.சண்முகப்பிரியா
கலை இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாவும் அந்தந்த வரலாற்றுச் சூழலமைவினைச் சார்ந்தே அமையும். சங்க இலக்கியப் பாடல் அமைப்பு தொடங்கி தற்காலத்திய நவீன இலக்கியங்கள் வரையிலான பாடுபொருள் மாற்றத்தை மேற்சொன்ன வரலாற்றுச் சூழலமைவின் அடிப்படையில் அணுகுவதே பொருத்தப்பாடுடையதாகும். அவ்வகையில் சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு அரசியல் மாற்றங்கள், அதனூடாக நிகழ்த்தப்பெறும் வன்முறைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வு ஆகியன மொழியினூடாக இலக்கியங்களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை அறியும் பொருட்டு மகாசுவேதா தேவியின் திரௌபதி எனும் சிறுகதையைப் பெண்நிலை நோக்கின் வழி காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பழங்குடி மக்களைப் பற்றியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் தனது எழுத்துகளில் வெளிப்படுத்திய மகாசுவேதா தேவியின் படைப்புலகமானது மேற்கு வங்கத்தின் இடதுசாரி சிந்தனை அமைப்புகள், பூர்வகுடி மக்களின் வாழ்வியல் போராட்டம் மற்றும் இந்திய அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களால் சூழப்பட்டவை. இதன் தாக்கத்தை அவரது எழுத்துகளே காட்டி நிற்கின்றன. குறிப்பாக எழுத்துகளில் பெண் உடல் குறித்த கருந்தாக்கமானது தீவிரத்தன்மையுடன் ஒரு குறியீடாக அமைவதைத் திரௌபதி எனும் பாத்திரப்படைப்பு காட்டுகிறது.
மகாசுவேதா தேவியின் ‘மார்பகக் கதைகள்” (Breast stories) எனும் கதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள திரௌபதி ஒரு பழங்குடியினப் புரட்சியாளர், அவர் கைது செய்யப்பட்டு ராணுவ அதிகாரிகளால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகையில், அவர் தன் ஆடையற்ற உடலையே போராட்ட ஆயுதமாக்குவது இச்சமூகத்திற்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
“சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை இலக்கியத்தில் வெளிக்கொணர்வதைப் பெண்நிலை கால கட்டம்” என்பர். அதாவது ஆண்நிலையை மாதிரியாகக் கொண்டு அதைப் போலவே செய்தல் அல்லது அதனை எதிர்ப்பதற்காகவே எழுதுதல் ஆகிய போக்குகள் தளர்ந்து, தனது எழுத்தைத் தானே எழுதுதல் என்னும் நிலையில் கோபங்களும், வெடித்துக்கிளம்பும் அழுகைகளும் மாற்றம் அடைந்து நினைவாகி ஓர் ஆயுதமாகிறது என்று பெண்நிலை எழுத்தின் போக்கு குறித்து பேராசிரியர் பஞ்சாங்கம் தனது இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் நூலில் கூறும் கருத்து இங்கு முக்கியமானதாகும்.
திரௌபதி தான் கைது செய்யப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டபோதோ, நிர்வாணப்படுத்தப்பட்டபோதோ கூட வெட்கமடையவில்லை. அதனை அவள் தைரியத்துடன் எதிர்கொள்ளும் போக்கு தான் காட்டப்பட்டுள்ளது . ஆனால் தன்னை அறியாது அவள் கண்களில் நீர் சுரந்த போது அதை நினைத்து வெட்கப்படுகிறாள். திரௌபதியை வன்புணர்வு செய்யுமாறு நேரடியான எந்த வார்த்தைகளும் இராணுவத்தளபதியிடமிருந்து வெளிப்படாத போதும் “அவளைக் கவனித்துக்கொள், டூ தி நீட்ஃபுல்” என்பதாக மட்டுமே கூறப்படும் வார்த்தைகள் எப்படி ஒரு சங்கேத மொழியாகச் செயல்படுகிறது என்பதில் ஆணாதிக்க அதிகார வர்க்கத்தால் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் முடை நாற்றம் வீசுவதை உணரலாம்.
இராணுவ அதிகாரிகளான அர்ஜுன் சிங் மற்றும் சேனாநாயக்கின் அதிகார வலிமை குறித்து கூறும் இடத்தில் “அர்ஜுன் சிங்கின் சக்தியும் துப்பாக்கி என்ற மேல் ஆர்கனிலிருந்து (male organ) வருகிறது” என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பார் ஆசிரியர்., திரௌபதி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வினை, அசையாத பெண் தேகம் அதன் மேல் சுறுகறுப்பாக இயங்கும் தசைகளால் செய்யப்பட்ட பிஸ்டன்கள்.” என்று விவரித்திருப்பார். அதிகாரமும் ஆணுடலும் எவ்வாறு வன்முறைக் ஈருவிகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும், ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களான பெண்கள் மீதும் இயங்குகின்றன என்பதைக் காணலாம்.
பஹுலி கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் முதல் காடுகளில் பதுங்கியிருந்து இறுதியில் கைது செய்யப்படும் நிகழ்வு வரை தோப்தி எனும் பெயரால் அடையாளப்படுத்தப்படுபவள்.
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கண் விழித்த பிறகு திரௌபதி என்ற பெயரால் அடையாளப்படுத்தப் படுவதை,”பத்து லட்சம் சந்திரர்கள் தோன்றி மறைந்தனர். பத்துலட்ச சந்திர வருடங்கள் கடந்தன. ஒரு லட்சம் ஒளி வருடங்களுக்குப் பிறகு திரௌபதி கண்ணைத் திறக்கிறாள். என்ன அதிசயம்! வானையும் சந்திரளையும்தான் முதலில் பார்க்கிறாள்” என்ற வரிகளின் மூலம் அறியலாம். இங்கு தான் திரௌபதி எனும் தொன்மம் எடுத்தாளப்பெறுகிறது. இது பெண்நிலை நோக்குத் திறனாய்வின் சிறப்பான மற்றொரு போக்காகும். அதாவது “பழைய இலக்கியங்களை இன்றைய பெண்ணியல் அணுகுமுறையில் மறுவாசிப்பிற்கு உட்படுத்தி அவற்றில் ஊடாடும் ஆணாதிக்க அரசியலை வெளிக்கொணர்வதாகும்” என்று இந்நோக்கு பற்றி பஞ்சாங்கம் குறிப்பிடுகிறார்.

தொன்மத் திரௌபதி துகிலுரியப்படும் போது தன்னைக் காப்பாற்றுமாறு கிருஷ்ணன் எனும் ஆண் கடவுளை வேண்டுவதையும், பிறகு அவள் காப்பாற்றப்படுவதையும் அறிவோம். 1970 களில் மேற்கு வங்கத்தில் நக்சலிசம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் வன்முறை அரசியல் சூழலுக்கு ஏற்ப மகாசுவேதா தேவி மாற்றியமைத்த இந்தொன்மக் குறியீட்டில் கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்ட புராணத் திரௌபதியைப் போன்று, பழங்குடிப் பெண்ணான திரௌபதி ஒரு தெய்வீகமான ஆணின் மூலம் அவளது மானம் காப்பாற்றப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. இது கதையில் முக்கியமான இடமாக அமைவதைக் காணலாம். மேலும் இங்கு திரௌபதி என்னும் தொன்மத்தின் தொல்படிவம் ஒரு குறியீடாக அமைந்து நவீன கவுரவ அவையினையும், கிருஷ்ணனின் மகிமையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
மட்டுமன்றி இந்நவீனத் திரௌபதி தன் உடலையே போராட்டத்திற்கான கருவியாக்குகிறாள்.
வல்லுறவு செய்யப்பட்ட தன் உடலை ஆடையால் மூடிக்கொண்டு ஒடுங்காது, தனக்கிழைக்கப்பட்ட அநீதியை உரக்கக்கூறும் ஆயுதமாக்குகிறாள். சிதைக்கப்பட்ட தன் உடலின் மீது வீசப்பட்ட தன் ஆடையைத் தானே கிழித்து எறிந்து விட்டு தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்து போன இரத்தத்துடனும், குதறப்பட்ட தனதிரு முலைகளுடனும் முழு நிர்வாணமாக சேனாநாயக்கை நோக்கி நடந்து செல்லும் திரௌபதி இடுப்பில் கைகளை வைத்து சிரித்துக்கொண்டே நீ தேடிக்கொண்டிருந்த தோப்தி மேஜன் தான் தான். கவனிச்சுக்கன்னு சொன்னேல்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா? என்கிறாள். மேலும் துணி என்ன துணி? யாருக்கு வேண்டும் உன் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும். ஆனால் உடுத்த வைக்க முடியுமா? நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிள இங்க யாரும் இல்ல என் மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன்” என்கிறாள்.
காலம் காலமாக ஆண்களால் பெண் உடலைச் சுற்றி ஏற்றி வைக்கப்படும் புனிதப் பண்பாட்டுப் போர்வையைப் பெண் விலக்கும் போது ஆண்மை எனும் கருத்தாக்கமே அடிபட்டுப் போகிறது. தனது இருப்பின் ஆபத்தை உணர்ந்து உடனே பதறி எழுகிறது. 2004ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தின் பாலியல் அத்துமீறல்களை எதிர்த்து இராணுவ அலுவலகத்தின் முன்பு “எங்களை வன்புணருங்கள்’ என்னும் வாசகம் அடங்கிய பதாகைகளுடன் நிர்வாணப் போராட்டம் நடந்தியபோது ஒட்டு மொத்த அதிகார அமைப்பும் அதிர்ச்சியடைந்தது. இராணுவ வீரர்களிடம் வலிமையான ஆயுதங்கள் இருக்கிறது. அதைக்கொண்டு அவர்கள் எங்களைத் தாக்கினர். எங்களிடம் இருக்கும் ஆயுதம் எங்கள் உடல் தான், நாங்கள் அதைக்கொண்டு அவர்களைத் தாக்குகிறோம் என்று கூறியபோது, எந்த இராணுவம் பாலியல் அந்துமீறல்கள் செய்ததோ அதே இராணுவம் போராட்டக்காரர்களிடம் தங்கள் ஆடைகளை உடுத்திக்கொள்ளுமாறு கெஞ்சியதையும், உடனடியாக இராணுவந்தை மணிப்பூரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு விசாரணைக்குழு அமைத்ததையும் வரலாற்றிலிருந்து அறிவோம்.
அண்மையில் மே 21, 2022-இல் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், உக்ரைனில் பாலியல் வன்கொடுமை செய்துவரும் ரஸ்ய ராணுவத்தினருக்கு எதிராக அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய உக்ரைனிய பெண்ணின் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதையும் காண முடிகிறது. நான் வெட்கப்படும் ஆம்பள இங்கு ஒருத்தனும் இல்ல என்று சொல்லியவாறு தனது சிதைக்கப்பட்ட முலைகளால் இராணுவ அதிகாரியைத் திரௌபதி உரகம்போது நிராயுதபாணியான அவள் முன் நிற்கவே பயப்படும் சேனாநாயக்கைப்போல்தான் இந்த ஆண்மைய அதிகாரமும் பெண்ணுடல் ஆயுதமாகும் போது அதனை எதிர்கொள்ள முடியாது நடுங்குகிறது.
“பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டும் பெண் தனது உடலை எழுதுதல் ஆகிவிடாது. உடலைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஓர் அரசியல்” என்று கூறுவர். குறிப்பாகப் பெண்ணரசியலானது இந்த ஆணாதிக்கச் சமூகம் தனக்கியைபானதாக உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சிதைத்து புதிய மதிப்பீடுகளை, தனக்கான அரசியல் பேசும் மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை கிழித்தெறிந்துவிட்டு தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
அதிகார அமைப்பு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இயங்கும்போது அதற்கான எதிர்வினையும் அதே போராட்டக்களத்தில் தோன்றுகிறது. அப்போராட்டத்தில் பெண் தன் உடலை ஆயுதமாக மாற்றும் போது அவ்வதிகாரம் அஞ்சி ஒடுங்குவதை நவீனத் திரௌபதிகளின் உலகளாவிய அதிர்வு பறைசாற்றுகிறது.
